விழி மூடி சுவாசம் நிறுத்தி இதழ்கள் பாடிய இனிய காணத்தில்,
நம் காதலும் கணிந்ததடி கண்ணம்மா
நேற்றைய இரவில் தூக்கம் தொலைத்திருக்க இன்றைய விடியலில் எழும் போதே தலை பாரம் தாங்க முடியவில்லை சுசீந்திரனுக்கு. கண் விழிக்கும் எண்ணமில்லாமலே நேற்றைய எண்ணங்களில் மூழ்கி இருந்தவன் மெல்ல விழி விரிக்க, நேரம் காலை பத்து மணி.
நேரத்தைப் பார்த்ததும் விரைந்து எழுந்து சுற்றும் முற்றும் தேட, மஹிமா இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இன்னும் தூங்குவாளாக இருக்கலாம்.
நல்ல வேளையாக நேற்றைய விருந்தின் போதே பேசியிருந்தான், அலுவலக நண்பர்களிடம் இன்று வீட்டிலிருந்தே வேலை செய்வதாய்.
அதனால் விடியலில் எழும் எண்ணம் இல்லாமல் உறங்கி இருக்க, எழுந்ததும் அவன் மனம் மஹிமாவைத் தேட,
வட்டங்க ளிட்டுங் குளமக லாத மணங்ப்பெருந் தெப்பத்தைப் போல – நினை விட்டு விட்டுப்பல லீலைகள் செய்து நின் மேனி தனைவிட லின்றி – அடி எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை இரவியைப் போன்ற முகத்தாய்! – முத்தம் இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம் இட்டுனைச் சேர்ந்திட வந்தேன்.
அவன் இதழ்கள் பாரதியை படித்திருக்க, மஹிமா வீட்டில் இல்லை. இன்று விடியலிலேயே பல்கலைக் கழகம் சென்றிருந்தாள்.
தலைவலியுடன் தனிமையின் சலிப்பும் சேர பெருமூச்சுடன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான். குளித்து முடித்து உடை மாற்றி சமையலறைக்குள் வர அங்கே அடுப்பின் அருகே அவனுக்காகவே சில காகிதக் குறிப்புகள்.
முதல் குறிப்பைப் பார்க்க “டீ மசாலா ரெடி, டீ நீயே போட்டுக்கோ.” என்றிருந்தது. ஏலக்காய், இஞ்சி அல்லது சுக்குடன் துளி மிளகும் இலவங்கப்பட்டையும் சேர்த்து அவ்வப்போது பொடி செய்து தயாரிக்கும் மசாலா தேநீர் மட்டுமே காலையில் அவன் விருப்பம்.
அவளுக்கும் அவன் தான் பழக்கிவிட்டிருந்தான். இன்று அவள் எதுவும் குடித்தாளா தெரியவில்லை. ஆனால் இவனது தேவை அறிந்து செய்து வைத்திருந்தாள்.
“பிரேக் பாஸ்ட்க்கு பிரட் இருக்கு, இல்ல தோசை போட்டுக்கோ. தக்காளி சட்னி கிரீன் கலர் டப்பால மாவுக்கு மேலயே பிரிட்ஜ்ல இருக்கு.” ரொட்டிப் பையின் மேலே அவளின் குறிப்பு ஒட்டியிருக்க அதன் அருகிலேயே அவனுக்குப் பிடித்த மார்மலேட் (ஆரஞ்சு பழப்பாகு) வேறு எடுத்து வைத்திருந்தாள்.
பார்த்ததும் அவனுக்கு இதழ் விரிந்த புன்னகை. ‘இதெல்லாம் ஏன் செய்யிறா?’ எனும் எண்ணம் வந்தது. இத்தனை பிரச்சனைகள் இவர்களுக்குள் இருந்தாலும் அவள் உடன் இருக்கும் நேரம் அவனை என்றும் அவள் பசி அறிய விட்டதில்லை.
அடுத்த குறிப்பைப் பார்க்காமலே தெரிந்தது அது அவனுக்கான மதிய உணவென்று. திறந்து பார்க்க மஞ்சள் மலராய் மலர்ந்து மனம் வீசியது எலுமிச்சை சாதம். அருகே சேனைக் கிழங்கு வறுவல்.
“இவ தூங்கினாளா இல்லையா? ராத்திரி வரவே பன்னெண்டு மணி ஆச்சு. அதுக்கப்புறம் இவ எப்ப தூங்கி எப்ப எழுந்து சமைச்சா? இத்தனை ரணகளத்திலும் என் தூக்கம் கலயலையே?” தனக்குள்ளே பேசிக் கொண்டவன் மெல்ல மெல்ல அந்த நாளின் அலுவலுக்குள் தன்னையும் நுழைத்துக் கொண்டான்.
என்ன தான் அவன் தன்னை வேலையில் ஈடுபடுத்திக் கொள்ள முயன்றாலும் அவனின் எண்ணம் முழுவதும் அவனின் கண்ணம்மாவிலேயே சுற்றி சுழன்று வர மாலை ஐந்து மணிக்கு எல்லாம் வேலையை முடித்து அவளை அழைத்து வர பல்கலைக் கழகம் நோக்கி கிளம்பி விட்டான்.
அரிமாணம் மற்றும் உலோகவியல் துறையின் முன் நின்றவனுக்கு அவளை எங்கு சென்று தேடுவது, யாரைக் கேட்பது என தெரியவில்லை. ஏதோ ஒரு வேகம், நேற்று அவனைச் சுற்றி சுழன்ற அவளின் விழி வீச்சின் தாக்கத்தில் கிளம்பி வந்திருந்தான்.
தனியாய் வந்து அவனைத் தவிக்க விட்டிருந்தவளைத் தேடி வந்து விட்டான். ஆனால் அதில் அவளுக்கு சம்மதமா எனும் கேள்வியும் அவன் கேட்கவில்லை.
அவர்கள் இருவரும் தனித்திருக்கும் வரை அவர்களின் பிரச்சனை தீர வாய்ப்பில்லை என எண்ணியவன் ஆவலுடன் மீண்டும் ஒரே கூட்டுக்குள் வந்துவிட்டான்.
இதெல்லாம் ஒரு வேகத்தில் செய்தவன் அதே வேகத்தில் அவளிடம் பேசி அவளின் பிணக்குகளை அறியவோ அல்லது தீர்க்கவோ ஏனோ அவனுள் ஒரு தயக்கம்.
தயக்கம் அவனிடம் மட்டும் அல்லவே. அவளுக்குள் இருக்கும் சில தயக்கங்கள் அவனுடன் பொருந்தி இருக்க முடியாமல் செய்கிறதே.
அவனுக்கு பிரச்சனையை தீர்க்க தயக்கம். அவளுக்கோ பிரச்சனைகளால் வந்த தயக்கம்.
ஆனால் இப்பொழுது அதெல்லாம் உண்மை இல்லையோ என அவன் எண்ணமிடும் அளவு அவளின் மீதான அவனது நம்பிக்கை ஆட்டம் கண்டிருந்தது.
ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தாலும், அவள் பேசுவது என்னவோ தேவைக்கு மட்டுமே. இவனது தேவைகளைக் கவனித்துச் செய்பவளுக்குத் தேவை என்ன என்பது இன்னும் சுசீந்திரனுக்கு விளங்கவில்லை.
இவனாக நெருங்கும் வேளைகளில் கூட நொடி நேரம் அவள் உருகி நின்றாலும் மீண்டும் உடல் விரைக்க அவனுடன் ஒன்றாது நிற்பவளை என்ன செய்வது?
யோசனைகளெல்லாம் அவனைச் சூழ்ந்தது நின்றாலும் கண்கள் என்னவோ சுற்றி வட்டமிட்டுக் கொண்டே இருக்க “ஹாய் சுசின்றன்” எனும் குரலில் ‘எவன்டா இது, என் பேரை இப்படி நாராசம் பண்றது’ என எண்ணியபடி பார்த்தவனை நோக்கி வந்து கொண்டிருந்தான் லிம்.
“ஹாய் லிம் எப்படி இருக்க?” என அவனை நோக்கி கைகளை நீட்டியபடி பேசத் தொடங்கியவன் கண்கள் சுற்றிலும் அவனவளைத் தேட
“மஹி இன்னும் லேப்ல இருக்கா. கிட்டத்தட்ட எட்டு மணி நேரமா லேப்ல நிக்குறா. இன்னும் அவ எக்ஸ்பெக்ட் பண்ண ரிசல்ட் கிடைக்கல. இன்னும் கொஞ்சம் நேரம் ஆகலாம். நான் உங்களைப் பாக்கவும் வந்தேன். என அவனின் பார்வை போன திக்கில் இருந்தே அவன் எண்ணம் அறிந்து பதில் சொன்னான் லிம்.
அவனின் பதிலில் அதிர்ந்தவன் “என்ன லேப் அது? எயிட் அவர்ஸ் நின்னா என்ன ஆவிங்க? கொஞ்சமும் டையர்ட் ஆகாதா உங்களுக்கெல்லாம்?” என கேட்க,
“என்ன சுசீ, நாங்க என்ன உங்கள மாதிரி ஐடிலையா வேலை செய்றோம், ஏசி போட்ட ரூம்ல உக்கார்ந்து வேலை செய்ய? சில லேப் எல்லாம் எங்களுக்கு இப்படித்தான்.” என்று லிம் சொல்லும் போதே உடல் நொந்து அங்கே நின்று கொண்டிருக்கும் அவனின் கண்ணம்மா மட்டுமே அவனின் மனதில்.
மேலும் சில நிமிடங்கள் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மஹிமா.
அவளைக் கண்டதுமே சுசீந்திரன் கண்களுக்குத் தெரிந்ததென்னவோ ஓய்ந்து போன அவளின் தோற்றம் தான். ‘ஹ்ம்ம், இவ ஒழுங்கா வேற ஏதாவது படிச்சுருக்கலாம். இப்ப பாரு, இது தான் படிப்பேன்னு மணிக்கணக்கா நின்னுட்டு வர்றா’ என மனதினுள்ளே கடிந்து கொண்டவன் கண்கள் அவளிலேயே நின்றிருந்தது.
“ஹாய் கைஸ், என்ன இங்க மீட்டிங் ரெண்டு பேரும்?” ஆச்சரியமாக அவள் கேட்க,
“ஓ” என ஒற்றை எழுத்தில் அவனுக்குப் பதில் சொல்லியவள் கண்கள் கேள்வியாய் அவனைப் பார்க்க, அவனின் பார்வையும் அவள் மீது மட்டுமே.
“என்ன மஹி, ஒன்லி பார்வை தானா? பத்து மணி நேரம் ஆச்சு நீங்க பாத்துகிட்டு. PDA (PUBLIC DISPLAY OF AFFECTION) எல்லாம் இல்லையா?” என்றவன் சந்தேகமாகக் கேட்டான்.
“என்னது PDA -வா?” என அதிர்ந்தவளுக்கு மின்னல் போல் சில ஞாபகங்கள். அவளின் எண்ணம் செல்லும் வழி சுசீந்திரனுக்கும் விளங்க மெல்லிய இதழ் பிரியா புன்னகை அவன் இதழ்களில்.
‘எஸ் ஒய் நாட்?’ என கேலியாய் அவன் அவளை நோக்க,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அன்பு மனசுல இருக்கு. அதை ஏன் எல்லாருக்கும் காட்டணும். எங்களுக்கு தெரிஞ்சா போதும் தானே?” என பட படவெனப் பேசியவளுக்குள் ஓடிய மெல்லிய பதட்டம் சுசீந்திரன் கண்களில் தப்பாமல் விழ, மெல்ல நகர்ந்து அவள் அருகில் வந்து நின்று அவளின் ரத்த ஓட்டத்தை இன்னும் அதிகப் படுத்தினான்.
லிம் இவர்களை நோக்கி ஒரு விளங்காத பார்வையைச் செலுத்த, “அதெல்லாம் ஒன்னும் இல்ல லிம், வீ இன்டியன்ஸ் வோண்ட் ஷோ கேஸ் ஓவர் லவ் இன் பப்ளிக். அதுவும் இல்லாம எங்களுக்கு எங்களை நல்லா தெரியும். முத்தமெல்லாம் குடுத்து அவளுக்கு புரிய வைக்கணும்ன்னு இல்ல.” என சீனத்து சிங்கத்தை இன்னும் குழப்பிவிட்டான் சுசீந்திரன்.
“அப்ப நீங்க எல்லாம் கண்ணுலே காதல் செய்வீங்க போல” என நக்கல் பேசியவன் அறிவானா எங்களின் கலாச்சாரமும் காதலின் ஆழமும்?
மேலும் சில நிமிடங்கள் அங்கேயே நின்று பேசியவன் கிளம்பி இருக்க, “என்ன இங்க வந்திருக்க?” என கேட்டாள் மஹிமா.
அவளின் கேள்வியில் மெல்லிய கோபம் எட்டிப் பார்க்க “ம்ப்ச், இன்னைக்கு உனக்கு லேப் இருக்குன்னு தெரியுமில்ல? நேத்தும் தூக்கம் இல்ல. இதுல காலைல எழுந்து சமையல் வேற. நல்ல வேளை நான் கூட்டிட்டு போக வந்தேன். இல்ல இன்னும் நடந்து வேற வருவ.” என்றான்.
அவனுக்கு பதில் சொல்லும் எண்ணம் இருந்தாலும் உடல் ஓய்வை எதிர்பார்க்க பேசாமல் அவனுடன் மகிழுந்தில் ஏறி வீடு வந்து சேர்ந்திருந்தாள் மஹிமா.