அதன் பிறகும் அவர்களுக்கு ஓய்வில்லை. அனைவரிடமும் ஆசி வாங்கி கோவில் சென்று வந்து சுசீந்திரன் வீட்டில் விளக்கேற்றி பால் பழம் உண்டு என நேரம் தன்போல கரைந்து கொண்டே போனது. இரவு உணவு முடிந்து சுசீந்திரன் அறைக்கு செல்வதற்கு முன்பு அவள் அத்தையின் அறையில் அமர்ந்திருந்தவளுக்கு மெல்ல மெல்ல தனது வாழ்வியல் மாற்றங்கள் எல்லாம் பார்வைக்கு வந்தது.
அடுத்தடுத்த வீடுகள் தான் என்றாலும் இனி இதுதானே அவளின் வீடு. இதுதானே அவள் குடும்பம். இந்த வீட்டின் சுக துக்கங்கள் எல்லாவற்றிலும் அவளுக்கும் இனி பொறுப்பிருக்கிறதே. ‘இந்த வீட்டில் இன்றிலிருந்து நான் விளையாட்டுப் பெண் இல்லை’ என எண்ணங்கள் ஓடும் போதே நிஷா வந்து நின்றாள் அவள் எதிரில்.
“என்ன மஹி இப்பவே கனவா? இன்னும் ஒரு பத்து நிமிஷம் மட்டும் பொறுத்துக்கோ உன்னை உங்காளு கிட்ட கொண்டு போய் விட்டுடுறேன்.” என்றாள் புன்னகையோடு.
“ஏன் க்கா எனக்கு அவங்க ரூமுக்கு போக வழி தெரியாதா? நீங்க கொஞ்சமே கொஞ்சம் வழி விட்டா போதும் நானே ஓடிப் போயிடுவேன்.” என்றாள் நிஷாவைப் பார்த்து கண்ணடித்தபடி.
“அடிப்பாவி, நான் கூட உன்னை என்னவோ நினச்சேன். நீ சின்னப் பிள்ளை உனக்கு எல்லாம் சொல்லித் தரனும், ரொம்ப பயப்படுவ அப்படியெல்லாம். போற போக்கப் பார்த்தா எங்க சுசீ தான் பாவம் போலயே. பாவம்மா எங்க வீட்டு பிள்ளை. ரொம்ப சேதாரம் இல்லாம பார்த்துக்க.” என்றவள் குரலில் கிண்டல் மட்டுமே. கிஞ்சித்தும் ஓரகத்தி உறவு முறையில் வரும் எதிர்மறை எண்ணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.
“ஹ்ம்ம், இருங்க எதுக்கும் யோசிச்சு சொல்றேன்.” என கன்னத்தில் விரல் வைத்து யோசித்தவள், “உங்க கொழுந்தனார் நடந்துக்குற முறையை பொறுத்துதான் நானும் நடந்துக்குவேன். அதனால எனக்கு அட்வைஸ் பண்ணாம போயி அவனுக்கு, தப்பு தப்பு அவருக்கு சொல்லுங்க.” என்றாள் தோரணையாக.
“ஹ்ம்ம் நீ நடத்தும்மா. இன்னைக்கு ஏதோ முடிவோட தான் இருக்க நீயி. உன்னோட வேகத்தை பார்த்தா அரவிந்தனுக்கு தங்கச்சி வர பத்து மாசம் கூட வெயிட் பண்ண வேண்டாம் போலயே. பாஸ்ட் ஃபூட் மாதிரி நாளைக்கு காலைலயே புள்ளையோட தான் வருவன்னு நினைக்கிறேன்.” என்ற நிஷாவை கேலிப் புன்னகையுடன் பார்த்த மஹி,
“நான் என்ன நிஷாவா? வளைகாப்புக்கு ஊருக்குள்ள எல்லாருக்கும் சொல்லிட்டு முதல் நாளே பிள்ளை பெத்துக்க? எனக்கு உங்க வேகம் இல்லக்கா. அப்படி வேணும்ன்னா அதெல்லாம் உங்க கொழுந்தனார் வேகத்துல மட்டும் தான் இருக்கு.” என்றாள் நக்கலாக.
“அடியே போதும் டி. இனி நம்ம குடும்ப மானம் போறதுக்குள்ள அமைதியாகிடுவோம்.” என்ற நிஷாவிடம் “போங்கக்கா, இதெல்லாம் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் அவ்வளவுதான். மத்தபடி,” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தவள், “பில்டிங் ஸ்ட்ரோங், பேஸ்மன்ட் வீக் க்கா.” என்றாள் மெதுவாக.
“எனக்கு தெரியாதா மஹி உன்னை. நானும் உன்ன ரிலாக்ஸ் பண்ண தான் பேசினேன். சரி வா உன்ன கூட்டிட்டு போய் விடறேன். ரெண்டு பேரும் இன்னைக்கு போலவே எப்பவும் ஹாப்பியா இருங்க.” என்று வாழ்த்து தெரிவித்தபடி சுசீந்திரன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அறைக்கு உள்ளே வரும் வரை கூட அவளது மனநிலை என்பது வேறாக இருந்தது. அதுவும் நிஷாவிடம் அந்த அளவிற்கு வாயாடிய பிறகு பதட்டம் என்பது சிறிதும் இல்லாமல் போனது போலிருக்க அவனது அறைக்குள் தனியாக வந்ததும் எங்கிருந்தோ மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது முதலிரவுக்கான ஒருவித பதட்டம்.
வாழ்வின் அடுத்தடுத்த நிலைகள் என்ன என்ற விவரம் எதுவும் தெரியாத பெண் இல்லை அவள். அவளின் பெண் எனும் உணர்வுகளில் நாணமும் அச்சமும் குறைவாகிப் போக அவள் மட்டுமே காரணமில்லையே. அவளுடைய உறவுகள் தந்த நம்பிக்கையும் பாதுகாப்பும் கூட ஒரு காரணம் தானே.
ஆண்கள் என்றாலே ஒடுங்கி மனதில் அச்சத்துடன், மஹிமா வளராமல் இருக்க அவளுடன் வழி நெடுக வந்த ஆண்களும் முக்கிய காரணம் அல்லவா. சமூகத்தில் எத்தனையோ பெண்ணிற்கெதிரான கொடுமைகள் நடந்தேற எங்கும் எதிலும் அவளை தடுமாறவிடாமல் தாங்கியது அவளை சூழ்ந்த அவளின் சமுதாயம் அல்லவா.
இன்றைய காலத்தில் அப்படி ஒரு பெண் வளர்ந்து வாழ்வது என்பது கண்டிப்பாக வரம் மட்டுமே. அந்த வரம் கிடைக்கப் பெற்றவளுக்கும் சிறு தயக்கம் இன்று, மனைவியாகி தன் கணவனை தனியே சந்திக்க, தங்களின் வாழவைத் தொடங்க.
அந்தத் தயக்கமும் சுசீந்திரனை அவனது அறையில் காணும் வரை மட்டுமே. அவளை அறிந்தோ என்னவோ முதலிரவு அறைக்கான பெரிதான ஒப்பனைகள் இன்றி மெல்லிய சுகந்தம் மட்டுமே அங்கு சூழ்ந்திருந்தது. சுசீந்திரனோ அவனது கட்டிலில் அமர்ந்து கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.
அறைக்குள் வந்தவள் கதைவடைத்து கையிலிருந்த பாலையும் மேஜையில் வைத்துவிட்டு அவனருகில் வந்து அமரும் வரை அவளை நிமிர்ந்தும் பார்த்தானில்லை.
‘அப்படி என்னத்த பார்க்குறான் இவன்?’ என எட்டிப் பார்க்க வழக்கம் போலவே கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அருகில் வந்து அமர்ந்ததும் தான் உணர்ந்து அவளை நிமிர்ந்து பார்க்க, நொடி நேரம் அவன் காதல் மனதில் காமதேவனின் களியாட்டம்.
அவனுக்காகவே பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொண்டு வந்திருந்தாள் அவனின் காதல் கண்ணம்மா. மஹிமா அவனிடம் பேசும் வரை அவன் அப்படித்தான் நினைத்தான்.
“என்ன சுசீ அப்படி பார்க்குற? சத்தியமா நானே தான். ஓவர் மேக்அப்ல இருக்கேன், நீ யாரோன்னு பயந்துறாத.” என்று ஏதோ நகைச்சுவை சொன்னது போல அவள் சிரிக்க,
“ஹுக்கும் என் பொண்டாட்டிய உன் புருஷன் ரசிச்சு பார்க்குறது கூட உனக்கு தெரியல கண்ணம்மா.” என்றவனின் கைச்சிறையில் அவள் அமர்ந்திருக்க இருவரின் விழிகளிலும் சில நிமிடம் கலந்திருக்க நண்பன் காதலனெல்லாம் பழையதாகி கணவன் எனும் புது அவதாரம் எடுக்கத் தயாராகியது அவனது காதல் மனது.
அவளின் தோள்களை சுற்றிப் படர்ந்த கையை சற்றே கீழிறக்க அவள் இடையின் மென்மையில் இவன் விரல்கள் வன்மையாய் படிந்தது. மெல்ல நாணத்தால் அவள் நெளிய இவனின் இடை தீண்டும் விரல்களின் வன்மை இன்னும் சற்றே கூடிப் போனது.
இந்த நிமிடங்கள் எல்லாம் காதலாக கணவனும் மனைவியும் கடக்கப் போகும் கனவு நிமிடங்கள் என சுசீந்திரன் நினைக்க அவனின் உணர்வுகள் உச்சம் தொட மெல்ல அவளை நெருங்க அவன் விரல்களின் தீண்டல் அவளின் வெற்றிடையில் படர,
மஹி கூச்சத்தில் சத்தமாக சிரித்துவிட்டாள். அதுவும் அடக்க முடியாத வெடி சிரிப்பு. அவன் செய்வதறியாது அவளின் இதழ்களை இவன் கரம் கொண்டு மூடி, “ஏய் என்னடி இப்படி கத்தி சிரிக்கிற, லூசு. பக்கத்து ரூம்க்கு சத்தம் கேட்கும்.” கடுப்பான குரலில் கோபத்தோடு சொன்னான்.
“ஹா ஹா, சுசீ ரொம்ப கூசுது டா. நீ எதுக்கு இடுப்புல எல்லாம் கை வைக்கிற. கிச்சு கிச்சு மூட்டுற, கூசுது.” என சிரிப்பை அடக்கியபடி அவள் பேச தலையில் அடித்துக் கொண்டான் சுசீந்திரன்.
“அடியேய், அநியாயம் பண்றடி. உலகத்துல ஏதேதோ காரணம் இருக்குடி ஒருத்தனுக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்காம போக. ஆனா, இப்படி கத்தி சிரிச்சு என் ஆசைல மண்ணள்ளி போட்ட சாதனை நீ மட்டும் தான் மஹி செஞ்சுருக்க.” என்று அவளின் கண் பார்த்து பேச நினைத்தாலும் கண்ணைத் தாண்டியும் அவனின் பார்வைகள் அலைப்புற அவளின் சிரிப்பு சத்தம் மெல்லக் குறைந்தது.
அவன் பார்வையில் பாவை அவள் மையல் கொள்ள மீண்டும் அவன் அணைப்புக்குள் இணைந்தவளின் இதழ்களும் அதன் இணையுடன் இணைய அங்கே உணர்வுகள் மட்டுமே பேசிக் கொண்டது.
நொடிகள் கடந்து வினாடிகளாகி சில வினாடிகளில் அவள் முகம் செந்தூரமாய் சிவக்க, வினாடிகள் கணங்களைக் தொட இணைந்த இதழ்கள் மீண்டும் பிரியும் முன்னே அவன் மூடிய இமைகள் விரிய அங்கே அவளின் முகம் காட்டிய பாவனைகளில் அவன் கண்ணம்மாவின் மேல் இன்னும் பித்தனாகிப் போனான்.
அன்று முத்தத்தில் தொடங்கிய காதல் இன்று மோக ராகம் இசைத்து இன்னும் இன்னும் அவளைத் தேட, அவன் இதழ்கள் அவளின் இதழ் பிரிந்து இன்னும் நெருங்கி அணைத்து அவளின் கழுத்து வளைவில் சரண்புக மீண்டும் அவள் கூச்சத்தில் நெளிந்து சத்தம் வர சிரித்தாள். மெல்ல அவள் விலக இருவரின் பார்வைகள் மட்டும் விலகலை விலக்க, மௌனம் கலைத்தாள் பாரதியின் கண்ணம்மா.
“கூசுது சுசி.” என அவள் சொல்லும் போதே அவளின் விழி தாழ்ந்து அவள் விரல் பார்க்க “உனக்கும் வெட்கம் எல்லாம் வருது மஹி” என்றவன் குரலே அவளுக்கு இன்னிசையாய் இருக்க “பாடுவியா?” என்றால் அவளின் கூடல் பொழுதின் கூச்சம் குறைக்க.
“பாடணுமா? அதுவும் இப்போ?” என்றபடி விழி மூடி யோசித்தவன், “இப்போ என் கண்ணம்மாவுக்கு அவ எழுப்பிய மோகன நாதத்திற்காவே”, என்றபடி பாடல் வரிகளை மாற்றி பாடத் தொடங்கினான்.
பாடலில் காணாத பேரின்ப வெள்ளம்
கூடலில் நாம் காண தானாக துள்ளும்
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி நாதம் எழுந்ததடி
கண்ணம்மாவின் செவிகளை மட்டுமே சேர்ந்த அவனின் இசையில் அவள் சிணுங்கல்கள் எல்லாம் ஸ்ருங்காரங்கள் ஆக முத்தத்தின் ஈரத்தில் அவர்களின் முதல் கூடல்.
“கண்ணம்மா” சுசியின் குரலா இது? மென்மையிலும் மென்மையாய் ஒலிக்க, காந்தமாய் அவ்வொலி அவளை இழுக்க, “ஹ்ம்ம்” என்பதும் இத்தனை சிரமமா?
“கஷ்டமா இருக்கா கண்ணம்மா?” மீண்டும் மெல்லிசை.
“ம்ம்ம்ஹும்ம் பாரதி, ரொம்ப இஷ்டமா இருக்கு.” என அவள் பிதற்றிய மொழிகள் மீண்டும் அங்கே மோகத்தீ மூட்ட இரவெல்லாம் இனி இவர்களுக்கானது.
இன்று மறுபடியும் கூச்சத்தால் குத்தித்தவளுக்கு அவர்களின் கூடல் பொழுதுகள் நினைவில் வர சாளரத்தின் ஓரம் நின்றிருந்தவளை தன் கரத்தால் தழுவிக் கொண்டான்.
விழிகளில் வழிய காத்திருந்த நீரைக் கண்டவன், “எல்லாத்துக்கும் ரொம்ப சாரி மஹி. எனக்கு இதெல்லாம் ஏன்னு இன்னமும் புரியல. ஆனா என் தப்பு உன்னை ரொம்ப பாதிக்குதுன்னு மட்டும் நல்லா புரியுது டா.” என அவளின் கன்னம் தாங்கி சொல்லும் போதே கண்ணீர் கரை கடந்து அவன் விரல் தீண்டியது.
“ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் டி உன்னை.” என்றபடி அவளை இறுக அணைத்தவனுக்குள் அடங்கினாலே தவிர அவள் அசையவில்லை.
காத்திருப்புக்கள் கனிய மீண்டும் கண்ணம்மாவின் கரம் சேருவானா கவி பாரதி?