மீனாட்சி அவர்களை அந்த நேரத்தில் எதிர்பார்க்காததால் அப்பிடியே அதிர்ச்சியாகி நின்றார்…
அதுவும் நொடிப்பொழுது தான், வீட்டின் வாசலில் வந்து நிற்பவர்களை கண்டுக்காமல் நிற்பது தவறில்லையா…? உடனே கையில் இருந்த கோலமாவு டப்பாவை அருகில் வைத்தவர், வேகமாக வெளியில் சென்று”வாங்க! வாங்க! எல்லாரும் வாங்க”என அனைவரையும் சேர்த்து வரவேற்றார்…
அவர்கள் உள்ளே வர, முந்திக் கொண்டு வந்த யுவி”பாட்டி! அம்லு எங்க…?”என்று கேட்டான்..
“அம்லு இன்னும் எழுந்திரிக்கலப்பா, பொழுது இன்னும் இருக்கேனு நானும் எழுப்பல.. உள்ள வாங்கம்மா மெதுவா குனிஞ்சு..”என மீனாட்சி முன்னே நடந்தார், ஒரு கனமான நாற்காலியை எடுத்து பாட்டிக்காக போடுவதற்கு..
அதற்குள் யுவி அவருக்கு முன்னே ஓடினான் அம்லுவை பார்க்க.. “அம்லு!” என அழைத்துக் கொண்டு..
அது ஒன்றும் அறை அறையாக தேடும் அளவிற்கான அரண்மனை வீடு இல்லை..
“யுவி! வெயிட், புது இடம் ஓடாத”என கூறிய சர்வா வேகமாக யுவி பின்னால் சென்றான் மற்றவர்கள் முன்..
பாட்டி வாசலில் இருந்த செடிகளைப் பார்த்துவிட்டு, “இந்த பூச்செடிகள் எல்லாம் அழகா பல வண்ணங்களில் இருக்கே.. வீட்டிற்கு அழகே இது தான்மா.. வீடு சின்னதோ பெருசோ ஆனா இந்த மாதிரி பூச்செடிகள் இருந்தா சுத்தமான காற்று, இதமான சூழ்நிலை கிடைக்கும் வாழ”என மீனாட்சியை பாராட்டினார்..
“அம்லு!”என யுவி அழைக்க, சர்வா”யுவி! வெளியில் வா, அவங்க தூங்கட்டும் பிறகு பேசலாம் என்றான்..
“போங்கப்பா!”என்றவன் மீண்டும் அம்லு! என அவளை தொட்டு அழைத்தான்..
இரவு எல்லாம் யுவி தன்னை தேடி இருப்பான என்ற எண்ணத்திலே படுத்தவள் நடுராத்திரி தாண்டி தான் தூங்கினாள்…
யுவி, சர்வா பேசிக்கொள்வது அம்லுக்கு ஏதோ கனவில் நடப்பது போல் கேட்டது..
யுவி அவளை தொட்டு எழுப்பியதும் அம்லுக்கு முழிப்பு வர, அப்போதும் யுவியின் முகத்தைப் பார்த்தவள் கனவில் வந்து இருக்கான் என கண்களை மூடினாள்..
ஆனால் இன்னும் யுவியின் கைப்பிடித்திருப்பது உணர்வில் தோன்ற சட்டென்று மூடிய நொடியில் விழிகளை திறந்தவள், அது கனவோ, நனவோ என அதற்கு மேல் யோசிக்காமல் எழுந்து யுவியை கட்டி அணைத்தாள்.
சர்வா ஆழ்ந்த மூச்சை வெளியிட்டான்..
“யுவி! நிஜமா தான் வந்து இருக்கீயா…?” என அவன் கன்னத்தில் மாற்றி மாற்றி முத்தம் வைத்தாள்…
“ஆமா அம்லு, நான் மட்டுமில்லை அதோ அப்பா நிக்குறாரு பாரு.. பாட்டி, திரவி மாமா, ரேவதி அத்தையும் தான் வந்து இருக்காங்க”என யுவிக் கூறியதை கேட்டப்படியே வாயிலில் நின்ற சர்வாவை பாத்துட்டு அம்லு எழுந்து நின்றாள்..
“சார்! வாங்க சார்..”என்றாள் தலையை கீழே குனிந்தவாறு, அவளுக்கு சர்வா மீது கோபம் இருந்தது தன்னை ஊருக்கு வரசொன்னதால்..
ஆனால் அவன் நின்றது தெரியாமல் தான் படுக்கையில் எழுந்து யுவியோடு பேசிட்டு இருந்ததால், இப்போது தன் உடையை சரிசெய்து நின்றாள்..
அம்லு வீட்டில் கால் கொலுசு மட்டுமே தெரியும் அளவிற்கு முழு பாவாடையும், ஃபுல் வாயில் துணியில் முன்பக்கம் பட்டன் வைத்து, மார்பை மறைக்கும் அளவிற்கான டிசைனில் தொங்கும் அதே கலரில் பிலீட்ஸ் சட்டையும் அணிந்திருந்தாள்..
இது தான் அவளின் உடை அம்மா வீட்டில். பல கலர்களில் இதே பாவாடை சட்டைகள் வைத்திருக்காள்..
மீனாட்சி தான் இதை எல்லாம் நீ அங்க போய் போடக் கூடாது என இங்கயே வைத்துவிட சொன்னதால், அம்லு சென்னையில் இதை போடவில்லை…
அந்த உடையில் அம்லு மிக அழகாக அம்லுக்கே ஏற்ற உடல்வாகில், யுவியை தூக்கி அணைத்தவாறு நிற்க சர்வா சற்று மனதளவில் பரிதவித்து தான் போனான்..
இப்பிடி பட்டாப்பூச்சி கணக்கா இருந்தவளை தான் அந்த ஜெகன் கல்யாணம் பண்ணி வாழ்க்கையில் கஷ்டத்தை பார்க்க வச்சான…? என தோன்றி வருத்தப்பட்டான்..
அனைவரும் வீட்டிற்குள் நுழைய, சர்வா அறையின் வாயிலை விட்டு நகர்ந்து அவர்கள் பக்கம் வந்தான்..
மீனாட்சி வேகமாக வந்து பாட்டிக்காக நாற்காலி எடுத்துப் போட்டார்.. திரவி, சர்வாக்கு பிளாஸ்டிக் சேர் எடுத்துப் போட்டார்.. இரண்டு தான் இருந்தது..
ரேவதிக்காக ஒரு பாயை எடுத்துப் போட்டாலும் ரேவதி கிட்ட முகம் கொடுத்துப் பேசவில்லை மீனாட்சி… அது ரேவதிக்கே புரிந்தாலும் அமைதியாய் அமர்ந்தாள், தப்பு அவர்கள் பக்கம் இருந்தமையால்..
அம்லு தன் தலையை சரிசெய்து விட்டு, யுவியோடு வெளியில் வந்தாள்..
“வாங்க பாட்டி, வாங்க அண்ணே.. அண்ணி வாங்க”என ரேவதி அருகில் சென்று அமர்ந்தாள்..
யுவியை அமரவைத்தவாறு.. ரேவதிக்கு கண்களில் நீர் வந்தது, மீனாட்சி மாதிரி முகம் காட்டாமல் அம்லு ஆசையாப் பேசியது அவளுக்கு ஆறுதலாக இருந்தது..
“அம்லு! எங்க நீயும் என்னைய ஒதுக்கிப் பேசுவீயோனு நினைச்சேன்.. ஆனா நீ மாறவே இல்லடி அதே அம்லு தான்.. எங்களுக்கு கொடுத்து வைக்கல அவ்ளோதான்”என அம்லு கையைப் பிடித்து வருத்தமாப் பேசினாள் ரேவதி..
“என்ன அண்ணி, நீங்க எனக்கு எப்பயும் நல்லது தானே பேசுவீங்க.. உங்க மேல எனக்கு எதுக்கு கோபம்.. பிள்ளைங்க நல்லா இருக்காங்களா…?”
“ம்ம்ம்!”என்று தலையை ஆட்டினாள்..
“அம்லு! இப்ப தான் நீ பழைய அம்லுவா தெரியுற.. இந்த மாதிரி தானே டிரஸ் போடுவ நாங்க முன்னாடி இங்க வந்தப்ப எல்லாம்..”என்றான் திரவி மகிழ்ச்சியாக..
அம்லு சிரித்தாள்..
“எல்லாரும் பேசிட்டு இருங்க, நான் டீ போட்டுட்டு வந்துடுறேன்…”என்று திரும்பினார் மீனாட்சி..
“அது எப்பிடிம்மா, செத்த இருங்க டீ போட்டு வந்துடுறேன்.. அம்லு பிள்ளையை அவங்க கிட்ட விட்டு வா..” என அடுப்படிக்குள் நுழைந்தார் பின்னால் தனியாக இருந்தற்குள்.
அம்லுவும் யுவியை ரேவதியோடு அமர வைத்துவிட்டு, எழுந்து சென்றாள்..
***
பாத்திரத்தில் பால் ஊற்றிப் போட்ட மீனாட்சி, அம்லுவிடம்”அம்லு! என்ன விடிஞ்சும் விடியாமல் வந்திருக்காங்க எனக்கு புரியலடி…”என்றார் மெதுவாக.
“வந்தா என்னம்மா, இதுக்கு தான் என்னைய கூப்புட்டீயா..? நான் யுவிக் கூடப் பேசிட்டு இருந்திருப்பேன்..”
“ஆமா! நீ பெரிய திரவியப்பொண்ணுனு உன்னை கூப்புட்டு நான் குழப்பத்தை சொன்னேன் பாரு.. என் தலைய இந்த செவத்துல முட்டனும்.. சரி அவங்க எல்லாரும் என்ன குடிப்பாங்க…? நீயே போட்டு கொண்டு வா, நான் போய் பேசிட்டு இருக்கேன்..”என்று நடந்தார் முன் அறைப்பக்கம்..
அம்லு யுவிக்காக பாலை தனியாக காய்ச்சி ஆற வைத்தாள்..
அடுப்பில் பாலை வைத்து விட்டு, பின்னால் இருந்த குடத்தடியில் முகம் கழுவி, ப்ரஷ் பண்ணிட்டு வந்தாள்..
சர்வா, பாட்டிக்கு டீயை போட்டு விட்டு, திரவி, ரேவதிக்கு காபியைப் போட்டாள்..
அனைவருக்கும் எடுத்துக் கொண்டு வர, அங்கு ஒன்றும் பெரிதாக பேசிவிடவில்லை..
மீனாட்சி உள்ள வந்து ரேவதி அருகில் அமர்ந்த நேரம் வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது, “இதோ வந்திடுறேன்மா”என எழுந்து வெளியில் சென்று எட்டிப்பார்க்க அங்கு செவல நின்னுட்டு இருந்தான்..
“என்ன செவல…?”
“எக்கா, மாட்டுக்கு வைக்க(வைக்கோல்) வேணுமுனு சொன்னீயே.. எத்தனை கட்டு வேணும்…? காசு கொடுத்து சொல்லி வச்சா தான் ஒதுக்கி வப்பானுங்க.. காசை எடுத்துட்டு வா..”
“கட்டு எவ்ளோடா….?”
“அது எப்பயும் போல தான் சொல்றான், நான் பேசிக்குறேன், மாங்கா வாங்கப் போறவன் கிட்ட குதிரை விலை சொல்வானுங்க.. நீ வேகமா போ…” என அவன் புலம்பியவாறு, காரையும் உள்ளாரையும் எட்டிப் பார்த்தான்..
மீனாட்சி அவசரமா போய் பர்சில் இருந்த பணத்தை எடுத்து வந்து அவனிடம் நீட்டி, பத்து கட்டுடா என்றார்..
“இதுக்கு தான், உனக்காக இந்த பய ஒப்பாரி வச்சான்.. இப்பிடி நீ பாத்து பாத்து பண்ணா யாருக்கு தான் புடிக்காது உன்னைய சொல்லு..”என்று ஆரம்பித்தார் பாட்டி..
மீனாட்சி”என்னம்மா சொல்றீங்க…?”
“அட ஆமா மீனாட்சி, யுவி எழுந்திரிச்சு அம்லு எங்கனு வீட்டையே ரெண்டாக்கிட்டான்.. சர்வா ஏததோ சொல்லி நாலு அடியும் போட்டான்.. ம்ம்ம்உகும் சாப்பிடவும் இல்லை, மல்லுக்கட்டி ஊட்டி விட்டதும் வாந்தி வந்துட்டு.. சரி ஃபோன் பேசி சமாதானம் செய்யலாமுனு பாத்தா அம்லு போன் அங்க என் பையில்.. உங்க போன் ஸ்விட்ச் ஆப்.. பொறுக்க முடியாம நான் தான் இப்ப ராத்திரியோட ராத்திரியா கிளப்பி கூட்டிட்டு வந்தேன், திரவிக்கு தான் தெரியும் உங்க வீடுனு.. ரேவதியும் அம்லுவை பாக்க ஆசைப்பட்டா அதான் அழைச்சுட்டு வந்தோம்..”
மீனாட்சி அம்லுவை பார்த்துவிட்டு, “என் போன் சார்ஜர் அங்கயே போட்டு வந்துட்டேன்.. இவளும் வந்ததில் இருந்து போனை தேடிட்டு என் போனுக்கு சார்ஜ் ஏத்த தான் அடுத்த வீட்டுக்குப் போனா” என அத்தோடு நிறுத்தியவர்.
“நான் தான் நாளைக்கு பேசலாமுனு சொல்லி படுக்க சொன்னேன் ராத்திரி.. அவ குணம் அப்பிடி, புள்ளைங்க ஒட்டிக்கும் இதுக்கா இந்த காலையிலே கஷ்டப்பட்டு நீங்களும் வயசான நேரத்தில் அலைஞ்சீங்க.. ஏன் திரவி தம்பி உங்க கிட்ட தான் நம்ம பாஸ்கி நம்பர் இருக்கே கூப்புட்டு இருக்கலாமே..?”
“இல்லம்மா! அவர் நம்பர் போகலயே..”
“ஓ! மறந்துட்டேன் பாருங்க.. அவன் மலேசியா போயிட்டான்.”
“அது சரி, இப்பிடியா பாட்டி, அப்பாவை கஷ்டப்படுத்துறது தம்பி.. நீங்க நல்ல பிள்ளைனு தானே நினைச்சேன்..”
“நான் குட் பாய் தான் பாட்டி, நீங்க அம்லுவை என் கூடவே அனுப்பிடுங்க, நான் அவங்களை எல்லாம் தொல்லை பண்ண மாட்டேன்” என்றான் அவன்..
மீனாட்சி சிரித்துவிட்டு”அப்ப நான் அம்லு இல்லாம தனியா இருப்பனே.”
“நீங்களும் எங்க கூட வந்துடுங்க பாட்டி.. நம்ம எல்லாம் ஒரே வீட்டில் இருக்கலாம்..”
“அது முடியாதே தங்கம், பாரு பாட்டிக்கு மாடுங்க இருக்கு உன்ன மாதிரி சின்ன கன்னுக்குட்டிங்க இருக்கே.. “என சிரித்து அவனை கொஞ்சினார்..
“ஐ! ஜாலி.. அப்பா! அப்ப நான் அம்லு கூட இங்கவே தங்கிடவா…?”என்றான் சட்டென்று..
“யுவி! ஸ்கூல் போகனுமுல..”என்றான் சர்வா அவனை முறைத்து.
“அம்லு மட்டும் காலேஜ் போகாம இங்க வந்துட்டாங்க, அப்ப நானும் ஸ்கூலுக்கு போகலை..”
“யுவி!”என்றான் வேகமாக..
அம்லு அவனை தன்னோடு அணைத்துக் கொண்டு”யுவி! அப்பிடி பேசக்கூடாது.. பாலைக்குடி. நீ குட்டிப்புள்ள ஸ்கூல் போகனும். நான் ஸ்கூல் எல்லாம் படிச்சு முடிச்சுட்டேன் தெரியுமா..?”
திரவி”சர்வா அவன் ஏதோ சின்னப்புள்ள பேசுறான் நீ ஏன்டா டென்சன் ஆகுற.?”
“இல்ல திரவி! சின்னப் புள்ளைனு தான் அவன் அடம் புடிச்சு இவ்ளோ தூரம் வந்திருக்கோம். இன்னும் ஓவரப் போற மாதிரி இருக்குல.. இதுல பெரியவங்களும் சின்னப் பிள்ளைங்க மாதிரி”என பாட்டியை முறைத்தான்..
பாட்டி”போடா!”என்பது போல்.. “ஏன்மா! மீனாட்சி, அவன் சின்னப் பையன் பட்டுனு கேட்டுட்டான்.. எனக்கும் அதே குணம் தான் நானும் பட்டுனு கேக்குறேன்.. அம்லுவை உறவே தெரியாம தானே எங்க வீட்டில் தங்க வைக்க முடியாது, அதுக்கு ஏன் உன் பொண்ணை என் பேரன் சர்வாக்குக் கட்டித் தரக்கூடாது..”என்றார்..
“பாட்டி! இப்பிடி எதும் ஏடாக்கூடாம பேசக்கூடாதுனு சொல்லி தானே கூப்புட்டு வந்தேன்..”என்று சர்வா அவரை கோபமாக முறைத்தான்..
மீனாட்சி அமைதியா அம்லுவைப் பார்த்துவிட்டு, “நீங்க பெரியவங்க நான் சொல்றது என் நிலைனு புரியும்.. அம்லு சின்னப்பொண்ணு அவ வயசுக்கு ஏற்கனவே புள்ளை இருக்கும் ஒருவரை கட்டி வைக்க, எப்பிடி நான் யோசிக்க முடியும்..? அவளுக்கும் முதல் வாழ்க்கை இழப்பு இருக்கு தான், ஆனா நான் பெத்தவ,மறுபடியும் ஒரு புள்ளையோடு இருப்பவருக்கு கட்டிக்கொடுத்து அவங்களுக்கு வேலைக்காரியா அனுப்ப விருப்பமில்லைம்மா..”என்றார் நேரடியாக..
“உங்க பதில் எல்லாம் சரி தான், என் பேரனுக்கு கட்டிக்கொடுத்தா அவ வேலைக்காரியா தான் இருப்பானு எப்பிடி கணக்குப் போடுறீங்க…?”
“பின்ன என்னம்மா, இந்த பையனுக்கு அம்மான அப்பிடி தானே.. என்ன இருந்தாலும் பிள்ளை பெத்தா கிடைக்குற மரியாதை தனி தானே.. நாளைக்கு நீ வளர்த்தவ தானேனு ஒரு நாக்கு சொல்லிடாத…?”
மீனாட்சி”அவ புரியாதவம்மா, அவளுக்கு இது ஒத்து வராது..”
“அம்மா! எனக்கு ஒத்து வராதுனு நீயா முடிவுப் பண்ணாத. இவங்க தம்பியை நீ தான் எனக்கு ஒத்து வருமுனு சொன்ன நான் கட்டிக்கிட்டேன்.. என்ன ஆச்சு ஒரு வருசம் கூட முடியல… இப்ப சர்வா சார் ஒத்து வராதுனு சொல்ற.. என்னம்மா பேசுற..? எனக்கு யுவியைப் புடிச்சு இருக்கு, சாரைப் புடிச்சு இருக்கு.. அப்புறம் என்ன உனக்கு, யாரோ ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போற என்னையை நல்லா பாத்துக்கிட்ட சாருக்கு பண்ணி வச்சா என்ன தப்பு.. ?”
“அம்லு! நீ சர்வாவை விரும்புறீயா…?” என்று கேட்டான் திரவி.
“சார் பத்தி உங்களுக்கே தெரியுமுல அண்ணே, ரொம்ப நல்லவரு அப்புறம் யுவி எனக்கு மனசளவு நெருக்கமா இருக்கான், பாட்டி அமெரிக்காவில் இருக்கும் போது கேட்டாங்க, சர்வா சாரை கல்யாணம் பண்ணிக்கிறீயானு நானும் சரினு சொன்னேன். அவங்க கூட இருப்பது எனக்கு புடிச்சி இருக்கண்ணே”
“ஏன்மா! நீங்க பெரியவங்க, அவ சின்னப்பொண்ணு அவ கிட்டப் போய் நேரா கேட்டு இருக்கீங்க, அதான் அவளுக்கு இப்பிடி ஒரு எண்ணம் வந்திருக்கு இல்லனா அம்லு இப்பிடி எல்லாம் பேச மாட்டாளேனு எனக்கு தோணுச்சு..”என்றார் வருத்தமாக மீனாட்சி.
“பாட்டி கேட்டதில் என்ன தப்பும்மா..? சர்வா மாதிரி ஒரு பையன் கிடைப்பது அரிது”என்றான் திரவி.
என்ன இருந்தாலும் ரேவதிக்கு மனதில் தன் தம்பி பொண்டாட்டி என்ற உணர்வு இருந்தது, அதனால் பெரிதாக அந்த உரையாடலில் ஆர்வம் காட்டவில்லை, சொல்லபோனால் அந்த டாபிக்கே அவளுக்கு பிடிக்கவில்லை.
“என்னப்பா பேசுறீங்க, உங்க மச்சானுக்கும் நான் நம்பி தான் கொடுத்தேன், அதுக்காக அவனையும், சர்வா தம்பியையும் நான் ஒரே மாதிரி தராசில் வைக்க மாட்டேன்.. தம்பி குணமான பையன் தான். அம்லுவை கல்யாணம் பண்ணி அனுப்ப முடிவு எடுப்பது பற்றி இந்த முறை அவசரப்பட மாட்டேன்.”என்றார் மீனாட்சி..
“நான் பெரியவ தான் என்னோட அனுபவத்தில் கத்துக்கிட்டது, கேக்க வேண்டிய நேரத்தில் கேக்கனும் மீனாட்சி இல்ல காலம், நேரம் அமையுமுனு காத்திருந்தா வயசும், மனசும் ஒரே நிலையில் இருக்காது. இப்ப என் மனசில் தோன்றியது அம்லு சர்வாக்குப் பொருத்தமுனு எல்லா விதத்திலும், அவன் மனசு கஷ்டப்படுமுனு யோசிக்குறா அந்த மாதிரி ஒருத்தி தான் வேணும் அவனுக்கும், அம்மா ஸ்தானத்தில் யுவிக்கும்.. உங்களை உடனே கட்டாயப்படுத்தவில்லை.. பொறுமையா யோசிங்க, அம்லுக்கும் விவாகரத்து கிடைக்கட்டும்..”என்றார் பாட்டி..
“பாட்டி! நான் அம்லுவை கல்யாணம் செய்ய சம்மதிக்கவே இல்லையே, அவங்களை எதுக்கு யோசிக்க சொல்றீங்க..? இந்த டாபிக்கை விடுங்க. யுவி கிளம்பலாம..? பாத்துட்டா போதுமுனு சொன்னல, இந்தா இதை நிரஞ்சி கிட்ட கொடு”என அவளின் போனை எடுத்துக் கொடுத்தான்..
திரவி அதை வாங்கி நிரஞ்சிக் கிட்ட கொடுக்க, அவளும் வாங்கிக் கொண்டாள்..
“அப்பா! இப்ப தானே வந்தோம்..”
“சோ வாட்!”
“இருங்க தம்பி, இருந்து சாப்பிட்டுப் போகலாம், வராத நீங்க வந்து இருக்கீங்க, மதியம் சமைக்குறேன் சாப்பிட்டுப் போகலாம்.. அம்லு போய் அந்த கோழிக்கொடுப்புக்கு கம்பியைப் போட்டு வா”என்றார்..
“இல்லல்ல! நாங்க கிளம்புறோமா, மதியம் வரை எல்லாம் இருக்க முடியாது.. திரவி போகலாம..?”என்றான் சர்வா..
மீனாட்சி”என்ன தம்பி, ஏதோ அவசரமா வந்துட்டுப் போற மாதிரி போக நிக்குறீங்க, நீங்க அம்லுக்கு பண்ணி இருப்பது பெரிய உதவி, அதுக்கு காசுக் கொடுத்து எல்லாம் நான் சரிப்பண்ண முடியாது, ஆனா இப்பிடி ஏதாவது சாப்பாடு போட்டு மனநிம்மதி அடைய ஒரு வாய்ப்புக் கொடுங்கப்பா”
“ஆமான்டா! அம்மா இவ்ளோ தூரம் சொல்றாங்கள, ஏன்டா வீம்பு பண்ற..?” என்றான் திரவி..
பாட்டி”ஆமா! ஆமா! எனக்கு இப்ப உடனே கிளம்ப ஒத்து வராது…”
“இதுக்கு தான் பாட்டி உங்களை வரவேண்டாமுனு சொன்னது.. என் பேச்சை கேக்க கூடாதுனு முடிவோடு இருக்கீங்க”என கடுப்படித்தான்..
“அப்பா! ப்ளீஸ்பா..”
“நீ இரு யுவி, அவங்க எல்லாம் போகட்டும்”என்றாள் அம்லு..
சர்வா முழித்தான், இவ என்ன புதுசா கிளப்பி விடுறா. அவனும் ஆரம்பிச்சுடுவானே..
“ஐ! ஜாலி, நான் அம்லு கூட இருக்கேன்…”
“யுவி! தப்பு.. கிளம்பு.”
மீனாட்சி”ஏன் தம்பி அவசரப்படுறீங்க..? எனக்காக இருக்க கூடாத..? மதியம் சாப்பிட்டுப் போகலாம்..”
திரவியும் சொல்ல, சர்வா சரி என்று ஒத்துக் கொண்டான்..