அன்று விடியலிலேயே விழித்தவள் கண்டது வீட்டின் உள்கூடத்தின் சாய்விருக்கையில் தன்னை பாதியாய் குறுக்கிப் படுத்து உறங்கி கொண்டிருந்தவனைத் தான்.
‘ஏன் சுசீ? உன்னையும் கஷ்டப் படுத்தி என்னையும் கஷ்டப் பட வைக்கிற?
ஆறாத காயம்ன்னு எதுவும் இல்ல. ஆனா அத பேசிப் பேசியே ஆறவிடாம ஆக்குற?’
மனதோடு பேசியவள் அவனைக் கடந்து சமையலறைக்குள் புகுந்தாள்.
அன்று முதல் முறை வந்த போது தங்கியவன் மறுநாள் மொத்தமாக அவளின் வீட்டிற்கே குடி வந்துவிட்டான்.
அவளது விருப்பங்களும் கேட்கப்படவில்லை, அவனுக்கு அனுமதியும் தேவைப்படவில்லை.
மஹிமாவால் ஒட்டவும் முடியாமல் அங்கிருந்து ஓடவும் முடியாமல் தவித்து, அவனை தவிர்த்துக் கொண்டு நிற்கிறாள்.
அங்கிருந்து நகர்ந்து சமையலறைக்குள் நுழைந்தவள் காலை தேநீர் தயாரிக்க பாலை அடுப்பில் ஏற்றி சர்க்கரை எடுக்க மேலுள்ள அலமாரியைத் திறக்க நாசியில் புகுந்தது அவளறிந்த ஏதோ ஒரு மெல்லிய வாசனை. கையை மேலே தூக்கியவள் அந்த வாசத்தில் சற்றே தடுமாற,
“ஏன் மஹி, புருஷன் ஹெல்ப் வேணுமா டீ தூள் எடுக்க?” என்றவன் குரல் அவளின் பின் கழுத்தில் உரசி செவியை அடையும் பொழுது அவளின் தடுமாற்றம் உடலிலும் பரவ கைகள் இரண்டும் சமையல் மேடையை அழுந்தப் பற்றியது.
“மஹி, என்ன யோசனை. டீ போடலாமா வேண்டாமான்னு யோசிக்கிறியா?”
‘சத்தமில்லாமல் எழுந்து வந்துவிட்டான்’ என எண்ணியபடியே “ப்ளீஸ் கொஞ்சம் தள்ளி நில்லு சுசி, நான் டீ போட்டதும் கொண்டு வந்து தர்றேன்.”
“இதுக்கு மேல எங்க தள்ளி நிக்க சொல்ற மஹி? ஏற்கனவே சில மாசமா உன்ன விட்டு ரொம்ப தூரம் தள்ளித் தான் நிக்கிறேன். இதுக்கும் மேல தள்ளி போகணும்ன்னா எங்க போகணும்? நான் என்ன செய்யணும்?”
“நீ தள்ளி நிக்க நான் எப்படி காரணம் ஆவேன் சுசி? அன்னைக்கு நீ செஞ்சதுக்கு இப்ப நான் கொஞ்சம் ஒதுங்கி நிக்கிறேன் அவ்வளவு தான். அதுலயும் இன்னமும் நீ செஞ்ச தப்பு உனக்குப் புரியல.”
“ஹ்ம்ம், நான் செஞ்ச தப்பு… இருக்கட்டும். நான் செஞ்சது எனக்குப் புரியாம இருக்கட்டும் மஹி, பரவாயில்லை. ஆனா நீ, அதுக்காக என்னை பழி வாங்க நினைக்கிறியா?”
“நான் என்ன பழி வாங்குறேன்? நான் உன்னை விட்டு ஒதுங்கி வந்துட்டேன் அவ்வளவு தான். “
“ஒதுங்கி வந்து? என்ன செய்யலாம்ன்னு நினைக்கிற? நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு மஹி. ஒதுங்கி வந்துட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்?”
“என்ன செய்யணும்ன்னு நீயே சொல்லு? நான் என்ன செய்யணும். ஹ்ம்ம்.. நீ என்னை பொண்ணே இல்லன்னு எல்லார்கிட்டயும் சொல்லி வைப்ப. ஆனா நான் அதெல்லாம் மறந்துட்டு உன் கூட வள்ளுவனோட வாசுகி மாதிரி உனக்கு சேவகம் செஞ்சு வாழணுமா?” அவளின் கோபம் மெல்ல மெல்ல வெளி வர குரலும் கூடியது.
“மஹி புரிஞ்சுக்கோ, நான் சதீஷ் கிட்ட நீ பொண்ணே இல்லைன்னு சொன்னது, இன்னும் அந்த மாதிரி நிறைய பேசினது தப்பா கூட இருக்கட்டும். ஆனா நான் உன் கிட்ட இப்ப எல்லாம் சொல்லிடேனில்ல. இனியும் பழைய விஷயத்துக்காக நீ ஏன் சண்டை போடுற?”
“பழசு புதுசுங்குறது முக்கியமில்லை சுசி. எப்படிடா உன்னால என்னை அப்படி சொல்ல முடிஞ்சது?”
“நான் தான் சொன்னேனே, அதெல்லாம் அந்த நேரம் பிரச்சனையை சமாளிக்க நினைச்சு செஞ்சதுன்னு. இன்னும் இன்னும்..” என்றவன் அவன் உணர்ந்த கருகிய வாசத்தில் தலை திருப்பி பார்க்க, “ஹே, பால கருக விட்டுட்ட பாரு.” என்றபடி எட்டி அடுப்பை அணைத்தான்.
“ஹையோ” என்றவள் தலையில் கை வைத்து நிற்க,
“நீ போ மஹி, நான் டீயை போட்டு எடுத்துட்டு வர்றேன். இன்னைக்கு உனக்கு லேட்டா போனா போதுமில்ல? நான் இதோட தோசை ஊத்தி தர்றேன்.நீ போய் குளிச்சுட்டு வா. நாம இதெல்லாம் ஈவினிங் பேசலாம். காலையிலேயே டென்ஷன் வேண்டாம்.” என யாரோ யாருடனாடோ சண்டை என்பது போல
காலைத் தேநீரை தயாரிக்க ஆயத்தமானான் சுசீந்திரன்.
‘ச்ச, இம்சை. இவனுக்கு என் கோவம் ஒரு விஷயமே இல்ல போல. ஆரம்பத்திலிருந்தே இவனுக்கு இவன் நினைக்கிறத செய்யணும். நானும் அதுக்குத் தலைய தலைய ஆட்டணும். இனி அப்படி இருக்கக் கூடாது.’ என்று சபதமிட்டபடியே அவளது அறை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
ஆனால் இப்பொழுதும் சுய உணர்வின்றி அவன் சொன்னதைத்தான் கேட்டிருக்கிறாள். இது அவளது தவறா இல்லை அவளின் அவனுக்கான இடமா அவளே இன்னும் உணர்ந்திருக்கவில்லை.
‘நல்ல வேலை பால் கருகி என்னை காப்பாத்திடுச்சு. இல்ல மறுபடி சண்டை போட்டு அழுதுன்னு, என்னை ஒரு வழி பண்ணிருப்பா. என் பத்து வருஷக் காதலை இப்படி ஃபூட் பால் ஆடுறா, எப்படி டா பாரதி இவளை சமாளிக்கப் போற? காதல் பாரதி இனி கஷ்ட பாரதி ஆகனும் போல’ மெல்லிய குரலில் தன்னோடு பேசியவன் கைகள் சமையல் வேளையில் கவனம் செலுத்தத் தொடங்கியது.
ஆனால் மனமோ அடுத்து என்ன செய்வது எனப் பட்டியலிடத் தொடங்கியது.
பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்னே அவன் மனதினுள் வந்துவிட்ட காதல் உணர்வை அவளும் அறிந்து அவர்கள் வாழ்வைத் திருமண உறவால் ஒன்றாக்கி இருவரும் கனிந்து கசிந்துருகிய பொழுதுகளில் அவன் என்றோ செய்த பிழை காதலைக் கானல் நீராக்கி அவனை அல்லாட வைக்கும் என அவன் என்ன கனவா கண்டான்?
அன்று மஹிமாவைக் கண்டவன் அன்றிரவே அவளைச் சந்திக்க வந்ததும் பின் அவளுடனே தங்கி விட்டதும் இனி அவனின் சிக்கலைச் சிறிதளவேனும் தகர்க்கும் என நம்பினான்.
நினைவெல்லாம் அவனின் கண்ணம்மா நிறைந்திருக்க உதடுகளோ கண்ணம்மாவின் கானம் ஒன்றை இசைத்துக் கொண்டிருந்தது.
கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே
ஓ….மௌனம் பேசும் மொழி கூட அழகடி ஆயுள் நீள அது போதும் வருடி
உந்தன் உதடின் ஓரங்கள் மறைக்கும் புது மொழி அதை உடைத்தெறி
அவனின் வசீகரக் குரலில் பாடியபடி அவன் தோசை வார்த்துக் கொண்டிருக்க அவனின் குரலிசையைக் கேட்டபடியே கல்லூரிக்குத் தயாராகி வந்தாள் அவனின் கண்ணம்மா.
அவள் வருவதை ஓரக் கண்ணால் கண்டவன் இன்னும் லயித்துப் பாட அவள் ஒரு நிமிடம் நின்று அதை ரசிக்கவே செய்தாள்.
இருவர் கண் பார்வையும் சில நொடிகளேனும் கலந்து முத்தமிட்ட போதும் மனம் விலகி நிற்க அவர்களும் விலகியே நின்றிருந்தனர்.
“என்ன கண்ணம்மா, கோவமும் வெறுப்பும் தான் நீ பேசுற புது மொழியா? இல்ல காதலும் காம.. சாரி சாரி காதலையும் காயங்களையும் பத்தி கூட உன் உதடுகள் பேசுமா? இல்ல உன் பாரதிகிட்ட பேச உனக்கு மறக்குமா?” பேசிய படியே சுசீந்திரன் அவளை நெருங்க, கண் பார்வையில் அவனை எட்ட நிறுத்தியவள்,
“மறக்கல சுசி, நான் மறுக்குறேன். நீ பேசினதை முதல்ல மறக்க பார்குறேன்… அப்புறம் ஒரு விஷயம் நீ கம்ப்யூட்டர் காரன், அதான் டேட்டா அனலிஸ்ட். வீட்ல இருந்தே வேலை பண்ணலாம். ஆனா நான் அப்படி இல்ல, எனக்கு லேப்க்கு போகணும். இன்னிக்கு பசங்களுக்கு கிளாஸ் இருக்கு. இப்ப பேசணும்ன்னா முடியாது.” என்று அவனின் காதல் கணைகளை கடுப்பின் மறுமொழியால் தட்டி விட்டவள் உண்டு தயாராகி பணிக்கு சென்றுவிட்டாள்.
‘கைக்கெட்டும் தூரத்தில் பொண்டாட்டி இருந்து என்ன செய்ய? அவளை கைக்குள்ள வச்சுக்கும் யோகம் இல்லையே எனக்கு!’ மனதோடு பேசிக் கொண்டவனுக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது நாளை அவனுடன் பணிபுரியும் நண்பன் விக்ரமின் பிறந்தநாள் கொண்டாட்டம். எப்படியும் அவளுடன் பேசி அழைத்துச் செல்ல வேண்டும்.
ஏற்கனவே அவன் மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடி விட்டு வரும் போது ஆரம்பித்த பிரச்சனை தான் இவர்களின் பிரிவும் இவனின் கண்ணம்மாவின் காயங்களும்.
அங்கே அவர்கள் கேட்ட ‘உனக்கு வேற ப்ரோபோசல் எதுவும் வரலையா?’ என்ற கேள்வி வர இவன்தான் நுணலாய் ‘அதெல்லாம் வர விட்டுருவேனா? வரு முன் காப்போம்ன்னு அவளை அவன்கிட்ட அண்டவிடாம காப்பாத்திக் கொண்டு வந்துடேன்ல்ல’ என்று பதில் சொல்லி இருந்தான்.
அங்கே அவனின் பதிலுக்குப் புன்னகைத்தவள், வீட்டிற்கு வந்ததும் விளக்கங்கள் கேட்க, அவன் சாதனையைப் பட்டியலிடுவதாய் எண்ணி இவனும் இவன் செய்த சாகசத்தை எல்லாம் முலாம் பூசாமல் மொத்தமாய் சொல்லி முடித்தான். அவன் பேசி முடிக்கவும் அவளின் நிதானமும் அவளிடம் முடிந்து போயிருந்தது.
அவர்களுக்காக மான்செஸ்ட்டரில் பார்த்திருந்த புது வீட்டிற்கு அவள் மட்டும் குடியேறி அவனை விட்டுப் பிரிந்து தனித்து வந்திருந்தாள்.
இனி இவர்கள் இணைவதும் இயல்பாய் அவள் இருப்பதும் பாரதியின் கைகளில். நடப்பதெல்லாம் நாயகன் செயல் என மஹி இருக்க, நடக்கப் போவதெல்லாம் இனி என் திட்டப்படியே என அவளின் நாயகன் இருக்க …