பகுதி 3
அன்று இரவு மீராவால் தூங்கவே முடியவில்லை. கண் மூடினால் கூட அவன் முகமே அவள் இமையின் வால்பேப்பர் ஆக மாறிப் போனது. ஐயோ பாவம், அந்த பையன். நிஜப் போலீசை விட்டு அடிக்க வச்சிட்டாளே என்று என் மேல கொலை வெறியில் இருப்பான்.
என்சிசி டிரெய்னிங் எடுத்த பசங்க சும்மா சீன் போடுவாங்க என்று நினைச்சா.. ஓவராக்ட் பண்ணி கைகலப்புல முடிஞ்சிடுச்சு. நாளைக்கு முதல் வேலையா அவனைத் தேடிப் போய் பார்த்து.. எப்படியாவது மன்னிப்பு கேட்கணும்.. என்று அவள் தீர்மானமாக முடிவு எடுத்த பின் தான் அவளால் கண் அயரவே முடிந்தது.
மறுநாள் மாலை கல்லூரி முடிந்ததும் அவனை சந்திக்க வேண்டும் என்று அவள் பார்க்கிற்கு தேடிச் செல்ல, அவர்கள் விளையாடும் இடம் காலியாக இருந்தது. சுற்றிலும் தேடிப் பார்த்தாள் அவனை எங்குமே காணவில்லை.
அவள் மனதுக்குள் அப்படி ஒரு ஏமாற்றம். சரி காத்து இருப்போம் ஒரு வேளை இன்று தாமதமாக வருவானோ என்று வெகு நேரம் அந்த பெஞ்சில் அமர்ந்து அவனைத் தேடிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவன் வரவே இல்லை.
அந்த அசோக் சொன்ன மாதிரி அவனுக விரட்டுன விரட்டுல இனி பார்க்கிற்கே வரக்கூடாது என்று பயந்து போய் விட்டானோ.!!.. ச்ச ச்ச அவன் இருந்த சைஸைப் பார்த்தா அவன் பயப்படுவான்னு தோனலையே?”.. என்று அவள் யோசித்து இருக்க.. அவள் செல்ல வேண்டிய நேரம் வந்து இருந்தது.
சிறு ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றாள். மறுநாளும் அவள் சிறு எதிர்பார்ப்புடன் பார்க்கிற்குச் செல்ல.. அவன் அங்கே இல்லை. ஆனால் நான்கு வாலிபர்கள் மட்டும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அதில் அவன் இல்லை.
அது அவன் சகாக்களா என்றும் அவளுக்கு தெரியாது. தெரியாமல் எப்படிப் போய் அவர்களிடம் விசாரிப்பது. ஏனோ அவனைக் காணாமல் அவள் மனம் சோர்ந்து போகத் துவங்கி இருந்தது. யாரோ அவன்.. அவள் கையில் அவன் காயப்படுத்தினான். பதிலுக்கு அவளும் தாக்கி ஆயிற்று. கணக்கு முடிந்தது!!.. என்று எளிதாக அவளால் கடந்து செல்ல முடியவில்லை.
அவனிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். அப்போது தான் நிம்மதியாக மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியும் என்று மனம் சண்டித்தனம் செய்தது. ஆனால் அவனை எங்கு போய் தேடுவது?
சரி.. நாளை ஒரு நாள் வந்து பார்க்கலாம். நாளையும் அவன் வரவில்லை என்றால் அவன் நிச்சயம் அவளைப் பார்க்கப் பிடிக்காமல் தான் வராமல் இருக்கிறான் என்பது உறுதியாகி விடும். அதற்கு மேல் அவனை தொல்லை செய்யக் கூடாது. இனி இந்த பூங்காவுக்கு வருவதையே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
அன்று மாலை..
இன்றும் அவன் நிச்சயம் வரப் போவது இல்லை என்று சோர்வோடு தான் உள்ளே சென்றாள். ஆனால் அவனோ தனியாக அந்த கோர்ட்டில் பயிற்சி செய்து கொண்டு இருந்தான்
அவனைப் பார்த்ததும் அவள் மனம் ஏனோ துள்ளிக் குதித்தது. எந்த த்யக்கமும் இல்லாமல் அவன் அருகில் ஓடிச் சென்றாள். அவளைப் பார்த்ததும் அவன் நின்று கொள்ள.. “ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சார். நான் உங்களை சும்மா வார்ன் பண்ணுவாங்க என்று நினைச்சேன். தெரியாமல் நடந்திடுச்சு!!”.. என்று அவள் மூச்சு இரைக்க சொல்லி முடித்து இருந்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன். “வேற ஏதாவது சொல்லனுமா”.. என்று அவன் முகம் இறுகி அதட்டலாக கேட்க, அவன் கேள்வியிலும் அவன் மிரட்டலிலும் அவள் தலை தானாக மறுத்து அசைத்தது. “அப்ப நீ போகலாம்”.. என்றவன் அவளிடம் இருந்து திரும்பி மறுபடியும் தன் பயிற்சியில் மூழ்கிப் போனான்.
மீரா வாய் அடைத்து நின்றாள். அவளுக்கு எப்படியாவது அவனை சமாதானம் செய்து இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க வேண்டும்.
“எக்ஸ்க்யூஸ் மீ.”.. என்று அவள் மறுபடியும் அழைக்க.. “ நீ இன்னும் போகலையா”.. என்பது போல் அவன் விழிகள் கேள்வி எழுப்பியபடி அவளைப் பார்த்து இருக்க..
“சார்.. இஃப் யூ டோண்ட் மைண்ட் ஒரு காஃபி சாப்பிட போகலாமா?”.. என்று கேட்டே விட்டாள் மீரா.
அவன் அவளை விசித்திரமாகப் பார்க்க.. “இல்ல.. என் தப்பு தான். உங்களை சும்மா மிரட்ட நினைச்சேன். பட் அது டிராஜெடியாகப் போய் விடுச்சு. அது தான் நான் செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தமா உங்களுக்கு ஒரு காஃபியாவது வாங்கித் தர ஆசைப்படுகிறேன். பிளீஸ்”.. என்றாள் கெஞ்சுதலாக.
மறுக்கத் தான் நினைத்தான் முகுந்தன்.. ஆனால் அவளின் அழகிய முகமும் கெஞ்சும் இதழ்களும் அவனைக் கட்டிப் போட்டு விட.. தன்னை மறந்து “ம் ஒகே”.. என்று கூறி விட்டான்.
அவள் முகம் சட்டென மலர்ந்து கொண்டது. “ஹுர்ரே!!.. தேங்க்யூ சார்”.. என்று அவள் துள்ளிக் குதித்தாள். அவள் உற்சாகம் அவனையும் அசைத்துப் பார்த்தது. அதற்கு மேல் அவனாலும் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
டூ மினிட்ஸ் என்றவன் தன் ஷார்ட்ஸை மாற்றி ஜீன்ஸில் வந்து இருந்தான். “ஆமா.. உன் கை எப்படி இருக்கு”.. என்று அவன் கேட்க..
“ம்.. இப்ப பரவாயில்லை சார்.. உங்களுக்கு?”.. என்று சற்று தயங்கிய படி அவள் கேட்க.
“ம்.. என்னை யாரும் இதுவரை அடிச்சதே இல்லை”.. என்றவனின் குரல் மாறி இருக்க.. மீராவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அதே நேரம் இருவரும் நடந்தபடியே காஃபி ஷாப்பை அடைந்து இருந்தார்கள்.
இருவரும் அமர்ந்து கொள்ள.. “உங்க பெயர் என்ன சார்?”.. என்று அவள் கேட்க..
அவன் சிரித்து விட்டான். “ஒரு பெயர் தெரியாத பையனோட காப்பி சாப்பிட வந்திருக்கியே.. உங்க வீட்ல இதை எல்லாம் கண்டுக்க மாட்டாங்களா?”.. என்று அவன் கேட்டுவிட..
“போங்க சார் எங்க அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்!!. அதுவும் லவ் மேரேஜ் என்றால் விளக்குமாறு பிஞ்சிடும். கடுகடுன்னு இருக்கீங்களே.. நான் சும்மா உங்களை கூல் பண்ணலாம்னு கூட்டி வந்தேன். ஏதோ நான் உங்களை லவ் புரபோஸ் பண்ணக் கூட்டி வந்த மாதிரி ஓவரா சீன் போடுறீங்க.”.. என்று கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொள்ள..
அவள் பொய்க் கோபத்தை ரசித்தவன். “சரி சரி.. ரிலாக்ஸ் மீரா.. சொல்லு.. உனக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்”.. என்று அவன் கேட்க.
அவள் அதிர்ந்து விட்டாள். “என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று மீரா கேட்க..
“எப்படித் தெரியும்??.. நீயே சொல்லு பார்ப்போம்”.. என்று அவன் திருப்பிக் கேட்க..
அவள் விழிக்க..
“அது தான் அன்னைக்கு நீ ஏற்பாடு பண்ண டம்மி போலீஸ் உன்னை அப்படி தானே கூப்பிட்டானுங்க”.. என்று அவன் சொல்ல..
அவளுக்கோ அடுத்த அதிர்ச்சி.. உதட்டைக் கடித்தபடி அவள் அவனைப் பார்த்து.. “சாரி”.. என்றாள் மறுபடியும்.
“சாரி சொல்ல வேண்டியது உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட தான் ஏன்னா எதை வாங்கினாலும் டபிளாக திருப்பிக் கொடுக்கிறது என் பழக்கம். புரியும்னு நினைக்கிறேன்.”.. என்று அவன் அவள் கண்களைப் பார்க்க..
அவளோ “இவன் யாரு?”.. என்ற ரீதியில் சற்று திகிலுடன் தான் பார்த்து அமர்ந்து இருந்தாள்.
“பயப்படாத உன்னை எதுவும் பண்ண மாட்டேன்.”.. என்று அவன் சொல்ல.. அவர்கள் அருகில் ஆர்டர் எடுக்க வெயிட்டர் வந்து இருந்தான்.
அவன் அவளைப் பார்க்க.. “கோல்ட் காஃபி” என்றாள். “ம்.. மேக் இட் ஆஸ் டூ”.. என்றான்.
“உங்க பெயர் என்ன?”.. என்றாள் இரண்டாவது முறையாக.
“நீயே கண்டுபிடி பார்க்கலாம்?” என்றான் அவன்.
“அது எப்படி உங்க பேரை நான் கண்டு பிடிக்கிறது.?.. ஏதாவது க்ளு கொடுங்க.”
“ம்.. உனக்கு என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னை மட்டுமே நினைச்சு வாழும் ஜீவன் நீ.”
“வாட் ரப்பிஷ்!!.. என்ன சார் பெரிய மன்மதன் என்று நினைப்பா?.. ஏதோ நம்மளால அடி வாங்குனீங்களே என்று இரக்கப்பட்டா.. ஓவரா தான் பேசுறீங்க?”.. என்று அவள் கன்னம் கோபத்தில் சிவந்து போக..
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் “நீ எப்பவுமே இப்படித்தானா!!.. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா.. நான் கேட்டது புராதன மீராவுக்கு யாரை பிடிக்கும் என்று?”.. என்று அவன் விளக்கம் கொடுக்க..
“ஓ.. அப்படி கேட்டீங்களா? என்று அவள் மறுபடியும் உதட்டைக் கடித்துக் கொள்ள..
“பாவம் மீரா உன் லிப்ஸ்!!.. நீ தப்பு பண்ணதுக்கு அதை ஏன் கடிக்கிற.. சிவந்து போச்சு”.. என்று அவன் சொல்ல..
இந்த முறை அவள் கன்னமும் அவன் சொன்னதைக் கேட்டு வெட்கத்தில் சிவந்து போனது.
“ஒ.. உங்க பேரு முகுந்தனா??”.. என்று அவள் சரியாக கேட்க..
“பரவாயில்லையே.. கண்ணன் என்று கெஸ் பண்ணுவேன்னு நினைச்சேன்”.. என்று அவன் ஆச்சர்யமாகக் கேட்க..
. “அது தான் உங்க மோதிரத்துல எம் என்று போட்டு இருக்கே!!”.. என்று அவள் சொல்ல…
“ம்.. யூ ஆர் ஸ்மார்ட்”.. என்று அவன் பாராட்ட..
அவளுக்கோ அவன் பாராட்டு இறக்கை கட்டி பறக்கும் உணர்வைக் கொடுத்து இருந்தது.
“நிஜமாகவே இந்த மீராவுக்கும் இந்த முகுந்தனை மிகவும் பிடித்துப் போனது. அந்த மாயக் கண்ணன் போல் இவனும் அவளை மயக்கத் தொடங்கி இருந்தான்.”
ஆம் அன்றோடு அவர்கள் சந்திப்பு நிற்கவில்லை. தினமும் மாலை சந்திப்பார்கள். அவனது ஆளுமையான பேச்சு ஆங்காங்கே தென்பட்டாலும் சட்டென மென்மை பரவி விடும்.
ஃபுட்பால் பற்றி நிறைய பேசுவான். அவள் ரசனைகளை அறிந்து கொண்டு அதைப் பற்றியும் பேசுவான். புல்லாங்குழலுக்கு மயங்கும் கோபியர்கள் போல அவன் பேச்சுக்கு அவளும் மயங்கத் தொடங்கினாள். தினமும் அவனைச் சந்திக்கப் போகும் தருணத்திற்காக ஏங்கத் தொடங்கி இருந்தாள்.
இருவர் இடையிலும் காதல் மலர்ந்து இருந்தது. அவன் தான் முதலில் அவன் காதலைச் சொன்னான். மீராவுக்கு அப்படி ஒரு ஆனந்தம். விண்ணுக்கு மேல் பறப்பது போன்ற உணர்வு.
“நானும் தான்”.. என்று அவளும் வெட்கத்துடன் ஒத்துக் கொள்ள.. அவனோ அவளை முதல் முறையாக கட்டி அணைத்துக் கொண்டான்.
அவன் அணைப்பு சொர்க்கத்தையே காட்டினாலும், “அய்யோ யாராவது பார்க்கப் போறாங்க.”.. என்று துள்ளி விலகினாள்.
இப்படியே அவர்கள் காதலிக்கத் துவங்கி இன்றோடு ஒரு மாதம் சென்று இருந்தது. அதற்குள் அவர்கள் வீட்டில் வேறு இப்படி ஒரு பூகம்பம் கிளம்பி இருந்தது.
இன்று அவள் அருகில் வந்திருந்த முகுந்தனோ அவளை இடையோடு அணைத்தபடி “என்னடீ சண்டைக்கோழி ஒரே பதட்டமா வந்து இருக்க”.. என்றான்.
“பெரிய பிரச்சனையில் மாட்டிக்கிட்டேன் முகுந்த். அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. ஆமா.. நீங்க என்ன ஆளுங்க?. என்றாள் பதட்டமாக.
“ம்.. ஏன்?. என் குலம் கோத்திரம் தெரிஞ்சு தான் மேடம் எனக்கு கழுத்தை நீட்டுவீங்களோ?”.. என்று அவன் கேட்க..
“எனக்கு அது எல்லாம் முக்கியம் இல்ல. ஆனா எங்க அம்மா கேட்பாங்களே. எங்க அம்மா நிச்சயம் கலப்புத் திருமணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க. சொல்லுங்க.. நீங்க என்ன ஆளுங்க?”.. என்று அவள் கேட்க.
அவன் முகம் மாறிப் போனது. “ம்.. மனித ஜாதி!!. போதுமா!”.. என்று அவன் கோபமாகச் சொல்ல.
“முகுந்தன்.. ஏன் என்னைப் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க. நீங்க ஒருவேளை எங்க ஆளுங்களா இருந்தா.. எங்க அம்மாவை ஈசியா சரிக்கட்டி விடலாம். ஒரு ஜோசியரை கரெக்ட் பண்ணி உங்களுக்கும் எனக்கும் செட் ஆகுற மாதிரி நல்ல ஜாதகத்தை உங்களுக்கு எழுதச் சொல்லிட்டா போதும்.
ஒரு லவ் மேரேஜை பக்கா அரேஞ்ச்ட் மேரேஜ் ஆக ஈசியா மாற்றி விடலாம்.”.. என்றாள் தீவிர யோசனையுடன்.
“இங்க பாரு.. எனக்கு பொய் சொல்ல எல்லாம் தெரியாது. உனக்கு என்னை பிடிக்குது என்றால் என்னை இப்படியே ஏத்துக்கோ. அந்த தைரியம் உனக்கு இருக்கணும்.”.. என்று அவன் சொல்ல.
அவளோ வாயடைத்துப் போனாள். “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் முகுந்த்!!. ஆனா எங்க வீட்டிலும் சம்மதிக்கனுமே..” என்றாள் நெஞ்சில் நிறைந்த வலியுடன்.
“அப்போ உங்க வீட்ல ஒத்துக்கலைன்னா.. என்னைக் கழட்டி விட்டுட்டு போய் விடுவாய்!! அப்படித்தானே?.. என்று அவன் நறுக்கென்று கேட்க..
துடித்துப் போனாள் அவள். “உங்க மேல உயிரையே வச்சு இருக்கேன் முகுந்த்!!.. என்ன வார்த்தை பேசுறீங்க!!”.. என்று அவள் முடிக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் உருண்டோடி இருந்தன.
“அப்ப நம்ம ரெண்டு பேரும் வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று கேட்டான்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள் மீரா. அவள் கண் முன்னால் மீனாட்சி வந்து நிற்க. தாய்க்கு தெரியாமல் திருட்டுக் கல்யாணமா என்று நினைக்கையிலே கை கால்கள் உதறின.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி.