என் காதல் கவிதைகள் எழுத காகிதம் தேவை இல்லை. உன் கன்னங்கள் போதுமடி கண்ணம்மா
கோயம்புத்தூர் மாநகராட்சியின் காவேரி நகர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு .
முழங்கால் அளவு மட்டுமே மறைத்த பாவாடை சட்டையுடன் ஓட்டமும் நடையுமாக ஜெயா அத்தையின் வீட்டின் உள்ளே நுழைந்தாள் மஹிமா.
அவளின் உயரம் ஆறடியை எட்ட நீண்ட பாவாடை கூட அவளுக்கு கணுக்கால் மறைப்பதில்லை.
அவளின் உயரம் அவளின் வேகத்துடன் விளையாட்டாய் இணைந்திருக்க அவள் அவளாகவே நீண்டு வளர்ந்தாள்.
அவளின் வேக நடையில் இருபுறமும் குதித்தாடும் பின்னிய கருநாகங்கள் என பின்னலிட்ட கூந்தல் தோளையும் தாண்டி வழிந்தோட மூச்சிரைக்க ஓடி வந்தவள்,
“ஜெயாத்தை, ஜெயாஆஆஆஆத்தை சீக்கிரம் கதவை திறங்க. சூடா இருக்கு. கைல பிடிக்க முடியல.” வாசலில் நின்று கத்தத் தொடங்கினாள்.
இவளின் அலறும் அபாய சத்தத்தில் ஓடி வந்தவர் “சுடுதுன்னா இன்னும் ஏன் கைலயே வச்சுட்டு நிக்கிற. கீழ வையேன் டா. நான் கதவைத் திறக்கிறேன்.” என்று பேசியபடி கதவைத் திறந்தார் ஜெயா.
கையிலிருந்த பாத்திரத்தைக் கீழே வைத்தவள் காதில் வந்து விழுந்த இனிய இசையை சற்று நேரம் கவனித்தாள்.
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
அவளுக்கு என்றுமே பிடித்த பாரதியின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கதவை அதற்குள் திறந்து வெளியில் வந்த ஜெயா, “இவ்வளவு சுடுதுன்னு அண்ணி குடுக்கும் போதே தெரியும் தானே, வீட்ல இருந்தே ஒரு கூடைல வச்சு கொண்டு வர வேண்டியது தானே மஹி” என்றபடி பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு உள் நுழைந்தார்.
“அய்ய போங்கத்தை, இந்த கூடை மஞ்சப்பை இதெல்லாம் தூக்கினா ஏரியாக்குள்ள இந்த மஹி கெத்து என்ன ஆகுறது.”
“ஹ்ம்ம், அதுவும் சரி தான். கொஞ்சம் நில்லு மஹி, ஓடிறாத இரு. பூவை கட்டித் தர்றேன். வச்சுட்டு போ.” பெண் குழந்தை இல்லாத அந்த வீட்டுத் தோட்டத்தின் அத்தனை மலர்களின் ஒரே ராணி இன்று இவள் தான். இன்னும் சொல்லப் போனால் ஜெயா அத்தையின் பெண் இளவரசி இவள்.
கணவர் தாமோதரன் துபாயில் பொறியாளராக பணியில் இருக்க, இரு மகன்களின் பொறுப்பான அம்மாவான ஜெயாவிற்குப் பெண் குழந்தைகளின் மேல் என்றுமே தனிப் பாசம் தான்.
புது இல்லம் இங்கு கட்டிக் குடி வரும் போது இளைய மகன் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் இருக்க, பள்ளியை மாற்ற விரும்பாமல் அங்கேயே தன் அக்காவின் வீட்டில் தங்க வைத்திருந்தார். பெரிய மகன் பொறியியல் கல்லூரியில் இருக்கத் தனிமையில் தவித்த ஜெயாவுக்கு மஹிமா செல்லப் பிள்ளையாகிப் போனாள்.
காவேரி நகர் வந்து இந்த பத்து மாதங்களில் அவரின் தனிப் பெரும் பொழுதுகளில் இவள் தான் அவரின் துணை.
“அத்தை இன்னைக்கு லீவு தானே, அதுனால எனக்கு ஜாதி பூ நீளமா கட்டித் தராதீங்க. சாயந்தரம் நாங்கல்லாம் ஃபுட் பால் மேட்ச் ஆடப் போறோம். பூ நீளமா இருந்தா மேட்ச் ஆட தொந்தரவா இருக்கும் த்தை .”
“அப்படி எல்லாம் பூவை வேண்டாம்ன்னு சொல்லக் கூடாது ராஜாத்தி. பொம்பள புள்ளை. அது வேணாம்ன்னா இரு உனக்குப் பிடிச்ச பிங்க் ரோஸ் பூத்திருக்கு பறிச்சு தரேன். இல்ல நீயே கூட பறிச்சுக்கோயேன்.”
“ஹையா, பின்கா? இதோ பறிச்சுட்டு வர்றேன். வச்சு விடுங்கத்தை.” என்றவள் அடுத்த நிமிடமே பூவுடன் வந்து நின்றாள். இன்னும் பாரதி பாடலின் ஒலி கேட்டுக் கொண்டிருக்க, “ஏன் ஜெயாத்தை நீங்களுமா பாரதியார் பாட்டு எல்லாம் கேக்குறீங்க? செமயா இருக்கும் இந்தப் பாட்டு.”
“என்ன டா மஹி இப்படி கேக்குற? சின்னவன்தான் பாட்டு ப்ராக்ட்டிஸ் பண்றான்.”
“யாருத்தை? உங்க சின்னப் பையனா?”
பல முறை அவன் வந்து சென்றும் அவனைப் பற்றிப் பல தகவல்கள் அவள் அறிந்திருந்த போதும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.
அதற்கு காரணம் பெரும்பாலும் ஜெயாவின் தனிமையில் மட்டுமே அவள் வருகை இருக்கும்.
நவீனை சில முறை முன்பே பார்த்திருந்தாலும் நட்பு மலர்ந்தது என்னவோ இந்தக் கோடை விடுமுறையில் இவர்களின் கால்பந்து மற்றும் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரன் ஆன பிறகு தான்.
அதுவும் இவர்களின் அணியில் இருக்கும் மூன்று நான்கு பெண்களுக்கும் பாதுகாவலன் வேலையும் சேர்த்து செய்வதால் நவீன் அவளின் பெஸ்ட்டி லிஸ்டில் இன்று நம்பர் ஒன்.
அதனால் அவளுக்குப் பிடித்த பாரதியின் பாடலை பாடும் ஒருவனை நேரில் காண சிறு ஆவல் கூட எழுந்தது. மேலும் நாளை இந்த சுசீந்திரனும் அவளது வகுப்பிற்கு வர போகிறவன் அல்லவா. தன் வகுப்புத் தோழன் எனும் அந்த ஆர்வமும் சேர்ந்து கொண்டது.
“ஏன் மஹி, அம்மா சொல்லலையா? சின்னவன் நேத்து ஊருல இருந்து வந்துட்டான். திங்கட் கிழமை ஸ்கூல் அட்மிஷன் இருக்குல்ல.”
“ஓஹ், அதான் இன்னைக்கு இவ்வளவு சூடா சக்கர பொங்கல் குடுத்து விட்டாங்களா? “
“அண்ணி செய்யிற சர்க்கரைப் பொங்கல்ன்னா அவனுக்கு ரொம்பப் பிடிக்குதே. இரு கூப்பிடுறேன். நீயும் பார்த்ததில்லையே.” என்றபடி படுக்கை அறைக்குச் சென்றவர் அவனை அழைத்து விட்டு மஹியுடன் வந்து அமர்ந்தார்.
சிறிது நேரத்தில் பாடல் முடிந்து வெளியில் வந்தவன் கண்டது அவன் கொள்ளை ஆசையாய் வாங்கி வந்து வளர்த்த இளஞ்சிவப்பு நிற ரோஜா நிற மொட்டுடன் அமர்ந்திருந்த மஹியைத் தான்.
அவளைக் கண்டதும் கோபம் தலைக்கு ஏற, “ஏய், அறிவில்ல உனக்கு. இங்க வீட்டுக்கு முன்னாடி நான் அழகுக்கு வச்ச பூவை பறிச்சிருக்க?
உனக்கு வேணும்ன்னா பின்னால இருக்க செடில இருந்து பூவைப் பறிக்க வேண்டியது தானே.
அதுவும் மலராத பூவை போய் பறிச்சிருக்க?” என சட்டென கோபக் கனல் வீசியவனை அதற்கு சற்றும் அசராத அக்கினிப் பார்வையை அவன் மேல் வீசியவள்,
“பின்னால எங்க பிங்க் ரோஸ் பூத்து இருக்கு? மஞ்சள் தான் இருக்கு. அது எனக்குப் பிடிக்காது. உனக்கு வேணும்ன்னா சொல்லு, இனி நான் பறிக்கல. நீயே நல்லா முடிய வளத்து உனக்கே வச்சுக்கோ.” என்றவள் குரலில் ஏளனம் மட்டுமே.
இருவரின் பேச்சிலும் கலவரமாக, ஜெயா அந்த இடம் போர்க்களம் ஆகும் முன்னே சமரச சாகரத்தில் குதித்திருந்தார்.
“சுசி என்ன இது? ஒரு புதுசா பார்க்குற பொண்ணு கிட்ட இப்படியா பேசுவ? நீ என்ன மஹி, அவனுக்கு மேல பேசுற? அமைதியா இருங்களே.” சமாதானக் கொடியுடன் வந்த ஜெயாவை இருவரும் கண்டு கொள்ளவில்லை.
“அத்தை, இது தான் உங்க சின்ன பையனா? நான் ஏற்கனவே ஒரு நாள் நம்ம ப்லே கிரௌண்ட்ல வச்சு பார்த்தேன்.
இவனால அன்னைக்கு ரெண்டு தரமும் நாங்க மேட்ச் தோத்துட்டோம்.
இந்த நவீன் அண்ணா என் கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல. இவன் தான் அவங்க தம்பின்னு.
யாரோன்னு திட்டாம கூட விட்டுட்டேன். ஒரு கேட்ச் பிடிக்க துப்…. ” என்று அவள் சீறிக் கொண்டே போக அவளின் வார்த்தைகளின் போக்கு ஜெயாவிற்கே முகம் கோண வைக்க, தன் மகன் குணம் அறிந்தவர் குறுக்கே பாய்ந்திருந்தார்.
“ஏய் மஹி, என்ன பொட்டப்பிள்ளைக்கு இத்தனை வாய். கொஞ்சம் பொறுமையா பேசேன்.
எவ்வளவு கோவம் வந்தாலும், யாரையும் சத்தம் போட்டுப் பேசி பழகாத.” அவரின் ஆதரவுக் குரலில் இத்தனை நேரம் கோபம் தலைக்கேற நின்றிருந்தவனும் சினம் கூடி சீறத் தொடங்கினான்.
“அம்மா எல்லாம் நவீன சொல்லணும். ஏரியா பசங்க மேட்ச், வான்னு அவன் தான் கூட்டிட்டுப் போனான்.
இவளும் இன்னும் ரெண்டு பொண்ணுங்களும் கூட டீம்ல இருக்காங்க. நான் வரலன்னு சொல்லியும் அவன் தான் டீம்க்கு ஆள் வேணும்ன்னு கூட்டிட்டு போனான்.
இப்ப இவ இங்க வந்து குதிக்கிறா. நான் தான் சொன்னனே எனக்கு கிரிக்கெட் ஆட வராது, பாஸ்கெட் பால் மட்டும் தான் ஆட வரும்ன்னு.
இவ என்ன செவிடா?” பதின் பருவத்தின் இளம் மீசை துடிக்க சுசியும் கடுகடுத்தான்.
மஹி மீண்டும் பேசத் தொடங்கும் முன் ஜெயாவே பதில் சொன்னார். “சுசி போதும் அவளைப் பேசினது.
விடுங்க ரெண்டு பேரும். இனி திங்கக் கிழமைல இருந்து ஒரே கிளாஸ் ரெண்டு பேரும். இப்படியா அடிச்சுப்பிங்க.
ஒழுங்கா இருங்க. ஏன் மஹி, உங்க அம்மா எவ்வளவு பொலம்புறாங்க. மூக்குக்கு மேல கோவப் படாம கொஞ்சம் ஒழுங்கா அடங்கி இருந்தா என்ன? சொல்லுறத பொறுமையா சொன்னா கேட்டுப்பாங்க.
இப்படி கடுகா பொறிஞ்சா நீ நல்லது சொன்னாலும் எவனும் கேட்க மாட்டான்.” மூச்சு வாங்க பேசி முடித்தார் ஜெயா.
“சரிங்கத்தை. இனி உங்க செல்ல பையன நான் எதுவும் சொல்லல. சரியா?
ஆனாலும் உங்க பையனுக்காக, என்னைய அதுவும் உங்க மருமகன்னு எப்பவும் கொஞ்சுற என்னையவே திட்டுறீங்க?
உங்களுக்காக மட்டும் தான், நான் சமாதானமா போறேன். மிஸ்டர். கவி பாரதிக்கு சொல்லுங்க த்தை.
சுசீந்திரன விட பாரதி தான் பேரு பொருத்தமா இருக்கு. எனக்கும் பாரதி பேருன்னா ரொம்ப பிடிக்கும்.” என்று அவள் பேசிக் கொண்டே செல்ல அவன் எப்போதோ இடத்தை காலி செய்திருந்தான்.
அன்று மட்டுமே அப்படி, அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் அவர்கள் அறியாமலே அவர்களுக்குள் ஒரு அழகிய நட்பு மலரத் தொடங்கியது.