கரை மோதும் அலை போல் கணக்கற்ற காதல் முத்தம் தருவாயா கண்ணம்மா…
அன்றைக்கு காலை விடியல் முதலே மஹிமாவிற்கு கடும் தலை வலி, காரணம் சுசீந்திரனின் தொடர் பாடல்களும் கெஞ்சல்களுமே.
விடிந்து அவள் எழுந்தது முதல் அவள் செல்லும் இடமெல்லாம் எதிர் வந்து கேட்டுக் கொண்டிருக்கிறான், அவன் உடன் பணி புரியும் நண்பன் விக்ரமின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இருவரும் சென்று வர.
நாளை இரவு விருந்துக்கு அவன் சுசி மற்றும் மஹிக்கு அழைப்பு விடுத்திருந்தான். ஆனால் மஹிக்கோ அவன் மனைவி வித்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதங்களும் சில மாத பிரிவும் மனதில் தோன்ற அவளும் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்கிறாள்.
பின் புற மாடத்தில் அருகே அவள் துவைத்த துணிகளை உலர்த்திக் கொண்டு நின்றிருக்க, அவளின் மறுப்புகளை மறந்தவன், அவள் பின் நின்று மெல்ல இடை வளைத்து அணைத்திருந்தான்.
அவனின் தீண்டலில் சிலிர்க்கும் உடலையும் துளிர்க்கும் ஆசைகளையும் சிரமப்பட்டு ஒதுக்கியவள் அவனிலிருந்தும் மெல்ல விலக, அவளை விடுவித்தவனின் தேன் குரலில் அவளுக்கான கண்ணம்மா பாடல் ஒலித்தது.
ஒருநாள் இதழ்கள் சேர்ந்தது என் வாழ்நாள்
வசந்தம் ஆனது என் இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாடலின் வரிகளை அவர்களுக்காக அவன் மாற்றிய போதும் அதில் அவர்களின் காதல் மாறாமல் ஒலித்தது.
“மஹி ப்ளீஸ் நில்லு. நாளைக்கு சண்டே, வரலன்னு ரீசன் எதுவும் சொல்ல முடியாது மஹி. ப்ளீஸ் புரிஞ்சுக்க. எல்லாரும் வருவாங்க. நாம போகலைன்னா என்ன சொல்ல?”
“சுசீ, எல்லாரும் கேப்பாங்கன்னு என்னை கார்னர் பண்ணாத முதல்ல. மத்தவங்க என்னோட வாழ்க்கைய ஏன் ஆராயணும்?”
“நம்ம தனியா இருந்தத கேட்டா சொல்லலாமே சுசீ. உனக்கு காரணம் நல்லாவே தெரியுமே. சொல்லு அவங்களும் கேட்டு தெரிஞ்சுக்கட்டும். நீ உன் சம்சாரத்துக்கு எவ்வளவு மரியாதை தேடி வச்சன்னு.” சொல்லியபடி அவள் தன் வேலையைத் தொடர சுசியின் மனமோ அவனையே திட்டிக் கொண்டது.
‘ஹையோ சம்சாரம் மறுபடி மின்சாரமா தாக்குறாளே, வேற ரூட்ட போடுவோம்.’ என மனதில் எண்ணியவன்,
“மஹி, இதை பத்தி நம்ம அப்பறம் பேசலாம். அம்மாவுக்கு வீடியோ கால் பேசணும். வா இன்னைக்கு கண்டிப்பா மஹி பேசுவான்னு சொல்லிருக்கேன்.” என்று அவன் சொல்லவும் ஒரு நொடி அதிர்ந்து அவனை நோக்கியவள், பின் தன்னை நிதானித்து சரி செய்து கொண்டு,
“வேணாம் சுசி, நான் அத்தைக்கு தனியா பேசிக்கிறேன். நீங்க பேசுங்க.” என்று சொல்லியபடி எழுந்து சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
‘என்ன செஞ்சாலும் ஒத்து வரமாட்டா போல, இதுக்கெல்லாம் பயந்தா என்ன ஆகுறது. பேசாமா நேர ஆக்ஷன்ல இறங்கிடுவோம்’ என மனதிற்குள் முடிவெடுத்தவன் உடனே தன் அன்னைக்கு அழைத்து விட்டான்.
அழைத்த உடனேயே ஜெயாவின் முகம் திரையில் தோன்ற, “என்னம்மா, போனும் கையுமா இருந்தியா? ஒரு ரிங் கூட போகல, அதுக்குள்ள அட்டென்ட் பண்ணிட்டீங்க?”
“இல்லடா, நம்ம நாராயணன் சார் பொண்ணுக்கு கல்யாணம். போன் பண்ணாங்க, பத்திரிக்க வைக்க சாயங்காலம் வர்ராங்களாம்.”
“எம்மா, இதென்ன குழந்தை திருமணமா? அவ பேபிம்மா. அதுக்குள்ள கல்யாணமா?”
“டேய், அவளும் டிகிரி முடிக்கிறாடா இந்த வருஷம். எல்லாரும் உன் பொண்டாட்டி மாதிரியே இருப்பாங்களா? அவ தான் இன்னும் படிக்கிறா.. ” என்றவர் குரலில் விருப்பமின்மை தெளிவாய் தெரிந்தது.
சில நாட்களாய் அவனும் கவனிக்கிறான் அவன் அம்மாவின் பேச்சு செல்லும் திசையை. ஆனாலும் பிரச்சனையை தவிர்க்க நினைத்து சற்றே விலகி இருக்கிறான்.
‘நல்லவேளை இந்த புதிய ஏற்பாடு (airpod) நம்மள காப்பாத்திருச்சு. அவ இதெல்லாம் கேக்கல’ என்று எண்ணியவன் கண்களை சுழல விட அவனின் கண்ணம்மா கையில் கத்திரிக்காயுடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.
“ம்மா, எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே சொன்னது தான். இன்னும் என்னம்மா? அவ படிச்சு முடிக்கிற வரை வெயிட் பண்ணா நேர உனக்கு அறுபதாம் கல்யாணம் தான்னு சொன்னிங்க, இப்ப என்ன மா உங்க கவலை? ஏன் மஹி மேல உங்களுக்கு இப்பெல்லாம் இவ்வளவு கோவம்?” பேசியபடியே மெல்ல எழுந்து அறைக்குள் நுழைந்தவன் கதவையும் அழுந்த மூடி இருந்தான்.
ஜெயாவின் தற்போதைய பேச்சுக்களெல்லாம் அவரின் ஒருவித விருப்பமின்மையின் வெளிப்பாடே தவிர மனதால் அவர் என்றுமே மஹிமாவை வெறுப்பவரல்ல.
ஜெயா மஹியின் அன்பான அத்தை தான், ஆனாலும் மகனின் மனைவியாய் மஹியை முழு மனதாக ஏற்க அவர் மனம் இன்னமும் மறுக்கிறது. அவரின் மருமகளுக்கான வரைபடத்தில் அவள் என்றுமே பொருந்தியதில்லை.
அவரின் கை மீறி சுசீந்திரன் அதை நடத்தி முடித்திருக்க, அவரின் இயலாமை அவ்வப்போது அவரின் கூர் தீட்டிய வார்த்தைகளில் வெளிப்படும்.
ஆகவே இன்றும் அவரின் பேச்சுக்கள் அவளைக் காயப் படுத்தும் என்பதால் விரைந்து அறைக்குள் நுழைந்திருந்தான்.
“இல்லடா, இன்னும் அவ படிக்கிறான்னு நீங்க ஆளுக்கு ஒரு இடமா இருந்தா நானும் என்ன சொல்ல? உங்களுக்குப் பின்னாடி கல்யாணம் ஆனவளெல்லாம் மசக்கைன்னு வீட்டுக்கு வரும் போது எனக்கும் ஆசை வராதா?”
“ம்மா, இதென்ன நீ இப்படி எல்லாம் பேசி அக்மார்க் மாமியாராவே மாறிட்ட. நீ அவ மாமியார் இல்ல மா. மஹியோட ஜெயாத்தையாவே இருங்க. சரியா? நாங்க தனியா இல்ல. இப்ப ரொம்ப நாளா அவகூட தான் இருக்கேன். நீ இப்ப பேசுறியா? இருங்க ஸ்பீக்கர்க்கு மாத்துறேன்.” என அவர் குரலை சத்தமாகவே ஒலிக்க விட்டான்.
சுசீந்திரன் ஒன்றாக இருப்பதாகச் சொல்லவும் ஜெயாவின் முகத்தில் நிறைந்த புன்னகை. அவர் எதிர் பார்ப்பதெல்லாம் இதைத் தானே. மகனும் மருமகளுமாய் இணைந்த ஒரு நிறைவான திருமண வாழ்க்கை.
படிப்பு, வேலை என கணவனும் மனைவியும் ஆளுக்கொரு திசையில் வாழ்வது அறுபது எழுபதுகளில் பிறந்து வளர்ந்தவரால் ஏனோ ஏற்க முடியவில்லை.
“சுசி, நிஜமாவாடா? நாலு நாளா அவளும் பேசல. நீயும் சொல்லல. எங்கடா அவ? போனை அவ கிட்ட குடு. அவ மொகத்த பாத்தே நாளாச்சு.” என்று ஜெயா சொல்லவும் மீண்டும் கதவைத் திறந்து கொண்டு வந்தவன் சமையலறைக்குள் நுழைந்தான்.
அவனுக்குத் தெரியும் மஹிமா யாரிடமும் தன் முகத்தை காட்டாமல் இருப்பதன் காரணம். அனைவரின் கேள்வியும் அவளைத் தாக்கும் என அறிந்தவன் வழக்கம் போல் நொடி நேர தீர்மானம் ஒன்றைத் தீட்டி இருந்தான்.
“ம்மா, மஹி மதியத்துக்கு சமைக்கிறா. அவளுக்கு நான் ஒரு புது ஹேர் ஸ்டைல் சொல்லி ஹேர்கட் பண்ணிட்டா. அதனால உங்களை எல்லாம் பாக்க பயந்துகிட்டு இருக்காம்மா.” என பேசியபடி உள்ளே நுழைந்தவன் குரலில் அதிர்ந்து திரும்பியவள் வேண்டாம் என சைகை செய்ய அவனோ “இதோ இருக்காம்மா” என கைபேசியை அவளிடம் நீட்டி இருந்தான்.
திரையில் மஹியின் முகத்தை முதலில் கண்ட ஜெயாவிற்கு ஒரு நிமிடம் அது அவள் தானா? எனும் சந்தேகம் தான்.
இரண்டங்குல நீளம் கூட இல்லாத கேசமும் பொட்டு வைக்காத நெற்றியும் என அவளை திரையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டவருக்கு, அந்த நொடி உயிர் போகாததே பெரும் விஷயம் ஆகிப் போனது.