நெடுநேரம் யோசித்து முடித்த மீனாட்சி ஓர் முடிவு எடுத்தவளாக தன் மாமியார் பர்வதம் அறை நோக்கி நடந்தாள். விட்டத்தை வெறித்த படி கட்டிலில் பர்வதம் படுத்து இருக்க.. “அத்தை உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”.. என்று சிறு தயக்கத்துடன் உள்ளே நுழைந்து இருந்தாள் மீனாட்சி.
“ம்.. சொல்லு.. என்ன விஷயம்”.. என்ற பர்வதம் எழுந்து அமர்ந்து கொள்ள.
“அத்தை எங்க அண்ணி.. அதான் நம்ம மீராவுக்கு பார்த்து இருக்கோமே அந்த டாக்டர் சம்பந்தம்!!”.. என்று பீடிகையுடன் ஆரம்பிக்க..
“பார்த்து இருக்கோம் இல்ல பார்த்து இருக்கேன்னு சொல்லு”.. என்று பர்வதம் திருத்த..
“சரி அத்தை எதோ ஒன்னு. மாப்பிள்ளை வீட்ல நம்ம மீராவைப் போய் இன்னைக்கு அவளுக்கு தெரியாம அவள் காலேஜ் கிட்ட போய் பார்த்து இருக்காங்க. அவங்களுக்கு நம்ம மீராவை ரொம்ப பிடிச்சு இருக்காம்.
எப்ப பொண்ணு பார்க்க வரலாம்னு ஆசையா கேட்கிறாங்க.”.. என்ற மீனாட்சிக்கு, முக்கியமாகச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவோ தொண்டைக்கு உள்ளேயே சிக்கி கொண்டது.
“ம். நல்ல விஷ்யம் தான். ஆனா உங்க அண்ணி வீட்ல எதிர்பார்ப்பு எல்லாம் எப்படி?”.. என்று பர்வதம் சரியான கேள்வியை கேட்டு விட.
ஒரு பெரிய மூச்சை எடுத்துக் கொண்ட மீனாட்சி.. “அவங்க ரொம்ப நல்ல குணம் அத்தை. அதுவும் தம்பி சின்ன வயசிலேயே அமெரிக்கா போய் பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி அவார்ட் நிறைய வாங்கி இருக்கார். மாப்பிள்ளைத் தம்பிக்கு பொண்ணு கொடுப்பதில் எங்கள் சொந்தத்தில் நான், நீ என்று ஏகப்பட்ட போட்டி அவருக்கு.
ஆனா அப்படிப் பட்ட பையன் நம்ம பொண்ணைத் தான் பிடிச்சு இருக்குன்னு நம்ம மீரா ஃபோட்டோ பார்த்து அவங்க அம்மா கிட்ட சொல்லி இருக்கான்.!!”
. “சரி. அப்ப அவங்களா எதுவும் எதிர்பார்க்கவில்லை தான. அப்ப நம்மாள முடிஞ்ச அளவு பவுன் போடலாம். இதே இது முன்ன மாதிரி நம்ம நிலமை இருந்தா.. நிறைய பண்ணி இருக்கலாம். இப்ப நாம இருக்க நிலமையில ஒரு இருநூறு பவுன் தான் போட முடியும்.
இன்னைக்கு சாய்ந்திரம்.. நான் என் பிள்ளைங்க கிட்ட மீரா பத்தி பேசுறேன்.”.. என்று பர்வதம் சொல்ல.
மீனாட்சி அதிர்ந்து விட்டாள். ஐநூறு எங்கே இருநூறு எங்கே??..“அத்தை.. டாக்டர் மாப்பிள்ளை அத்தை.!! அவங்க இன்னும் நிறைய எதிர்பார்ப்பாங்க!”
. “என்னடீ சொல்ற?.. நிறையன்னா எவ்வளவு?”.. என்று பர்வதம் சிறு அதட்டலுடனும் அதிர்ச்சியுடனும் கேட்க.
“ஐநூறு பவுன் அத்தை!!”
“ஐநூறா??.. வேண்டாம் மீனாட்சி. நாம வேற இடம் பார்க்கலாம். அது நமக்கு செட் ஆகாது. நீ எந்த லோகத்தில் இருக்க. நம்ம வீட்டு நிலமை உனக்கு தெரியாதா?
அதுவும் இல்லாம நீ மீராவுக்கு அத்தனை பவுன் போட்டா.. நாம கல்யாணிக்கும் அந்த பவுனை எடுத்து வைக்கணும். உன் ஒரகத்தி அதான் என் மூத்த மருமகள் விஜயலட்சுமி சும்மா இருப்பாளா?”.. என்று கேட்க.
“எனக்கு அது தெரியும் அத்தை. மீராவுக்கு பண்ணா நாம கல்யாணிக்கும் கொடுக்கணும் தான். ஆனா அஞ்சு வருஷம் முன்னாடி நாம நம்ம வீட்டு பெண்களுக்கு என்று அறுநூறு பவுன் ஒதுக்கி வைத்து இருந்தோம் தான!!”.. என்று மீனாட்சி கேட்க.
“ஏண்டி.. நீ நம்ம வீட்டு நிலமை தெரிஞ்சு தான் பேசுறியா?. உன் புருஷனும் என் மூத்த பிள்ளையும் இப்ப படுற அவஸ்தை எல்லாம் நீ கண்ணால பார்க்கத் தான செய்யுற?.”.. என்று எரிச்சலை அடக்கிய படி பர்வதம் கேட்டார்.
“எனக்கு புரியுது அத்தை. அதுக்காக நம்ம நிலைமையை எப்படி நாம குறைச்சுக்க முடியும். ஒரு காலத்துல நம்ம வீட்ல பன்னிரண்டு கார், எட்டு பங்களா இருந்தது. ஒகோ என்று வாழ்ந்த குடும்பம்.
நாம பெரிய இடம் நல்லா செய்வோம் அப்படின்னு வெளிய இருந்து பார்க்கிறவுங்க எதிர்பார்க்கிறாங்க. அதுக்காக எல்லார் கிட்டயும் போய் இப்ப எங்க கிட்ட வசதி இல்லன்னு சொல்லிட்டு இருக்க முடியுமா.
எனக்கு கவுரவம் தான் முக்கியம். என் மகளை பெரிய இடத்தில தான் கொடுக்கணும். அதுவும் இல்லாம இப்ப நான் வயித்துல நெருப்பை கட்டின மாதிரி சுத்திட்டு இருக்கேன். மீரா கழுத்துல தாலி ஏறினா தான் என்னால நிம்மதியா மூச்சே விட முடியும்.”
மருமகளின் பேச்சில் அதிர்ந்து போன பர்வதமோ.. “இப்ப என்ன மீனாட்சி சொல்ல வர்ற? நம்ம நிலமை எப்படி இருந்தாலும் அந்த பெரிய இடத்தை தான் முடிக்கணும என்று சொல்ல வர்றியா?” என்று கேட்க
“ஆமா அத்தை. காதல் கல்யாணம், கலப்பு திருமணம் இது எல்லாம் உங்களுக்கு வேணா சாதாரனமாக இருக்கலாம். ஆனா எங்க பக்கம் கவரிமான் ஜாதி. இந்த மாதிரி எல்லாம் நடந்தா தூக்குல தொங்கிறுவோம்.”.. என்று மீனாட்சி முடிக்கும் போது வாசலில் வந்து நின்று இருந்தாள் விஜயலட்சுமி.
விஜயலட்சுமியைப் பார்த்ததும் மீனாட்சிக்கு என்னவோ போல் ஆகிவிட.. “அக்கா மார்க்கெட் போய் வந்தாச்சா..”. என்று அவர் கையில் இருந்த கூடையை வாங்கிய படி அடுப்படி நோக்கி நடந்தாள்.
விஜயலட்சுமி கண்களில் கண்ணீர். “அத்தை உங்க மருமகளைப் பார்த்தீங்களா.. நான் தூக்கில் தொங்கனுமாம். எப்படி பேசிட்டு போறா!!. இவளைச் சொல்லி என்ன பண்ண.. நான் பெத்து வளர்த்தது தான் என்னை அசிங்கப்படுத்தி என் தலையில் மண்ணைப் போட்டு போய் விடுச்சே”.. என்று விசும்ப..
“அழாதே விஜி!. உனக்கு அவளைப் பத்தி தெரியாதா?. விடு விடு. மீராவுக்கு மட்டும் கல்யாணம் முடிஞ்சி இருச்சுன்னா டென்ஷன் இல்லாம இருப்பா. அதுவரை என்ன பேசுகிறோம்னு தெரியாம பேசிட்டு இருக்கா!!”. என்று பர்வதம் சொல்ல.
புடவை முந்தானையில் தன் முகம் துடைத்து கொண்ட விஜி “ஆனா அவள் பயத்திலும் ஒரு அர்த்தம் இருக்கு அத்தை. எத்தனை நாளைக்கு தான் பயந்துட்டே இருக்கிறது. மீராவுக்கு கல்யாணம் பண்றது தான் எனக்கும் சரின்னு படுது.”
பர்வதமும் அதைப் பற்றி தான் தீவிரமாக யோசித்தார். ரைஸ் மில், டயர் ஃபேக்டரி என்று பல தொழில்களுடன் ஓகோ என்று வாழ்ந்த குடும்பம் தான். வாசுதேவன் தன் பூர்வீக சொத்தை தன் தொழில் திறமையால் இரட்டிப்பு ஆக்கி இருந்தார்.
தொழில் தொழில் என்று ஊர் ஊராக, நாடு நாடாக சுற்றி வந்தாலும் தன் மனைவி பர்வதம் மீதும் தன் இரு புதல்வர்கள் மீதும் குறையாத அன்பு கொண்டவர். மூத்தவன் சர்வேஸ்வரன். இளையவன் மகேஸ்வரன். திருமணம் முடிந்து பல வருடங்கள் தவம் இருந்து கிடைத்த புதல்வர்கள்.
பிறக்கும் போதே செல்வச் செழிப்புடன் பிறந்தவர்கள். அதனாலோ என்னவோ பின்னாளில் அவர்களால் வாசுதேவன் அளவுக்கு தொழிலில் மிளிர முடியவில்லை. பர்வதத்தைப் பொறுத்த வரை அதற்கு முக்கியமான காரணம் அவரின் மாமியார் தேனம்மாள் மட்டுமே. ஆண் பிள்ளைகள் சிங்கக்குட்டிகள் என்று ஏதேதோ சொல்லி அவர்களுக்கு அதிகம் செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருந்தார்.
பணத்தின் அருமை அவர்களுக்கு அப்போது புரியவில்லை. பர்வதம் குரல் கொடுத்தாலும் அந்த பெரியவர் முன் அது எடுபடாமல் போய் விடும். கணவனும் ஊர் சுற்றிக் கொண்டே இருந்தால் அவரால் என்ன தான் செய்து விட முடியும்?
வாசுதேவனுக்கு தன் தாய் பற்றி குறை சொன்னால் பிடிக்காது. எப்போதாவது வரும் கணவனிடம் புகார் அளிக்கவும் அவருக்கு பிடிக்க வில்லை. போகப் போக சரியாகி விடும் என்று நினைப்பதைத் தவிர பர்வதத்திற்கு வேறு வழியில்லாமல் போனது.
தேனம்மாள் போன்ற கடுமையான பெண்மணியை பர்வதம் இதுவரை பார்த்ததே இல்லை என்று கூட கூறலாம். தேனம்மாள் வழி வந்த சொத்து என்பதால் அவர் கரம் தான் எப்போதும் உயர்ந்து இருக்கும். வாசுதேவன் பிறந்ததும் தேனம்மாள் கணவர் அவரை விட்டு இமயமலை சென்று விட்டதாக அவள் கேள்விப்பட்டு இருந்தாள்.
மனைவி அராஜாகம் தாங்காமல் ஓடி விட்டதாகத் தான் பேச்சு நிலவியது. வாசுதேவன் கூட தாயின் வாய்க்கு பயந்து தான் தொழில் செய்யும் சாக்கில் தப்பிச் செல்வது போல் பர்வதத்திற்கு தோன்றியது.
அதில் ஒரே ஒரு நல்ல விசயம் என்னவென்றால் மாமியாருக்கும் மருமகளுக்கும் சின்னச் சின்ன பூசல்கள் வந்தாலும் பெரிய பிரச்சனை வந்தது இல்லை. அதற்க்கு காரணம் பர்வதம் தேனம்மாளின் சொந்த அண்ணன் மகள் தான். சொத்து வெளியில் போகக் கூடாது என்று தன் ஒரே மகன் வாசுதேவனுக்கு தன் அண்ணன் மகளையே மனம் முடித்து வைத்தார்.
பர்வதத்தின் தந்தையான தன் தாய்மாமனிடம் தான் தொழில் கற்றுக் கொண்டார் வாசுதேவன். ஆர்வத்துடன் கற்றுக் கொண்டவர் சிறு வயதிலேயே தொழில் சாம்ராட்டாக மாறத் துவங்கி இருந்தார். வாசுதேவன் தொட்டது எல்லாம் பொன்னாக செல்வச் செழிப்புடன் மிளிர்ந்தது அவர்கள் பங்களா.
அவர் தொழில் திறமையைப் பார்த்துத் தான் பர்வதத்தின் தந்தை தன் மகளையும் அவருக்கே கட்டி கொடுத்தார். அந்த ஜில்லாவிலேயே அவர்கள் தான் பெருத்த பணக்காரர்களில் முதலாமவர்.
பர்வதம் எதிரில் ஒரு மாலையுடன் தேனம்மாள் படம் மாட்டி இருக்க.. அடுத்தபடியாக வாசுதேவன் படம் தான் சுவற்றில் ஆடிக் கொண்டு இருந்தது.
“பார்த்தீங்களா.. நீங்க இருந்த போது இந்த குடும்பம் எப்படி இருந்தது. உங்க பசங்க நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச முக்கால் வாசி சொத்தை வித்துட்டானுக. இப்போ உங்க மருமகள் என்ன பேச்சி பேசுறா தெரியுமா?
மீரா கல்யாணத்தை எப்படி நடத்துறதுனே தெரியவில்லை. எல்லாம் உங்க அம்மா செஞ்ச பாவம் தான். இந்த ஜோசியர் வேற குட்டையை கிளப்பி விட்டுட்டு போய் விட்டான்.
நல்லவேளைக்கு என் பேர்ல எங்க அப்பா வீட்டு சொத்து இருந்ததால தான் இன்னைக்கு கொஞ்சமாவது நிம்மதியா வாழ முடியுது. இல்லைன்னா இந்த வீட்டையும் வித்து தெருவுல நிக்க வச்சு இருப்பானுக உங்க பசங்க.
.. என்று பர்வதம் தன் மணக் குமுறலைக் கொட்ட வழி தெரியாமல் அவர்கள் புகைப்படம் முன்னால் புலம்பிக் கொண்டு இருந்தார்.
இப்போ மீரா கல்யாணத்துக்கு உங்க அம்மாவோட பூர்வீக வீட்டை விற்கிறதைத் தவிற வேறு வழியே இல்லை.” என்று சொல்ல.. வாசுதேவன் படத்தின் மீது அணிவித்திருந்த மாலை அறுந்து விழுந்தது.
அதிர்ந்து நின்று விட்டார் பர்வதம். கணவனுக்கு பிடிக்காத செயலை செய்யப் போகிரோம் என்ற மன உறுத்தலுடன் தான் மன்னிப்பு கோரும் வண்ணம் அவர் கேட்டு இருந்தார்.
இயற்கையாக மாலையின் கயிறு பிரிந்து விழுந்ததோ அல்லது வாசுதேவன் எதிர்ப்போ.. மொத்தத்தில் பர்வதம் தான் குழம்பிப் போய் இருந்தார்.
அப்போது ஏதோ பூகம்பம் நடப்பது போல சண்டைக் குரல் கேட்க.. “சரிதான் மீரா கல்லூரி முடிந்து வீடு திரும்பி விட்டாள்.!!”.. என்று பர்வதத்திற்கு புரிந்து போனது. “ம்.. என்ன பேச்சு பேசினா.. இப்ப நல்லா வாங்கட்டும்!”.. என்று மனதுக்குள் நினைத்தாலும் மீனாட்சியைக் காக்கத் தான் சென்றார்.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி.