அந்தி மாலையின் அந்தகாரத்தை அழித்த அழைப்பின் ஓசையில் சுயம் தெளிந்தவள் கணநேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டாள்.
கதவின் பின் நிற்பவன் என்றுமே தன் மனநிலையை எளிதில் மாற்றி தன்னை தன்னிலை இழக்கச் செய்பவன் எனும் எண்ணம் எழ அந்த நினைவே அவளுக்கு மேலும் நடுக்கத்தைத் தரத் தொடங்கியது.
தன்னில் தோன்றிய எண்ணங்களோடு உடல் நடுக்கத்தையும் ஓரம் ஒதுக்கியவள் அவன் மீண்டும் கதவை உடைக்கும் முன் பாரதியின் பாவையாய் கதவைத் திறந்தாள்.
அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடி கிளியே ஊமை ஜனங்கலடி கிளியே
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
அன்று அவன் பாடிய பாரதியின் பாடல் இன்றும் அவளின் செவிகளில். சுதேசியின் கீதம் அவளுக்கு என்றுமே சுசியின் நாதமாய்.
இன்று அவன் கீதம் எல்லாம் ருத்ர தாண்டவ இசையாய் அவளை இம்சிக்கும் என அறிந்தே தாழ் திறந்து விழி தாழ்த்தி நின்றாள்.
அக்னி நட்சத்திரத்து இரட்டை சூரியனாய் கண்கள் தகதகக்க அவள் எதிரே வந்து நின்றிருந்தான் அவன்.
நீண்டு வளர்ந்தவன் நிமிர்ந்து நின்று கண்களால் அவளை ஆதி முதல் அந்தம் வரை ஆராய, இங்கிலாந்தின் குளிர் அவள் மேனியிலும் நடுக்கம் தர ஆரம்பித்தது.
காலையில் அவனைக் கடக்கையிலேயே அவளின் உள்ளுணர்வுகள் எச்சரித்தது தானே. இனி நிச்சயம் தன்னைத் தேடி வருவான் என.
தகிக்கும் தணலென வந்து நின்றவனின் முன் தயக்கங்கள் கடந்து நிமிர்ந்து நிற்க, “வழி விடு மஹி.” என்ற கர்ஜனையோடு உள் நுழைந்தான் அவன்.
கூடத்திற்குள் வந்தவன் நேரே உட்செல்ல நாற்காலியின் பக்க வாட்டு மேசையில் இருந்த தேநீர் தான் முதலில் அவன் கவனத்தை ஈர்த்தது.
அருகில் சென்றவன் கோப்பையைக் கையில் எடுத்து நாசியின் அருகில் கொண்டு செல்லும் போதே இஞ்சியின் மணம் அவனின் மனம் தொட்டது.
“இன்னும் இஞ்சி டீ தான் குடிக்கிறியா?” கோபம் சற்றே தணியக் கேட்டவன் திரும்பிப் பார்க்க, மஹி இன்னும் கதவின் அருகிலேயே நின்றிருந்தாள்.
“ஏன் இன்னும் அங்கயே நிக்கிற? இது உன் வீடு தானே? நான் உள்ள வான்னு கூப்பிடணுமா? இல்ல என்ன வெளிய போன்னு சொல்றியா?” தணிந்த கோபம் மீண்டும் தகிக்கச் சிம்மத்தின் கர்ஜனையாய் ஒலித்தது அவன் குரல்.
பதில் சொல்லும் முன் அவன் கண்களை ஆழ்ந்து நோக்கியவள் “இப்ப ஏன் இங்க வந்த? அதை சொல்லிட்டு கிளம்பு சுசி. எனக்கு வேலை இருக்கு.” என்றாள்.
என்றோ அவன் வீசிய சிறு கனல் இன்று காட்டுத் தீயாய் அவளை சுட்டெரிக்க அவனுக்குச் சற்றும் குறையாத கோபத்துடனேயே அவனை எதிர் நோக்கினாள்.
“ஏன் வந்தேன்னா? என் கண்ணுல படாத வரைக்கும் உன்னை விட்டு வைக்கிறேன்னு சொன்னேன் தானே. உன் பெஸ்டி, அதாண்டி என் நொண்ணே உனக்கு அத சொல்லலையா? இல்ல நீ மறந்துட்டியா?”
“மறதி உனக்கு வேணும்ன்னா இருக்கலாம். நான் எதையும் மறக்கல. மறக்கவும் மாட்டேன்.”
எதையும் என்பதை அவள் அழுத்தி உச்சரிக்க, அத்தனை நேரம் கையில் கோப்பையுடன் நின்றவன் அதை சிறிது அருந்தி கீழே வைத்து விட்டு அவளின் அருகில் வந்தான்.
“ஓஹ், நீ எதையுமே மறக்கலையா? நல்லது நல்லது. அது தான் எனக்கும் வேணும். பழசு எதையும் நீ மறக்காம இருந்தா எனக்கும் நல்லது தான். அப்ப நானும் பழைய படியே … ” என்றவன் பார்வை அவளின் தேகத்தை ஊடுருவி நிற்க, அவன் அருகாமை தந்த தடுமாற்றத்தில்,
“நான் சொன்னது என்னோட காயங்களை. வேற எந்தப் பழசையும் இல்ல.” என்றாள்.
“உன்னோட காயமா? அப்ப நீ இப்ப என் கண்ணு முன்னாடி இப்படி நிக்கிறியே அது குடுக்குற காயத்தை நான் என்ன செய்யணும்? கைல காதுல இருக்கதெல்லாம் கழட்டீட்ட சரி, ஆனா அந்த முடி உன்னை என்னடி செஞ்சுது? அதை என்னத்துக்கு இப்படி வெட்டி வச்சிருக்க?” கேட்டவனின் சீற்றம் அவளையும் சீண்டி விட்டது.
“நீ எதுவும் கேக்கத் தேவை இல்லை. முதல்ல வெளிய போ. இது என் வீடு. இங்கேயாச்சும் என்னை நிம்மதியா இருக்க விடு.”
“ஓஹ், இது உன்னோட வீடா? சரி, உன்னோட வீடாவே இருக்கட்டும். அதுக்காக என்னை வெளிய போகச் சொல்லுவியா?” சுயத்தை இழந்து கத்தியவன், அவளது வலக்கையை அழுந்தப் பற்றி தன்னருகே இழுத்திருந்தான்.
அவன் இழுத்த வேகத்தில் அவள் தடுமாறி சற்றே சரிய, அவளின் மேலாடையில் மறைந்திருந்த மாங்கல்யம் அவனின் கண்களில் விழுந்து கருத்தில் நிறைந்தது.
“என்னை பிடிக்கல, எனக்கு பொண்டாட்டியா இருக்கவும் பிடிக்கல. ஏன், பொண்ணாக் கூட இருக்கப் பிடிக்காதவளுக்கு எதுக்கு நான் கட்டுன தாலி மட்டும்? பேசாம அதையும்…” ஆங்காரமாய் சீறியவன் கைகள் அவளின் மாங்கல்யத்தைப் பற்றியது.
ஆவேசமாக கைகளில் மாங்கல்யத்தைப் பற்றியபடி தன் முன் நின்றவன் உணரும் முன்னே அவளின் இடக்கரம் அவன் கன்னத்தை ஆவேசமாகத் தழுவி இருந்தது.
“என்னை விடு டா, இதுக்கும் மேல நீ என்னை உடைக்க இனி என் கிட்ட எதுவும் இல்ல. நானும் உனக்கு எதுவும் இல்ல தான். எனக்கே நான் எதுவும் இல்லாம போக முன்ன என்னை விட்டுட்டு போ. நீ என்ன விட்டு போ டா.
உன் முன்னாடி என்னோட தன்னம்பிக்கை எல்லாம் இழந்துட்டு மனசு உடைய நிற்க எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. என்னை விடுங்க பிளீஸ். தள்ளிப் போங்க. போ முதல்ல … என்னை விட்டுட்டுப் போ. நீயும் மத்தவங்க மாதிரித் தானே என்னை இவ்வளவு நாளா பார்த்திருக்க…” என்றவள் உடைந்து அழத் தொடங்கவும் அதிர்ந்து சில வினாடிகள் நின்றவன் கைகள் தன் போல அவளை விட்டு விலகி இருந்தது.
அவன் விட்ட இடத்திலேயே மடங்கி அமர்ந்து அழத் தொடங்கியவளுக்கு அவன் அன்று சொன்ன வார்த்தைகளெல்லாம் பசுமரத்து ஆணியாய் இன்றும் அவளின் இதயத்தைக் குத்தி கூறு போட்டுக் கொண்டிருந்தது.
“அவ இன்னும் வயசுக்கே வரலடா, அது பொண்ணே இல்ல மச்சி” அவனின் வார்த்தைகள் இன்றும் அவளின் காதுகளில் ரீங்காரமிட, கடந்த சில மாதங்களாய் அவனைக் காணாது கட்டுப் படுத்தி இருந்த கண்ணீரெல்லாம் இன்று அவன் முன் கரை கடந்து கன்னம் தொட்டது.
கார் கால கன மழையென விடாது அவள் கண்கள் சிந்திய கண்ணீரில் அவன் கண்களும் கசியத் தொடங்கியது.
அவளின் அழுகை அவனையும் கரைக்க ‘ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்’ன்னு எவன்டா சொன்னது?’ என்று தன்னையே நொந்து கொண்டவன், ‘ச்ச, அவனை இந்த ஆட்டத்துல இருந்து தூக்க நெனச்சேன். ஆனா அந்த தப்புக்கு இவ என்னை அவ வாழ்க்கையை விட்டே தூக்கிடுவா போல’ என எண்ணியவாறே அவளருகே தானும் அமர்ந்து கொண்டான்.
அவளின் இந்தத் தனிமையும், இன்று அவளிருக்கும் மாறிய உருவத் தோற்றமும் அவனின் செயலால் விளைந்தது என்பதை சுசீந்திரன் உணர்ந்தாலும் அதை அவன் தவறு என ஏற்க அவன் மனம் இன்றும் ஒப்பவில்லை.
ஆயினும் இந்த நொடி அவன் முன் அமர்ந்து உடைந்து அழும் அவளின் தவிப்புகள் எல்லாம் அவனின் சினத்தை முற்றும் முழுவதுமாக தண்ணீர் விட்டு அணைத்து அவனைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது.
தான் சிந்திய சொற்களெல்லாம் அவளைத் தன் சுயத்தை இழக்கச் செய்துவிட்டதில் அவனின் மனமும் உடைந்தாலும் இனி இவளை அப்படியே தனியே விடும் எண்ணம் மட்டும் சுத்தமாக மறைந்திருந்தது.
காலையில் அவளை சாலையோரம் கண்டதிலிருந்தே அவன் இதை நினைத்தான் தான்.
மஹியின் இந்த உடைந்து அமர்ந்து அழும் தோற்றம் நிச்சயம் அவனவளின் அவனுக்கான தேவையின் கட்டாயத்தை அவனுக்கு உணர்த்தியது.
அவளின் அழுகை கட்டுப்பட சிறிது நேரம் காத்திருந்தவன் பசி என்று சொல்லி அவளின் பலவீனத்தில் இருந்து தனது ஆட்டத்தைத் தொடங்கினான்.
“மஹிம்மா, ப்ளீஸ் போதும் அழுதது. சாரி டா, எழுந்து வா பேசலாம். என்னோட எல்லா தப்பையும் நீயும் நானுமா சேர்ந்தே சரி பண்ணலாம்.”
“வேணாம், விடு. நான் இப்படியே இருந்துக்குறேன். உனக்கு என்ன மாதிரி பொண்ணு…” ‘பொண்ணு வேணாம்’ எனச் சொல்ல வாயெடுத்தவள், “நா… நா…. நான் தான் பொண்ணே இல்லன்னு சொல்லீட்டியே … ” என்று மீண்டும் கண்ணீர் சிந்த,
“மஹிம்மா, என்னோட எல்லா தப்புக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் டா.
இப்பக் கூட நீ தான் கோபத்துல என்னை அடிச்ச, அதுக்கு அப்புறமும் நான்தானே வந்து உன் கிட்ட சமாதானம் பேசுறேன்.”
“நீ சாரி சொன்னா, நான் உடனே சரின்னு சொல்லி எல்லாத்தையும் மறக்கனுமா? அதெல்லாம் என்னால முடியாது. என்னை நான் முதல்ல சரி பண்ணிக்கணும்.”
“சரி மஹி. உன் இஷ்டம். ஆனா இப்படி அழுகாத ப்ளீஸ். போய் முகம் கழுவீட்டு வா, வந்து டீயைக் குடி. இந்நேரம் ஆறி இருக்கும். நான் புதுசு போடறேன்” என்றவன் அவள் பதில் சொல்லும் முன்னே எழுந்து சென்று தேநீரைப் பார்க்க, கொதி நிலையிலிருந்த தேநீர் முற்றிலுமாக ஆறி இருந்தது.
அவனே சமையலறைக்குச் சென்று தேநீரைத் தயாரிக்க, மஹி அவனைத் தடுக்கும் வழி தெரியாது எழுந்து முகம் கழுவி வரச் சென்றாள்.
அவனின் ஒரு சில நேர பிடிவாதங்கள் அவள் அறிந்ததே.
சிறு சிறு விசயங்களில் அவளின் மறுப்பு அவனை இன்னும் பிடிவாதமாக்கும் என அறிந்தே அவன் சொன்னதும் மறுக்காமல் முகம் கழுவி வந்தவள் சமையலறைக்கு வர, அவனுக்குப் பிடித்தமான மசாலா தேநீரைக் கொதிக்க விட்டிருந்தான்.
சற்று முன் கத்தி கத்தி, கத்தி இல்லாமலே சண்டை இட்டது இவர்கள் தானா என சந்தேகம் வரும் அளவு இருவரும் கடந்த நிமிடங்களைக் கடந்து நிகழ் காலத்தில் இணைந்தனர்.