அவளது மனமும் அவள் அன்னையின் பேச்சில் இன்னும் இன்னும் சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்ததே. யோசிக்க யோசிக்க அவளின் வாழ்க்கை அவளுக்கே புரிந்தும் புரியாத நிலை.
அன்று காலையிலேயே சுசீந்திரன் அலுவலகம் கிளம்பிவிட தனிமை அவளையும் கொடுமை செய்ய பல நாட்களுக்குப் பிறகு அன்னைக்கு காணொளியில் அழைத்தாள்.
முதல் அழைப்பு மொத்தமும் எடுக்கப்படாமல் நின்று விட குறுஞ்செய்தியை தட்டிக் கொண்டிருக்கும் போதே சாவித்ரியின் அழைப்பு வந்தது அவளுக்கு.
“ம்மா, என்ன ரொம்ப பிஸியா? கால் பண்ணாலும் எடுக்கல.” என்றாள்.
“சொல்லு மஹி. தோட்டத்து பக்கம் இருந்தேன் டா. சத்தம் கேட்டு வர்றதுக்குள்ள உனக்கு அவசரம். எப்படி இருக்க மஹி? சுசி எங்க ஆபீஸ் போயிட்டானா?” என்றார் மகளை திரையில் பார்த்தபடி.
“ஹ்ம்ம், போயாச்சும்மா. எனக்கு தான் செம போர். இனி நியூ இயர் வரைக்கும் யுனி இல்லை. அதான் உங்களுக்கு போன் பண்ணேன்.” என்றாள் புன்னகை முகமாய். ஆனால் உதட்டில் நீண்ட அந்தப் புன்னகை ஏனோ அவள் கண்களை எட்டவில்லை.
உதடுகள் மட்டும் சிந்தும் புன்னகையில் மற்றவர் மனம் நிறையலாம். ஆனால் பெற்றவள்? மகளின் மனப் போராட்டங்கள் என்ன எனத் தெரியாவிட்டாலும் ஏதோ சரியில்லை என்பது புரிந்தது.
“மஹி, மாமா அத்தைக்கு பேசுனியா? பொங்கல் சீருக்கு உங்கள வர சொல்லணும்ன்னு சொன்னாங்க. வர முடியுமா மஹி உனக்கு?” மகளின் நிலை உணர்ந்து பாவமாகவே கேட்டார்.
“பொங்கலுக்கா? இப்ப எப்படிம்மா முடியும்? எனக்கு யுனி ஆரம்பிச்சுடும். லீவு எல்லாம் எடுக்க முடியாதும்மா.” என்றவளுக்குள் நிஜத்திலும் கோவம் மட்டுமே. திடீரென்று நினைத்ததும் கிளம்பி விடும் தூரம் இல்லையே இந்தியாவும் இங்கிலாந்தும். அதையும் தாண்டி பயணசீட்டும் அதன் விலையும் மற்ற செலவுகளும் என மண்டைக்குள் பட்டியல் வேறு நீண்டது.
இருவரும் வேலையில் இருக்க பணம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் அவளின் படிப்பு? அதை யோசிக்க வில்லையா அவர்கள்? கண்டிப்பாக விடுமுறை எடுக்க இயலாதே. சுசீந்திரன் என்ன சொல்வானோ? அசந்தர்பமாக அவனும் செல்ல வேண்டும் என சொல்லி விட்டால்? மீண்டும் ஒரு வாக்குவாதம் வருமோ? நினைக்கும் போதே கண்ணை கட்டிக்க கொண்டு வந்தது மஹிமாவிற்கு.
“என்ன மஹி யோசனை? எனக்கும் உன் நிலைமை புரியிது, ஆனா மூஞ்சில அடிச்ச மாதிரி பேச முடியாதே டா. பொண்ண கட்டிக் குடுத்துருக்கோம். தணிஞ்சுதானே போகணும் நம்மளும்.” என்றார் தன்மையாய்.
ஆனால் அவளுக்கு தான் எரிச்சலாய் வந்தது. ஒன்று மாற்றி ஒன்று வருகிறது தினமும் விவாதிக்க, என்ன வாழ்க்கையோ இது என்பது போலத் தோன்றியது.
“கண்டிப்பா என்னால பொங்கலுக்கு வர முடியாதும்மா. அவங்க கோவிச்சுக்கிட்டாலும் நம்ம என்ன செய்ய முடியும். வர வர கடுப்பாகுது. இந்த அத்தை என்ன லூஸாம்மா?”
“அப்படி எல்லாம் பேசாத மஹி. ஜெயாண்ணிக்கு உன் மேல எப்பவும் பிரியம் ஜாஸ்தி. உன்ன இப்ப பேசுறாங்கன்னா, மருமகளா நீ அவங்க மனசுல பதியாததால இருக்கும்.” பொறுமையாய் மகளுக்கு விளக்கினார் சாவித்ரி.
“ம்மா, இதென்னம்மா வம்பா இருக்கு. மஹிய பிடிக்கும், ஆனா மருமகளா பிடிக்காதுன்னு சொல்றது. அப்படி நான் என்ன பண்ணேன்? இல்ல பிடிக்கலைன்னா இவங்க கல்யாணத்துக்கு ஏன் ஒத்துக்கிட்டாங்க?” என அவளின் மனக் குமுறல்கள் எல்லாம் கேள்வியாய் வர, சாவித்ரி மகளை கேள்வியாய் பார்த்தார்.
“மஹி உனக்கும் அவங்களுக்கும் எதுவும் பிரச்சனையா? நா சாதாரணமா சொல்லும் போதே நீ இப்படி வெடிக்கிற? கல்யாணத்துக்கு அவங்க ஒத்துக்க காரணம் முழுக்க முழுக்க சுசியும் அவன் விருப்பமும் மட்டும்தான். அதுவும் இல்லாம நீ தப்பான சாய்ஸ்ன்னு தோணினாலும் தப்பான பொண்ணு இல்லன்னு அவங்களுக்குத் தெரியும். நம்மளையும் அவங்களுக்குத் தெரியும். அதான் ஓகே சொல்லிருப்பாங்க.” என அவர் பேசும் போதே அவளை இடை மறித்திருந்தாள் மஹிமா.
“ம்மா, அப்புறம் என்னம்மா அவங்களுக்கு? எனக்கு புரியல. மஹிதானே இப்போ மருமக. அப்புறம் என்னவாம் அவங்களுக்கு? ஜெயாத்தையோட சண்டை எல்லாம் இல்லம்மா, ஆனா வர வர ரொம்ப கடுப்பேத்துறார் மை லார்ட்.” எனும் மகளை புன்னகையுடன் பார்த்தார் சாவித்ரி.
வாழ்வின் சில நுணுக்கங்கள் தெரியாமலே வளர்ந்து நிற்கும் மகள். அன்பு தாண்டிய வாழ்வின் நிதர்சனங்கள் எல்லாம் அவளுக்கும் புரிய இன்னும் வெகு நாட்கள் இல்லை என்றாலும் அவள் மனம் வாடாமல் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஹைக்கூ பிரார்த்தனையை மனதுக்குள் பாடியவாறு மக்களிடம், “மஹி இப்போ வெறும் மஹி இல்லையே. மஹிமா சுசீந்திரன்னு அவங்க வீட்டுக்கு உரிமையா வந்துட்டாளே. அவங்க வீட்டோட பழக்க வழக்கம் எல்லாம் இனி அவங்கள்ல கத்துக் குடுக்கணும். என்னதாதான் உன்னை பல வருஷமா பார்த்தாலும் அவங்க உன்னை மருமகளா வருவான்னு நினைச்சிருக்க மாட்டாங்க.
அவங்க எதிர் பார்ப்பு எல்லாம் உடைச்சு நீ இல்ல வேற யார் மருமகளா வந்தாலும் அவங்க மேல கோவம் வரத்தான் செய்யும். அதெல்லாம் காலம் மாத்தும். எல்லாருக்கும் எல்லாரையும் பார்த்த உடனே பிடிக்காது மஹி. பழகப் பழக பிடிக்கும்.” என்றவர் தொடர்ந்து,
“ஏன் இவ்ளோ பேசுறியே, உங்கப்பாவும் இதையே தானே செய்யிறார். சுசி மேல இன்னும் கோவமா தானே சுத்துரார். அவன் செஞ்சது தப்புன்னா அந்த தப்புல உனக்கும் பங்கிருக்குத்தானே. ஆனா இன்னமும் அவன் உன்ன ஏமாத்திட்டேங்குற நினைப்புலே இருக்கார். அதே மாதிரியே சுசிகிட்டயும் பேசுறாரு. அப்படித் தான் அண்ணியும். கொஞ்ச நாளானா அவங்க மனசும் மாறும். ஆனா நீ எப்பவும் சரியா நடந்துக்கோ மஹி. எதுக்காகவும் அவங்க மனச நோகடிக்காம.” என்றார் சாவித்ரி.
“ம்மா, ஆனா அப்பாவும் சுசியும் நல்லா பேசிப்பாங்களே. ஒருவேளை சுசி இதெல்லாம் கண்டுக்கலை போல. என்கிட்டயும் அவன் எதுவும் சொன்னதில்லமா. சரி விடுங்க நான் பாத்துக்கிறேன். ஆனா கண்டிப்பா பொங்கலுக்கு வர முடியாதும்மா. ஒரு வேளை சுசியால முடிஞ்சா வந்துட்டு போகட்டும்.”
“இல்ல மஹி, அது சரி வராது. முதல் வருஷம் பொங்கல், சீரு கொண்டு வரும் போது நீங்க இருந்து வாங்கணும்னு யோசிப்பாங்க. பொங்கலும் அந்த வீட்டு புது மருமகளா நீ வந்து வைக்கணும்ன்னு ஆசைப்பட்டுருப்பாங்க. அவங்க குலதெய்வத்துக்கு வேற போய் சாமி கும்பிடணும்ன்னு சொன்னாங்க. அதுனால நீங்க வரணும்னு சொல்லுறாங்க. ஆனா வந்தா ரெண்டு பேருமா வர பாருங்க. சுசி மட்டும் வந்தா சரிப்படாது மஹி.” எனும் அன்னையின் குரலில் அவளுக்கு நிலைமை புரிந்தும் புரியாத நிலை.
ஆனாலும் சுசியை போகாதே என சொல்லும் நிலை இங்கு இல்லை, சரி சமாளிப்போம் என எண்ணிக் கொண்டவள் அன்னையிடம் மேலும் பேசிவிட்டு அலைபேசியை அணைத்திருந்தாள்.
மனதில் பல கேள்விகளும் குழப்பங்களும் வழக்கம் போல வந்து ஒட்டி கொள்ள எல்லாம் இவனால் எனும் கோபமும் வந்தது. சாய்விருக்கையில் கண் மூடி அமர்ந்து யோசிக்க, அவன் மட்டும் காதலிக்கவில்லையே, தானும் அல்லவா ஒத்துக் கொண்டோம் எனும் நினைவும் வந்தது.
‘அன்னைக்கு அவனை பார்க்கும் போது வந்த பீல் நிஜம் தானே. அப்ப எதுக்கு எனக்கு சந்தேகம் வருது? எல்லாம் இவன் இப்படி பேசி வச்சதால. இதெல்லாம் அம்மா அப்பாக்கு தெரிஞ்சா இவனை கொன்னே போட்டுடுவாங்க. இப்படி பேசுறவனால எப்படி என்ன லவ் பண்ண முடியிது?’ என மனம் அவளை கேள்வி கேட்க பிரச்சனையின் தீர்வு நோக்கி அவளின் எண்ணங்களும் ஓட ஆரம்பித்தது.
எனும் பாரதியின் வரிகளில் அவள் எண்ணங்கள் ஓட, அவள் எண்ணங்கள் போலவே கடிகார முள்ளும் ஓட மணி ஏழை நெருங்கும் போது சுசி வீடு வந்திருந்தான். வந்தவன் முகமே ஏதோ சரி இல்லாமல் இருக்க அவளுக்கு கேட்கும் எண்ணம் வரவே இல்லை.
இன்னும் அவளது கோவம் கரைந்திருக்க வில்லை. அவன் வந்ததும் எழுந்து அறைக்கு சென்றுவிட்டாள். அவள் எழுந்து செல்லவும் ‘ஹ்ம்ம், இவளை என்ன கடிச்சா சாப்ட்ருவாங்க. புலிய கண்டு ஓடுறாப்ல ஓடுறா. நானே நொந்து நூடுல்ஸ் ஆகி தலை வலி காய்ச்சல்ல வரேன். அடிப் போடி.’ என நினைத்தவனுக்கு உடலும் ஒத்துழைக்க மறுக்க வந்தவன் உடை கூட மாற்றாது அவனது சாய்விருக்கையில் கால் நீட்டி அமர்ந்தபடியே ஐந்து நிமிடத்தில் உறங்கிப் போனான்.