“ நீ நாம பெண் அழைக்க அந்த வீட்டுக்கு வருவோம் என்று ஒத்துக் கொண்ட சர்வா..? உன்னிடம் நான் இதை எதிர் பார்க்கவில்லை…” என்று சர்வேஷ்வரனின் தந்தை வெங்கட பூபதி கோபத்துடன் கேட்டார்..
அதற்க்கு சர்வேஷ்வரன். “ பெண் அழைக்க போகலேன்னா அந்த பெண் கல்யாணத்திற்க்கு ஒத்துக் கொள்ளாது என்பது போல் மாமா சொல்லும் போது நாம ஒத்துக் கொண்டு தானே ஆக வேண்டும்..” என்ற மகனின் பதிலில்..
சங்கர பூபதி.. “ ஒரு காத்துக்கு குப்பை கோபுரத்தில் போய் அமர்ந்து விட்டது போல ஆயிடுச்சி…” என்ற அவரின் பேச்சில் நிதானமாக அவர் அருகில் சென்ற சர்வேஷ்வரன்..
“ எப்போ உங்க மச்சான் அங்கு போனாரோ அப்போவே குப்பை கோபுரத்தில் அமர்ந்தாச்சி பெரியப்பா.. நான் அவங்களை உட்கார வைக்க வில்லை..” என்று தம்பி மகனின் பதில் அடுத்து பேசாது வாய் மூடிக் கொண்டார்..
என்ன தான் அந்த வீட்டில் சர்வேஷ்வரன் திறமை ஆளுமை மிக்கவன்.. இவனால் தான் தங்கள் நிலை இன்னும் உயர்ந்தது என்றாலுமே,
வயதில் சிறியவன் தன் அப்பாவை இப்படி எதிர்த்து பேசுவதை பொருத்து கொள்ள முடியாது, இவ்வளவு நேரமும் தன் மனைவி வனிதாவுக்காக வாய் மூடிக் கொண்டு நடக்கும் பிரச்சனைகளை வாயையும் , கண்ணையும் மூடி பார்த்துக் கொண்டு இருந்தவன் வாய் திறந்து..
“ எனக்கு ஒண்ணு மட்டும் புரியல சர்வா…?” என்று கேட்டவன்.. தன் தம்பி என்ன ..? என்று தன்னை கேட்பான் என்று அவன் முகத்தை பார்த்தான்..
ஆனால் சர்வேஷ்வரன் அண்ணனின் பேச்சுக்கு அவன் பக்கம் திரும்பி பார்த்தானே ஒழிய எதுவும் பேசாது எது என்றாலும், நீயே பேசு என்பது போல் அமைதி காத்தான்..
அதனால் மகேஷ்வரனே.. “ அந்த பெண்ணை கட்டினா தான் உன் மானம் காத்தில் பறக்காதது போல் பேசும் உன் லாஜிக் தான் எனக்கு புரியல சர்வா..?” என்று கேட்டவன்.
பின் கொஞ்சம் தயங்கி.. “ அந்த பெண்ணை நீ பார்த்து இருக்கியா…? ” என்ற கேள்வியில் அவனை கூர்ந்து பார்த்தவன்..
சிரித்துக் கொண்டே.. “ எனக்கு அந்த பெண் பிடித்து இருந்தால், அதாவது உன் பேச்சு படி நான் அந்த பெண்ணை முதலில் பார்த்து பிடித்து இருந்தால், இது போல் முகத்தை சுத்தி எல்லாம் மூக்கை தொட மாட்டேன்..புரியுதா..?
ம் அப்புறம் என்ன கேட்ட.. அந்த பெண்ணை கட்டினால் மட்டும் , என் மானம் காத்தில் பறக்காது என்று கேட்டலே.. அதுக்கு உண்டான பதில் இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லோருக்கும் தெரிந்து விடும்..” என்று சொன்னவன்.
தன் அன்னையை பார்த்து.. “ அம்மா அந்த வீட்டுக்கு போகும் பொறுப்பை உங்களை நம்பி தான் விடுகிறேன்.. என் நம்பிக்கையை காப்பத்துவீங்க என்று நம்புறேன்.. எல்லாம் சரியா நடக்க வேண்டும்..” என்று சொல்லி விட்டு தன் பி.ஏ தீபக்கை பேசியில் அழைத்து கொண்டே..
“ம் எல்லோரும் வந்துட்டாங்களா..? “ என்று சொல்லி கொண்டே வெளியில் நடந்து செல்பவனை கோபத்துடம் முறைத்து பார்த்த வனிதா..
அதே கோப முகத்தோடு அனைவரையும் பார்த்து.. “ அவர் வயதுக்கு கூட மரியாதை தராது பேசிட்டு போகிறார்.. நீங்க பாட்டுக்கு அவரை எதிர்த்து பேசாது இருக்கிங்க..?
எப்படி அந்த பெண் இங்கு வர முடியும்…? அதுவும் நான் இங்கு இருக்கும் போது..? எங்க அம்மாவுக்கு இது தான் தாய் வீடு..
அப்பாவால் தான் அம்மாவுக்கு பிரச்சனை.. அவங்க மனது ஆறுதலுக்கு வந்து போவது அம்மா வீடான இங்கு தான்… இங்கும் அந்த பெண் இருந்தால், அம்மாவுக்கு வேதனை ஆகாதா..?” என்று வனிதா கேட்ட அனைத்தும் கேள்விகளும் நியாயமான கேள்விகள் தான்..
ஆனால் கேட்கும் நபரிடம் அந்த நியாயம் இல்லையே.. அதையே தான் வைதேகியும் கேட்டார்…
“ எங்களுக்கு மட்டும் அந்த வீட்டில் இருந்து பெண் எடுக்க ஆசையா என்ன…? எங்களை இந்த நிலைக்கு நிறுத்தி வைத்து இருப்பது யார்..? .
நியாயப்படி பார்த்தா நான் தான் உங்க மீது எல்லாம் கோபபடனும்..? சொந்தம் எல்லா வகையிலும் நெருங்கிய சொந்தம் ஆனதால் வாயை மூடிட்டு அமைதியா போகும் படி ஆகி விட்டது…” என்று இத்தனை நேரம். இத்தனை நேரம் என்ன..?
எப்போது அனிதா தான் தன் மருமகள் என்று இந்த வீட்டில் பேச்சு ஆரம்பமானதோ அன்றில் இருந்து மனதில் வைத்து புழுங்கி கொண்டு இருந்த கோபத்தை வார்த்தைகளாக்கி கொட்டி விட்டார்…
வனிதா அப்போதும் விடாது.. “ ஓ அப்போ அந்த வீட்டு பெண் இங்கு வருவதற்க்கு நாங்க தான் காரணம் என்று சொல்ல வர்றிங்களா…?” என்ற தன் தங்கை மகள் கேள்வியில் இப்போது வெங்கட பூபதிக்கே கோபம் வந்து விட்டது…
“ ஏன் அதை இல்லேன்னு கூட நீ சொல்லுவியா..? உன் தங்கை செய்த காரியம் வெளியில் சொல்லும் படியா இருக்கு..? அதை வெளியில் சொன்னா அக்காவானா உன்னையும் தான் தப்பா பேசுவாங்க..? எல்லாம் பார்த்துட்டு தான் நான் அமைதியா போக வேண்டியதா ஆகிடுச்சி..
இதே வெளியில் பெண் நிச்சயம் செய்து இது போல் ஒரு காரியம் செய்து இருந்தா, அவங்க வீட்டையே சந்தி சிரிக்க வைத்து இருப்பேன்” என்று கோபத்துடன் பேசினார்..
அவர் இவ்வளவு பேசியும் வனிதா நான் அடங்குவேனா என்பது போல் தான் அவளின் அடுத்த பேச்சும் இருந்தது..
“அனிதா செய்தது தப்பு தான்.. நான் ஒன்னும் இல்லேன்னு சொல்லலேயே.. நாளை திருமணம் நடக்க வேண்டும் இல்லேன்னா நம் குடும்பம் மானம் வெளியில் போகும்.. சரி அதுவும் ஒரு வகையில் சரி தான்..
ஆனால் பெண்ணை கட்ட வேறு பெண்ணா சர்வாவுக்கு கிடைக்கல.. ஏன் பெரிய மாமா கூட எதோ பெண் இருக்கிறதா..? சொன்னார்.. என்னவோ ஊரிலேயே அந்த பெண் மட்டும் தான் இருப்பது போல பேசிட்டு போறார்.. எனக்கு என்னவோ மகி கேட்டது போல அந்த பெண்ணை அவர் முதல்லேயே பார்த்து இருப்பார் என்று தான் தோன்றுக்கிறது..” என்ற வனிதாவின் பேச்சு எது சரியோ இல்லையோ.. கடைசியாக சொன்ன உலகத்தில் அந்த பெண் தான் இருப்பது போல் சர்வா ஏன் இந்த முடிவை எடுத்தான் என்று நினைத்த வெங்கட பூபதி…
“ அது தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும் என்று சொல்கிறான் இல்ல.. பார்ப்போம்..” என்று அவர் சொல்லி முடிக்கவும், மகேஷ்வரன் யோசனையுடன் தன் பேசியில் வந்த மெசஜை பார்த்த வாறு..
“ சர்வா பி ஏ.. நியூஸ் சேனல் போட சொல்றான்..” என்று சொல்லிக் கொண்டே அங்கு இருக்கும் டி.வியை இயக்கினான்..
டி.வி திரையில் நேரடி ஒலிப்பரப்பாக சர்வேஷ்வரன் பேசுவதை புகழ்பெற்ற ஒரு சேனல் ஒலிப்பரப்பு செய்து கொண்டு இருந்ததை, சர்வாவின் வீட்டில் இருப்போர் மட்டும் அல்லாது..
பாதி அலங்காரத்தில் இருந்த மான்சியின் அறைக்கு ஓடி வந்த நவீன், அவள் அறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியை இயக்கியவனை குழப்பத்துடன் பார்த்த மான்சிக்கு விடை அந்த தொலைக்காட்சியில் பேசிய சர்வேஷ்வரன் கொடுத்தான்..
“ எதுக்கு திடிர் என்று எங்களை அழைத்திங்க ..? புது மருந்து ஏதாவது மார்க்கெட்டில் இறக்க போறிங்களா..?” என்று அந்த ***** தொலைக்காட்சியின் நிரூபர் கேட்டார்..
“ முதலில் நான் அழைத்த இரண்டு மணி நேரத்தில் என்னை சந்திக்க ஒத்துக் கொண்டு என் இடத்திற்க்கே நீங்க வந்ததிற்க்கு என் நன்றியை முதலில் நான் தெரிவித்து கொள்கிறேன்..” என்று சொல்லி தன் இரு கை கூப்பி வணங்கியவனை மான்சி அப்போது தான் உற்று நோக்கினாள்..
பின் சர்வேஷ்வரன் .. “ இந்த சந்திப்பு என் தொழில் பற்றியது கிடையாது.. இது என் தனிப்பட்ட சந்திப்பு.. நாளை என் திருமணம்..
இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இல்லை.. ஏன் என்றால் உங்களுக்கும் அழைப்பு வந்து இருக்கும்..” என்று சரளமாக பேசிக் கொண்டு வந்த சர்வேஷ்வரன் கொஞ்சம் தயங்கி மீடியா ஆட்களை பார்த்தான்..
அவனின் அந்த பார்வையில் வந்து இருந்தோர்க்கு பர பரப்பு கூட. “ என்ன சார் என்ன பிரச்சனை..” என்று ஆவளாக கேட்டவர்களை சர்வேஷ்வரன் புரியாத ஒரு பார்வை பார்த்தவன், பின் தன் பார்வையை மாற்றிக் கொண்டவனாக..
“ இது பிரச்சனை ஆக கூடாது என்று தான் நான் உங்களை இங்கு அழைத்து பேசிக் கொண்டு இருப்பது.. நாளை என் தாய் மாமன் மகளோடு திருமணம்.. அது உங்க எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்..
ஆனால் என் மாமன் மகளின் எந்த மகளோடு திருமணம்..? அதில் தான் கொஞ்சம் என் வீட்டு ஆட்கள் குழம்பி போய் விட்டார்கள்.. இல்லை நான் தெளிவாக சொல்லவில்லையா..? தெரியவில்லை..
இதுவும் தெரியும்.. நான் மூன்று மாதம் கழித்து இன்று தான் இந்தியாவுக்கு வந்தேன் என்பது… போகும் போது என் வீட்டில் மாமா பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு, என் தாய் மாமாவிடம்..
உங்கள் சின்ன பெண்ணை எனக்கு கொடுங்க…என்று அவரிடமும் சொல்லி விட்டு, ஜெர்மனி சென்று விட்டேன்.. என் பழக்கம் எப்போதும் தொழில் என்று இறங்கி விட்டால் வீட்டை மறந்து விடுவது..
இனி அது போல் இருக்க கூடாது என்பதை இன்றைய நிகழ்வு எனக்கு சொல்லி கொடுத்த பாடம்…” என்று சர்வேஷ்வரன் பேச பேச மீடியா அவன் முகத்தை மட்டும் அருகில் காட்டி அடுத்து என்ன சொல்ல போகிறான் என்று தொலைக்காட்சியை பார்ப்பவர்களுக்கு மட்டும் அல்லாது, அதை நேரிடையாக உள்வாங்கி கொண்டு இருந்த மீடியா ஆட்களுமே, ஒரு வித ஆர்வத்துடன் அவன் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தனர்..
“ நான் சொன்ன மாமன் மகளை அனிதா என்று புரிந்து கொண்டதால் இதோ என்னை இங்கு உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது..” என்றதில் அங்கு இருந்த அனைவரும் குழம்பி போய் விட்டனர்..
அங்கு இருந்த ஒருவர்.. “ சார் நீங்க உங்க வீட்டில் இருப்பவர்களை குழப்பினீர்களா என்று எனக்கு தெரியல.. ஆனா எங்க எல்லோரையும் நல்லா குழப்பி விடுறிங்க..
உங்கள் தாய் மாமாவுக்கு இரண்டு பெண்கள்.. பூபதி குடும்பத்தை எப்படி அனைவருக்கும் தெரியுமோ, அதே போல் தான் சூர்ய நாராணனை சாரையும் தெரியும்.. இரண்டு பெண்ணில் முதல் பெண்ணை உங்க பெரிய தந்தை மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்ட பின், இருப்பது ஒரு பெண் தான்.. இதில் என்ன குழப்பம் வந்து விட்டது..??” என்று அந்த நிருபர் கேட்டதற்க்கு..
“ நான் அவருடைய சின்ன மகள் மான்சியை திருமணம் செய்ய கேட்டேன்..” என்ற அவனின் பதிலில்..
அங்கு இருந்தவர்கள் அனைவரும் மான்சியா யார்…? என்று ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டதை ஒரு திருப்தியோடு பார்த்த சர்வேஷ்வரன், தன் பேச்சை தொடர்ந்தான்…
“ ஆம் என் மாமா சூர்ய நாரயணனை பத்தி தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.. அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பது.. அவர் பெண் தான் மான்சி..” என்றதில் அங்கு இருந்தவர்கள் இன்னும் அதிர்ந்து போய் விட்டனர்..
“ எப்படி..? எப்படி..இது சாத்தியம்..?” என்பது போல் கேட்டவர்களை பார்த்து..
“ காதல் அனைத்தையும் சாத்தியம் ஆக்கும்…” என்ற அவனின் பதிலில் அங்கு இருந்தவர்களோடு தொலைக்காட்சியில் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த மான்சிக்கு தான் அதிகம் அதிர்ச்சியானது..
“ காதலா..?” என்று நெஞ்சில் மீது கை வைத்து கொண்டு அதிர்ந்து போய் விட்டாள்..
அவளை அலங்கரித்துக் கொண்டு இருந்த அழகு நிலைய பெண்கள்.. “ உங்கள் அழகுக்கு பார்த்த உடன் அனைவருக்கும் உங்களை பிடித்து விடும் மேடம்..” என்றவர்களிடம் அவள் என்ன என்று சொல்லுவாள்..
“ பார்த்தால் தானே பிடிக்க..” என்று..
சர்வேஷ்வரனின் பேச்சில் இங்கு அவன் வீட்டு ஆட்களும் அதிர்ந்து தான் போயினர்.. வனிதா..
“ நான் சொல்லலே.. பார்த்திங்களா காதலாம்..” என்று முகத்தை தோளில் இடித்துக் கொண்டு பேசியவளுக்கு, யாரும் பதில் அளிக்காது தொலை காட்சியையே பார்த்திருந்தனர்..
நிருபர்கள்.. “ அது எப்படி அந்த பெண்ணை..?” என்றவர்களின் கேள்விக்கு,..
“எனக்கு நீங்க கேட்டது புரியல..” என்று புரிந்தும் புரியாதது போல் அவர்களை பார்த்து கேள்வி எழுப்பினான்…
அதற்க்கு “ இல்ல அவர் உங்க அத்தைக்கு துரோகம் செய்து விட்டு, அவர் இன்னொரு குடும்பம் அமைத்து கொண்டதற்க்கு, உண்மையா உங்களுக்கு கோபம் வரனும்…
ஆனால் நீங்கள் என்ன என்றால், அந்த வீட்டு பெண்ணை கல்யாணம் செய்துக்க போறிங்க என்று சொல்வது நம்பும் படியா இல்லையே..” என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு சர்வேஷ்வரன்..
“ கண்டிப்பா நீங்க சொல்வது சரி தான்.. நான் கோபப்பட்டு இருக்கனும் தான்… நானும் ஒத்து கொள்கிறேன்.. ஆனால் யார் மீது கோபப்படனும்.. என் மாமா மீது.. இல்லேன்னா அவருக்கு ஒரு குடும்பம் இருக்கு என்று தெரிந்தே அவரோட வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட மான்சியின் அம்மா மீது..
என் மாமா மீது கோபம் என்றால், அவரின் மூத்த மகளே எங்க வீட்டுக்கு மருமகளா வந்து இருக்க முடியாதே… அவரை மன்னித்து அவங்க வீட்டில் பெண் எடுத்தோம்.. அதே போல் தான் துளசி அவங்க மகள் மான்சியை பார்த்ததும் பிடித்து விட்டது…” என்றவனை மேலும் பேச விடாது ஒருவர்..