தன்னவன் அவளைப் பார்வையாலே பருகியபடி மிடுக்காக நடந்து வர.. அவள் கண்களும் இப்போது அவனை ரசித்தபடி நிலை குத்தி நின்றன. அவனது உறுதியான தோள்தசைகள் அங்கு இருந்த அத்தனை பெண்களையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்கச் செய்து இருக்கும்.
ஜீன்ஸ் பேன்ட் டீஷர்ட்டில் அவ்வளவு வசீகரமாக இருந்தான் அவள் உயிர்க் காதலன் முகுந்தன். அவன் கம்பீர நடையில் அவன் அடர்ந்த கேசமும் வாகாக ஏறி இறங்கியது. அவனின் குறுகுறு பார்வையில் உலகமே மறந்து போவாள் அவள்.
மீராவுக்கே ஆச்சரியம் அவளை எந்த அளவு வசீகரித்து வைத்து இருக்கிறான் இந்த கள்வன். இதே இது ஒரு மாதத்துக்கு முன் இவள் இப்படி யாரையும் பார்த்து மயங்கிப் போவாள் என்று யாராவது சொல்லி இருந்தால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று சண்டைக்கு போய் இருப்பாள்.
ஆனால் இன்று அவள் கண்களுக்கு மன்மதன் போல் தெரியும் இந்த மாயவன் அவர்கள் முதல் சந்திப்பின் போது வில்லனாக அல்லவா தெரிந்தான்.
அந்த நாளை இப்போது நினைக்கும் போது சிரிப்பு வந்தாலும்.. அன்று அவள் மனநிலை முற்றிலும் வேறாக அல்லவா இருந்தது.
அவள் மனதுக்குள் விரிந்த அழகான நினைவுகளை ஆசையாக அசை போடத் துவங்கி இருந்தாள்.
அன்றோடு வினிதா வீணை வகுப்புக்கு செல்லத் துவங்கி பத்து நாளாகி இருந்தது. மாலையில் அவள் இல்லாமல் மெட்ரோ ரயிலில் செல்ல போர் அடிக்கும். அவளுக்கு வீணையில் நாட்டம் இல்லை. இல்லாவிடில் அவளும் அந்த வகுப்பில் சேர்ந்து இருப்பாள்.
அவள் வீணை கிளாஸ் கல்லூரி அருகில் என்பதால் சில நாட்கள் கல்லூரி நூலகம் சென்று தோழி வரும் வரை பொழுதைப் போக்குவாள். சில நாட்கள் அருகில் உள்ள பார்க்கிற்குச் செல்வாள். சில நேரம் மற்ற தோழிகளுடன் வீட்டிற்கும் சென்று விடுவாள்.
இன்று லைப்ரரியில் ஒரு கதைப் புத்தகத்தை இரவல் வாங்கி வந்தவள் பார்க்கில் இருந்த சாய்வு பெஞ்சில் அமர்ந்தபடி அந்த கதைப் புத்தகத்தில் மூழ்கிப் போய் இருந்தாள். அந்த பெரிய பார்க்கில் பூங்கா மற்றொரு பக்கமாக இருக்க.. அவள் அமர்ந்து இருந்தது என்னவோ பெரிய மைதானம் அருகில்.
அமைதியாக இருக்கும் என்று அவள் அங்கு அமர்ந்து இருக்க.. அவள் நிம்மதியைக் கெடுக்கும்படி நான்கு ஐந்து வாலிபர்கள் ஃபுட்பால் விளையாடத் துவங்கி இருந்தார்கள். அதற்கான உடுப்பு அணிந்து அவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
ஆனால் சற்று நேரத்தில் ஒருவன் காலால் ஓங்கி அடித்த பந்து வந்து மீராவின் கை மீதே விழுந்தது. பந்தை வாங்க என்று அந்த இளைஞன் அவள் அருகில் வந்தான்.
“எக்ஸ்க்யூஸ் மீ.. தெரியாம விழுந்திருச்சு கொஞ்சம் பாலைத் தர முடியுமா” என்று அவன் மென்மையாகவே கேட்டான்.
ஆனால் அந்த பந்து வேகமாக விழுந்த வேகத்தில் அவள் கை சிவந்து வீங்கத் துவங்கி இருந்தது. அவள் வலி அவளை மிருகமாக மாற்றிக் கொண்டு இருந்தது.
“ஏய் மிஸ்டர் அறிவு இருக்கா?.. இப்படியா ஆளுங்க மேல பந்த போடுவீங்க. பந்தை எல்லாம் கொடுக்க முடியாது. உன்னால ஆனதை பார்த்துக்கோ. “.. என்றவள் தன் மடியில் பந்தை அழுத்தமாக பிடித்தபடி அதன் மீதே அவள் புத்தகத்தை வைத்து மறுபடியும் வாசிக்கத் துவங்கி இருந்தாள்.
அத்தனை நேரமும் அன்புடன் கேட்ட முகுந்தனுக்கு இந்த முறை கோபம் வந்து விட.. “நாங்க தான் விளையாடுகிறோம்னு தெரியுதில.. அந்த பெஞ்ச் காலியா தான கிடக்கு மாறி உட்கார்ந்து இருக்க வேண்டியது தான என்று கேட்டான்.
“அது என் இஷ்டம். இந்த பார்க் ஒன்னும் உங்க அப்பன் வீட்டிது கிடையாது. என்னை அங்க உட்காரு.. இங்க உட்காருன்னு ஆர்டர் போடுறதுக்கு. “.. என்று அவள் மிடுக்காக சொல்ல.
முகுந்தனோ.. “என்ன திமிரு!!.. பொண்ணா இவா!” என்று மனதுக்குள் கறுவிக் கொண்டே நடக்க..
“மீராவின் இதழ்கள் வெற்றிப் புன்னகை பூக்க. திருப்தியுடன் புத்தகத்தில் மூழ்கினாள். ஆனால் அவள் சற்றும் எதிர்பார்க்காத அடுத்த நொடி.. அந்த முகுந்தன் தன் முழு பலம் கொண்டு அவள் மடியில் இருந்த பந்தைத் தட்டிப் பறித்து இருந்தான்.
அவள் சுதாரிக்கும் முன் பந்து முகுந்தன் கைக்கு சென்று இருந்தது.
“டேய்.. பந்தைக் குடுடா!”.. என்று அவள் அதட்ட..
“சீ.. போடி!!”.. என்று அவனும் பதிலுக்கு சொல்லி விட்டுச் செல்ல.. மீரா தான் எரிமலையாக மாறி இருந்தாள். பந்து பட்ட இடம் வேறு வலிக்க.. எவ்வளவு திமிரு இருந்தால் பாலையும் பிடுங்கி விட்டு.. அவளையும் போடி என்று திட்டி விட்டுச் செல்வான்?
அவளுக்கு வந்த கோபத்திற்கு அவனை அறைந்து விட மாட்டோமா என்று கூட கைகள் பரபரத்தன. அவன் ஒருவனாக வந்து இருந்தால் நிச்சயம் அப்படி எதாவது செய்ய துணிந்து இருப்பாள். ஆனால் அவனுடன் இன்னும் நான்கு ஐந்து தடிமாடுகள் இருக்கின்றனவே.
அத்தனை பேரையும் எப்படி சமாளிப்பது?. அவளுக்கான மற்றொரு வாய்ப்பு வராமலா போகும் !!.. என்று மனதைக் கஷ்டப்பட்டு தேற்றியபடி பார்க்கை விட்டு வெளியே வர.. அதே நேரம் வினிதாவும் சரியாக வந்து இருந்தாள்.
வினிதாவிடம் அனைத்தையும் பகிரும் மீராவுக்கு.. இன்று அவனிடம் அவமானப்பட்டதை சொல்லவே பிடிக்கவில்லை. ரயிலில் மவுனமாகவே வந்தாள். வினிதா ஏன் என்று விசாரித்ததற்கு தலைவலி என்று கூசாமல் பொய் உரைத்தாள்.
மீரா மனம் அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தது. எதாவது சந்தர்ப்பம் அமையாதா என்று எண்ணியபடியே மறுநாள் மாலையும் அவள் பார்க்கிற்குச் சென்று இருந்தாள்.
இன்று அவன் சகாக்கள் யாரும் இல்லாமல் அவன் மட்டும் கோர்ட்டைச் சுற்றி ஓடிக் கொண்டு இருந்தான்.
மீராவும் அவனைப் பார்த்த படியே அதே இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் பார்வையே அவனை எரித்து விடுவது போல் இருக்க..
அவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும்.. அடக்கிக் கொண்டான். “ஆத்தாடி என்ன லுக்கு!!.. கத்தி கித்தி கையில் வச்சி இருப்பாளோ??.. முகுந்தா.. ஜாக்கிரதை டா!!”.. என்று மனதுக்குள் எச்சரித்துக் கொண்டான்.
அவன் காலின் கீழ் சிக்கி இருந்த பந்தை ஏதோ வித்தை செய்து அவன் கைக்கு வரவைத்து இருந்தான். அவள் கண்களோ.. துளியும் அவன் மீது இருந்து விலகாமல்.. “நீ என்ன பெரிய பிஸ்தாவா?.. உனக்கு ஆப்பு வைக்காம விட மாட்டேன்.”.. என்று கண்களை உருட்டிபடி அவனை மிரட்டிக் கொண்டு இருந்தன.
அவனோ “ம்.. பார்க்கலாம் பார்க்கலாம்!!”.. என்று சொல்லாமல் சொல்லி பாலை தரையில் தட்டி தட்டி விளையாடினான்.
அடுத்த நொடி தன் கையில் இருந்த பந்தைக் கொண்டு அவளை நோக்கி எரியப் போவது போல் ஒரு வேகம் காட்ட..
மீரா அந்த நொடி உண்மையில் அஞ்சி விட்டாள். தன் கண்களை இறுக மூடிக் கொண்டவள் பயத்தில் அவள் கைகளை உயர்த்தி இருந்தாள். முகுந்தனுக்கோ தன்னிடம் சரிக்குச் சரியாக சண்டையிடும் அந்த சண்டைக் கோழியை மிகவும் பிடித்து போனது.
பயத்தில் உறைந்து போன அவள் அழகு முகத்தை தன்னை அறியாமல் ரசிக்கத் துவங்கி இருந்தான். மெல்ல கண்களை திறந்தவள்.. ஒன்றும் ஆகவில்லை என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட..
அவனோ அவளை வெருங்கி வந்து இருந்தான். “ஏ.. சண்டைக்கோழி!!.. அந்த பயம் இருக்குல!!.. இனி என் கிட்ட வால் ஆட்டின அவ்வளவு தான். “.. என்று அவன் போலியாக மிரட்ட..
கோபம் கொண்ட மீராவுக்கு அது மேலும் எரிச்சலை கூட்டியது. அப்போது ஒரு பெரிய புல்லட் பைக் அவர்கள் அருகில் வந்து நிற்க.. அதில் இரண்டு காவல் அதிகாரிகள் வந்து இறங்கினார்கள்.
மீரா அருகில் வந்து நின்றவர்கள்.. “நீங்க தான் மீராவா?”.. என்று கேட்க..
“ஆமா சார். நான் தான் மீரா. நான் தான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். இவன் தான் அந்த பொறுக்கி”.. என்று மீரா சட்டென்று அவர்கள் அருகில் வந்து இருந்த முகந்தனை கை காட்டினாள்.
அவள் சொன்னதைக் கேட்டு முகுந்தன் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று விட்டான். அவன் கண்களில் ஏமாற்றம். அவன் அவளிடம் வேறு எதையோ எதிர்பார்க்க.. இந்த நொடி எல்லாமே மாறி விட்டது அல்லவா..
“ஒ.. சார் தான் அந்த ரோமியோவா!!.. ஏண்டா டேய் பொம்பிளைப் பிள்ளை கையைப் பிடிச்சு இழுத்தியா?”.. என்று அந்த அதிகாரி அவன் சட்டையைக் கொத்தாக பிடித்து இழுக்க..
முகுந்தன் கண்களோ மீராவையே தான் அப்போதும் துளைத்துக் கொண்டு பார்த்தன. அவன் பார்வை இப்போது மீராவை குற்ற உணர்வில் ஆழ்த்தியது.
உன்னை மாதிரி ஆளுங்களை எல்லாம் லாக்கப் ல போட்டு வெளுக்கணும் என்று ஒரு அதிகாரி சொல்லியபடி முகுந்தன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார்.
அது முகுந்தனுக்கு வலித்ததோ என்னவோ மீராவுக்கு வலித்தது. ஆம் அவனைப் பழி வாங்கத் தான் அவள் இத்தனையும் செய்து இருந்தாள். ஆனால் அவனின் பார்வை ஒன்றே ஆயிரம் கேள்விகள் கேட்டு இருந்ததே.. என் சுண்டு விரல் உன் மேல் பட்டு இருக்கிறதா?.. என் பார்வை எப்போதாவது உன் கண்களை தவிர வேறு இடம் சென்று இருக்கிறதா??.. மனசாட்சியைத் தொட்டுச். சொல்.. நான் உன் கையை பிடித்து இழுத்தேனா??.. என்று சாட்டையால் அடிப்பது போல் கேட்டு இருந்தன. அதே நேரம் அந்த மற்றொரு அதிகாரியும் அவன் கன்னத்தில் அறைந்து இருக்க.. மீரா குறுக்கே வந்து நின்று இருந்தாள். “சாரி சார்.. நான் என் கம்ப்ளைன்டை வாபஸ் வாங்கிக்கிறேன்.!” என்று மீரா சொல்ல..
அவர்கள் அதிர்ந்து.. “என்னமா நினைச்சுட்டு இருக்க. நீ தான் யாரோ கலாட்டா பண்றாங்க!!.. என்று போலீஸ் ஸ்டேஷன் வந்து கம்ப்ளைன்ட் கொடுத்த. இப்ப நீயே வித்ட்ரா பண்ணா எப்படி!”.. என்று அதட்ட..
“என் தப்பு தான் சார். இவரு என் மாமா பையன் தான். சும்மா உங்களை விட்டு மிரட்டி வைக்க நினைச்சேன். என்ன மன்னிச்சிடுங்க”.. என்று அவள் கை கூப்பி விட..
“எங்க டயம் வேஸ்ட். வாயா போகலாம்”.. என்று அந்த இருவரும் கிளம்பிச் சென்று இருந்தார்கள்.
ஒரு வித நிம்மதியுடன் மீரா முகுந்தனைப் பார்க்க.. அவன் கன்னம் ஒரு பக்கம் சிவந்து இருக்க.. ஒரு பக்க உதட்டில் இரத்தம் கசிந்து கொண்டு இருந்தது.
“ஐயோ இரத்தம்”.. என்று துடித்துப் போனவள் தன் கைக்குட்டை கொண்டு அவன் உதட்டில் துடைக்கப் போக.. “சீ விடு”.. என்றவன் அவளை உதறிவிட்டு செல்லத் துவங்கி இருந்தான்.
மீரா மனதில் அத்தனை பாரமும் ஏறிக் கொண்டது.
“ச்ச.. சும்மா இரண்டு மிரட்டு மிரட்டுவாங்கன்னு பார்த்தா.. இப்படியா கை நீட்டுவாங்க. பாவம். செய்யாத தப்புக்கு என்னால அடி வாங்கி விட்டான். என்ற குற்ற உணர்வில் துடித்துப் போனாள்.
அன்று இரவு முழுவதும் அவன் நினைவிலேயே தூக்கத்தை தொலைத்து விட்டாள். அவளுக்கு அவளை நினைத்தே கோபம் கோபமாக வந்தது. தன் கோபத்தைக் குறைக்க வழி தெரியாமல் தன் கைபேசியில் அந்த எண்ணை அழுத்தினாள்.
“டேய் எருமை.. நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?.. சும்மா ரெண்டு மிரட்டு மிரட்டு என்று தான சொன்னேன். எதுக்கு இப்படி கை நீட்டின”.. என்று மீரா அதட்ட..
“மீரா இதுக்கு ஏன் டென்ஷன் ஆகுற!!. இனி அந்த பையன் உன்னைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டான். நீ தைரியமா எல்லா இடமும் போகலாம். சரி.. என் பெர்பார்மன்ஸ் எப்படி இருந்தது?.. அப்படியே நிஜ போலீஸ் மாதிரி மிரட்டிட்டோம் இல்ல?”.. என்று கேட்க.
“போங்கடா லூசுப் பசங்களா.. ஒரு அப்பாவிப் பையனை அடிச்சு எனக்கு ஒரே கில்ட்டி கன்சியஸ் ஆக்கி விட்டீங்க.”.. என்று சடைத்த படி ஃபோனை வைத்து விட்டாள்.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி.