எண்ணியபடியே அவள் அமர்ந்திருக்க அவனிடமிருந்து மெல்லிய முனகல் சத்தம். எங்கெங்கோ சிதறிய நினைவுகளெல்லாம் மீண்டும் அவனின் சிறு சத்தத்தில் அவன் மேலே குவிய அவனிடமும் சிறு அசைவு. மெல்ல எழுந்து அமர்ந்தவனை இவளும் பார்த்திருக்க, அவனுக்கோ இவளின் கலங்கிய முகம் கண்டு இன்னும் இங்கேயா அமர்ந்திருக்கிறாள் என்று நினைக்க, “நீ போ மஹி. நான் ஓகே தான்.” என்றபடியே எழுந்து சென்றவன் சிறிது நேரத்தில் உடை மாற்றி வந்து மீண்டும் உறங்க வர மஹிக்கு ஏனோ அவனை அங்கு உறங்க விட மனம் வலித்தது.
“இல்ல சுசி நீ ரூம்ல பெட்ல வந்து படு, ப்ளீஸ்” என்று சொல்ல “இல்ல வேண்டாம் மஹி. இன்னைக்கு எனக்கு காய்ச்சல்ன்னு உன் பெட்டுக்கு வர சொல்ற. ஆனா நான் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து இங்க தானே தூங்குறேன். நான் செஞ்சது தப்புன்னு சொன்ன. மன்னிப்பு கேட்டும் உன் மனசுக்குள்ள இன்னமும் கோவம் போகல. இதுல நான் உன் பெட்டுக்கு இன்னைக்கு வந்தா நாளைக்கு நான் சரியானதும் என்ன சொல்லுவ? திரும்ப வெளிய போடான்னா? இல்ல நான் உன்ன என்னவா நினைச்சு கூட படுத்தேன்னா?” என நீளமாக அவன் பேச, அவன் உடலின் சூடு அவன் அறியாமலே அவனின் வார்த்தைகளில் ஏறி இருக்க அவளின் கண்கள் மறைக்க முயன்றும் இரு துளி நீரை சிந்தியே விட்டது.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
என பாடத் தோன்றினாலும் அவளின் கோபத்தை களைய நினைத்து தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து அவன் மௌனியாகிப் போனான்.
“மஹி ப்ளீஸ் என்னால நிக்க கூட முடியல. நான் படுக்கிறேன். நீ போ.” என்று சொல்லியபடி மீண்டும் படுத்து கண்மூடிக் கொண்டான்.
அதற்குமேல் நிற்க முடியாமல் அவளது அறைக்கு அவள் வந்துவிட்டாலும் ‘ஹையோ, இதென்ன வாழ்க்கை. இவ்வளவு கஷ்டமா?’ என தோன்ற மீண்டும் பழைய நினைவுகளோடே உறங்கியும் உறங்காமலும் அந்த நீண்ட இரவைக் கடந்தாள்.
மறுநாளும் அவனது காய்ச்சல் சற்றும் குறையவில்லை. காலையில் மீண்டும் அவள் கஞ்சியே கொண்டு வந்து தர எதுவும் சொல்லாமல் வாங்கியவனால் அமர்ந்து தானாகவே உண்ண முடியாமல் இங்கும் அங்கும் தடுமாற, எதுவும் பேசாமல் அவனிடமிருந்து கோப்பையை வாங்கியவள் மெல்ல அவனுக்கு புகட்டத் தொடங்கினாள்.
பல நாட்களுக்குப் பிறகான நெருக்கம் கூட அவர்களின் அமைதியைக் கலைக்க போதுமானதாக இருக்கவில்லை. மனம் இரண்டும் பேராழியின் பேரிரைச்சலை தாங்கிக் கொண்டிருந்தாலும் உதடுகளின் மொழி அங்கு மௌனம் மட்டுமே. உடலின் மொழி தயக்கமும் விலகலும் என மாற அந்த வீடே அந்தகாரம் சூழ்ந்த ஒரு அமைதி.
அந்த அமைதி அப்படியே நீண்டால் என்ன ஆவது பிரம்மன் பின்னிய விதி வலை? அமைதியை கிழித்துக் கொண்டு ‘அம்மா’ எனும் பெயர் தாங்கி வந்தது அவனது அலைபேசியில் அழைப்பு.
அழைப்பை இருவர் கண்களும் நோக்கினாலும் ஏற்றது என்னவோ மஹிமா தான். ஏற்றதும் மேஜை மேலிலிருந்த தண்ணீர் பாட்டிலின் மேல் கைபேசியை சாய்த்து வைத்தவள் “ஹலோ அத்தை !” என்றபடி காணொளியை சரி செய்ய இருவரின் முகங்களும் திரையில் தெளிவாய் தெரிந்தது.
“என்ன மஹி எப்படி இருக்கீங்க? என்ன டா சுசி முகமே நல்லா இல்ல. என்ன பண்ணுது?”
“ஒன்னும் இல்லத்தை, பயப்பாடாதீங்க. உங்க பையன் மீசையை முறுக்கீட்டு நான்தான் பாரதீன்னு தீயா சுத்துவாரு. ஆனால் ஒரு காய்ச்சல் வந்தா போதும் பாரதி சொன்ன பாப்பாவை விட மோசம். நாலு வாய் கஞ்சிய என்னால உள்ள அமுக்க முடியல. சொல்லுங்க ஒழுங்கா சாப்பிட சொல்லி.” என்றாள் வழக்கமான அவளின் துள்ளல் பேச்சோடு.
“முடியலம்மா. ரொம்ப டையர்டா இருக்கு. நீங்க பேசுங்க. என்னால முடியல.” என்றவன் தலையை பின் சாய்த்துக் கொள்ள, மஹி அவனின் தோள்தொட்டு எழுப்பி மீண்டும் உணவு தர இரண்டு வாய் கூட உண்ணாதவன் போதும் என்றுவிட்டான்.
“அத்தை இருங்க கை கழுவீட்டு வர்றேன். இவர்கிட்ட பேசுங்க.” என்றபடி மஹி சமையலறை செல்ல ஜெயாவோ “என்னடா தம்பி ஒழுங்கா கூட சாப்பிட மாட்டியா? இப்படி இருந்தா இன்னும் நாலு நாள் ஆகும் உனக்கு சரியாக. விஜயா வந்தா வீட்டுக்கு உன்னை பார்க்கணும்ன்னு சொல்லவும் கூப்பிட்டேன்.” என்றவர் திரையில் அருகிருந்த பெண்மணியை காட்டவும் “அத்தை எப்படி இருக்கீங்க?” என்றான்.
“நான் நல்லா இருக்கேன் சுசி, நீ என்ன இப்படி இருக்க? டாக்டரை போய் பார்க்கலாமில்ல. ஒரு ஊசி போட்டா எல்லாம் சரி ஆகிடும். ” என அவர் பேசும் போதே அருகில் மஹிமா வந்து அமர, “நல்லா இருக்கியாம்மா?” என்றார்.
“ஹ்ம்ம், இருக்கேன்மா.” என தயக்கமாய் அவள் பேச, “உங்க மாமாவோட சித்தப்பா பொண்ணு. மகளுக்கு கல்யாணம்ன்னு பத்திரிகை வைக்க வந்தா. அதான் சுசிகிட்ட பேசுவான்னு கூப்பிட்டேன்.” என்று அறிமுகப்படுத்தினார் ஜெயா.
“சமைக்கத் தெரியுமாம்மா?” என்று கேட்டவர் அவரே தொடர்ந்து, “அதான் என் மருமகனை நல்லா பார்த்துக்குறாளே என் பொண்ணு, உங்களுக்கு வேற என்ன அண்ணி வேணும். கல்யாணத்துக்கு வந்தப்ப எல்லாரும் பேசும் போதும் சொன்னேன் தானே, நம்ம பிள்ளைங்க நல்லா சந்தோஷமா வாழ்ந்தா ஜாதியும் மதமும் என்னவா இருந்தா நமக்கென்னன்னு. இன்னைக்கு பார்த்தாச்சுதானே. உங்க மகனை நல்லா பார்த்துக்குற மருமக. இனி வேற என்ன வேணும் உங்களுக்கு?” என்று ஜெயாவைப் பார்த்துக் கேட்க அங்கு மஹியும் சுசியும் பார்வையாளர்கள் மட்டுமே.
“ஹ்ம்ம், மஹி என்ன எனக்கு புதுசா? எப்பவும் அத்தை அத்தைன்னு இங்கேயே வளந்தவ தானே. அவளை எனக்குத் தெரியாதா விஜயா? இந்தா இவ்வளவு தூரம் தள்ளி இருந்தாலும் படிச்சுக்கிட்டு குடும்பமும் பார்த்துக்கிறாளே. சமையலும் எல்லாம் அவதான். பொறுப்பு அவ. என்னைக்கும் என் மருமக தங்கம்தான்.” என்றார் பெருமையாய். தனது தேர்வு இல்லை அவள் என கடுமையாய் பேசினாலும் மகனின் தேர்வை குறை சொல்ல முடியாதே. அதிலும் மஹி அவரின் மனதிற்கு என்றுமே பிடித்தவள் அல்லவா.
“அத்தை எனக்கும் காய்ச்சல் வந்தா யாரு பாப்பா? கொஞ்சமா ஐஸ் வைங்க.” என்று மஹி கேலியாய் சொல்லி சிரிக்க, “என்னம்மா செய்ய, சில நேரங்கள்ல இந்த பாராட்டுக்கு ஏங்கி அது கிடைக்காமத்தானே நம்ம மனசெல்லாம் தப்பான வழியில போயிடுது. அதுவும் மாமியாரே பாராட்டும் போது நீ உன் கடமையை சரியா செய்யிறேன்னு அர்த்தம். சந்தோஷமா இருங்க ரெண்டு பெரும்.” என்றார் வாஞ்சையாய்.
மஹிக்கு அவரை இன்றுதான் அறிமுகம் என்றாலும் அவர் பேசியது அவளுக்கு மகிழ்ச்சியாய் உற்சாகமாய் இருந்தது.
அதைவிடவும் அவளின் ஜெயாத்தையின் மாமியார் அவதாரத்தில் தடுமாறிப் போய் இருந்தவளுக்கு இன்று சிறு ஆறுதல். இதுதான் பாராட்டுக்கு ஏங்கும் மனமோ? என அவளே அவளைக் கேட்டுக் கொண்டாலும் அந்த நிமிடம் மனதில் ஒரு சிறு உற்சாகம்.
அருகில் திரும்பிப் பார்க்க காய்ச்சலின் தீவிரம் இருந்தாலும் அமைதியாய் நடப்பதை பார்த்து அமர்ந்திருந்தான் சுசீந்திரன்.
“சரி சுசீ நீ மாத்திரையை போட்டு நல்லா தூங்கி எந்திரி. நாங்க ராத்திரிக்கு பேசுறோம். இன்னைக்கு உங்களுக்கு லீவு தானே?” என்றவரிடம் “ஆமாம்மா, லீவுதான். அப்புறம் பொங்கலுக்கு என்னால இந்தியா வர முடியாதும்மா. இப்ப உடனே லீவும் கிடைக்கல ம்மா. கல்யாணத்துக்கும் ஆறு வாரம் வந்தேன் தானே. நீங்க எங்களை எதிர் பார்க்காதீங்கம்மா. மஹி அங்க வந்தாலும் இங்க நான் மட்டும் தனியா என்னத்த பொங்கல் கொண்டாட? அவ இருந்தாளாச்சும் சேர்ந்து இங்கையே கொண்டாடுவோம்.” என அத்தனை அசதியிலும் அவன் பேச, ஜெயா உடனே மறுத்துவிட்டார்.
“அதெல்லாம் அவசியமில்லை சுசீ. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்தா நல்லாயிருக்கும்ன்னு சொன்னேன் அவ்வளவுதான். நீயும் குடும்பமா தலை பொங்கலை கொண்டாடணுமில்ல.” என முடித்துவிட்டார். மகன் இல்லாவிட்டால் மருமகளை அழைக்கும் எண்ணம் இருந்தது தான். ஆனால் மகனின் விருப்பம் வேறாக இருக்க உடனே அதற்கு ஒத்துக் கொண்டார்.
மஹிக்கு அவளின் உணர்வுகளை அந்த நிமிடம் வெளிக்காட்ட முடியவில்லை. இதில் என்ன செய்வது என அவள் தவித்துக் கொண்டிருக்க அவன் அரை நொடியில் அந்த பேச்சை முடித்து விட்டான்.
அவளுக்கு நிச்சயம் தெரியும் அவனின் இந்த முடிவு மஹிக்காக மட்டுமே என்று. ‘ஒர்க் பிரம் ஹோம்’ என சொல்லி இரண்டு வாரமேனும் அவன் இந்தியா சென்று வரலாம். ஆனால் அவளால் அது முடியாது. தன்னிடம் பேசாவிட்டாலும் தனக்காகவும் யோசிப்பவனின் மேல், தான் மட்டும் கோபத்தை விடாது பிடித்துக் கொண்டிருப்பது சரியா என அவளின் மனச்சாட்சியின் கேள்விக்கு ஏனோ அவளிடம் பதில் இல்லை.
“சரிப்பா, நீ உடம்ப பாரு.” என்ற ஜெயாவிடம், “கவலைப் படாதீங்க அத்தை. நான் பத்திரமா பார்த்துக்கிறேன். நீங்க ரொம்ப யோசிக்காதிங்க. இன்னைக்கு ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும் அவங்களுக்கு.” என்றாள் மஹிமா.
பேசி முடித்ததுமே மஹி எழுந்து கொள்ள சுசீ மீண்டும் அங்கேயே படுக்கத் தயார் ஆனான். அங்கே மெத்தையில் வந்து படு என சொல்ல நினைக்கிறாள் ஆனால் அவன் நேற்றும் அதிகம் பேசி இருக்க அவளுக்குள் இருக்கும் கோபமும் போராட்டமும் அவளைத் தடுக்க அவனை கேட்கும் எண்ணத்தை கை விட்டு எழுந்து சென்றுவிட்டாள்.
சுசீ அன்று முழுவதும் நல்ல உறக்கத்தில் இருக்க மஹிக்கோ அவர்களின் திருமண வாழ்வின் இன்றைய நிலை குறித்த எண்ணம் மட்டுமே. மற்றவரின் பேச்சிற்கு மதிப்பளிப்பது என்பது அவர்கள் பேசுவதை நாம் சரியென்று ஒத்துக் கொள்வதல்லவா?
அப்படி இருக்க ஜெயாத்தையோ இல்லை உஷாவோ பேசியதற்கு தான் என்றும் மதிப்பளிக்கக் கூடாது என முடிவெடுத்துக் கொண்டாள். சரி மற்றவர்கள் பேச்சை ஒதுக்கலாம். ஆனால் உற்றவன் பேச்சை என்ன செய்ய? சாதாரணமாக எவரிடமும் நாம் சொல்லும் சொற்கள் அல்லவே அவை. அவளின் அடையாளத்தையே கேள்விக் குறியாக்கி இருந்தானே.
‘சுசீ சொல்லியதை சதீஷ் வேறு யாரிடமும் சொல்லி இருந்தால்? அவர்களெல்லாம் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? திருமண பத்திரிக்கையை மின்னஞ்சலில் இணைத்து நான் அனுப்பிய போது சதீஷ் என்னை என்ன நினைத்திருப்பான்?’ என அவளின் எண்ணம் நினைக்கும் திசைகளிலெல்லாம் பயணிக்கும் போதே ‘நிச்சயம் அவன் நம்பியிருக்க மாட்டான்’ என மனதின் மூலையில் ஒரு நம்பிக்கையும் இருந்தது.
அவளின் அழுத்தமான பெண் மனம் நிச்சயம் அவனின் தவறை மன்னித்து மறக்க இன்னும் தயாராகி இருக்க வில்லை. சமாதானம் செய்ய அவன் நினைக்கிறான் என அவளுக்குத் தெரிய வரும் போதெல்லாம் அவளின் கோபம் அதிகமாகிறதே.
அவளும் என்ன செய்வாள்? பேசாமல் இருக்கும் இந்த ஒரு வாரமாக அவனின் பார்வை அவளை கூர்ந்து நோக்கும் போதெல்லாம், ‘நான் பேசியதற்கு கோவப்படும் நீ என்னை என்ன வார்த்தை சொன்னாய்?’ என கேட்பது போலவே இருக்க அன்று அவளும் அதிகமாகவே பேசிவிட்டதை எண்ணி வருந்தினாள். ஆக அவன் உடல் காய்ச்சலில் வீழ்ந்திருக்க, இவள் உள்ளம் காயங்களில் வீழ்ந்திருந்தது.
பஞ்சு மெத்தையில் படுத்திருக்க இன்று ஏனோ அதுவும் முள்ளாய் குத்தும் உணர்வு. இத்தனை நாளும் இல்லாத குற்ற உணர்வு. சுசியிடம் சுட்டிக் காட்டி, பேசி சரி செய்திருக்க வேண்டிய அவனின் தவறை தான் எதிர்வினையாற்றி இன்னுமின்னும் சிக்கலாக்கி விட்டோமோ எனவும் தோன்ற உடல் குலுங்க மனம் தேம்பத் தொடங்கியது.
தேம்பல் வேண்டாமென சொன்ன பாரதியின் வரிகளை மெல்ல மெல்ல முணுமுணுத்தபடியே கண்களை மூடிக் கொள்ள, மூடிய கண்களுக்குள் அவளின் கவிபாரதியின் குரலில் முண்டாசுக் கவிஞனின் வரிகள்.
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டா; தேம்புவதில் பயனில்லை, தேம்பி தேம்பி இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்குமினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!
தேம்பாமை சொன்ன தேம்பாவை கண்ணம்மாவின் கை சேருவானா அவளின் தேன்தமிழ் பாரதி ?