“தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!”
தூரத்தில் எங்கோ கைப்பேசியில் பாடல் ஒலிக்க அவனும் உடன் பாடிக் கொண்டிருந்தான். அந்த அறையில் இருந்த இருவர் மனதிலும் எல்லையில்லா இன்பம் கொட்டிக் கிடக்கும் பின் அந்தி வேளை. ஊனும் உயிரும் அவர்களின் உணர்வுகளும் ஒன்றென இணைந்து ஒன்றோடொன்று ஒன்றி இருக்க, அவர்களின் அன்பு மட்டுமே அங்கு சுவாசமாகி உள்ளும் புறமும் சூழ்ந்திருந்தது.
“என் உள்ளமுதம் டி கண்ணம்மா நீ” மெல்ல அவனவளின் மௌனம் கலைக்கிறான் அவன்.
“ஹ்ம்ம்” வார்த்தைகளற்ற ஒலி மட்டுமே வர, அவள் புறம் திரும்பியவன் கையணைப்பில் இருந்தவளின் முகம் கண்டான்.
செம்மை ஏறிச் சிவந்திருக்கும் வதனம்.
அந்த அறையின் சாளரத்தின் வழி தெரிந்த இருள் சூழ முன்னிரவின் செந்நிறம் கொண்ட தொடுவானத்தின் செம்மை எல்லாம் அவளின் செம்பவள வதனத்தின் முன் தோற்றுவிடும் போல ஒரு பிம்பம் அவள் முகத்தில்.
“கண்ணம்மா” மீண்டும் அழைத்தான்.
“ஹ்ம்ம், சொல்லு பாரதி” இதழ் பிரியாமல் வார்த்தைகளை அவள் உதிர்க்க,
“இப்படி ஒரு நாள் நம்ம வாழ்க்கையில், நம்ம எதிர் பார்க்காதது, சொல்லத் தெரியாத அளவுக்கு சந்தோஷமா இருக்கேன் டீ” சொன்னவனின் மகிழ்ச்சி அவனின் குரலில் தெரிய, அவன் கைவளைவில் தலை வைத்துப் படுத்திருந்தவளுக்கும் அதே உணர்வுகள் தான்.
அதை உணர்த்தும் எண்ணம் அவளுள் கூட, “இதுவும் கூட நம்ம எதிர்பார்க்காதது தான்,” என்று அவர்களின் நெருக்கத்தை விழிகளால் விளக்கியவள் “எதிர்பாராததை எதிர்பார்க்கிறது தானே வாழ்க்கை” என்றாள் அவளவனின் முகம் பார்த்து.
“ஒரே ஒரு முத்தம், அந்த ஒற்றை முத்தம் தந்த இதமும் ஈரமும் தான் நம்ம வாழ்க்கை கண்ணம்மா”என்றவன் குரலில் காதல் மீகிட,
“அந்த ஒற்றை முத்தமா? இல்ல ஒன்னு ஒன்னுன்னு சொல்லியே நீ குடுக்குற ஓராயிரம் முத்தத்தோடா ஈரமான்னு நீயே யோசிச்சு சொல்லு பாரதி.” மென் குரலில் அவள் பிதற்ற,
“இந்த ஓராயிரம் முத்தத்திற்கான உரிமையும் உறவும் அந்த ஒத்த முத்தத்தோட சந்தத்தில் வந்த சொந்தம் டி” சொன்னவன் அவனின் இதழ் கொண்டு பாடிய முத்த சந்தத்தில் காதல் பொழுதுகள் மீண்டும் ஒருமுறை களவாடப் பட்டன.
முத்தத்தால் தன்னவளைக் களவாடியவன் மெல்ல அவளின் விழி சொல்லும் உணர்வுகள் படிக்க, அவனுக்குள் அவர்கள் உறவின் ஆரம்ப கால நினைவுகள்.
நினைவுகள் எழுந்த அந்த நொடி நேரத்தில் அவன் குறும்புக் கண்ணனாய் மாறிப் போக,
இதழோரம் சிறு புன்னகை பூக்க “சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் கண்ணம்மா” கேலியாய் ஒலித்தது அவன் குரல்.
“என்னடா? இப்ப எதுக்குத் தேவை இல்லாம இந்தப் பழமொழி??” கேள்வியாய் அவள் விழிகள் மென்மையாய் இமை தூக்கி அவளவனின் விழிகளுடன் கலக்க,
“ஹ்ம்ம், அது கண்ணம்மா நீ இப்போ என் கைக்குள்ள இருக்க, என்னோட ஒட்டி ஒரசிட்டு, அதுவும் துளி கூட சத்தம் போடாம. நீயும்.. ” என்று தொடர்ந்து ஏதோ சொல்ல வந்தவனின் மெல்லிய நகைப்பொலி சத்தமில்லாமல் அவளின் உள்ளங்கையினுள் அடங்கியது.
அவள் அறிவாளே அவன் சொல்ல வருவதன் பொருளை. அவள் சத்தமிட்ட பொழுதுகளும், அதில் அவன் முத்தமிட்டு முத்தமிட்டு முகிழ்த்திய மோகனங்களும் நினைவில் வந்து நனைத்தது. அவள் நினைவுகளில் அவன் சொல்லிய ‘சத்தம் போடாம’ மீண்டும் ஒலிக்க, அவளின் வெட்கம் சூழ்ந்த முகத்தை மறைக்க அவனின் திண்ணிய மார்பிலேயே சரணடைந்தாள்.
நிமிடங்கள் கடக்க, உள்ளங்கைகளில் அவள் அடங்கிய நகைப்பொலி மறைந்து அந்த அறை முழுவதும் இப்பொழுது முத்தத்தின் சத்தத்தால் நிறைந்திருக்கச் செவ்வந்தி வான மயக்கம் இங்கு அவர்களுக்குள்ளும்.
அந்த மயக்கம் சட்டென தெளிந்தது போல அவர்களின் உறக்கமும் சட்டெனக் கலைந்தது.
நாற்பது மைல்கள் தொலைவில் தூக்கம் தொலைத்த இரு உள்ளங்களுக்கும் தாங்கள் கண்ட அந்த நிகழ்வு கனவா இல்லை நினைவா என பிரித்தறிய முடியாத குழப்பமான விடிகாலைப் பொழுது.
தூக்கம் மொத்தமும் கலைந்து விழிப்பு வர நினைவில் நிறைந்து நின்ற அந்தக் கனவின் தாக்கத்தில் அவர்களின் இழப்பு இன்னும் இன்னும் பெரிதாய் தெரிய அழகிய அந்த விடியல் கூட இங்கு காதல் கொண்டாடிய இருவரின் மனதிலும் காந்தலாய் தகித்தது.
இன்றைய நாளின் ஆரம்பமே இருவருக்கும் மனதில் ஒருவித ஏமாற்றத்தை வாரி இறைத்திருக்க, இன்றைய நாளின் முடிவு இன்னும் இன்னும் அவர்களுக்குள் காந்தலைக் கூட்டி சீற்றத்தில் சிதைந்து கண்ணீருக்குள் அவர்களைப் புதைக்க இருப்பதை இருவருமே அந்த ஏகாந்த வேளையில் அறிந்திருக்கவில்லை.
**********************************************************************************
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரம் முழுவதும் இன்னும் இருள் விலகாத காலைப் பொழுதில் உறங்கிக் கொண்டிருக்கத் தென்னை மர தேகத்தோடு தன் மகிழுந்தின் அருகில் வந்து நின்றான் அவன். கண்கள் இரண்டு மட்டுமே தெரிய குளிருக்காக உடலும் முகமும் மறைத்திருந்தான்.
அந்த விடியலில் அவன் கண்களில் தெரியும் சிவப்பு நிறம் சீற்றத்தினாலா இல்லை காலை விடியும் முன்பே கனவிலோ நினைவிலோ வந்த நிகழ்வுகளினாலா என்பது அவனுக்கும் விளங்கவில்லை.
ஆனால் அந்த நினைவுகளின் தாக்கம் அவனவளின் மேல் கொண்ட சீற்றத்தைப் பல மடங்காகப் பெருக்கியது.
தான் என்ன தவறு செய்தோம் என்று பலமுறை யோசித்தும் அவனது செயல்கள் அவனுக்குத் தவறாகவே படாத போது நிகழ்ந்து முடிந்த தவறுகளைத் திருத்தும் வழி எங்கனம் அறிவான்?
அவனது இதயத்தின் இறுக்கம் கண்களில் வழிய கைகள் தன்போல் கண்ணாடியில் உறைந்திருக்கும் பனியைச் சுத்தம் செய்யத் தொடங்கியது.
பனி விலக குளிர் பரவ உள்ளத்தின் பதிவுகளில் தானும் அவள் முன்பு, உறைந்த அந்த பனித் துளி போல் உறைந்து நின்ற அந்த முதல் நொடி அவன் மனதில் வர ‘கண்ணம்மா’ என அவன் உதடுகள் மெல்ல முணு முணுத்துக் கொண்டது.
அவனின் கண்ணம்மா நினைவு வர, அவளின் குரலில் அவனுக்கான அவளின் பிரத்யேக அழைப்பு அவனைச் சூழ, மெல்லக் கண்கள் மூடி அந்தக் குரலை இதயத்தின் சுவர்களிலெல்லாம் எதிரொலிக்க விட்டான்.
அவன்? அவன்? யார் அவன்? அதுவும் தென்னை மர தேகக்காரன்? அவன் சுசீந்திரன். குடும்பத்தில் அனைவருக்கும் சுசி. ஆனால் அவளுக்கு மட்டுமே அவன் ‘பாரதி’. சில நேரங்களில் ‘கவி பாரதி’ இல்லை இல்லை அவன் அவளின் காதல் பாரதி.
சுசீந்திரனின் குரல் பாரதியின் கம்பீரக் குரல் இல்லை என்றாலும் யேசுதாஸின் காந்தக் குரலால் பாரதியின் பாடல்களுக்கு உயிர் தரும் கலை அறிந்தவன்.
பாடல் கற்றவன் என்பதை விட பாரதியின் பாடல்களைக் கற்றவன் என்பதில் தான் அவனுக்குப் பெருமை.
அவளை முதலில் கண்ட நாட்களில் எல்லாம் இரு துருவமாய் இருந்தவர்களை இணைத்தது இந்த பாரதியின் வரிகள் தானே.
எண்ணியவன் மனம் மீண்டும் அவளுடன் இணையும் அந்த பாக்கியம் கிட்டாதோ என எண்ணியபடி தன் அலுவலகம் செல்லத் தயார் ஆனான்.
செங்குருதி எனச் சிவந்த அந்த ஜாகுவார் சாலையில் சீரான வேகத்தில் மான்செஸ்டர் நகர் நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கியது.
மான்செஸ்டரில் தன் வேலையை மாற்றி மாதங்கள் பல கடந்தும் இன்னும் அவன் ஜாகை லிவெர்பூலில் தான். மாற்றும் எண்ணம் இன்று வரை ஏனோ வரவில்லை.
மெர்சி நதியின் கரையோரக் குடியிருப்புப் பகுதி அவனுடையது. அந்த நதியின் சீற்றம் போல அலையடிக்கும் அவன் உள்ளக் குமுறல்களுக்கு அந்த இடமே மருந்தாகிப் போனது.
குளிர் கால காற்று நாசி வழி நுழைந்து உடலைத் துளைக்க, மகிழுந்தின் உள்ளே அமர்ந்ததும் வெப்பத்தை இன்று சற்று அதிகமாகவே வைத்திருந்தான் சுசீந்திரன்.
இந்த வெளிப் புறக் குளிரும் உள்ளே நிலவும் வெப்பமும் அவனின் கண்களில் வந்து வந்து போக மிதமான வேகத்தில் மான்செஸ்டர் நகரை அடைந்தான்.
மான்செஸ்டர் பல்கலைக் கழக எல்லைக்குள் நுழைந்தவன் அன்றும் அந்த சாலையில் அவனின் வழக்கமான தேடலைத் தொடங்கினான்.
தேடல் வேட்கையை என்ன முயன்றும் தடுக்க முடியாமல் அவன் கண்கள் அந்த நீண்ட சாலையில் பார்வையைச் செலுத்தியது.
காலையில் தோன்றிய பிம்பத்தின் பயனாய் அவன் காண்பதெல்லாம் அவனின் கண்ணம்மாவாய் தோன்ற தூரத்தில் புள்ளியாய் அவன்.
அவனா? அது ஆணா? சற்று கண்களைச் சுருக்கி கூர்ந்து நோக்க கண்டு கொண்டான் சுசி.
அது அவனில்லை அவள், அவள் தான் சுசியின் கண்ணம்மா. உடை மாறலாம், பாவனைகள் மாறலாம். ஆனால் நடை என்றும் மாறாதல்லவா?
அவளின் நிமிர்ந்த நன்நடையில் கண்டு கொண்டான் அவளை.
கண்ட அந்த கணமே அவளின் காதல் பாரதி ருத்ர மூர்த்தியானான்.
அவனது இந்த மூன்று மாதத் தேடலின் பயன் அவன் கண்ணெதிரே வந்து கொண்டிருந்தது.