காட்சிகள் யாவும் கானங்கள் பலவும் கடந்து போவது போல, நிமிடங்களும் கடந்து போனாலும் அந்த மகிழுந்தினுள் அமைதி மட்டுமே.
அமைதி என்பதை விடவும் இருவருக்குள்ளும் ஒரு பேச்சற்ற நிலை என்பதே பொருந்தும். விக்ரமின் பிறந்தநாள் விழா முடிந்து இருவரும் திரும்பிக் கொண்டிருக்க நேரம் என்னவோ நள்ளிரவைக் கடந்திருந்தது.
வழக்கம் போலவே இன்றும் ஓட்டுநர் இருக்கையில் மஹி இருந்து மகிழுந்தைச் செலுத்திக் கொண்டிருக்க, சுசி பக்கத்துக்கு இருக்கையை அவனுக்கு வசதியாய் சாய்த்து கண்கள் மூடி அமர்ந்து கொண்டிருந்தான்.
இரவுகளில் மகிழுந்து ஓட்டுவது என்றுமே அவன் விரும்பாத ஒன்று. அதிலும் மஹிமா அதை விரும்பி செய்ய, இவன் என்றும் போல் இன்றும் அலட்டிக் கொள்ளாமல் அவளிடம் வண்டியை ஒப்படைத்து விட்டு நிம்மதியாய் கண்மூடி கனவுகளில் நினைவைத் தொலைத்திருந்தான்.
ஆனால் மஹிமாவால் அவன் போல் கனவுகளில் மூழ்கவும் முடியாமல் நினைவுகளில் நீந்தவும் முடியாமல் நீரின்றித் தவிக்கும் மீனாய் நினைவுகள் தரும் வலியுடன் நிமிடத்திற்கு ஒரு முறையேனும் அவனைக் கண்களால் நிறைத்துக் கொண்டே மகிழுந்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள்.
மஹிமாவின் தாக்கிச் செல்லும் விழி வீச்சை சுசீந்திரன் உணர்ந்திருந்தான் தான். அவளின் பார்வையின் தாக்கம் அவனுக்குள்ளும் இருந்தது. ஆயினும் இருவருக்குமே பேசிக் கொள்ளும் இணக்கமும் இல்லை. எண்ணமும் இல்லை.
ஆனாலும் அவளின் இந்த தொடர் பார்வை தொடங்கிய இடம் நினைவினில் வர அவனுக்கும் அவளின் பார்வை வீச்சில் மனதுக்குள்ளே ஒரு மலர்ந்த புன்னகை.
மீண்டுமொரு முறை அவளின் கருவிழிகள் அவனைக் கண்டுவிட்டு வர அவன் முகத்தில் இதழோரம் இணைந்திருந்த குறுநகை பௌர்ணமி நிலவின் ஒளியில் மின்னி அவள் கண்களுக்குள் கலந்துகொண்டது.
‘ஹுக்கும், இவனுக்கு இன்னைக்கு ஏக சந்தோசமா இருக்கும். அவன் நினைச்சது மட்டும் எப்படியும் நடக்குது.
என்னையும் என் மனசையும் இவனுக்கு என்னைக்குமே புரிய போறதே இல்ல. இவனுக்கு இவன் ப்ரெண்ட்ஸ் கிட்ட கெத்தா இருந்தா போதும். யாரு என்ன அவமானப் படுத்தினாலும் இவனுக்கு என்ன வந்தது?
அவன் ஆசைப்பட்டது போல பார்ட்டிக்கு என்னையும் கூட்டிகிட்டு போயாச்சு. இடையில எதுவும் நடக்காதது போல எப்படி உரசிகிட்டு உக்காந்து பேசி, டான்ஸ் ஆடின்னு, ஹையோ எப்பா, என்னமா சமாளிக்கிறான்.
இப்பவும் நான் தான், இப்படி ‘தானா’ பொலம்பிகிட்டு வர்றேன். இவனுக்கென்ன? பள்ளிகொண்ட பெருமாள் கூட இவன்கிட்ட வந்து பாடம் படிக்கணும். எப்படி சொகுசா சாஞ்சிருக்கான் பாரு, எருமை.
இதுல இவனுக்கு நான் டிரைவர் வேலை வேற செய்யிறேன். உலகத்துலயே பொண்டாட்டிய கார் ஓட்ட விட்டுட்டு குறட்டை விட்டு தூங்குறவன் இவனா தான் இருப்பான்.’ என்றவள் அடுத்து மனதினுள் இன்னும் இன்னும் பொறியும் முன்பே,
“அடியே காண்டு கண்ணம்மா, மைண்ட் வாய்ஸுன்னு நினச்சு என்னைய சத்தமா திட்டுற. நான் கொறட்டையெல்லாம் விடல. முழிச்சுகிட்டுதான் இருக்கேன்.” என்றவனின் குரலில் மஹிமா திடுக்கிட்டுத் திரும்ப, மகிழுந்து அவள் கைகளில் நொடி நேரமேனும் ஆட்டம் கண்டது.
“ஹையோ, எதுலேருந்து சத்தம் வெளிய கேட்டுச்சுன்னு தெரியலையே. எல்லாத்தையும் ஒளறிட்டமோ?” என்று அவள் எண்ணமிட்டுக் கொண்டு இருக்கும் போதே,
“ஹேய், ரோட்டப் பாத்து ஓட்டு. இங்க என்ன லுக்கு?” என்றவன், “எம்மா தாயே எனக்கு வாழ்க்கைல சிலபல லட்சியம் இருக்கு. கொறஞ்சது பத்து புள்ள குட்டியாவது பெத்து வளக்கனும்ன்னு ஆசையிருக்கு. அநியாயமா கார கவுத்திராத.” மேலும் அவன் பேச, கண்கள் திறந்து தன்னைக் காண்கிறானா? எனும் கேள்வி எழுந்தாலும் மீண்டும் அவனை கண் கொண்டு நோக்கினாளில்லை.
இனி அவன் இருக்கும் பக்கம் திரும்பவே கூடாது என தனக்குள் ஒரு தற்காலிக சபதம் எடுத்துக் கொண்டவள் மனதை வேறுபுறம் திருப்ப முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
எவ்வளவு முயன்றும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இன்றைய நிகழ்வுகளிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.
“நீ எவ்வளவு சொன்னாலும் எனக்கு வர விருப்பம் இல்ல. யாரைப் பார்த்தாலும் எனக்கு இப்ப கோவம் மட்டுமே வருது.”
“மஹி, நம்ம பிரச்சனையை வந்து கூட பேசலாம். ஆனா இன்வைட் பண்ணவங்க வீட்டுக்குப் போக வேணாமா?”
“போகணும். ஆனாலும் போக எனக்கு விருப்பம் இருக்கணுமே.”
“ஏன் மஹி? எல்லா நேரமும் உன் விருப்பம் மட்டுமே யோசிப்பியா? என்ன சூழ்நிலைன்னு யோசிக்க மாட்டியா?”
அவன் அப்படிக் கேட்டதும் அவள் “நம்ம நமக்காக வாழாம, அடுத்தவங்களுக்காக வாழணுமா சுசி?” என்று அவனிடமே அவர்களின் பிரச்சனையின் சரத்தைக் கொண்டு கேள்வி எழுப்பினாள்.
அவளின் கேள்வியில் உள்ள உள்ளர்த்தம் விளங்க, “என்னடி எப்பவும் சீரியஸ் மோடுலையே யோசிக்கிற? ஜஸ்ட் அவங்க கூப்பிட்டாங்க நம்ம போக போறோம். அவ்வளவுதான். ஈஸி.” என எளிதாக முடித்துவிட்டான்.
“உனக்கு எல்லாமே ஈஸி. எனக்கு அப்படி இல்லை. ஏனோ தனியா இருக்குறது பெட்டெர்ன்னு தோணுது. மத்தவங்க கமெண்ட்ல இருந்து கொஞ்சம் தள்ளி நிக்கலாம்ன்னு இருக்கு.”
“நீ தள்ளி நின்னாலும் ‘இண்ட்ரோவேர்ட்’ன்னு சொல்ல போறாங்க. போ போ போய் கிளம்பி வா.”
இன்னும் நீண்டு கொண்டே போன உரையாடல்களின் முடிவில் மஹிமாவின் வாய் வலித்து ஓய்ந்து போனாலும் சுசீந்திரனின் பிடிவாதத்தில் “சரி வர்றேன்” என்று முடித்துக் கொண்டாள்.
சண்டை இட்டுத் தள்ளி இருந்த இந்த சில நாட்களுக்குள்ளேயே மஹிமா முற்றிலும் மாறி தனிமைப் பட்டுப் போயிருந்தாள்.
யாருடனும் பேசுவதைத் தவிர்த்தாள். நண்பர்களை எல்லாம் தள்ளி நிறுத்தி இருந்தாள். தனிமையில் அவள் அவனைப் பிரிந்ததின் துயர் உணர்ந்து கொள்வாள் என அவன் நினைத்திருக்க, இந்தப் பிரிவு இன்னும் அவர்களை இரு துருவங்களாக தனித்துவிட்டிருந்தது.
முன்பெல்லாம் வெளியில் செல்லும் போது இவனிடம் நூறு முறையேனும் கேட்பாள், “இந்த டிரஸ் ஓகேவா? இல்ல இதுவா? சொல்லு சுசீ?” பதில் சொல்லியே அவனும் ஓய்ந்து போவான். எல்லாவற்றிற்கும் சுசீந்திரனின் ஒப்புதல் வேண்டும் அவளுக்கு எனும் எண்ணம் கூட அவனைக் கர்வம் கொள்ள வைக்கும்.
ஆனால் இன்றோ, அவளை அழைத்துச் செல்லவே இரண்டு நாட்கள் போராட வேண்டி இருக்கிறது.
மாலை கிளம்பும் நேரம் அவள் தயாராகி அவளின் அறையிலிருந்து வெளியே வர, கண்டவன் கண்கள் அவளில் சில நொடி கட்டுண்டது.
ராயல் ப்ளூ நிற பிளைன் பென்சில் டிரஸ் அவளின் முழங்காலின் கீழ் வரை நீண்டிருந்தது. இடையில் மட்டுமே சிறிய வெள்ளைக் கற்கள் பதித்த இடைப் பட்டை.
அதற்குத் தோதாக அதே வெள்ளைக் கற்கள் பதித்த சிறு காது வளையம் மற்றும் ‘வி’ வடிவத்தில் இருந்த உடையின் கழுத்திற்கு ஏற்றார் போல அதே ‘வி’ வடிவ கழுத்தை ஒட்டிய கற்கள் பதித்த சிறு அட்டிகை. இடது கையில் அவளின் சில்வர் நிற கை கடிகாரம்.
அவளின் நீண்ட கால்களையும் அவளின் சரும நிறத்தில் டைட்ஸ் அணிந்து மறைத்திருந்தாள்.
முகத்திற்கும் சிறு ஒப்பனை. கண்களை உறுத்தாத அளவு மட்டுமே அவள் செய்திருந்த மெல்லிய அவளின் அலங்காரம் அவன் கண்களைக் கட்டி வைக்கப் போதுமானதாக இருந்தது.
ஆறடி அழகு தேவதை போல அவனின் கண் முன் நிற்க அவன் மனதினுள் மனைவியின் மேல் இருந்த ஆசைகளெல்லாம் அடித்துப் பிடித்து முட்டி மோதி நின்றது.
அவனின் ஆசைகள் எல்லாம் அவனுள் தீயாய் பரவி கைகள் இரண்டும் அவன் கண்ணம்மாவை அள்ளி அணைக்கத் துடிக்க, அவளின் எட்ட நிறுத்திய அந்நியமான பார்வை வீச்சு அவனின் ஆசையைச் சட்டென ஒரு குடம் தண்ணீர் விட்டு அணைத்திருந்தது.
ஒரே வீட்டில் இருந்தாலும் இன்னும் தேவைக்கு மட்டுமே பேச்சு எனும் நிலையில் இருக்க இவனாக முயன்று அவளைத் தீண்டினாலும் எதிர்வினை எல்லாம் இவனுக்கு எதிரான வினையாகவே இருக்க, இப்பொழுதும் மனதில் எழுந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டான்.
கண்ணுக்கு எட்டும் தூரத்தில் அவன் மனையில், கைகளில் சிக்காத அவனின் மனைவி இந்த காதல் கண்ணம்மாவின் கண்கள் பேசிய பாவத்தில்
லுக்க கொஞ்சம் நீ திருப்பு குளிரட்டும் சன்னம்மா
வெக்கம் விட்டு அலையிறேன் நான் அணைச்சிக்க வாயேன்மா
காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா
கேக்குறேன் என்னம்மா வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற
என்று அவளின் முகம் பார்த்துப் பாடினான் சுசீந்திரன்.
அவன் பாடலைக் கேட்டாலும் அதை எல்லாம் கேட்டும் கேட்காமல் ஒதுக்கியவள், “கிளம்பலாமா?” என ஒற்றை வார்த்தை கேட்டு, பாடிய பாரதியின் காதல் பாவங்களை அவனின் பாவங்களாய் ஒதுக்கி இருந்தாள் அவனின் கண்ணம்மா.
“அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன்” என மனதிற்குள் முணுமுணுத்தவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. அவளையும் அழைத்துக் கொண்டு விக்ரம் வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.