“அம்மா.. லேட் ஆயிடுச்சு டிரெயின் போயிடும்.”.. என்று அவர்கள் வீட்டையே இரண்டாக்கி கொண்டு இருந்தாள் மீரா-. நம் நாயகி!!.. தன் தாயிடம் இருந்து டிஃபன் பாக்ஸை வாங்கி தன் பைக்குள் தினித்துக் கொண்டவள், பரிட்சைக்கு தேவையானதை சரி பார்த்துக் கொண்டாள்.
“ஏண்டி இப்படி பறக்கிற.. இன்னும் டிரெயின் வர அரை மணி நேரம் இருக்கு. தலையைக் கட்டினவ கண்ணாடியில் முகத்தைக் கூட பார்க்க மாட்டியா.. முடி எல்லாம் களைஞ்சு இருக்கு. லேசா சீவிக்கோ”.. என்று அவள் தாய் மீனாட்சி சொல்ல.
“போம்மா.. நானே எக்சாம் டென்ஷன்ல இருக்கேன். இப்ப அதுவா முக்கியம்.” என்ற மீரா ஒரு கையால் புத்தகத்தை புரட்டியபடி தோசையை சாப்பிடத் தொடங்கி இருந்தாள்.
“அதுக்காக இப்படியா ஒரு பொம்பளைப் பிள்ளை வெளிய போறது!!. பார்க்கிறவுங்க என்ன நினைப்பாங்க.”.. என்ற மீனாட்சியே கிளிப் எடுத்து வந்து அவள் முகத்தை மறைத்து நின்ற ஒரு கொத்து கேசத்தை கிளிப்புக்குள் அடக்கி வைத்தார்.
“இப்ப எதுக்குமா இந்த அலங்காரம்??.. என்னை என்ன பொண்ணா பார்க்கப் போறாங்க”.. என்று மீரா எரிச்சலுடன் கேட்க..
மீனாட்சிக்கோ ஒரு நிமிடம் மூச்சு நின்று விட்டது. “ஆம் நிஜமாகவே இன்று அவள் கல்லூரிக்குப் போகும் வழியில் அவளைப் பெண் பார்க்கப் போவதாக மாப்பிள்ளை வீட்டார் சொல்லி இருக்கிறார்களே!!”.
இந்த விஷயம் மட்டும் மீராவுக்குத் தெரிந்தால் வீடே ரணகளம் ஆகி விடும். அவள் போடும் சண்டையை நினைக்கக் கூட துணிவு இல்லை மீனாட்சிக்கு!!
“சரி சரி என் மேல கோபப்படாம.. சாமி கும்பிட்டுட்டு பரீட்சையை கவனமா எழுது.”.. என்று மீனாட்சி தன் படபடப்பை அடக்கியபடி பேச்சை மாற்ற முயன்று கொண்டு இருந்தாள்.
“ம்.. ஒகே, அப்பா எங்க அம்மா??”.. என்று அவள் கை கழுவிய படி கேட்க.. அப்பாவும் பெரியப்பாவும் பிசினஸ் விஷயமா பாண்டிச்சேரி வரை போய் இருக்காங்க.
அதே நேரம் “மீரா.. நல்லா பரிட்சை எழுதணும்”.. என்று அவள் நெற்றியில் திருநீறு பூசி விட்ட படி அவள் பாட்டி பர்வதம் அவள் அருகில் வந்து வாழ்த்த..
“தேங்க்ஸ் பாட்டி”.. என்று உற்சாகமானவள் அவர் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டு விடை பெற்றாள்.
பரிட்சை என்பதால் அவள் ராசி பார்த்து சுமாரான சுடிதாரையே அணிந்து இருந்தாலும் அந்த நீல வண்ணக் கலர் சுடிதார் அவளை எடுப்பாகத் தான் காட்டியது.
மான் குட்டி போல் அவள் துள்ளி ஓட.. அவள் அடர்ந்த கேசமும் அவள் அசைவுக்கு இசைவாக ஆடி அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.
“பார்த்தீங்களா அத்தை!!.. இன்னைக்குன்னு பார்த்து என்ன டிரஸ் போட்டு போறா”.. என்று மீனாட்சி இத்தனை நேரமாக அடக்கி வைத்து இருந்த ஆதங்கத்தைச் சேர்த்து கொட்டத் துவங்கி இருந்தாள்.
“அவளுக்கு என்னடீ குறை!!. எந்த ட்ரெஸ் போட்டாலும் என் பேத்தி அழகு தான். ஆனா நீ ஏன் தான் இப்படி அடம் பிடிக்கிறியோ!!. இப்ப என்ன அவசரம் அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னு? இப்ப தான படிப்பு முடியப் போகுது. ஒரு வருசம் வேலை பார்க்ட்டுமே!!”.. என்று பர்வதம் சொல்ல.
. “அத்தை உங்க வயசுக்கே நீங்க இவ்வளவு முற்போக்கா யோசிக்கும் போது நான் அவள் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காம இருப்பேனா!!. எல்லாம் நம்ம நேரம் அத்தை. இதைத் தவிர வேற நல்ல வழி இருக்கான்னு தெரியலையே.”.. என்று மீனாட்சி சோர்வுடன் கூற.
“என்ன செய்யுறது அத்தை? நான் பெத்தது அப்படி எனக்கு அடங்கி போக மாட்டேங்குதே. அதுவும் இல்லாம அவங்க அம்மா மட்டும் தான பார்க்கப் போறாங்க. அவளுக்கு அவங்க யாருன்னே தெரியாது. அதனால அதுல ஒரு பிரச்சனையும் வராது.”.. என்று தேற்றுதலாக மீனாட்சி சொல்ல.
“என்னமோ பண்ணு!!. இது எல்லாம் நம்ம குடும்பத்துல பழக்கமே இல்ல! நீ என்ன தான் திட்டம் போட்டாலும் மீராவை அசைச்சிக்க முடியாது.”.. என்று சொன்னவர் சற்று தளர் நடையுடன் அவர் அறைக்குச் சென்றார்.
3 / 9
பர்வதம் மனம் முழுவதிலும் வேதனை பரவி இருந்தது. மீனாட்சி முன் காட்டிக் கொள்ளவில்லை அவ்வளவே. எப்படி வாழ்ந்த குடும்பம்!!. இன்று இந்த நிலையில் வந்து நிற்கிறது. பர்வதத்திற்கு தானாகவே தன் கணவர் நினைவு வந்தது.
அவர் பார்வை அவர் எதிரே சுவரில் மாட்டி இருந்த அந்த பெரிய ஃபோட்டோ ஃப்ரேமில் படிய.. அதில் சிரித்த முகத்துடன் வாசுதேவன் எந்த கவலையும் இன்றி நிம்மதியாக தோற்றமளித்து இருந்தார்.
அதே நேரம் நமது நாயகி மீராவோ தன் தோழிகளுடன் சேர்ந்து கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனுக்குள் விரைந்து கொண்டு இருந்தாள்.
அவர்கள் சரியான பிளாட்பாரம் வந்து காத்து நிற்க.. ஐந்து நிமிடத்தில் அவர்கள் எற வேண்டிய ரயிலும் வர.. அவர்கள் பயணம் தொடர்ந்தது.
ஒரு சில பெண்கள் மட்டும் புத்தகமும் கையுமாக அமர்ந்து இருக்க.. மற்றவர்களின் அரட்டைக் கச்சேரி அங்கு ஆர்ப்பரித்தது. “ஏய் மீரா நீ ஆசைப்பட்ட மாதிரியே உனக்கும் எனக்கும் அந்த பெரிய கம்பெனியில் பிளேஸ்மெண்ட் கிடைசிருச்சே. செலக்சன் கமிட்டி கிட்ட ஒகே சொல்லிட்டியா?”.. என்று அவள் உயிர்த் தோழி வினிதா கேட்க.
“அதெல்லாம் சொல்லி ஆக்சு. ஆனா எங்க அம்மா கிட்ட தான் சொல்லலை.”
. “என்னடீ சொல்ற?.. அம்மாகிட்ட சொல்லாம எப்படி ஒத்துகிட்ட?”.. என்று வினிதா புரியாமல் கேட்க..
“உனக்கு எங்க அம்மாவைப் பத்தி தெரியாது. ஏதோ ஒரு சைக்கோ ஜோசியக்காரன் எங்க அம்மா மனசை நல்லா கலைச்சு வச்சிட்டான். எனக்கு இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணிடனுமாம். இல்லைன்னா எனக்கு கல்யாணமே ஆகாதாம்.”.. என்று மீரா சொல்ல.
“ஐயோ.. அப்புறம்.. அதுக்கு நீ என்ன சொன்ன?”.. என்று வினிதா பதட்டத்துடன் கேட்க..
“நான் ஜோசியக்காரனை மாத்துங்கன்னு சொன்னேன்.”
. “மம்.. சரியாத்தான் சொல்லி இருக்க!!”..
“ஆமா.. ஆனா அதுக்கு அவங்க.. இல்ல இவரு தான் நம்ம குடும்பத்து ஆஸ்தான ஜோசியர். இவரு சொல்றது அப்படியே நடக்கும். அதனால் வேற வழியே கிடையாது. உன் காலேஜ் முடிஞ்சதும் உனக்கு கல்யாணம்!!. அப்படின்னு இப்ப எங்க அம்மா மட்டும் இல்ல.. மொத்த குடும்பமும் சொல்லிட்டு திரியுது.
“அடப்பாவமே!!.. இப்ப என்னடீ பண்ணப் போற”.. என்று வினிதா கேட்க.
‘யார் சப்போர்ட் இல்லா விட்டாலும் எங்க பாட்டி எனக்காக சப்போர்ட் பண்ணுவாங்க. அது போதும் எனக்கு.!! எங்க பாட்டிகிட்ட எப்படியாவது வேலை கிடைச்ச விஷயத்தைச் சொல்லி அப்பா அம்மாவை சரிக்கட்டச் சொல்லனும்.”
. “ஆமாண்டி இவ்வளவு கஷ்டப்பட்டு என்ஜினீயரிங் முடிச்சிட்டு, கொஞ்ச நாள் வேலைக்குப் போனா தானே அனுபவம் கிடைக்கும். உடனே கல்யாணம் பண்ணா உன் கேரியர் என்ன ஆகிறது!!”.. என்று வினிதா உண்மையான கவலையுடன் கேட்க.
“உண்மை தாண்டி. எங்க அம்மா அந்த மாதிரி கேரக்டர் கிடையாது. இப்ப தான் கொஞ்ச நாளாக எல்லாருமே ரொம்ப மாறிட்டாங்க. என் தம்பிக்கும் எனக்கும் எப்பவும் தினம் ஆயிரம் சண்டை வரும். ஆனா இப்போ அவனே எனக்காக பரிந்து பேசுறான்..”.. என்று மீரா சொல்ல..
“பரவாயில்லையே காலேஜ் போக ஆரம்பிச்சதும்.. செழியனுக்கு அவ்வளவு தெளிவு வந்துடுச்சா?!”.. என்று வினிதா ஆச்சர்யமாக கேட்க.. அவளோ நடந்ததைச் சொன்னாள்.
“நீ வேற.. அவன் என்ன சொன்னான் தெரியுமா? எதுக்குமா அக்காவை கட்டாயப்படுத்தறீங்க. வேணும்னா நீங்க எனக்கு பொண்ணு பாருங்க. நான் சந்தோசமா கல்யாணம் பண்ணிக்கிறேன்!!.. இப்ப என்ன உங்க கடமை முடியனும் அவ்வளவு தான!!” அப்படின்னு சொன்னான். என்று மீரா சொல்ல.
“அட கிறுக்குப் பயலே!!.. அவன் இன்னும் திருந்தலியா”
“ஆமா வினிதா!! காலம் எவ்வளவோ மாறிட்டு இருக்கு. ஆனா எங்க வீட்ல மட்டும் இன்னும் பின்னோக்கி தான் எல்லோரும் போய் கிட்டு இருக்காங்க. பாவம் கல்யாணி!! அவளை நினைச்சா தான் இன்னும் வேதனையா இருக்கு.”
“யாரு.. உங்க பெரியப்பா மகளைச் சொல்றியா?.. அவள் உனக்கு பாவமா??. அவள் பண்ண வேலையால தான் உங்க அம்மா உன்னை நம்பாம அவசர அவசரமா உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க. இது புரியாம நீ அவளுக்கு இரக்கம் பார்த்திட்டு இருக்க”.. என்று வினிதா சொல்ல.
“போடி. அப்படி அவள் என்ன பெரிய தப்பு பண்ணிட்டா?. வேலை பார்த்துகிட்டு இருந்தவ கம்பெனி மூலமா அமெரிக்கா போனாள். போன இடத்தில் ஒரு வெள்ளைக்காரனைப் பிடிச்சுப் போய் கல்யாணம் கட்டிகிட்டா.!! இது என்ன அவ்வளவு பெரிய கொலைக் குத்தமா??
இதுக்காக அவளை வீட்டுக்கே வர விடாம விரட்டி விட்டாங்க எங்க பெரியம்மாவும் பெரியப்பாவும். பாவம் யாரு இல்லாம நிறை மாத கர்ப்பிணியாக அங்க தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்கா.”.. என்று மீரா கல்யாணிக்காக வருந்த..
“போதும்!!. ஓவரா ஃபீல் பண்ணாத!. எனக்குத் தெரிஞ்சு அவள் அங்க ஜாலியா தான் ஊர் சுத்திட்டு இருக்கா!!. இன்ஸ்டால ஃபோட்டோ பார்த்தேன். எனக்கு என்னமோ இப்போ உன் வாழ்க்கை தான் அவளால கேள்விக் குறியாக மாறிட்டு இருக்குன்னு தோணுது.”.. என்று வினிதா சொல்ல.
“இரு இரு.. நீ பேசுறதைப் பார்த்தா.. எனக்கு என்னமோ உன் எதிர்காலத்தை நினைச்சு நீ டென்ஷன் ஆகிற மாதிரி தோணுதே.”.. என்று தோழியை மீரா துளைத்து எடுக்கும் பார்வையுடன் ஆராய..
அவள் பார்வையில் நெளிந்தவள்.. “என்னடீ உளர்ற. உங்க குடும்பத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்”.. என்று வினிதா சமாளிக்க..
“பார்ரா!!.. அம்மணி என்னமா சமாளிக்க முயற்சி பண்றாங்க. உனக்கு என் பெரியப்பா பையன் மேல ஒன் சைட் லவ்வு. எங்க உன் காதல் மலர்வதற்கு முன்னாடியே சங்கு ஊதி விடுவாங்களோன்னு பயம் உனக்கு.’.. என்று மீரா போட்டு உடைக்க..
“சீ போ டீ!!. எனக்கு ஒன்னும் வெங்கட் மேல லவ் எல்லாம் இல்ல. ஒரு சின்ன கிரஷ் அப்படின்னு வேனா சொல்லிக்கலாம்.”.. என்று அவள் போராடி வெட்கத்தை மறைத்த படி சொல்ல.”
“அய்ய.. வெட்கத்தைப் பாரு.. எனக்கு என்ன சந்தேகம்னா.. அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு உனக்கு எப்படி தான் அவன் மேல லவ்வு வந்ததோ”.. என்று அவள் போலியாக சடைத்துக் கொள்ள.
சட்டென சிலிர்த்து எழுந்த வினிதா.. “ஏண்டி அவருக்கு என்ன குறை!! நம்ம காலேஜ்ல அவர் படிச்சிட்டு இருந்த போது எத்தனை பெண்கள் அவர் பின்னாடியே சுத்தினாங்க தெரியுமா??. ஆனா அவர் யாரையுமே திரும்பிக் கூட பார்க்க மாட்டார்!!.. அவரோட அந்த கெத்து தான்.. எனக்கு ரொம்ப பிடிக்கும்.!!”.. என்று வினிதா கண்களில் சிறு மயக்கத்துடன் சொல்ல.
“ஏ லூசு.. அது கெத்து எல்லாம் இல்ல!!.. பயம்!!.. லவ் பண்ணா எங்க வீட்ல தான்.. பிடிச்சு தூக்குல தொங்க விட்டு விடுவாங்களே!! அந்த பயம்!!”.. என்று மீரா விளக்கம் கொடுக்க.
அதே நேரம் டிரெயினும் அவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு வந்து இருந்தது. பெண்கள் கூட்டம் கூட்டமாக கல்லூரி நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.
“ஏய் வினி நில்லு.. பிள்ளையாரைக் கும்பிட்டுப் போகலாம்”.. என்று பரிட்சை நேரம் மட்டும் மீரா தவறாமல் செல்லும் கோயிலுக்குள் புகுந்து பிள்ளையாரிடம் நல்ல மதிப்பெண் பெற வேண்டி விண்ணப்பித்து வெளியே வந்தாள்.
மீரா காலில் அந்த சான்டல்ஸ் செருப்பை அணிந்து கொள்ள.. அவளுக்காக காத்து நின்ற வினிதாவிடம் இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் ஏதோ பேசிக் கொண்டு நின்று இருந்தார்கள்.
அவர்கள் அருகில் வந்திருந்த மீரா, “யாரு டீ இவங்க”.. என்று கண்களாலேயே கேட்க.
அதில் ஒரு பெண்மணி “ஓ.. இது உன் சிநேகிதியா..”.. என்று சிரித்த முகத்துடன் மீராவை விழுங்குவது போல் பார்த்து நின்றார். அவர் கண் ஜாடையில் பெருமையுடன் தன் அருகில் இருந்த பெண்மணியிடம் ஏதோ ஜாடை காட்ட.. அந்த பெண்மணியும் புருவங்களை உயர்த்தி சூப்பர் என்பது போல் ஜாடை காட்டி கொண்டார்கள்.
யாரோ வினிதாவுக்கு தெரிந்தவர்கள் போல என்று இத்தனை நேரம் மீரா பொறுமையாக இருக்க.. “சாமி கும்பிட்டாச்சா போகலாமா”.. என்று வினிதா அவர்களைத் தாண்டி அடியெடுத்து வைக்க.. மீராவும் “ ஆமாண்டி பரிட்சை க்கு நேரம் ஆச்சு என்று இருவரும் சிட்டாக பறந்து இருந்தார்கள்.
அடுத்த நொடியே அந்த இரண்டு பெண்களில் ஒரு பெண்மணி தன் கைபேசியில் ஒரு எண்ணை அழுத்த.. எடுத்தது என்னவோ மீனாட்சி தான்.
“மீனாட்சி.. இப்ப தான் உன் பொண்ணை நீ சொன்ன மாதிரி அவள் காலேஜ் கிட்ட உள்ள கோவில்ல வச்சு பார்த்தேன். ரொம்ப அழகா இருக்கா. எங்க மகேஷ்க்கு ஏத்த பொண்ணு. அவனும் ஃபோட்டோல அவளைப் பார்த்து ரொம்ப பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டான்.
அவன் அடுத்த மாசம் ஒரு டிரெய்னிங்கிற்காக அமெரிக்கா போறான். அதுக்குள்ள நிச்சயத்தை முடிச்சு விடலாமா?.”.. என்று கஸ்தூரி கேட்க..
கேட்டுக் கொண்டு இருந்த மீனாட்சிக்கோ சந்தோசத்தில் கை கால்கள் நடுங்கி விட்டது. “ரொம்ப சந்தோசம் அண்ணி. ஆனா அதுக்கு முன்னாடி நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க என்ற விவரம் எல்லாம் பேச வேண்டாமா?”.. என்று கேட்பதா வேண்டாமா என்று சிறு தயக்கத்துடன் மீனாட்சி கஸ்தூரியிடம் கேட்டார்.
“உனக்கே தெரியும் என் பையன் டாக்டர். கை நிறைய சம்பாதிக்கிறான் தான். அவனுக்கு ஐநூறு சவரன் போட்டு பொண்ணு கொடுக்க எல்லாரும் போட்டி போடுறாங்க. இருந்தாலும் அது உன் இஷ்டம். உனக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடு”.. என்று மறைமுகமாக ஐநூறு பவுனுக்கு அடி போட்டு இருந்தார்.
“அண்ணி.. எனக்கு ஒரு வாரம் டயம் வேணும் அண்ணி. வீட்ல கேட்டுட்டு சொல்லட்டுமா?”.. என்று மீனாட்சி கேட்க.
“தாராளமா மீனாட்சி!!. என் பையன் தகுதிக்கு எத்தனையோ பெண் கிடைக்கலாம் ஆனா நம்ம சொந்தம் விட்டு போகக் கூடாதுன்னு தான் மகேஷ் அப்பாவை சரிகட்டி வச்சு இருக்கேன். சரி.. நல்ல முடிவா சொல்லு”.. என்று ஃபோனை வைத்து இருந்தார்.
மீனாட்சியும் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் குழம்பிப் போய் சோஃபாவில் அமர்ந்து விட்டார்.
அதே நேரம் மீராவோ.. “என்ன வினிதா உனக்கு தெரிஞ்சவங்களா?? என்ன பேசிட்டு இருந்த?”.. என்று கேட்க.
வினிதாவோ.. “எனக்கு அவங்க யாருன்னே தெரியாதுடீ. அதுல ஒரு அம்மா என் கிட்ட வந்து.. நீ இசிஇ கடைசி வருசமா பிடிக்கிற என்று கேட்டாங்க. நான் ஆமா என்று சொன்னதும்.. “ஓ.. அப்ப அவள் ஃப்ரெண்டாகத் தான் இருக்கணும்!!” என்று ரகசியம் பேசிக் கிட்டாங்க.
அப்ப தான் நானும் மெல்ல பார்த்தேன். அவங்க கையில் உன் ஃபோட்டோ இருந்தது.”.. என்று வினிதா சொல்ல..
“என் ஃபோட்டோவா?.. என் ஃபோட்டோ எப்படி டீ அவங்க கையில போச்சு?”.. என்று மீரா புரியாமல் விழிக்க..
“ஏ டியூப் லைட்!!.. இது புரியலையா?. அவங்க உனக்குத் தெரியாம உன்னைப் பெண் பார்க்க வந்து இருக்காங்க!”.. என்று வினிதா முடிப்பதற்குள் மீரா கண்கள் கோபத்தில் சிவப்பு ஏறி கொண்டது.
“இது எல்லாம் எங்க அம்மா வேலையாகத் தான் இருக்கும். அது எப்படி என் அனுமதி இல்லாம யாரு கையிலையோ என் ஃபோட்டோவை
8 / 9
கொடுப்பாங்க!!”.. என்று கத்த.. தோழியின் ரவுத்திரம் கண்டு பயந்து போன வினிதா..
“மீரா கூல்!!.. நமக்கு இன்னைக்கு பரிட்சைடீ. எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற”.. என்று ஒரு வழியாக தேற்றி அவளை பரிட்சை எழுத அமர வைத்து இருந்தாள்.
ஆனாலும் வெகு நேரம் அவள் சினத்துடன் நகத்தைக் கடித்தபடி எழுதாமல் அமர்ந்து இருக்க.. எக்ஸாமினர் பார்க்காத நேரம் அவள் இடுப்பைக் கிள்ளிய வினிதா.. “எருமை ஒன்னும் எழுதாம ஃபெயில் ஆகித் தொலைச்சிடாத”.. என்று அதட்டவும் தான் சுய நினைவு பெற்றவளாக பரிட்சை எழுதத் தொடங்கினாள்.
எழுதி முடித்து வெளி வந்தவளுக்கு அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை. இன்று வீட்டுக்கு போய் மீனாட்சியை ஒரு வழி ஆக்கி விட வேண்டும் என்று மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டாள்.
வினிதா இப்போது இரண்டு மாதங்களாக வீணை கற்பதற்குச் செல்வதால் மாலை மட்டும் மீரா தனியாகத் தான் செல்வாள். இன்று வினிதா தன் தோழியுடன் நடக்கத் துவங்க.. “என்னடீ.. கிளாஸ்க்கு போகலையா?”
“போகனும் தான்!! பராவாயில்லை. நான் நாளைக்கு போய்க் கொள்கிறேன்”.. என்று வினிதா சொல்ல..
மீராவோ.. “ஏய் இன்னைக்கு எதோ முக்கியமான கீர்த்தனை சொல்லி தரப் போறதா சொன்னியே?*
“ஆமா.. ஆனா எனக்கு உன்னைப் பார்த்தா பயமா இருக்கே?. உன்னை பத்திரமா வீட்டுக்கு அனுப்பிட்டு நாளைக்கு போகிறேன்.”
“ஹேய் லூசு!!.. நான் நார்மல் ஆகிட்டேன் போதுமா!!. நீ ஒழுங்கா கிளாசுக்கு போ!!”.. என்று மீரா இன்ஸ்டன்ட் ஆக முகத்தில் புன்னகையை வர வைக்க.
“ஹேய் மீரா.. இது மாதிரி நடக்கிறது எல்லாம் சகஜம் தாண்டி. பொண்ணுன்னு இருந்தா எல்லாரும் பார்க்கத் தான் செய்வாங்க கேட்கத் தான் செய்வாங்க. இதுக்கு எல்லாம் நீ இப்படி ரியாக்ட் பண்ணக் கூடாது”.. என்று மென்மையாகச் சொல்ல..
மீரா உதடுகள் அவளுடன் மல்லுக் கட்டத் துடித்தாலும், எங்கே வினிதா தனக்காக போகாமல் நின்று விடுவாளோ என்ற ஒரே காரணத்திற்காக தன்னை அடக்கிக் கொண்டாள்.
“சரி டீ நீ கிளம்பு என்று தோழியை அனுப்பி விட்டவள் விறுவிறுவென நடக்கத் தொடங்கி இருந்தாள். ஆனால் அவள் கால்களோ மெட்ரோ நோக்கி செல்லாமல் அருகில் இருந்த பார்க்கில் தஞ்சம் கொண்டது.
அவள் கண்கள் ஆவலுடன் தேட தூரத்தில் அவளை நோக்கி வந்து கொண்டு இருந்த, ஆறடிக்கும் உயர்ந்தவனைப் பார்த்ததும் அவள் கால்கள் தானாக தயங்கி நின்றன. சிரித்த முகத்துடன் அவளை விழி எடுக்காமல் ரசித்தபடி அவளை நெருங்கி வந்து கொண்டு இருந்தான்.. அவள் நாயகன்.
இத்தனை நேரமாக இறுகிய முகத்துடன் இருந்தவளின் முகம் அவள் மன்னவனின் பார்வையில் வெட்கம் கொண்டு சூரியனைப் பார்த்த தாமரை போல மலர்ந்து விரிய. நாணச் சிவப்பை அரிதாரமாய் பூசிக் கொண்டது.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி.