ஓராயிரம் காதல் கதைகள் உலவும் இந்த உலகில் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னே காதலும், அதன் வழி நம் ஆதி இனம் கண்ட வளமான வாழ்வியலும் இன்றும் நம் பார்வையில் பரவசமாய். அதனிலிருந்து ஒரு சிறு துளி நமது கொண்டாட்டத்திற்காக:
சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப்
பிணைமா னினிதுண்ண வேண்டிக் – கலைமாத்தன்
கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல
ருள்ளம் படர்ந்த நெறி.
(இதையெல்லாம் எனக்கு படிக்கத் தெரிஞ்சா … என அலறும் மக்களுக்காக:
பாலை நிலத்தில் காதல் மிகுந்த ஆண் மானும், பெண் மானும் ஓடிக் களைத்து தாகம் தீர்க்க நீர் வேண்டி, அங்குமிங்கும் அலைகின்றன. ஒரு சுனையில் ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. இந்நிலையில், பெண் மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண் மான், தான் நீரைப் பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண் மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. தங்கள் காதலினை அந்த இரு மான்களும் வெளிப்படுத்திய விதத்தை நமக்கு இவ்வாறு உணர்த்துகிறது ஐந்திணை ஐம்பது.
இணையத்தில் இருந்து சுட்ட விளக்கமும் வரிகளும், அதனால தப்பிருந்தா நிர்வாகம் பொறுப்பில்லை மக்களே. என் குல சாமி கூகிளாண்டவர் தான் பொறுப்பு)
முத்தத்தின் ஈரத்தில் – முன்னோட்டம்
தூரத்தில் எங்கோ கைப்பேசியில் பாடல் ஒலிக்க அவனும் உடன் பாடிக் கொண்டிருந்தான். அந்த அறையில் இருந்த இருவர் மனதிலும் எல்லையில்லா இன்பம் கொட்டிக் கிடக்கும் பின் அந்தி வேளை அது. ஊனும் உயிரும் அவர்களின் உணர்வுகளும் ஒன்றென இணைந்து ஒன்றோடொன்று ஒன்றி இருக்க, அவர்களின் அன்பு மட்டுமே அங்கு சுவாசமாகி உள்ளும் புறமும் அவர்களைச் சூழ்ந்திருந்தது.
“நீ எனக்கு அமுதம் டி கண்ணம்மா” மெல்ல அவனவளின் மௌனம் கலைக்கிறான் அவன்.
“ஹ்ம்ம்” வார்த்தைகளற்ற ஒலி மட்டுமே வர, அவள் புறம் திரும்பியவன் கையணைப்பில் இருந்தவளின் முகம் கண்டான். செம்மை ஏறிச் சிவந்திருக்கும் வதனம்.
அந்த அறையின் சாளரத்தின் வழி தெரிந்த இருள் சூழா முன்னிரவின் செந்நிறம் கொண்ட தொடுவானத்தின் செம்மை எல்லாம் அவளின் செம்பவள வதனத்தின் முன் தோற்றுவிடும் போல ஒரு பிம்பம் அவள் முகத்தில்.
“கண்ணம்மா” மீண்டும் அழைத்தான்.
“ஹ்ம்ம், சொல்லு பாரதி” இதழ் பிரியாமல் வார்த்தைகளை அவள் உதிர்க்க,
“இப்படி ஒரு நாள் நம்ம வாழ்க்கையில் நம்ம எதிர் பார்க்காதது, சொல்லத் தெரியாத அளவுக்கு சந்தோஷமா இருக்கேன் டீ” சொன்னவனின் மகிழ்ச்சி அவனின் குரலில் தெரிய, அவன் கைவளைவில் தலை வைத்துப் படுத்திருந்தவளுக்கும் அதே உணர்வுகள் தான்.
அதை உணர்த்தும் எண்ணம் அவளுள் கூட, “இதுவும் கூட நம்ம எதிர்பார்க்காதது தான்,” என்று அவர்களின் நெருக்கத்தை விழிகளால் விளக்கியவள் “எதிர்பாராததை எதிர்பார்க்கிறது தானே வாழ்க்கை” என்றாள் அவளவனின் முகம் பார்த்து.
“ஒரே ஒரு முத்தம், அந்த ஒற்றை முத்தம் தந்த இதமும் ஈரமும் தான் நம்ம வாழ்க்கை கண்ணம்மா”என்றவன் குரலில் காதல் மீகிட,
“அந்த ஒற்றை முத்தமா? இல்ல ஒன்னு ஒன்னுன்னு சொல்லியே நீ குடுக்குற ஓராயிரம் முத்தத்தோடா ஈரமான்னு நீயே யோசிச்சு சொல்லு பாரதி.” மென் குரலில் அவள் பிதற்ற,
“இந்த ஓராயிரம் முத்தத்திற்கான உரிமையும் உறவும் அந்த ஒத்த முத்தத்தோட சந்தத்தில் வந்த சொந்தம் டி” சொன்னவன் அவனின் இதழ் கொண்டு பாடிய முத்த சந்தத்தில் காதல் பொழுதுகள் மீண்டும் ஒருமுறை களவாடப் பட்டன.
முத்தத்தால் தன்னவளைக் களவாடியவன் மெல்ல அவளின் விழி சொல்லும் உணர்வுகள் படிக்க, அவனுக்குள் அவர்கள் உறவின் ஆரம்ப கால நினைவுகள்.
நினைவுகள் எழுந்த அந்த நொடி நேரத்தில் அவன் குறும்புக் கண்ணனாய் மாறிப் போக,
இதழோரம் சிறு புன்னகை பூக்க “சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் கண்ணம்மா” கேலியாய் ஒலித்தது அவன் குரல்.
“என்னடா? இப்ப எதுக்குத் தேவை இல்லாம இந்தப் பழமொழி??” கேள்வியாய் அவள் விழிகள் மென்மையாய் இமை தூக்கி அவளவனின் விழிகளுடன் கலக்க,
“ஹ்ம்ம், அது கண்ணம்மா நீ இப்போ என் கைக்குள்ள இருக்க, என்னோட ஒட்டி ஒரசிட்டு, அதுவும் துளி கூட சத்தம் போடாம. நீயும்.. ” என்று தொடர்ந்து ஏதோ சொல்ல வந்தவனின் மெல்லிய நகைப்பொலி சத்தமில்லாமல் அவளின் உள்ளங்கையினுள் அடங்கியது.
அவள் அறிவாளே அவன் சொல்ல வருவதன் பொருளை. அவள் சத்தமிட்ட பொழுதுகளும், அதில் அவன் முத்தமிட்டு முத்தமிட்டு முகிழ்த்திய மோகனங்களும் நினைவில் வந்து நனைத்தது. அவள் நினைவுகளில் அவன் சொல்லிய ‘சத்தம் போடாம’ மீண்டும் ஒலிக்க, அவளின் வெட்கம் சூழ்ந்த முகத்தை மறைக்க அவனின் திண்ணிய மார்பிலேயே சரணடைந்தாள்.
நிமிடங்கள் கடக்க, உள்ளங்கைகளில் அவள் அடங்கிய நகைப்பொலி மறைந்து அந்த அறை முழுவதும் இப்பொழுது முத்தத்தின் சத்தத்தால் நிறைந்திருக்கச் செவ்வந்தி வான மயக்கம் இங்கு அவர்களுக்குள்ளும்.