“என்ன மச்சி சாரி கேட்கணுமா? கேளும் கேட்டுத் தொலையும்” என்று தோள்களை குலுக்கியபடி பேசியவனை முதுகில் தட்டியவன், “ஏன் டா நான் மட்டும் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணுமா? உனக்கு உன் தப்பு என்னன்னே விளங்கலையா?” என்றவனை சுசி புரியாத பார்வை பார்க்க
“நம்ம பேசினதுக்கப்புறம் நான் கொஞ்ச கொஞ்சமா உங்க கேங்ல இருந்து விலகிப் போனேன். ஆனாலும் காதல் கல்யாணம்ங்குற வார்த்தை கேக்கும் போதெல்லாம் உங்க ஞாபகம் வரும். அதுவும் உன்னோட மஹிமாக்கு உன் காதல் புரிஞ்சுதான்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம்.
காலேஜ் முடுச்சதுக்கு அப்புறம் உங்க பர்சனல் எல்லாம் கேட்குற அளவுக்கு எனக்கு யாரும் கிளோஸ் இல்ல. அப்பப்ப ஞாபகம் வரும். உங்க கல்யாண இன்விடேஷன் மஹி அனுப்பவும்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதி.”, என அவன் பேசி கொண்டே போக, “மச்சி இத சொல்லு ஃபஸ்ட் நான் என்ன தப்பு செஞ்சேன்?” என்றான் மனதில் குழம்பியபடி.
‘மஹியும் இதைத்தானே சொல்கிறாள். நான் செய்தது தப்பு என்று. அன்று அவனிடம் பேசிய போது இருந்த எனது மன நிலையை இவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்களா? இவனும் அவளை மாதிரியே பேசுறான், என்று நினைத்தபடி அவனை கூர்ந்து நோக்க அவனோ இவனை தீ பார்வை பார்க்கத் தொடங்கினான்.
“மச்சி நிஜமா தெரியலடா, நான் தப்பா பேசினேன். ஆனா அது அந்த நேரம் எனக்கு வேற என்ன சொல்லி உன்ன ஸ்டாப் பண்ணனும்ன்னு தெரியாததுல சொன்னது. அதுக்கு சாரி கேக்க சொல்றியா?” என்றான் சதீஷ் சொன்னது புரியாமல்.
“நீ உண்மையிலே லூசா டா? இல்ல உனக்கு அக்கா தங்கச்சி இல்லாததுனால உனக்கு பொண்ணுங்கள புரியலையா? சரி நேராவே கேட்குறேன் இரு. நீ சொன்னதை நான் காலேஜ்லயோ இல்ல வேற அவ சொந்தத்துலயோ எங்காவது யார்கிட்டயாவது சொல்லி இருந்தா என்னடா நடந்திருக்கும்?
உண்மை அது இல்லன்னாலும் அவளும் அவ குடும்பமும் இதெல்லாம் கேட்டா என்னடா ஆகிருப்பாங்க? அதுவும் நீயே சொன்னன்னு தெரிஞ்சா? இத கூட யோசிக்க மாட்ட நீ? என்னை கழட்டிவிட உனக்கு அந்த நேரம் காரணம் கிடைக்கலன்னா என்ன வேணா பேசுவியா மச்சி? இது உருவ கேலி இல்லையாடா?” என்று அவன் கேட்கவும் தான் அவனுக்கு அவன் பேசியதன் இன்னொரு கோணம் விளங்கத் தொடங்கியது. அவனது கேள்வியே இதயத்தை கத்தி கொண்டு அறுக்க அந்த நேரம் அவனது இதயத்தில் ஒரு பெரும் வலி.
‘இதெல்லாம் நான் என்றும் நினைக்கவே இல்லையே? ஆம் இவன் கோபத்தில் யாரிடமாவது சொல்லி இருந்தால்? கல்லூரியில் என்றாலும் அவளுக்கு எவ்வளவு மன உளைச்சல். ச்ச, எனக்கு ஏன் இதெல்லாம் தோணவே இல்லை’ என்றவன் முகம் சுருங்க கவலை அவன் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.
“மச்சி இதெல்லாம் உனக்கு புரியணும்ன்னு தான் டா சொன்னேன். இத நான் பேச நினைச்சது நம்ம காலேஜ் படிக்கும் போது. ஆனாலும் இதுக்கெல்லாம் எனக்கு அப்போ வாய்ப்பு கிடைக்கல.
ஆனா இப்போ உன்னையும் அவளையும் பார்க்கணும், அதுவும் நீ தேடின காதல் அவ கண்ணுல தெரியுதான்னு எனக்கும் பார்க்கணும்ன்னு தோணுச்சு. அதான் வந்த வாய்ப்பை பயன் படுத்திட்டேன்.
இப்பவும் உனக்கு நான் வந்தது விருப்பமில்லைன்னு எனக்கு தெரியும் டா.” என சதீஷ் சொல்லவும், “தேங்க்ஸ் மச்சி, எனக்கு என் தப்ப புரிய வச்சதுக்கு. இவ்வளவு நாளும் எனக்கு இப்படி ஒரு சைட் இருக்குன்னு யோசனை வந்ததில்லை. சாரி டா.” என்றவன் நண்பனை இறுகி கட்டிக் கொள்ள அவனும் சுசீந்திரனை அணைத்துக் கொண்டான்.
“டேய், போ போ உன் பொண்டாட்டிய கட்டி பிடி, என் சட்டையை கசக்காத.” என்று சதீஷ் சூழலை இலகுவாக்க, “ஆனாலும் மச்சி, நீ என்ன குரங்குன்னு சொன்னதை கூட மன்னிப்பேன் நா குறுக்க வந்தேன்னு சொல்றியே டா அத என்னால மன்னிக்கவே முடியாது. நானா மச்சி உனக்கு குறுக்க வந்தேன்? நீ தான் டா என்ன டென்ஷன் ஏத்துன.” என்றான் சிரித்தபடி.
“விடு மச்சி, அதெல்லாம் நமக்கு புதுசா. அதுக்கப்புறம் நம்ம எப்பவும் அப்படித்தானே பேசிக்கிட்டோம். இனியும் அப்படிதான்.” என்று மேலும் நண்பர்கள் தங்கள் பேச்சைத் தொடர்ந்தனர்.
ஆனால் அதெல்லாம் கேட்டுக் கொண்டு அங்கே நின்றிருந்தவளுக்கு மனம் உடைந்தது போல் கண்களும் உடைப்பெடுத்தது.
ஆம், சமையலறையை சுத்தம் செய்து பாத்திரங்களை அதற்கான இயந்திரத்தில் (dish washer) போட்டவள் அவர்களிடம் வர ‘பசங்க கண்ண பார்த்து பேசுற மஹிய எனக்கு ரொம்ப பிடிச்சுது.’ என்று சதீஷ் பேச இதெல்லாம் ஏன் இப்போது என கதவருகில் வந்து நின்றவள் அவர்களின் மொத்த பேச்சையும் கேட்டிருந்தாள்.
அவளுக்கு தன் கணவனின் அன்றைய நிலை முற்றும் முழுவதுமாய் விளங்கியது. ‘எத்தனை முறை சொன்னான், என் சூழ்நிலையில் என்னால் வேறு ஏதும் சொல்லித் தடுக்க முடியவில்லை என்று. என் மனம் கேட்க வில்லையே. ஒருவேளை அவன் தடுத்திருக்காவிட்டால், அவனும் அவன் காதலை என்னிடம் சொல்லி, ச்ச என்னவெல்லாம் நடந்திருக்கும். சதீஷ் வாழ்க்கையும் சேர்ந்தல்லவா கெட்டிருக்கும்.’ என மனதுக்குள் பேசியவளின் மனது சொல்லியது, ‘தவறு என்றாலும் அவன் தவறல்லவா பல அபத்தங்களை தடுத்து அவர்களது இந்த அழகான வாழ்க்கையை அவர்களுக்கு பரிசளித்திருக்கிறது.’ என்பது தான்.
மேலும் அங்கு நிற்காமல் கூடத்தின் ஒற்றை சாய்விருக்கையில் வந்து அமர அங்கிருந்த ஜாதி மல்லியின் சுகந்தத்தில் மனம் அவள் கண்ணனை நாட, அவளின் கைபேசியில் கண்ணம்மா தொகுப்பை ஓடவிட்டு கண்மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
நேரம் வெகுவாக கடந்திருக்க, நெடுநேரம் கழித்து உள்ளே வந்தவர்கள் கண்டது கண்மூடி ஓய்ந்த ஓவியமாய் சாய்ந்து இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த மஹிமாவைத்தான்.
“நான் தான் சாரி கேட்கணும் மஹி. மணி பன்னண்டாகப் போகுது. இன்னும் உங்க வீட்ல உங்க தூக்கத்தை கெடுத்துட்டு இருக்கேன்.” என்றான் சதீஷ்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சி, ஃப்ரைடே நைட் தானே. நீ எங்க இனி இந்த நைட்ல ஹோட்டல் போன, பேசாம இந்த சோபாலயே தூங்கு மச்சி காலைல கிளம்பு.” என்று ஒரு வேகத்தில் சொல்லிவிட பின்புதான் நினைவு வந்தது தான் எங்கு தூங்க என்று.
“அதெல்லாம் வேணாண்டா, நான் கிளம்புறேன்.” என்றவனை தடுத்த மஹி “இருந்துட்டு காலைல போ சதீஷ். உன்னைய இப்படி நடு ராத்திரில தொரத்திவிட எனக்கும் பாவமா இருக்கு.” என்றாள்.
அவளுக்குப் புரிந்து தான் சொன்னால், அவன் தங்கினால் அடுத்து என்ன நடக்கும் என்று. ஆனாலும் அவளுக்கு அவளாக அவனை தன்னோடு படுக்க வா என அழைக்க கூச்சம் தடுக்க கிடைத்த வாய்ப்பை பிடித்துக் கொண்டாள். மனதின் கடைசி துளி கோபமும் கரைந்திருக்க இனி அவள் அவனவளுடன் சேர தடை ஏது?
“உனக்கு இந்த சோபால படுக்க கஷ்டம்ன்னா சொல்லு மச்சி, நான் உன்னை ட்ரோப் பண்றேன்.” என்றவனிடம் “சரிடா தங்கிட்டு காலைலயே போறேன்.” என்று சொல்ல அவனுக்கு அனைத்தையும் தயார் செய்து கொடுத்துவிட்டு இருவரும் அவளின் அறைக்குள் வந்தனர்.
மஹிமாவின் இதயமோ சந்தோஷக் கூச்சலிட சுசியின் மனமோ ‘மவனே கண்ட்ரோல கைவிட்டு அவளை மறுபடி அழுக விட்டுடாத.’ என அவனையே எச்சரித்தது.
அறைக்குள் வந்தவளோ தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவு உடைக்கு மாறி வரும் போதே சுவற்றுப் பக்கம் திரும்பி படுத்திருந்தான் சுசீந்திரன்.
‘ஓஹ், என் பக்கம் திரும்பாம சுவரோடயே குடும்பம் நடத்த போறானா?’ என மனதுக்குள் நினைத்தவள் தானும் ஏறி அவனருகில் மிகவும் நெருங்கி படுத்துக் கொண்டாள்.
அவளின் நெருக்கம் உணர்ந்தவனோ, ‘ஹையோ கடவுளே, இவ வேற கிட்ட வந்து தூங்குறாளே, என் கை கால் எல்லாம் என் சொல் பேச்சு கேட்காம எதுவும் செஞ்சு வைக்காம இருக்கணும் கடவுளே கிருஷ்ணா காப்பாத்து.’ என வேண்டிக் கொண்டவன், ‘ஹையோ கிருஷ்ணாவா வேண்டாம் வேண்டாம். அவரு என் ஹார்மோன் எல்லாம் ஹைப்பர் ஆக்டிவ் ஆக்கிடுவாரு.
இன்னைக்கு நம்ம ஆஞ்சநேயா, பிள்ளையாரப்பா, ஐயப்பா எல்லா பேச்சுலர் சாமியையும் கேட்டுக்குறேன். என்னை எப்படியாவது காப்பாத்தி விட்டுடுங்க. மறுபடி நான் மயங்குனா இனி அவ நிஜமாவே கோவை சரளா ஆகிடுவா. அப்புறம் என் பாடி தாங்காது.’ என இருக்கும் தெய்வங்களை எல்லாம் அவன் வேண்டிக் கொண்டிருக்க, அருகில் இருந்தவள் மன நிலையோ அதற்கு எதிர் மாறாக இருந்தது.
‘பிள்ளையாரப்பா எப்படியாவது இன்னிக்கு எங்க ப்ரோப்லம் எல்லாம் சரி ஆகிடனும்’ என நினைத்தவள், ‘ச்ச, பிள்ளையார் வேண்டாம். கிருஷ்ணா, நீ தானே லீலையின் நாயகன். இன்னைக்கு உன் காதல் லீலை இங்கயும் நடக்கட்டும்’ என மனதுக்குள் மன்றாடினாள்.
கால சக்கரத்தில் பெரிய முள் ஒரு முழு வட்டமடித்தும் இருவருக்கும் உறக்கமும் இல்லை, அவர்கள் நிலையில் மாற்றமும் இல்லை.
நேரம் கரையக் கரைய மஹியின் மனது வெகுவாய் அவனைத் தேடத் தொடங்க விட்டத்தை நோக்கிய படி படுத்திருந்தவளின் கண்களும் கலங்க, மெல்ல அவன் புறம் திரும்பி அவனை அணைக்க நினைத்து அவளின் வலது கையை அவன் மேல் படரவிட்டாள்.
அவள் கை அவன் மேல் படரவுமே மின்சாரம் தாக்கியது போல் எழுந்து அமர்ந்தவன், “சதீஷ் வெளில தூங்குறான். அவனுக்கு டாய்லெட் யூஸ் பண்ணனும்னா நம்ம ரூம் கதவ தான் தட்டுவான். பேசாம தூங்கு மஹி.” என கடகடவென ஒப்பிப்பது போல பேசியவன் மீண்டும் சுவற்றின் புறமே திரும்பி படுத்துக் கொள்ள மஹியின் கலங்கிய கண்கள் என்ன முயன்றும் விழி நீரை கொட்டியே விட்டது.
தன் கையை அவன் மீதிருந்து எடுத்துக் கொண்டவள் அவனுக்கு எதிர் புறம் திரும்ப அழுகை கட்டுக்கடங்காமல் பொங்கியது.
நான் அவன் என பாகுபாடில்லாமல் இருவரும் தவறு செய்திருக்க இன்று தள்ளி நின்றது எங்களின் காதல் வாழ்க்கை அல்லவா? என மனம் முழுவதும் வலி பரவ முயன்றும் தடுக்க முடியாமல் அழுகைவர அவளின் தேகம் மெல்லக் குலுங்கியது.
அவளின் உடல் அசைவும் மெல்லிய விசும்பலும் அவனை அசைக்க எழுந்து அவள் புறம் திரும்பியவன், “மஹி ப்ளீஸ், எல்லாமே நாளைக்கு பேசலாம் இப்ப வேண்டாம் டா. சொன்னா கேளு. நான் உன்னை கட்டிக்க வேண்டாம்ன்னு சொல்லல. என்னால என்னை ரெஸிஸ்ட் பண்ண முடியாது டா. ப்ளீஸ் இன்னைக்கு ராத்திரிக்கு மட்டும் எதுவும் பேசாத. வேற எதுவும் செய்யவும் செய்யாத.” என அவன் சொல்லும் போதே அவளுக்கும் அவர்கள் நிலைமை புரிந்தாலும் அவளுக்கு அவனின் இறுகிய அணைப்பு தேவைப்பட்டது.
அவனிடம் எதுவும் பதில் சொல்லத் தோன்றாமல் அவள் மீண்டும் திரும்பிப் படுக்க சுசீந்திரனுக்கும் அவளின் அருகாமையும் மனமும் வெகுவாய் தாக்க அடுத்த நொடியே அவளை இழுத்து அவனின் தோள் வளைவில் கொண்டு வந்திருந்தான்.
அவனின் வேகத்தில் அவள் தடுமாற மெல்ல அவள் முகம் பற்றியவன், “கண்ணம்மா, இன்னைக்கு மட்டும் என் பாட்டு கேட்டுட்டு தூங்கிடுடா. நாளைக்கு எல்லாம் உனக்கும் எனக்கும் தூக்கம் இருக்காது.” என அவளின் காதுகளில் குறும்பாய் முணுமுணுத்தவன் அவளின் பதிலைக் கூட கேட்காது மெல்லிய குரலில் பாடத் தொடங்கினான்.
பின்னோக்கி காலம் போகும் எனில் உன் மன்னிப்பை கூறுவேன் கண்ணோக்கி நேராய் பார்க்கும் கணம் பிழை எல்லாமே களைவேன்
நகராத கடிகாரம் அது போல் நானும் நின்றிருந்தேன் நீ எங்கு சென்றாய் கண்ணம்மா
தேகத்தின் தேடல் தாண்டி, காதல் தேவைகளின் தேடல் இருக்க இருவருக்குள்ளும் இருந்த தடைகள் எல்லாம் கரைந்து காற்றோடு கலந்திருக்க அந்தகாரம் பூசிய அந்த இரவு அவர்கள் உறவின் விடியாலாய்.
கண்ணம்மாவின் காதல் பாரதியின் கைசேர காலை வரை காத்திருப்போம்.