காலையில் எழுந்ததிலிருந்தே மஹிமாவின் கண்கள் சுசீந்திரனையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. நேற்று நவீனுடன் பேசியதோடு சரி, அதன் பிறகு மஹியிடம் அவனது பேச்சு வெகுவாய் குறைந்திருந்தது.
ஏன்? எதற்கு வருகிறான்? என்று ஏதாவது கேட்பான் என அவள் நினைத்திருக்க அவனோ அதைப் பற்றி வாயே திறக்கவில்லை. அதுவே அவளுக்கு குறையாகத் தெரிய அவள் கண்கள் அவன் பின்னேயே சுழன்று கொண்டிருந்தது.
“சுசி, ஏன் பேசவே மாட்டேங்குற.” என்றாள் பொறுமை இழந்து. ஒரு நொடி நின்று அவளைத் திரும்பிப் பார்த்தவன், “பேசுனா என்கிட்டே எல்லாமே சொல்லிடுவியா? ” என்றான் கேள்வியாய்.
“ஹையோ, உனக்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல சுசி. அன்னைக்கு அவன் என் பிஈ பேட்ச் வாட்ஸப் குரூப்ல இருந்து நம்பர் எடுத்து மெசேஜ் பண்ணான். அவன் இங்க வரும் போது நம்மல மீட் பண்ண வரவான்னு கேட்டான். நான் கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும்? சோ வர சொல்லிட்டேன். அவன் எனக்கு மெசேஜ் அனுப்பும் போது நான் நவீன் கூட பேசிகிட்டு இருந்தேன். அதுனால அவங்களுக்கும் ஷேர் பண்ணினேன். உனக்கு அப்புறம் சொல்லணும்ன்னு நினைச்சேன்… ஆனா, ” என அவள் இழுக்க, “ஹ்ம்ம் சொல்லு மஹி, சொல்லணும்ன்னு நினைச்ச, ஆனா உனக்கு நேரம் கிடைக்கலையா? கடுப்பேத்தாத. அவனை கண்டாலே எனக்கு காண்டு ஆகும்ன்னு உனக்கு புரியாதா?” என்றான் கோபமாய்.
“ஏன்? ஏன் உனக்கு காண்டு ஆகுது? அவன் உன்னை என்ன செஞ்சான்? உண்மைய சொல்லணும்ன்னா அவன் தான் உன் மேல காண்டு ஆகணும். ஆனா நீ ஏன் அவன் மேல கோவமா இருக்க?” என அவனைப் புரியாத பார்வை பார்க்க, “ஓஹ், அப்ப… அப்ப அவன் சொன்னதும் அப்படியே உன்னைத் தூக்கி அவன் கைல குடுத்துட்டு எங்கிருந்தாலும் வாழ்கன்னு நான் பாடி இருக்கணுமோ?” என்று கத்தியவன்
“எல்லாரோடையும் நம்மால நல்லவங்களா பேசி சிரிச்சுக்கிட்டு இருக்க முடியாது மஹி. அவங்க நல்லவங்களா இருந்தாலும் சரி. எனக்கு அவனோட அப்படித்தான். அதுக்காக அவனோ நானோ கெட்டவங்கன்னு அர்த்தம் இல்லை. எனக்கு அவனோட ஒத்து வராது அவ்வளவுதான்.” என்றான் மூச்சை இழுத்துப் பிடித்து தன் கோபத்தை அடக்கியபடி.
“உனக்கு அவன் மேல பொறாமையா சுசி?” என்றாள் அவனை அறிந்தவனாய்.
“அது பொறாமையான்னு எனக்குத் தெரியாது. இப்பவும் நீ எனக்கிட்ட சதீஷ் வருவான்னு சொல்ல மறச்சுட்டன்னு தோணுது, கோபம் வருது. அவன் ஏன் என்கிட்ட சொல்லாம உனக்கு மட்டும் மெசேஜ் போட்டான்னு சந்தேகம் வருது. இப்படி பல கேள்வி, பல பீலிங் எல்லாம் வருது. ஆனா அது எதுவுமே நல்ல கேள்வி இல்லன்னும் எனக்குத் தெரியும். அது எப்பவும் அப்படித்தான்.” என்றவன் அவள் பதில் சொல்லும் முன்னே, “அவன் உனக்கு பிரென்ட். அவனை வரக் கூடாதுன்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா நான் அவனோட நல்லா பேசணும்ன்னு எதிர் பார்க்காத.” என்றான்.
அவனையே சில நிமிடம் கூர்ந்து பார்த்தவள் மிருதுவான அதே சமயம் தெளிவான குரலில்,
என்றன் நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லும் முன்னுணர் வான்; – அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுள ரோ?
என்று பாடியபடி அவன் அருகில் வந்தவள் அவனின் வலது தோளில் இடித்துவிட்டு சென்றாலும் அவளுக்குள் மீண்டும் ஆயிரம் யோசனைகள்.
‘எதற்காக இவனுக்கு இத்தனை கோபம் வருகிறது? ஏன் அவனிடம் சுசிக்கு இவ்வளவு வெறுப்பு? என்னைப் பற்றி அவனிடம் தப்பாக பேசியது இவன் தவறு தானே?’ நினைக்கும் போதே மீண்டும் மனம் குழம்பி உணர்வுகள் அவனுக்கு எதிராக திரும்ப, ‘வேணாம் மஹி. இதெல்லாம் நீ யோசிக்காத. அவன் சொன்னதையே உன்னால மறக்க முடியல. இதுல ஏன் சொன்னான்னு தெரிஞ்சுக்க நினச்சு இன்னும் உன் பிரச்சனைய பெருசாக்காத’ என்றபடி அவளும் கடந்து விட வெள்ளி இரவு அவர்கள் வீடு வந்து சேர்ந்தான் சதீஷ்.
சதீஷ் வந்ததும் அவனை வரவேற்று உபசரித்து பருகக் கொடுத்து மூவரும் பேசிக் கொண்டிருக்க பேச்சு அவர்களின் தற்போதைய வாழ்க்கையைப் பற்றித் திரும்பியது.
“என்ன திடீர்ன்னு UK வந்திருக்க. அதுவும் ஒரு வாரத்துக்கு?” என்றாள் அறிந்து கொள்ளும் நோக்கில்.
“உனக்கு தெரியுமான்னு தெரியல, UKல கிடைக்கிற மருந்துங்க பெரும்பாலும் இந்தியால இருந்து வர்றதுதான். எங்க அப்பாவோட பிசினஸ் அதான். அதோட ஒரு கிளையண்ட் மீட்டிங்கு தான் இங்க மான்செஸ்டர் வந்தேன். அதான் உங்களையும் பார்க்கலாமேன்னு தோணுச்சு. வாய்ப்பை ஏன் வீணாக்கனும் மஹி. அதுவும் இவ்வளவு வருஷம் கழிச்சு.” என்றான் சதீஷ்.
“ஹ்ம்ம், அதுக்கு இந்தியால நடந்த எங்க கல்யாணத்துக்கு வந்து பாத்திருக்கலாம்ல மச்சி?” என்றான் சுசி இடக்காக.
“வரக்கூடாதுன்னு இல்ல டா, கொஞ்சம் பிஸி அந்த டைம். ஏன் மச்சி, ‘மண்டபத்தோட வந்துட்டு போகாம வீட்டுக்கு ஏன்டா வந்தன்னு’ கேக்குறியா மச்சி?” என்ற சதீஷை அதிர்ச்சியாய் பார்த்தாள் மஹிமா.
இருவரது பேச்சும் வந்ததிலிருந்து இப்படித் தான் இருந்தது. இது என்னடா புது பூகம்பம் என தோன்ற மானசீகமாக தலையில் கைவைத்துக் கொண்டாள் மஹிமா.
பேச்சை மாற்ற நினைத்தவள், “அப்புறம் சதீஷ் உனக்கு எப்ப கல்யாணம்?” என்று கேட்க, பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவன் “பண்ணனும், ஆனா எப்பன்னு தெரியல மஹி.” என்றான்.
“ஏன் மச்சி லவ் எதுவும் பண்ணல நீ? உங்க வீட்ல காதல்ன்னா ஒத்துக்குவாங்களா? இல்லை எதிர்ப்பாங்களா?” என்று சதீஷைப் பார்த்துக் கேட்ட சுசியை எரித்துவிடுவது போல முறைத்துப் பார்த்தாள் மஹிமா.
“லவ் பண்ணலாம்ன்னு ஒரு காலத்துல தோணுச்சு மச்சி. ஆனா குறுக்க ஒரு குரங்கு நின்னு சேட்டை செஞ்சதுல ச்சீ ச்சீ இதெல்லாம் நமக்கு செட்டே ஆகாதுன்னு விட்டுட்டேன் மச்சி. ஆனா அந்த குரங்கை அன்னைக்கே அடிச்சு ஒரு வழி செஞ்சிருந்தா இன்னைக்கு நீ இந்த கேள்வியை என்னை பார்த்து கேட்டிருக்க மாட்ட டா.” என்றவன் புருவம் உயர்த்தி சுசீந்திரனைப் பார்க்க அவனும் புன்னகைத்தான்.
“குரங்குன்னா அப்படிதான் சதீஷ், தேவையில்லாம அத தொந்தரவு செஞ்சா அதுவும் வம்பு வளக்கும். அதுக்காக எல்லாம் யோசிக்காத. சீக்கிரம் உங்க வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்கோ.” என்றவளை பார்த்து முறைப்பது இப்போது சுசீந்திரன் முறை ஆயிற்று.
“ஹ்ம்ம், கண்டிப்பா மஹி. எல்லாம் பிக்ஸ் ஆனதும் சொல்றேன் கண்டிப்பா ரெண்டு பேரும் வரணும்.” என்றவனை பார்த்து புன்னகைத்த மஹிமா “வாங்க டின்னெர் சாப்பிடலாம்.” என அழைத்து சென்றாள்.
உணவருந்தி முடித்து சுசீந்திரனும் சதீஷும் ஓய்வாய் சற்று நேரம் மாடத்தில் நின்றிருக்க மஹிமா உள்ளே சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
“மச்சி சொல்லுடா, நிஜமாவே நீ மீட்டிங்காக தான் மான்செஸ்டர் வந்தியா? என்னால இன்னும் நம்ப முடியல மச்சி.” என்று சந்தேகமாக கேட்ட சுசீந்திரனைப் பார்த்து,
“இன்னுமா சுசி உனக்கு என் மேல நம்பிக்கை வரல. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுடா.” என்றான் சதீஷ் சிரித்தபடி.
“ஹ்ம்ம், ஆனாலும் இன்னும் நீ அன்னைக்கு என்ன ட்ரிகெர் பண்ண மாதிரி தான் இப்பவும் பேசுற.”
“ஆனா அன்னைக்கு நீ ரியாக்ட் பண்ணின மாதிரி இன்னைக்கு செய்யலையே மச்சி. நீயும் இன்னைக்கு கூலா இருக்க.” என்றவன் தொடர்ந்து,
“அன்னைக்கு நான் உன்கிட்ட பேசினப்பவும் நான் மஹிய லவ் பண்ணுனனா தெரியாது. ஆனா அவளோட ஆளுமை எனக்கு ரொம்ப பிடிக்கும். ” என்றவனை தடுத்து “இப்ப அதெல்லாம் எதுக்கு மச்சி பழைய கதை. விடு டா சதீஷ்.” என்று சுசீந்திரன் சொல்லவும் அவனை மறுத்துவிட்டு தொடர்ந்து பேசத் தொடங்கினான் சதீஷ்.
“காலேஜ்லயே உன்கிட்ட ஒரு நாள் மனசுவிட்டு பேசணும்ன்னு நான் நினச்சதுக்கு இன்னைக்கு தான் டைம் கிடைச்சுருக்கு. லெட் மீ ஸ்பீக். எங்க அப்பா இறந்ததும் எங்க அம்மாக்கு மஹிய போல தைரியம் இல்லாம போனதுல எங்க பிசினஸ்ல நிறைய அடி. இப்போ நான் டேக் ஓவர் பண்ற வரையிலும் கூட ப்ரோப்லம்ஸ் இருந்துது. அதனால தைரியமா பசங்க கண்ணப் பார்த்து பேசுற மஹிய எனக்கு ரொம்ப பிடிச்சுது.
ஆனா அந்த ஃபீல்க்கு நான் பேரெல்லாம் வைக்கல.
எனக்கு ஒரு டவுட் இருந்துது நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு. ஆனா மஹி எப்பவும் அவன் என் பிரெண்ட்ன்னு சொல்லுவா. அது கொடுத்த தைரியத்துல தான் மச்சி அன்னைக்கு உன் கிட்ட பேச வந்தேன். அதுகூட அவளைப் பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னு தான் நினைச்சேன். ஆனா நீ எடுத்ததும், ‘என்ன லவ்வா? அதெல்லாம் மஹி ஒத்துக்க மாட்டான்னு’ சொல்லவும் எனக்கு கொஞ்சம் கோவம். அதென்ன அவ ஒத்துக்க மாட்டேன்னு இவன் சொல்லுறதுன்னு உன் மேல ஒரு கொல வெறி. அதான் மச்சி அன்னைக்கு உன்ன ஏதேதோ சொல்லி கார்னெர் பண்ணேன். நாங்க ஒரே ஜாதி, பணம் இருக்குன்னு பேசினேன். ” என்று தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தவனை நக்கல் பார்வை பார்த்தவன், “ஏன் மச்சி அது மட்டுமா சொன்ன, எங்க வீட்ல இருந்து கல்யாணம் பேச அடுத்த வாரம் போறாங்கன்னு கூட சேத்து சொன்ன.” என்றான் சுசீந்திரன்.
“ஹ்ம்ம், எப்படியாவது நீயும், ‘நான் அவளை லவ் பன்றேன்’னு சொல்லுவன்னு பார்த்தேன். நீ தான் மசியலையே மச்சி. எனக்கு அப்போ தெரிஞ்சது நீ அவளை லவ் பண்ற, ஆனா அவகிட்ட நீ சொல்லல.
மஹிக்கு சொல்லாம நீ யாரு வந்து கேட்டாலும் உன் காதலை ஒத்துக்க மாட்டன்னு புரிஞ்சது. அதுனால தான் எனக்கு இன்னும் தைரியம் வந்துச்சு. கூடவே உன் மேல கடுப்பும் கோபமும்.
நீயும் நான் எதிர் பார்த்தது போல அன்னைக்கு ரியாக்ட் பண்ண.” என்றவன் சற்றே நிறுத்த “ப்ளீஸ் வேண்டாம் விடு சதீஷ்.” என்றான் சுசீந்திரன் தன் தலையை அழுந்தக் கோதியபடி.
“ஏன் மச்சி, அன்னைக்கு அவளை பத்தி தப்பா சொல்லும் போதும் உனக்கு இப்படித்தான் வலிச்சது மச்சி. உன் கண்ணு கலங்குச்சு. நான் நினைச்சது நீ என்னோட சண்டை போடுவ, அடிப்ப, இல்ல மஹிக்கு சொல்லுவ இதெல்லாம்தான். ஆனா நீ என்ன பேச விடாம செய்யணும்ன்னு மஹிய தப்பா சொல்லிட்ட.
அதுக்கு அப்புறம் நான் என்ன பேசன்னு தெரியாம தான் அன்னைக்கு விட்டுட்டு போனேன். ஆனா நீ அங்கே உக்காந்து அழுகும் போது என் தப்பும் அதுல இருக்குனு எனக்கு தோணுச்சு மச்சி. ஆனாலும் உன்கிட்ட வந்து சாரி கேக்க தோணல. எனக்கும் கொஞ்சம் ஈகோ மச்சி. என் லவ் தோத்துப்போச்சுன்னு நானே எனக்கு பீல் பண்ணிக்கிட்டேன். அதனால்,” என்று சொன்னபடி சுசீந்திரன் முகம் பார்க்க, “இன்னும் என்ன மச்சி, போதும் விடு” என்றவன் மனதுக்குள் ‘அன்னைக்கு அவளை பத்தி தப்பா பேசினத்துக்கு எனக்கு இன்னிக்கு வரைக்கும் பாவ மன்னிப்பு கிடைக்கல டா.’ என்று சொல்லிக் கொண்டான்.
“இரு மச்சி என்ன அவசரம், நான் சொல்ல வந்தது இன்னும் சொல்லவே இல்ல.” என்ற சதீஷ் அவன் கண்களை கூர்ந்து நோக்க சுசீந்திரனுக்கு ஏதும் விளங்கவில்லை.