அவனுக்கு இதய நோய் பிரச்சினை உள்ளது என்பது நன்றாக கனகாவுக்கு தெரியும்..
தெரிந்தும் ராதாவை படுகுழியில் தள்ளி விட்டாள்..
அதன் பயனாக திருமணம் முடித்து குழந்தையும் உண்டான பின்பு தான் ராதாவின் கணவன் இதய நோய்க்கு மருந்து எடுப்பதை பார்த்து ராதா தெரிந்து கொண்டாள்..
கணவனும், சித்தியும் தன்னிடம் உண்மையை மறைத்து திருமணம் செய்து வைத்து தன் வாழ்க்கையை கெடுத்து விட்டதை நினைத்து நினைத்து அழுதே அவள் உடல் நிலையை கெடுத்து கொண்டாள்..
சந்திரா தான் ராதாவின் நிலையைப் பற்றி தெரிந்து கொண்டு அவளுக்கு மருத்துவம் பார்த்து குணப்படுத்தி அழைத்து வந்தார்..
அவள் மருத்துவமனையில் இருக்கும் பொழுது கணவனும் சித்தியும் வந்து பார்க்கவில்லை..
மிதுன் ஒன்றும் கெட்டவன் இல்லை.. ஆனால் தன் உடல்நிலை தெரிந்து மனைவியின் மேல் அதிக பாசம் வைத்தால் தன் மறைவை ஏற்றுக் கொள்ள மாட்டாள். என்று ஒதுங்கியே அவன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு சென்று விட்டான்..
கணவன் இறந்ததை நினைத்து ராதா அழவே இல்லை..
கூடிய சீக்கிரம் இந்த சம்பவம் நடக்கும் தானே என்று அதை கடந்து வந்து விட்டாள்..
ஊருக்குள் குழந்தை உண்டான ராசி சரியில்லை அதனால் மகனை காலன் தூக்கி விட்டான் என்று தான் மிதுன் குடும்பம் சொல்லித் திரிந்தது.
ராதா பிரசவத்திற்காக சந்திராவின் உதவியுடன் ஹாஸ்பிடலில் இருக்கும் பொழுது தான்
கனகா தன் இறுதி காலத்தில் உதவிக்கு யாரும் இல்லாமல் தவித்து போய் இறந்தார்..
அதையும் சந்திரா தான் ஆள் வைத்து கனகாவின் உடலை எரித்தார்..
முதலில் சந்திராவுக்கு ராதாவை தான் மகன் திருநாவிற்கு கேட்க தோன்றவில்லை..
காலம் கடந்து தான் அதை நினைத்து கவலைப்பட்டார்..
அவர் நினைத்திருந்தாலும் ராதாவை தன் மருமகளாக ஆக்கிக் கொள்ள சந்திரன் விட்டு இருக்க மாட்டார் என்பது வேறு கதை ..
வாழ்வாதாரத்திற்கு தொழில் ஒன்றும் இல்லாமல் தவித்த ராதாவிற்கு தையல் மிஷினை எடுத்துக் கொடுத்து தையலும் கற்றுக்கொள்ள உதவி செய்து சந்திரா தான் அவளை கை தூக்கி விட்டார்..
இந்த குறுகிய காலத்தில் ராதாவின் குணத்தை சந்திரா நன்கு தெரிந்து கொண்டார்..
சந்திரா ராதா மீது வைத்திருந்த நம்பிக்கை தான் தன் மகனை அவளுக்கு மணமுடிக்க காரணமாக அமைந்தது..
தன் இறுதி தருவாயில் தான் அவர் ஆசையை நிறைவேற்றிவிட்டு இறந்து போனார் சந்திரா..
அப்படி அவர் கஷ்டப்பட்டு செய்து வைத்த திருமணம் இது.. ஏன் இவர்கள் பிரிந்து இருக்கிறார்கள் என்று மாறனுக்கு விளங்கவில்லை..
திருநா இன்று தான் ராதாவை ஒழுங்காக பார்த்து நின்றான்
தாய் இவளைத்தான் இனி நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. இவள்தான் உன் வாழ்க்கை துணைவி என்று சந்திரா கூறியதும் சந்திரா இறுதி நிமிடத்தில் இருப்பதால் ராதாவை திருநா ஒழுங்காக பார்க்கவில்லை..
கடிதம் குடுக்க செல்லும் பொழுதும் அப்படித்தான். ராதாவின் வீட்டிற்கு முன்பு நின்று ராதாவை அழைத்து அவள் வந்ததும் அவள் முகத்தை கூட பார்க்காமல் கடிதத்தை அவள் கையில் கொடுத்துவிட்டு அடுத்து வேகமாக மாறன் வீட்டுக்கு வந்து விட்டான்..
குழந்தையை மடியில் வைத்துகொண்டு அங்கிருந்த கதிரையில் அமர்ந்தாள் ராதா..
பவானி ராதாவுக்கும் அவள் குழந்தைக்கும் பலகாரம்,காபியும் கொண்டுவந்து கொடுத்தாள்.. அதை தனக்கு வேண்டாம் என மறுத்து விட்டு குழந்தைக்கு மட்டும் வாங்கி கொடுத்தாள்..
“ ஏன் மா ராதா வாங்கி சாப்பிடு. முகம் எல்லாம் வாடி போய் இருக்கு..” என்றான் மாறன்..
“ இன்னைக்கு கொடுக்கிற இந்த பலகாரத்தையும் காபியையும் பத்து வயசுல நான் பசியோட கடந்த காலத்துல ஒரு நாள் எதாவது சாப்பாடு கொண்டு வந்து நான் இருக்கேன்னு நீங்க யாருமே ஏன் கொடுக்கல..?
ஏனென்றால் நான் உங்க கூட பொறந்த தங்கச்சி இல்லையே அண்ணா..
நான் இருக்கேன் உனக்கு என்னமா பிரச்சினை?. அப்படின்னு நீங்களோ இல்ல பவானியோ,இல்ல பெரியப்பாவோ வந்து ஒரு வார்த்தை கேட்டிருந்தால் எங்க சித்தி என்னை இவ்வளவு கொடுமை பண்ணி இருக்கமாட்டாளே..
எத்தனையோ நாள் பகல், இரவு பசியோட நான் வாடிருக்க மாட்டேன்..
அது எல்லாத்துக்கும் மேல இப்படி அல்பாய்ஸ்ல போற ஒரு ஆளை கேட்க பார்க்க ஆளில்லாத அனாதை கழுதை அப்படின்னு நினைச்சு எங்க சித்தி எனக்கு அவனை கட்டி வச்சிருக்க மாட்டாங்களே..
இந்த 19 வயசுல நான் இப்படி சீரழிந்து இருக்கத் தேவையில்லை..
படிக்கத்தான் வைக்க யாரும் இல்லாட்டிலும் நல்ல வாழ்க்கை வாழ்ந்திருப்பேன்..
சந்திரா அத்தை வந்து என்னை பார்காட்டி நான் இருந்த தடமே இந்நேரம் இல்லாமல் போயிருக்கும்..
உங்களை மாதிரி ஒரு அன்பான பொறுப்பான அண்ணன் எனக்கும் கிடைச்சிருந்தால் நானும் ஒரு வேலை பவானி அக்கா மாதிரி நல்லா இருந்திருப்பேனோ தெரியல..
சரி அந்த பேச்சு விடுங்க.. நீங்களும் ஆஹா ஓஹோ ன்னு வாழல ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு முன்னேறி வந்திருக்கீங்க.. பண விஷயத்துல உதவி செய்யாட்டிலும் மாறல் சப்போர்ட்டுக்கு நான் இருக்கேன்னு வந்து நிக்கலையே..
எனக்கு கல்யாணம்னு உங்களுக்கு தெரியாம இருந்திருக்காது.. சித்தி உங்களை அழைக்காட்டிலும் வந்து ஒரு அண்ணனா என்ன எதுன்னு பார்த்து இருந்தால் அவரைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் அப்பவே இந்த கல்யாணத்தை தடுத்து இருப்பீங்க..
சரி விடுங்க இனி பேசி ஒண்ணும் ஆக போறது இல்லை..
என் வாழ்க்கை இப்படித்தான் அமையணும்னு என் தலையில் எழுதி இருக்கு… அதை யாராலும் மாற்ற முடியாது. இவ்வளவு நாளும் திரும்பி பார்க்காத உறவு இப்ப அழைக்கிறாங்களே என்று மன ஆதங்கத்தில் ஏதோ பேசிட்டேன்.. தவறாக இருந்தால் என்னை மன்னிச்சிடுங்க மாறன் அண்ணா..
இப்ப யாருக்காக நீங்க என்னை அழைத்து பேச முடிவெடுத்து இருக்கீங்கன்னு எனக்கு நல்லா புரியுது.. உங்களுக்கு பொறுப்பு கொடுத்த சந்திரா அத்தை சொன்னதை நீங்க காப்பாத்தணும்..
அதுக்காக மட்டும்தான் நீங்க இப்ப திருநா அவங்களோட என்னை சேர்த்து வைக்க முடிவெடுத்து இருக்கீங்க..
நானும் சந்திரா அத்தைக்கு வாக்கு கொடுத்திருக்கேன்.. உங்க பையன் இனி என் பொறுப்பு.. அவர் வாழ்க்கை முழுக்க துணையாக இருப்பேன் அப்படின்னு..
ஆனால் கணவனை இழந்து ஒரு வருஷத்திலேயே எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்காமல் எப்படி நான் இவரை அழைச்சுட்டு வந்து எங்க வீட்டுல வைக்கிறது.. இல்ல நான் எப்படி அவங்க வீட்டுல போய் இருக்கிறது..
கல்யாணம் பண்ணி வைக்க எங்களுக்கு யாரும் இல்ல.. அடுத்த கட்டத்தை பற்றி பேச எங்களுக்கு யாரும் இல்லை..
எப்படி நானே எல்லாத்தையும் முடிவெடுக்கிறது. அதனாலதான் நான் அமைதியா இருந்தேன்..
இதோ நான் அமைதியா இருக்கவும் இப்ப நீங்களே முடிவெடுத்து பேசுறீங்க..
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுங்க. அவர் அப்போது கோவில்ல வச்சு எனக்கு தாலி கட்டட்டும் அப்புறம் அவரோட என் வாழ்க்கையை நான் ஆரம்பிக்கிறேன்..
அதாவது அத்தை சொன்ன மாதிரி அவரை என் பொறுப்பில் எடுக்கிறேன்..
அப்புறம் அவர் யாருக்கும் பாரமா இருக்க மாட்டார்..
அத்தை அவரைப் பற்றி எல்லாம் சொல்லி இருக்காங்க. அவர் விரும்பினால் வேலைக்கு போகட்டும். இல்ல அவருக்கு அது கஷ்டம் அப்படின்னா நானே வேலைக்கு போய் அவருக்கும் சேர்த்து சம்பாதித்து சோறு போட்டு பார்த்துக்கொள்ள என்னால முடியும்..
தாலி கட்டுற வரைக்கும் அவர் அவங்க வீட்டிலேயே இருக்கட்டும்..
அத்தை எங்களை சேர்த்து வைத்தது உங்களுக்கு மட்டும் தான் தெரியும் ஊருக்கு தெரியாது..
அப்படி இருக்கும்போது முறைப்படி கல்யாணம் முடிக்காமல் அவங்களை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறது சரி வராது..
அப்படி பண்ணி இல்லாத கெட்ட பெயர் எல்லாம் எடுத்து இன்னும் மன வேதனை பட எனக்கு தென்பு இல்லை..
நானும் எல்லாம் பார்த்துட்டு தானே இருக்கேன்.. சம்பந்தமே இல்லாத உங்களுக்கும் அந்த பொண்ணுக்கும் இடையில தவறாக நடந்ததுன்னு பேசி இப்ப உங்க வாழ்க்கை எந்த இடத்துல கொண்டு வந்து நிப்பாட்டி இருக்காங்கன்னு..
அப்படி உங்களுக்கு ஒரு கெட்ட பேர் வந்தாலும் உங்களுக்கோ இல்ல அந்த பொண்ணுக்கோ தாங்குவதற்கும் உதவிக்கு ஆட்களும் இருக்காங்க.. ஆனா எனக்கு அப்படி யாரும் இல்லை.. அதனால நீங்க நாள் பார்த்து சொல்லுங்க கோவிலில் வச்சு அவர் எனக்கு தாலி கட்டட்டும்..” என்று பல வருஷம் மன வேதனையை கொட்டி தீர்த்து விட்டாள்..
“ நீ சொல்ற மாதிரி உன்ன பாக்க வரக்கூடாது அப்படின்னு எல்லாம் நாங்க நினைக்கல ராதா.. அண்ணா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வேலை வாங்குச்சுன்னு உனக்கு தெரியும். காலைல போன ராத்திரிதான் வீட்டுக்கு வரும் நானும் என்ன பாடுபட்டேன்னு உனக்கு தெரியும்..
உங்க சித்தி வீட்ல யாரையுமே ஆட்களை அண்ட விடுவதில்லை.. அதுவும் உனக்கு தெரியும். அப்படி வந்து இருந்தா உன் கஷ்டம் தெரிஞ்சிருக்கும்.. ஆனா ஒரு முறை நாங்க விளையாட வரும்போது அவங்க திட்டி அனுப்பிட்டாங்க.. வீட்டுல சித்தப்பா இருக்கிறார்.. அவர் உன்ன பார்த்துபார்னு நினைத்து அப்புறம் அங்க வராமல் நாங்களும் இருந்துட்டோம்.. அதுதான் நாங்க செய்த பிழை எங்களை மன்னிச்சுடு..
இனி அதை பேசினால் வேதனை தான்.. பழையதை கிண்ட வேணாம். விட்டுட்டு இனி ஆக வேண்டியது பாப்போம்.. உனக்கும் திருநா அத்தானுக்கும் கல்யாணம் முடிச்சு வச்சுட்டா விட்ட சந்தோசத்தை எல்லாம் சேர்த்து இனி நீங்க உங்க வாழ்க்கையை நல்லா அமைத்துக் கொள்ளுங்க.
இப்பதான் இன்னும் நெருக்கமாயிட்டோம்.. இனி போக்குவரத்து வச்சிருந்தா உனக்கு தேவையான எல்லாத்தையுமே நாங்க பார்த்துக்குவோம். இனி யாரும் இல்லைன்னு கவலைப்படாத ராதா நாங்க இருக்கோம்..” என்று பவானி பேசி ராதாவை கொஞ்சம் சமாதானப்படுத்தினாள்..
அதன் பின்பு மாறன் “ என்னை மன்னித்துவிடு ராதா ம்மா.. நான் செய்தது தவறு தான்.. எனக்கு பவானி மாதிரி நீயும் ஒரு தங்கை தான்.. அதை நான் தெரிஞ்சு ஏன் புரிந்து கொள்ளாமல் தவறு பண்ணினேன்னு எனக்கு தெரியல..
நான் பண்ணின தவறுக்கு ஏதாவது காரணம் சொல்லி நான் சப்பகட்டு கட்ட விரும்பல..
உன் கோபம் குறையும் போது இந்த அண்ணனை மன்னிச்சிடு மா.. இனி உனக்கு எல்லா விதமாகவும் உதவிக்கு நான் இருக்கேன்..” என்று அவன் தரப்பில் மன்னிப்பு கேட்டதும்.
தற்போது அந்த வீட்டில் பெரிய மனுசியாக கோமதி இருப்பதால் கலண்டரை எடுத்து திருமணத்திற்காக ஒரு நல்ல நாளை பார்த்தார்.. அந்த நல்ல நாள் இன்னும் மூன்று நாளில் வருவதாக கூறினார்..
“சரி அண்ணா அவர் அங்கிருந்து ரொம்ப கஷ்டப்பட வேணாம். எனக்கு இரண்டாவது கல்யாணம் தானே இது. சேர்த்து வச்சிருக்க பணத்துல ஒரு தாலி வாங்கிக்கிறேன்.. அன்னைக்கு கோயில்ல நல்ல நேரத்தில அவர் அதை கட்டட்டும் அது போதும்.. சரி நாங்க போயிட்டு வரோம்..” என்று கூறி குழந்தையை அழைத்துக்கொண்டு ராதா அங்கிருந்து சென்று விட்டாள்..
திருமணத்திற்கு சம்மதமா என்று மகனிடம் சந்திரவும் கேட்கவில்லை.. என்னை பிடித்திருக்கிறதா?. என்று திருநா-விடம் ராதாவும் கேட்கவில்லை..
ராதா சந்திரா செய்த உதவிக்கு நன்றி கடனாக திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னாள்..
திருநா இந்த திருமணம் தாயின் இறுதி விருப்பம்.. இனி தனக்கென்று யாரும் இல்லை.. எனும் எண்ணத்தில் அவளை திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தான்..
இப்படி ஒரு திருமணம் நடந்தால் அங்கே எங்கிருந்து காதல் இருக்கும்..