சர்வா, மதியம் பிறகு செல்லலாம் என தலை ஆட்டியதும், மீனாட்சி எழுந்து சென்று உடனே காலைக்கு தேவையான உணவை தயார் செய்யத் தொடங்கினார்..
வீட்டில் மாவு இல்லை, கோதுமை மாவு இருக்க பூரி செய்யலாம் என அதை எடுத்து அளந்துக் கொட்டினார் ஒரு பாத்திரத்தில்.. அதை நன்கு பிசைந்து வைத்தவர், குருமா செய்ய காய்கறிகள் இல்லாததால் அருகில் இருக்கும் மளிகை கடைக்கு செல்ல ஒரு பையோடு வந்தார்..
அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, அம்லுவிடம்”பாட்டியை அழைச்சுட்டுப் போய் அந்த அறையில் படுக்க சொல்லு அம்லு, எவ்ளோ நேரம் உட்காந்தே இருப்பாங்க.”
“நானும் நேத்து தானே வந்தேன் அதான் வீட்டில் காய்கறி எதும் இல்லை, போய் தேவையானதை வாங்கிட்டு வந்துடுறேன்.. நீங்க எல்லாம் பேசிட்டு இருங்க.. அம்லு அந்த டிவியைப் போட்டு விடு..”
“வாங்கம்மா, நான் கூட்டிட்டுப் போறேன்” என எழுந்தான் திரவி…
“இல்ல தம்பி! கடை இந்தா தெருமுனையில் தானே இருக்கு.. நான் போயிட்டு வந்துடுறேன். நீங்க சர்வா தம்பிக் கூட பேசிட்டு இருங்கப்பா” என்று வேகமாக நடந்தார் வெளியில்..
கடைக்கு சென்றவர் தேவையான காய்கறிகள், மளிகை சாமான்களை வாங்கிட்டு, அப்பிடியே தெரிந்த பையனிடம் காசைக் கொடுத்து ஒரு கிலோ ஆட்டுக்கறி மதியத்திற்கு வாங்கிட்டு வரச்சொன்னார்..
***
பாட்டி உட்கார்ந்து இருந்தது பொழுதுப் போகாமல் எழுந்து அப்பிடியே சுற்றிப் பார்த்தார்… அவரோடு ரேவதியும் சென்றாள்..
அம்லு, யுவியோடு பேசிட்டு அவள் அறையில் இருந்த ஒரு பையை எடுத்து வந்து ஹாலில் வைத்துப் பிரித்தாள்..
அது எல்லாமே அம்லு இருக்கும் போது விளையாட வரும் பிள்ளைகளுக்காகவே வாங்கியது, திருவிழாக்குப் போனால் சிறிய கார், ஜீப், லாரி, ஜேசிபி என வாங்கி வந்து வைத்துக் கொள்வாள், வரும் பிள்ளைகளுக்கு கொடுத்து விளையாடுவதற்கு.. அவள் ஒரு பிளே ஸ்கூல் டீச்சர் போல தான் கிட்டதட்ட, யாராவது நல்லது, கெட்டதுக்குப் போக பிள்ளைகள் அழைத்து செல்வது சிரமம் என்றால் அம்லு தான் பார்த்துக் கொள்வாள்…
அம்லு சென்ற பின் மீனாட்சி அதை எல்லாம் எடுத்து அந்த பையில் போட்டு வைத்தார்..
சர்வா மனதில் ‘இது என்ன இவ்ளோ டாய்ஸ், இவ விளையாட வாங்கியதா..?’ என சந்தேகமாக பார்த்தான்..
திரவி”டேய்! இது எல்லாம் அம்லுவை தேடிவரும் வாண்டுகளுக்காக இவளே வாங்கி வச்சிருப்பது.. என் பிள்ளைங்க வந்தப்பவும் இப்பிடி தான் விளையாண்டாங்க.. அம்லு இந்த ஏரியாக்கே பிளே ஸ்கூல் டீச்சர். மேடம் தான் பாத்துப்பாங்க”என கூறி சிரித்தான்..
“ஓ! நான் கூட நிரஞ்சி விளையாட வாங்கி இருப்பாங்கனு தப்பா நினைச்சுட்டேன்..”
நிரஞ்சி சர்வாவிடம் எதுவும் பேசவில்லை, “அண்ணே! நானும் தான் விளையாடுவேன், சின்ன பசங்க கூட இதை எல்லாம் விளையாண்டா நல்லா இருக்கும்.. யுவி இதை பாரே சூப்பரா இருக்கும், இப்பிடி திருப்பினா லைட் எரியும் இப்பிடி திருகினா மியூசிக் வரும், இதுல நம்ம பேசும் வாய்ஸ் வரும், இது பேரு என்னமோ சொல்வாங்களே, ம்ம்ம்ம்..??”
“ஆமா அம்லு, இது பேரு டாக்கிங் டாம்.. எங்க பேசுங்க..”
“ஆ! ஆமா! இரு.. “என அதை ஆன் செய்து.. யுவி ஐ லவ் யு…”என்று அழகாக சொன்னாள்..
அதுவும் அதே திரும்ப பொம்மை குரலில் சொல்ல, யுவி”அம்லு! ஐ லவ் யு” என்றான்.
அந்த டாம்”அம்லு! ஐ லவ் யு”என்றதும்.. நிரஞ்சி சிரித்தாள்.
சர்வா அவளையே பார்க்க, சிரித்தப்படி திரும்பிய நிரஞ்சி, அவனை பாத்துட்டு முகத்தை சுளித்து திருப்பினாள்..
அவனுக்கு அவளின் சிறுப்பிள்ளை தனம் சிரிப்பை உண்டாக்கியது, அம்லு கோபமாக இருக்காளாம்.. அதை முதன் முறையாக சர்வா காண்கிறான்..
பாட்டி கொல்லைப்புறம் வர, மீனாட்சி நுழைந்தார்.
“அம்லு! இங்கயே உட்காந்து இருக்கியா, என் கூட வா செத்த, புள்ளை விளையாடட்டும்”என பின் பக்கம் சென்றார்.
அங்கு பாட்டி, ரேவதி சுத்திப் பார்க்க… “என்னம்மா! இங்க நிக்குறீங்களா..? வந்து உட்காருங்க”என அங்கிருந்த கால் தொங்கப் போட்டு அமரும் மேடையை ஒதுங்க வைத்தார்..
பாட்டி, ரேவதி அமர்ந்தனர்..
“அம்லு, இந்த மாவை உருட்டி தேய்ச்சி வைம்மா”என பூரி மாவை நீட்டினார்..
அம்லு தலையை ஆட்டிவிட்டு, அதை வாங்கினாள்..
ரேவதி”அம்லு! இங்க கொண்டு வா, நானும் உருட்டுறேன்”என்றாள்..
“இருக்கட்டும் அண்ணி, நீங்க பாட்டியோடு பேசிட்டு இருங்க நான் பாத்துக்குறேன்..”என வேலையைத் தொடர்ந்தாள்..
“இந்த இடம் சொந்த கட்டுமனையா மீனாட்சி..?”
“ஆமாங்கம்மா! இவ அப்பா பங்கு தான்.. இவளும் பொம்பளை பிள்ளையா போயிட்டானு பங்காளிக்குள்ள போட்டி இதை வாங்கிப்புட, ஆனா நான் அசையாம இருக்கேன்..”
சர்வாவும், திரவியும் போர் அடிக்குதுனு எழுந்து நடந்து முன் பக்கம் தொடங்கி அந்த வீட்டின் பக்கவாட்டில் இருந்த கொட்டகையில் நின்றனர்.. மீனாட்சி பேசியது காதில் விழுந்தது..
“அத யாரு யோசிக்குறா, அம்லு பொட்டப்புள்ள வேற வீட்டுக்குப் போகப்போது, அதனால இந்த கட்டுமனை வாங்கிட்டா, அவங்க ஆண் வாரிசுக்கு மனைக்கு கொடுக்கலாமுனு யோசிக்குறாங்க”
“அப்ப நீங்க எங்கப் போவீங்க.?”
“நானும் பொண்ணு வீட்டோட போய் செட்டில் ஆக எவ்ளோ முயற்சி பண்ணுனானுங்க.. நான் இது என் புருசன் இடமுனு ஆலமரமா இருந்துட்டேன்.. இப்பவும் வாய்ப்பு கிடைக்குமானு சுத்துறாங்க.. அவனுங்களுக்கு அவல் கொடுத்த மாதிரி அவ வாழ்க்கையும் பாதியிலே முடிஞ்சுட்டு.. என்னத்த சொல்ல..”என குருமாக்கு தேவையானவற்றை அரிந்து, சட்டி வச்சு தாளித்து எடுத்துக் கொட்டினார்..
மீனாட்சிக்கு உள்ளம் குளிர்ந்தது, “நீங்க பெரியவங்க, உங்க வாய் முகூர்த்தம் பழிக்கட்டும்மா, என் புள்ள வாழனும் நான் நிலையா இருக்கும் போதே அத பாத்து கண்குளிரனும்.. அது போதும்.”என கண்ணீர் வடிய முந்தானையில் துடைத்துக் கொண்டார்..
“நீங்க நினைக்குறதை விட நல்லா வாழுவா மீனாட்சி”என மனதார வாழ்த்தினார்..
***
“அம்லு அம்மா பாவம் தான் திரவி, தனி மனுஷியா கஷ்டப்படுறாங்க, அவங்களை போய் ஜெகன் ஏமாத்திட்டான் பாரு”என்றான் வருத்தமாக சர்வா..
“ம்ம்ம்! அவனோடு திட்டம் தெரியாம நானும் அவங்க கண்ணீருக்கு ஒரு காரணமாகிட்டேன் சர்வா”
“நீ என்னடா செய்வ, தெரிஞ்சு இருந்தா இப்பிடி ஒரு பாவத்தை செய்ய தோணுமா…?”
“ம்ம்ம்!”
****
காலை உணவு பூரி, குருமா அனைவருக்கும் சுட சுடப் பரிமாறப்பட்டது..
மீனாட்சி ரேவதிக் கூட முகம் கொடுத்துப் பேசவில்லைனாலும் சாப்பாடு போடும் போது முகம் சுளிக்காமல் பரிமாறினார்..
யுவியும் அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டான்..
நிரஞ்சி வீட்டில் டேபிள் எல்லாம் இல்லை, தரையில் தான் அமர்ந்து சாப்பிடனும், பாட்டி மட்டும் கீழே அமர முடியாததால் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டார்..
சாப்பிட்டதும் பாட்டிக்கு அசதியாக இருந்த ஒரு அறைக்குள் சென்றுப் படுத்துவிட்டார்..
யுவியும் நிரஞ்சியை பார்க்க வந்த ஆர்வத்தில் சீக்கிரமே முழிக்க இப்போது நிரஞ்சி மடியில் தூங்கிவிட்டான்..
அவனையும் பாட்டி அருகில் படுக்க வைத்தாள்..
ரேவதி, அம்லு, திரவி, சர்வா மட்டும் அமர்ந்திருக்க, மீனாட்சி பின்னடுக்கில் ஏதோ வேலையில் இருந்தார்..
மீன் வண்டிச் சத்தம் கேட்க, மீனாட்சி”அம்லு! மீன் வண்டியை கூப்புடு”என கூறினார் பின்னால் நின்றவாறே..
மீன் வண்டி வர, “அம்லு! எப்ப வந்த…? அம்மாவையும் காணும் கொஞ்ச நாளா..?”என மீன்களின் மேல் இருந்த சாக்கை நகர்த்தினான்..
“என்ன அண்ணே மீன் எல்லாம் ஓவர் ஐஸ்ஸா இருக்கு..”என அதனை விலக்கி கை வைத்துப் பார்த்தாள்..
“போட் போகல அம்லு, இதுவே கஷ்டப்பட்டு புடிச்சது. மார்கெட்டுக்கே இப்பிடி தான் வருது..”
மீனாட்சி சட்டி எடுத்துட்டு வந்தார்.. திரவி போர் அடிக்க எழுந்து மீன் வண்டியை சென்று பார்த்தான்..
மீனாட்சி”நல்ல மீனா போடுங்கப்பா, இது என்ன ஷீலாவ.. முரல் இல்லையா..?”
“இருக்கும்மா இருங்க”என கீழ் இருந்த சாக்கில் இருப்பதை எடுத்து மேல் வைத்தார்..
சர்வா ஏதோ திருவிழாவில் கடைகளின் சந்தை வேடிக்கைப் பார்ப்பதுபோல் பாத்துட்டு இருந்தான்..
“ஏன்பா! அந்த மீனை எதுக்கு கீழே தனியா வச்சு இருக்க…?”என்று கேட்டான் திரவி..
“சார்! இது கிலோ நானூறு மேல் வரும், இங்க நிறையப் பேர் வாங்க மாட்டாங்க ஆனா சும்மா எடுத்து பாத்துட்டு விலைக் கேப்பாங்க அப்புறம் இது என்ன கொம்பு விலைனு கீழெ போடுவாங்க, இப்பிடியே போனா அந்த மீன் எல்லாம் கைப்பட்டு ஒரு மாதிரி போயிடும் அதான் யாரு வாங்குவாங்கனு தெரியுமுல அங்க மட்டும் கேட்டா எடுப்பது..”என்றான் விளக்கமாக…
“ஓ! பிஸ்னஸ் ட்ரிக், சூப்பர்.. சூப்பர்..” என சிரித்தான் திரவி..
“ரெண்டு கிலோ போடுப்பா”
“என்னம்மா! வீட்டுல விருந்தாளியா நம்ம அம்லு வந்து இருக்குனா மீன் வாங்கி தானே ஆகனும், நாளைக்கு அம்லுக்கு விரால் கிடைச்சா கொண்டு வரேன்..” என்றான் அவன்..
“ஐ! கொண்டு வாங்கண்ணே..”என்றாள் அம்லு..
திரவி”அந்த மீன் என்ன ஸ்பெஷல் அம்லு.”
“எனக்கு புடிக்கும் அண்ணே, அது ஆத்து மீன்.. டேஸ்டா இருக்கும்..”
“ஓ! ம்ம்ம், எங்களுக்கு அதப் பத்தி எல்லாம் தெரியாது.. ஏதோ உன் மூலமா தெரிஞ்சுக்குறோம்..”
“சார்! அம்லுக்கு எல்லா மீன் பத்தியும் தெரியும். என்ன அம்லு உன் புருசன் வரலையா…..?”
“இல்ல அண்ணே!”
மீனாட்சி”அம்லு! போய் காசு எடுத்துட்டு வந்துக் கொடுத்துடு.. போ”என பேச்சை மாற்ற அவளை உள்ளே அனுப்பினார்.
திரவி உள்ளே வர, “ரேவதி போய் சமையலுக்கு ஹெல்ப் பண்ணு போ” என்றான்..
“ம்ம்ம்! அம்லு அம்மா முகம் கொடுத்துப் பேச மாட்டேனுங்குறாங்க திரவி.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..”
“உன் தம்பி மேல தப்பு இருக்கு ரே, என்ன பண்றது, நம்ம தானே இடையில் நின்னு இந்த கல்யாணத்தை பண்ணி வச்சோம். பொறுத்து தான் போகனும். நாளைக்கே நம்ம பொண்ணுக்கு இப்பிடி ஒரு நிலை வந்தா நம்மளும் இப்பிடி தான் இருப்போம். இந்த மாதிரி சாப்பாட்டில் முகம் சுளிக்காம இருப்பமானு கூட சந்தேகம் தான்..”
“ம்ம்ம்!”
“நீ போய் பேசு ரேவதி, நிரஞ்சி அம்மா புரிஞ்சுப்பாங்க.. உன் மேல என்ன தப்பும் இல்லைல…”என்றான் சர்வா..
“சரிண்ணா!”என ரேவதி எழுந்து அடுப்படிப் பக்கம் சென்றாள்..
ரேவதியாகவே மீனாட்சியிடம் பேச, முதலில் முறுக்கியவர் பிறகு பேசினார்..
அம்லுவும் அம்மாக்கு உதவ, ஆட்டுக்கறியும் வந்தது..
கறிக்குழம்பு, நாட்டுக்கோழி பிரட்டல் மீன் குழம்பு, மீன் வறுவல், முட்டை, ரசம், என வகையாக சமைத்தார் மீனாட்சி…
ரேவதி”அத்தை! அவன் பண்ணினது தப்பு மன்னிச்சுடுங்கனு சொல்ல மாட்டேன், ஆனா எங்களுக்குமே இது பெரிய அதிர்ச்சி தான்.. நானும் ஆசையா தான் இருந்தேன்.. அம்லுவும், அவனும் சந்தோஷமா இருந்து பிள்ளை உண்டாகி வருவானு ஆனா எல்லார் ஆசையிலும் மண்ணை அள்ளிப்போட்டுட்டான் பாவி.. எனக்கு எங்க போய் முட்டிட்டு அழுவுறதுனு தெரியல.. அம்மா அம்லுவை எவ்ளோ பெசுனுச்சு… ஆனா இப்ப பேச முடியல அந்தளவு துக்கம் அடைச்சுப் போய் இருக்கு.. அப்பா ரொம்ப அமைதியாகிட்டார். எனக்கு எல்லாரும் இருந்து அனாதையா இருக்க மாதிரி இருக்கு..”என கண்கலங்கினாள்..
மீனாட்சிக்கு வருத்தமாக”நீ ஏன்மா, அழுவுற..? விடு எல்லாம் நம்ம விதினு போவோம்.. அத பத்தி பேசாத, திரவி எனக்கு மகன் மாதிரி அந்த தம்பிக்கு நீ பொண்டாட்டி அந்த உறவுல நீ எப்ப வேணா வந்துட்டுப் போ புள்ளைங்களோடு..”என்றார் மறைமுகமாக உன் தம்பிக்கும் எங்களுக்கும் எந்த உறவும் இல்லைனு உணர்த்தியவாறு..
“ம்ம்ம்! கண்டிப்பா அத்தை, அம்லு எனக்கு எப்பவுமே சொந்தகாரி தான்.”
“அண்ணி! நீங்க தம்பி, பாப்பாவை அழைச்சுட்டு வந்து இருக்கலாம்..”
“ம்ம்ம்! அடுத்த தடவை கூட்டிட்டு வரேன்…”
இப்பிடியே பேசிட்டு சமைத்தனர்..
சர்வா”திரவி! வா நம்ம சும்மா வெளியில் போயிட்டு வரலாம்..”என்றழைத்தான்.
இருவரும் கிளம்பினர்..
காரை எடுத்துட்டு கொஞ்சம் தூரம் சென்று, நிழலில் நிறுத்திவிட்டு வயல், தோப்பு என சுற்றிப் பார்த்தனர்..
“ஹப்பா! இங்க விவசாயம் நல்லா இருக்குல பாக்கவே.. பசுமையா..?”
“நம்ம மீனாட்சிப் பொண்ணு புருசன் கூட வாழமா வந்துட்டாளாம்…”
“அப்பிடியா…? யாரோ வெளிநாட்டு மாப்பிள்ளைக்குல கட்டிக்கொடுத்தா.. உள்ளூரில் மாப்பிள்ளையே இல்லாத மாதிரி…”
சர்வா, திரவி அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்..
“ஆமா! ஆமா!”
“என்ன பிரச்சனையாம்..”
“ஏதோ சொல்லிக்குறாங்க, பால் ஊத்துற இடத்தில் கேள்விப்பட்டது, அவ புருசனுக்கு வேற யாருக் கூடவே தொடர்பாம்..”
“ஓ!”
“இல்லைடி, இவ காலேஜ் எல்லாம் படிக்கப் போனா அங்க யாரையோ விரும்பிட்டா போல, அதான் புருசன் அனுப்பிட்டான்..”
“அது என்னவோ தெரியல.. பட்டும்மா கிட்ட மீனாட்சி சொல்லி இருக்கா அவ மருமகனுக்கு யாரோ ஒரு ஆம்பளையோட தொடர்பு இருக்குனு..”
“அடக்கண்றாவியே! இவ பொண்ணு ஒழுங்கா இல்லனு சொல்லாம இப்பிடியா கதை கட்டுவா.. குலுக்கி, என்னமோ சீமையில் மாப்பிள்ளைப் புடிச்சுப் போனா இப்ப மக சீமைக்காரனை புடிச்சுட்டா போல அதான் தலை கால் புரியாம காரணம் சொல்றா.. “
“இல்லக்கா, அதான் உண்மையாம் விவகாரத்து ஆகப்போதாம்.. அவனுக்கு பொம்பளைங்க புடிக்கதாம், புள்ளையும் பொறக்காதாம்..”
“அடியேய்! அம்லுக்கு புள்ளை பொறக்காதோ அதான் இப்பிடி எல்லாம் கதை சொல்றாங்களோ.. யாருக்கு தெரியும்..? என்னமோ ஜோடிச்சு சொல்றாள்க… வெளியூரில் நடந்தது நமக்கு எப்பிடி தெரியும்.. அந்த கடவுளுக்கு தான் தெரியும்..”
“அப்பிடியே அவ புருசனுக்கு இன்னொரு தொடர்பு இருந்தா என்ன, இவ பொறுத்து இருந்து பாக்கனும்.. கல்யாணம் ஆகி உடனே புடிக்கலையாம், ஆம்பளைங்க அப்பிடி இப்பிடி இருந்தாலும் நம்ம பொறுத்திருந்து தான் வாழனும்..”
“அடியேய்! அவ புருசன் பொம்பளை தொடர்பு இல்லையாம் ஆம்பளைத் தொடர்பாம்..”
“இது எல்லாம் கதைடி.. இப்பிடி எல்லாம கூத்து நடக்கும்..”
இப்பிடி பலர் பேச, சர்வாக்கு கோபம் வந்தது…
எழுந்து தூரமாக நடந்து வந்தனர்..
“திரவி! யாருமே ஜெகனை பத்தி பேசவே இல்லை, எல்லாருமே நிரஞ்சி, அவ அம்மாவையே குறை சொல்றாங்க பாரு..”
“ம்ம்ம்! இதான்டா சமூகம்.. தப்பு யார் மேலனு பாத்துப் பேச மாட்டாங்க, டார்கெட் பெண் தான்.. பேசினவங்களும் பெண்கள் தான்.. என்ன செய்றது..? ஏன் சர்வா, நீ நினைச்சா அம்லுக்கு நல்ல வாழ்க்கைக் கொடுக்க முடியுமுல…?” என்றான் திரவி..
“திரவி! நீயுமா…?”
“இல்லடா, உண்மையை சொல்றேன் அம்லுக்கு அடுத்த வாழ்க்கை எப்பிடி அமையுமுனு தெரியலை, ஆனா உன்னோட இருந்தா கண்டிப்பா நல்லா இருக்கும்.. இப்பிடி தான் என்னால யோசிக்க முடியும். உன்ன மாதிரி வீம்பா என்னால இருக்க முடியலடா, உன்னைய எல்லாம் கன்வின்ஸ் பண்ண முடியாது, நீயே கேட்டில இப்பிடி தான் அம்லு வாழ்க்கை எல்லார் வாயில அரைப்படும் இப்போதைக்கு..”
“சரிடா! நான் கல்யாணம் பண்ணா எல்லாம் சரியாகிடுமா..?”
“ஆமாட! அவ தனியா இருந்தா தானே பேசுவானுங்க, அப்புறம்…? அவளுக்கு டைவர்ஸ் ஆச்சு அடுத்த கல்யாணம் பண்ணிட்டானு கதையை முடிச்சுடுவாங்க..”
“அப்ப நிரஞ்சிக்கு நம்மளே நல்ல மாப்பிள்ளையா பாப்போம்டா…”
“இந்த விளையாட்டுக்கு நான் வரலைடா, ஏற்கனவே ஒருத்தனால நான் நொந்துட்டேன்.. போதும், ஏதோ நீ மாப்பிள்ளைனா நான் அம்லு அம்மா கிட்ட காலில் விழுவேன், யாரோ ஒருத்தனுக்கு நான் சப்போர்ட் பண்ண முடியாது..”
“என்னடா..?”
“ஆமா சர்வா, நீ கல்யாணம் பண்றேனு சொல்லு பேசுறேன்.. இல்லனா அவ வாழ்க்கை எப்பிடியோ போகட்டும் அவ அம்மா முடிவு.. நம்ம ஒன்னும் செய்ய முடியாது..”
சர்வா யோசித்தான், புரியவில்லை…
ஆனால் அம்லுவை எனக்கென்னனு விட அவன் மனசு இடமளிக்கவில்லை..
அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையனும், அது தான் அவனின் எண்ணம்.. ஆனா அவனே கல்யாணம் செய்ய அவனுக்கு முழுமனதாக தோன்றவில்லை.. யுவியை நினைத்தான், அம்லுவை நினைத்தான் இருவரும் மாறி மாறி வந்தனர் மூளைக்கும், மனதிற்கும்..
சமூகம் தானே வாழ்ந்தாலும் ஏசும் செத்தாலும் ஏசும் அதில் அம்லுவும் விதிவிலக்கு இல்லையே.. ஆனால் அம்லு மேல ஒரு சதவீதம் கூட தப்பு இல்லாமல் அவளையும், அவளின் அம்மாவையும் யூகத்தில் சந்தேகப்படுறாங்க, அவ புருசன் தப்பானவனு யாருமே யூகம் கூட செய்யலை அப்பிடியே சொன்னாலும் அவன் ஆம்பளையாம்…
சர்வாக்கு அவர்கள் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அம்லு முகம் மனதில் வந்து சென்றது… சிரித்த வெகுளியான முகம்.. அவளுக்கு அடுத்த வாழ்க்கை திரவி சொல்வது போல் நல்லா அமையலனா..?
தனக்கு மனைவியா வந்தா கண்டிப்பா நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் ஆனா காதல் இல்லறம்…?