உன் மூச்சுக் காற்றாய் உன்னுள் முக்தி அடைந்ததடி கண்ணம்மா !
“நானே யோசிக்கிறேன். யோசிச்சு…” என சொன்னவனின் பார்வை மாற்றத்தில் முகம் சிவந்தாலும் தன்னை வெகுவாக சமாளித்துக் கொண்டாள் மஹிமா.
இருந்தும் அவன் பார்வை அவளையே சுற்றிவர அவளுக்கோ ஏதேதோ எண்ணங்கள். “யோசிச்சு … என்ன சொன்ன சுசீ?” கேட்டவள் குரலில் இருந்தது என்ன? ஆவலா? இல்லை ஆத்திரமா?
அவளுக்கு என்ன உணர்வோ ஆனால் சுசீந்திரனுக்கு அவளின் ஆசையை அவளுக்கு உணர்த்தும் உந்துதல்.
ஆரம்பம் முதலே அவன் காதலுக்குத் தடை அவளின் அறியாமையும் அவனை உணராமையும் மட்டுமே. அதை நினைக்கும் போது எல்லாம் அவனின் ஆசைக் கண்ணம்மாவின் மேல் கோபம் கொண்டாலும் அவர்கள் காதலை என்றுமே அவன் குறைவாய் நினைத்ததில்லை.
உணரும் அன்பு உணர்த்தும் உணர்வை விட, உணராத உணர்வாக அவள் உள்ளுக்குள் உறைந்துவிட்ட அவளது காதல் என்றுமே அவனுக்கு உயர்வானது.
அவன் உள்ளத்தில் உறைந்த அவன் காதலை அவன் உணர முடியாமல் போராட அவள் அல்லவா அன்று அவனுக்கு உணர்த்தி விட்டுப் போனாள்.
சாய்விருக்கையில் அமர்ந்து அவன் அந்த நாள் நிகழ்வுகளை எண்ணமிட, மஹிமாவும் அவளறையில் அதே நாள் நினைவுகளில் மூழ்கி இருந்தாள்.
மஹிமாவும் சுசீந்திரனும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலமது. சென்னையின் புகழ் பெற்ற அந்தக் கல்லூரியில் கணினித் துறையில் சுசீந்திரன் படித்துக் கொண்டிருக்க, வேதி பொறியியலை விரும்பியே எடுத்திருந்தாள் மஹிமா.
கல்லூரி விடுதியில் இருவரும் தங்கி இருக்க, அங்கிருந்த மர நிழலில் போடப்பட்ட இருக்கைகளில் மட்டுமே பெரும்பாலும் அவர்களின் நட்பு வளர்ந்தது.
கல்லூரியின் கலகலப்பான நாட்களெல்லாம் கடந்து தேர்வுக்கான நாட்கள் வந்திருக்க இரண்டாம் ஆண்டின் இறுதியை நோக்கியது அவர்களின் கல்லூரிப் பயணம்.
பொறியியல் கல்லூரியே வரப் போகும் பரீட்சை எனும் சுனாமியை சமாளிக்கத் தயாராகும் ஒரு கோடைக்காலம். வெயிலின் சூட்டைவிட அவர்களின் மன அழுத்தம் தரும் வெப்பம் இன்னும் இன்னும் அவர்களைத் தாக்கியது.
சுசீந்திரன் மஹிமாவை சந்தித்தே ஒரு வாரம் கடந்திருக்க இன்று தான் மறுபடியும் அவர்களின் ஆஸ்தான மர நிழலில் அவளைக் கண்டான்.
அங்கிருந்த மர இருக்கையின் ஒரு மூலையில் அமர்ந்து அவள் அவனிடம் புகைந்து கொண்டு இருந்தாள். அதே வழக்கமான புகைச்சலும் கோபமும் இன்றும் அவளிடம்.
“ஏன்டா இதுங்களை எல்லாம் இதுக வீட்டுல தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா? நானும் என்ன யோசிச்சும் எனக்கு மட்டும் விளங்கவே இல்ல”
“எனக்கென்னமோ அதெல்லாம் அறிவு இருக்கவங்க செய்ய வேண்டிய வேலைன்னு தோணுது டி” என்றபடி மீண்டும் தனது பாடப் புத்தகத்தில் தலையை நுழைத்தான் அவன்.
“என்ன டா உளர்ற?” என்றாள் அவனின் பதில் விளங்காது.
“இல்ல டி, என்னத்தையோ யோசிச்சேன்னு சொன்னியே, அதைத் தான் நானும் சொன்னேன். அறிவிருக்கவங்க செய்யணும்ன்னு” என்றவன், தன்னை காளியின் மறு உருவாய் எண்ணி அவனைப் பார்த்து முறைப்பவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் “அறிவு இருக்கவங்க யோசிக்கலாம். தப்பில்லை. உனக்கு ஏன் அந்த வேலை. நீ வழக்கம் போல கேம் விளையாடு டி.”
“டேய், வெறுப்பேத்தாம ஒழுங்கா என்னைக் கொஞ்சம் புலம்பவாச்சும் விடு. வீக் எண்டு நைட் வந்தாலே எனக்குக் காது அவிஞ்சு போகுது டா. ரூம்ல இருக்க ரெண்டும் ஊர சுத்தீட்டு வந்து அதைப் பத்தி பேசியே என்னை கொல்லுதுங்க டா” அவள் குரலே கடுப்பாய் ஒலித்தது.
“வேற என்ன. எல்லாம் காதோல் கதை தான்.” காதலை அலுப்பாய் அவள் பேச ‘இது என்ன வகை உயிரினம்’ என அவளை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான் சுசீந்திரன்.
காதலை காதோலாய் நீட்டி முழக்கியவள் மேலும் “அவங்க ஆளோட வெளில போனது வந்ததுன்னு ரெண்டும் சேர்ந்து என்னை நடுவுல உக்கார வச்சு ‘இதக் கேளு மச்சி’ன்னு சொல்லி சொல்லியே என்னை கொல்லுறாளுக டா பாரதி.” என்றால் சோகமாய்.
“நீ ஏன் கேக்குற? பேசாம நா சாமியார் ஆகப் போறேன்னு சொல்லிடேன் மஹி.” நக்கலாய் பதில் சொன்னான் சுசீந்திரன்.
“ஹுக்கும், அவளுக சொல்லுற கதை எல்லாம் கேட்டு ரொமன்ஸ்ன்னு நான் நம்புறதுக்குப் பேசாம சாமியாராவே போயிடலாம் போல.” என்று நொடித்துக் கொண்டாள்.
“என்னது, ரொமான்ஸ் ஆ? அப்படியே எனக்கும் ரெண்டு ரொமான்டிக் சீன் சொல்லேன். உன் குரல்ல மொக்கையா பீலிங்ஸ் இல்லாம இருந்தாலும் பரவாயில்லை, நானும் கேட்டுக்குறேன். நாட்டு நடப்பை நானும் தெரிஞ்சுக்கணுமா இல்லையா?” என்றவன் குரலின் அதீத ஆர்வத்தில் அவனைக் கண்களாலேயே சுட்டெரித்தாள் அவள்.
“இப்ப ஏண்டி அவங்கள தொந்தரவு பண்ற. பாவம் எங்கம்மா. இந்நேரம் ஆழ்நிலை தியானத்துல இருப்பாங்க. அதை நீ கெடுத்துறாத.”
“ஆழ்நிலை தியானமா?” என யோசித்தவள், “அடப் பாவி தூங்குறத சொன்னியா?” என்றாள்.
“நீ முதல்ல பேச்சை மாத்தாம ஒழுங்கா விஷயத்தை சொல்லுடி. உன் ரூம்ல என்ன பஞ்சாயத்து?” அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டான் சுசீந்திரன்.
“வீக் எண்ட்ல தான் படிக்க முடியலன்னு நேத்து நைட் புக் எடுத்து உட்கார்ந்தேன் டா பாரதி. இந்தப் பக்கம் பெட்ல ஒருத்தி முணுமுணுங்குறா, அந்தப்பக்கம் ஒருத்தி சாட்டிங்ன்னு உட்கார்ந்திருக்கா. இதுக்கு நடுவுல நான் எங்க படிக்க? எப்படி படிக்க?” நொந்து கொண்டாள் மஹிமா.
“ஏன்டி உன்னை சுத்தி இவ்வளவு நடக்குதே, உனக்குக் கொஞ்சமும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவே இல்லையா டி? “
சுசீந்திரன் தன் மனதின் அடி ஆழத்தில் அலையாய் வீசும் சில எண்ணங்களெல்லாம் காதலின் வண்ணமாய் பிரதிபலிக்க,
வெண்ணிலவின் ஒளி கனலாய் கொதிக்குதடி
எண்ணம் நிலை இல்லாமல் தவிக்குதடி
கண்ணம்மா… காதல் என்னும் கவிதை சொல்லடி
பாடலின் வரிகள் மின்னலாய் மின்ன, மனம் தவிக்க, ‘இவள் என்னை விளங்கிக் கொள்ளவே மாட்டாளா? என் போல காதல் உணர்வுகள் இவளுக்குள்ளும் வராதா?’ என எதிர்பார்ப்புகள் மனதில் எழ அவளின் பதிலை ஆவலாய் எதிர் பார்த்திருந்தான்.
“ஆகும் ஆகும் இந்த கெமிக்கல் இன்ஜினீரிங் ஒழுங்கா முடுச்சுட்டா எனக்கும் கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க் அவுட் ஆகும்”
“த்தூ, ஒரு இன்ஜினியரிங் சீட் வேஸ்ட்” என வழக்கம் போல அவளைக் காய்ந்தவன் ‘இதெல்லாம் தேறாது. ரொம்ம்ம்பக் கஷ்டம்.’ எனும் பார்வையை செலுத்தினான்.
“உனக்கு என் கஷ்டம் புரியவே இல்ல டா பாரதி, என்ன சுத்தி இருபத்தி நாலு மணி நேரமும் ஒரே லவ் டாக் தான் ஓடுது.” தீவிரமாக எதோ சொல்ல ஆரம்பித்தாள் மஹிமா.
‘இன்னும் ஒரு நாலு மணி நேரம் காதல் யந்திரம் சேர்த்து ஓடினாலும் நீ எல்லாம் அதுக்கு சரி வர மாட்ட டி’ என எண்ணிக் கொண்டவன்,
“லவ் லவ் ன்னு நீயும் இந்த ரெண்டு செமெஸ்டரா சொல்லுறியே தவிர விஷயத்தை சொல்ல மாட்டேங்கிற. அப்படி என்ன தான் லவ் டாக் சொல்லேன் நானும் கேட்கிறேன்” என்றான்.
காதல் கதைகளை தன்னிடம் சொல்லும் போதாவது அவளுக்கும் ‘தன்னைப் போல எண்ணங்கள் ஏதும் தோன்றுமா?’ எனும் ஆவல் சுசிக்கு.
அவள் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை உன்னிப்பாய் கவனிக்கலானான் அவளின் பாரதி.
‘ஒருவேளை தான் மட்டுமே அவளைப் பற்றிய இத்தைகைய எண்ண அலைகளால் மோதப் படுகிறோமா?’ எனும் சந்தேகம் வேறு அவனுள்.
சரி, தவறு என பிரித்தறிய முடியா சில உணர்வுகள் சுசீந்திரனுக்கு மஹியின் மேலே சில காலமாய்.
இது காதல், காதல், காதலே தான் என முழுமையாய் உணர அல்லது உறுதி படுத்த அவனின் மனம் இன்னும் அவனுக்கே விளங்க வில்லை.
காதல் எல்லாம் இல்லை என தூக்கி எரிய முடியாத அளவு அவன் அன்று கண்ட அந்தக் காட்சி அவன் இரவுகளைக் கொள்ளை கொள்கிறது.
காட்சியின் தாக்கம் தவறு என எண்ணவும் மனம் மறுக்கிறது.