வீட்டினுள் சுசீந்திரன் நுழைய மஹிமா தன் மடிக்கணிணியோடு ஒற்றை சாய்விருக்கையில் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்தவன் உடை மாற்றி வந்து அவளின் எதிரே இருந்த நீண்ட இருக்கையில் அமரும் வரை இருவரிடமும் எந்த பேச்சும் இல்லை.
வெளிப் புற பேச்சுக்கள் தான் இல்லையே தவிர இருவருக்குள்ளும் ஓயாத அலையாய் இணையிடம் பேச வேண்டியவைகள் மனதிலும் புத்தியிலும் நிறைந்திருந்தது.
மஹிமா கணினி திரையில் கண்கள் இருந்தாலும் நொடிக்கொருமுறை அவனை பார்ப்பதும் பின் கணிணியை பார்ப்பதும் என்றிருக்க சுசீந்திரனுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை.
“என்ன மஹி எதுவும் என்கிட்டே சொல்லனுமா? நான் வந்ததிலிருந்து உன் கண்ணு என் மேலதான் வேலை பார்க்குது.” என்றான் முகத்தில் ஒரு புன்முறுவலோடு.
“ஹ்ம்ம், நேத்து உன் ஃபிரன்ட் வந்தான். என்னவோ ரொம்ப நேரம் தனியா பேசுனீங்களே, என்ன பேசுனீங்கன்னு கேட்கலாமா வேணாமான்னு ஒரு யோசனை?” என்றாள் எதுவும் அறியாதவள் போல.
“ஹ்ம்ம், சும்மா தான். பழைய கதை எல்லாம் அப்படியே,…” என்றவன் “நான் அன்னைக்கு அவன்கிட்ட அப்படி பேசி இருக்க கூடாதுன்னு சொன்னான். நேத்து அவன் சொல்லவும் தான் கொஞ்சம் புரிஞ்சுது.” என்றான் தன் தவறை எண்ணி மனம் நொந்தபடி.
“ஓஹ், அப்ப நீ அன்னைக்கு ஏன் அப்படி பேசின சுசி? அவன் என்ன வேணும்ன்னா சொல்லி இருக்கட்டும் அதுக்காக நீ என்னை வாய்க்கு வந்தபடி பேசுவியா? நீயே இப்படி பேசுனா மத்தவங்க என்ன பேசுவாங்கன்னு யோசிச்சியா?” என்றாள் வேதனையாக.
“மஹி, நான் உனக்கு சொல்றேன். ப்ளீஸ் என்னை என் மனநிலைல இருந்து புரிஞ்சுக்க ட்ரை பண்ணு கண்ணம்மா.” என்றபடி அவளருகில் சென்றவன் அவளது மடிக்கணிணியை வாங்கி மேசையில் வைத்துவிட்டு அவளையும் தனது நீண்ட சாய்விருக்கையில் அமர்த்திக் கொண்டான்.
அருகே அவள் அமரவும் அவளது இடது கையை எடுத்து தனது கரங்களுக்குள் புதைத்துக் கொண்டான். அவள் அவனின் முகம் பார்க்க, அவள் நெற்றியில் நீண்டிருந்த முடிக் கற்றையை ஒரு கையால் ஓரமாக ஒதுக்கி விட்டு அவளது கண்களை நேராக நோக்கி பேசத் தொடங்கினான்.
“எனக்கு உன் மேல காதல் வந்து பல வருஷம் ஆகியும் நான் என்னைக்கும் அதை வெளிய காட்டிக்கல. ஏன்னா உனக்கு என் மேல காதல், அடி மனசுல ஒரு துளி சஞ்சலம் கூட இல்ல.
அப்படி இருக்கும் போது தான் நீ அன்னைக்கு என் கன்னத்துல முத்தம் குடுத்த. நீ உன்னோட தாட்ஸ் ஷேர் பண்ணத்தான் குடுத்த, அதுல கொஞ்சமும் தப்பான எண்ணம் எதுவும் இல்ல. அதெல்லாம் நீ உணரவும் இல்ல. ஆனா எனக்கு அது அப்படி இல்லையே.
நான் காதலிக்கிற என்னோட காதலி, அவ எனக்கானவள்ன்னு என் மனசு சொன்ன பொண்ணு.
அப்படி இருக்கும் போது என் கனவுல வெந்நீர் கொட்டுனது போல அவன் வந்து உன் மேல விருப்பம்ன்னு சொன்னா என் நிலைமை எப்படி இருக்கும்? மனசு முழுக்க ஃபஸ்ட் நைட் கனவுல இருக்க ஒருத்தன செத்த வீட்டுக்கு கூட்டிகிட்டு போகுறா போல இருந்துச்சு. அதுவும் அவன் அன்னைக்கு பேசினதெல்லாம்,
ச்ச, உணர்வில்லாம நீ கொடுத்த அந்த முத்தம் போல, உணர்வோட மனசெல்லாம் காதலோட நீ தரப் போற முதல் முத்தம் பத்தி நான் யோசிச்சா அவன் வந்து எனக்கு அவளை பிடிக்கும் போல தோணுதுன்னு சொன்னா எப்படி இருந்துச்சு தெரியுமா?
அப்படியே ரெண்டு அறை விடலாம் போல இருந்துச்சு. அதுவும் பல்லு எல்லாம் கழண்டு கையில விழுகுற மாதிரி. நானே எப்பவாச்சும் அவளுக்கு என் மேல பீலிங்ஸ் வராதான்னு இருக்கும் போது ஏன்டா என்னை சாகடிக்கிறீங்கன்னு திட்டணும் போல இருந்துச்சு.
ஆனா என் நிலைமையில சதீஷ திட்டவோ அடிக்கவோ என்னால முடியாதே. நா அவனை என்ன செஞ்சாலும் அவன் என்னை திருப்பி ஒரு கேள்விதான் கேட்பான். ‘அவ யார் உனக்குன்னு.’ அன்னைக்கு அவன் என்னை கேள்வி கேட்டா எனக்கு அதுக்கு கண்டிப்பா பதில் இல்லையே. ஃபிரண்ட்ன்னு சொன்னாலும் உன் வாழ்க்கைக்கு நான் முடிவெடுக்க முடியாதே.
அதிலயும் அவன் அவங்க வீட்டுக்குத் தெரியும், ஒரே ஜாதீன்னெல்லாம் பேசும் போது எனக்கு ஒரே பயம். எங்க அவன் சொன்னபடி நடந்து நீ எனக்கு கிடைக்காம போயிடுவியோன்னு ஒரு நடுக்கம்.
அது எல்லாத்தையும் தாண்டி நூத்துல ஒரு வாய்ப்பா நீயும் அவனுக்கு ஓகேன்னு சொல்லிட்டா? என்னால நினச்சு கூட பார்க்க முடியல.
நீ என்னோட கண்ணம்மான்னு என் மனசெல்லாம் சொல்லி சொல்லி எனக்கு அதுவே பதிஞ்சு போச்சு. இப்ப திடீர்ன்னு ஒருத்தன் வந்து என்னென்னவோ சொல்லவும் என்னால அதை பொறுத்துக்கவே முடியல.
என்ன சொன்னா அவன் திரும்ப இந்த பேச்சை எடுக்கவே மாட்டான்னு யோசிக்கும் போது என் மர மண்டைல அந்த நிமிஷம் அந்த யோசனை தான் தோணுச்சு. உன்னை எப்பவும் எல்லாரும் பசங்களாட்டம்ன்னு கிண்டல் பண்றது எனக்கும் தெரியும் தானே. அதயே சொன்னா என்னன்னு தான் சொன்னேன். ஆனாலும் அவன் நம்புவானான்னு யோசனை வேற. அதுனால அவனுக்கு சந்தேகம் வராத மாதிரி நீ வயசுக்கு வரலன்னு சொன்னேன் மஹி.” மூச்சடக்கி அனைத்தையும் சொன்னான். நீண்ட வாக்குமூலம் போல அவன் பேச குறுக்கே எதுவும் சொல்லாமல் அவன் கண்களை பார்த்தபடி அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள் மஹிமா.
பெருமூச்சொன்றை வெளிவிட்டவன் தொடர்ந்து அவனே, “உனக்கும் தெரியுமா? நம்மளுடைய ஏமாற்றம் எதிலங்குறத பொறுத்து தான் நம்ம மனசு என்ன செய்யலாம்ன்னு முடிவு எடுக்கும். அப்படி அன்னைக்கு நான் இருந்த நிலமைல அந்த முடிவை தான் என்னால எடுக்க முடிஞ்சுச்சு. எனக்கு அந்த நிமிஷம் அது மட்டும் தான் தோணிச்சு. சத்தியமா அவன் குடுத்த அந்த அழுத்தத்துல உன்னைபத்தி சொன்னா அவன் கண்டிப்பா விலகிடுவான்னு சொன்னேன். அதே போல அவனும் அந்த பேச்சை அதோட விட்டுட்டான்.” என்று பேசிக் கொண்டிருந்தவனை கை நீட்டி தடுத்தவள், “ஆக உன்னோட மர மண்டைல அன்னைக்கு இந்த யோசனை மட்டும்தான் வந்துச்சுன்னு ஒத்துக்குற? அது என்னை எவ்வளவு பாதிக்கும்ன்னு கொஞ்சமும் யோசிக்கல நீ? உனக்கு உன்னோட காதல் முக்கியம். அது என்னை எவ்வளவு உடைச்சாலும் உனக்கு கவலை இல்ல அப்படித் தானே?” என்றால் அவன் முகம் பார்த்து தீர்க்கமாக.
மஹிமாவின் முகம் பார்க்க வெட்கி தலை குனிந்து கொண்டவன் அவளின் பற்றிய கைகளில் பார்வையை பதித்து “மஹி, உனக்கு பாரதியோட பகைவனுக்கு அருள்வாய் பாட்டு தெரியுமா? அதுல
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? – நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ? – நன்னெஞ்சே!
அப்படீன்னு வரிகள் இருக்கு. பல நாள் இரவுல என் தூக்கம் கெடுக்குற வரிகள் இது. அதிலயும் நீ கோவமா இப்போ என்ன விட்டு பிரிஞ்சு வந்ததும், இப்படி முடி எல்லாம் வெட்டி டாம் பாயா என் முன்னாடி நிற்கும் போதும் என் மனசு கோடி முறை உச்சரிச்ச வரிகள் இது.
எல்லாரும் உன்னை சொல்லும் போது அவனுங்க கிடக்கானுங்கன்னு உன்னை தாண்டி வர சொன்ன நானே அதே பொய்ய சொல்லி தான் என் காதலை காப்பாத்தினேன்னு நேத்து வரை நம்பினேன் மஹி.” என்றவனை பார்த்துக் கொண்டிருந்தவள், “ஏன் நேத்து என்ன நடந்துச்சு? உன் பொய்ய அவன் நம்பலையா? நீ முட்டாள் மாதிரி பேசினா நான் நம்புவேனான்னு கேட்டனா?” என்றாள் ஏளனம் ஏறிய குரலில்.
“அப்படி மட்டும் கேட்டிருந்தா பரவா இல்ல மஹி. நீ சொல்லுவியே உன் தப்பு உனக்கு தெரியலயான்னா? அத அவன் சொன்னான். ஒரு வேளை அவன் அதை வெளியில் சொல்லி இருந்தா? அப்படின்னு கேட்டான். சதீஷ் கேட்டதுமே நெஞ்சு பதறீடுச்சு.
எனக்கு இத்தனை நாளா இதெல்லாம் தோணினதில்ல. எனக்கு தெரிஞ்சதெல்லாம் என் காதலுக்கு குறுக்க வந்தவனை தடுத்தாச்சுங்குற ஒரே எண்ணம் தான்.” எனும் போதே கண்களில் கலக்கம் சூழ மஹியை நிமிர்ந்து பார்த்தான்.
“ஆக உன் தப்ப நீ கண்டு பிடுச்சுட்ட. இனி என்ன செய்ய போற?” என்றவளை பார்த்தவன், “அன்னைக்கு நிலமைல எனக்கு என் காதல் வேணும், அத யாருக்கும் விட்டு குடுக்க கூடாதுன்னு ஒரே நினைப்பு மட்டும் தான் இருந்துச்சு.
அதுக்காக நான் தெரிஞ்சே தப்பு செஞ்சேன். ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு தெரியாமலே செஞ்சுட்டேன். இன்னைக்கு அதுக்கான தண்டனை அனுபவிக்கிறேன்.
உன்னை இன்னைக்கு இப்படி பாக்குறேன்ல்ல, எனக்கு இதை தாண்டி வேற என்ன தண்டனை கிடைக்க முடியும்? உன் மனச உடைச்சுட்டேன்னு எனக்கு காலத்துக்கும் தோணும் மஹி.” என்றவன் கண்களில் கண்ணீர் சேர மஹிக்கும் மனதுக்குள் தவிப்பு.
“ஹ்ம்ம், மனசு அது உடைஞ்சு தான் போச்சு டா. எல்லாரும் செஞ்ச தப்ப நீயும் செஞ்சங்குற வருத்தம் ரொம்ப அதிகம் சுசீ. மத்தவங்க என்னை பார்த்து ‘பிளாட் ரோடு டி நீ, உன்னை எவன் பார்ப்பான்’, ‘இப்படி இருக்க ஆம்பளையாட்டம்’, ‘ஏதாவது ஒரு அங்கிள்ல பொண்ணு மாதிரி இருக்கணும்’ இன்னும் எண்னென்னமோ பேசினாலும் நான் அதெல்லாம் கண்டுக்குறதில்ல.
ஆனா அதெல்லாம் என் மனசையும் இவ்வளவு நாள் பாதிச்சு இருக்குன்னு எனக்கு என்னோட ரியாக்ஷன்ல தான் தெரிஞ்சுது. ஏனோ நீயும் இப்படி எல்லாம் பேசினுங்குறது என்னால ஏத்துக்க முடியல சுசி. அப்பவும் வீட்டை விட்டு எல்லாம் வந்திருக்க மாட்டேன். ஆனா எல்லாமே எனக்கு சாதகமா இருக்கவும் தனியா வந்துட்டேன்.
வராம இருந்திருந்தா ஒருவேளை இன்னும் உன்னை ஹர்ட் பண்ணீருப்பேன் சுசீ. எனக்கும் தோணும் நான் செஞ்சது தப்புன்னு. ஆனாலும் மனசுல ஒரு கொதிப்பு. அதெப்படி என் பாரதி தப்பு செய்யாலாம்ன்னு,..” மஹி பேசும் போதே குறுக்கிட்டான் சுசீந்திரன்.
“ஏன் மஹி இன்னும் நான் உன்னோட பாரதின்னு உனக்கு ஞாபகம் இருக்கா? என்ன நீ கடைசியா எப்ப அப்படி சொன்னன்னு கூட நினைவுல இல்ல. ஏன் மஹி?” என்றான் சுசீந்திரன் சோகமாக.
நாட்கள் பல கடந்து கணவனாக காதலனாக அவன் உணர்வுகள் உயிர் பெற, உடலெங்கும் அவள் முத்தம் தின்னும் வேட்கை பெறுக வெளியில் எதுவும் சொல்லாது காத்திருந்தான். மீண்டும் அவளை நெருங்கி அவள் நிராகரித்தால் அதன் தாக்கம் இருவரையும் தாக்கும் எனும் பயம் அவன் உணர்வுகளை கட்டுப் படுத்த அமர்ந்திருந்தவன் கைகளின் கணப்பு தப்பாமல் அவன் உணர்வுகளை அவளுக்கு கடத்தியது.
“மறக்காம இருக்க, நீ நினைச்சது போல முத்தம் எல்லாம் முடியல கண்ணம்மான்னு சொல்லி உன்னோட உதடை காயவிடாம வச்சிருந்திருக்கணுமோ?” என்று அவன் கேட்கவும் அவளுக்கு தெரிந்து விட்டது, தனது கையேட்டை படித்திருக்கிறான் என்று.
“அதுக்கெல்லாம் நீங்க சரி வர மாட்டீங்க. ஏன்னா உங்களுக்கு அவ்வளவு திறமை இல்லை.” என்றவள் அவனிடமிருந்து விலகி செல்ல, அவனது பார்வை அவளைத்தான் தொடர்ந்தது.
அவளின் பின்னோடே போனவன், “மஹி காலம் கடந்து செஞ்ச தப்ப நான் யோசிச்சு அதுக்கு மன்னிப்பு கேக்குறத விட இனி தப்பு செய்யாமல் இருக்க வழி செய்யிறேன். என்னை மன்னிச்சுடு டி.” என்றான்.
“சுசி போதும் இதெல்லாம், இனி பேசாத. நான் சொன்ன தப்பு உன்னால இந்த ஜென்மத்துல கண்டுபிடிக்க முடியாது. நான் எப்படி சுசி அவனை லவ் பண்ணிடுவேன்னு உனக்கு தோணுச்சு? உனக்கு என்னை தெரியாதா? என்னை ஏன் சுசி உனக்கு புரியல?
இதெல்லாம் நீ அன்னைக்கே வந்து சொல்லிருந்தா ஒருவேளை நானும் இதை இவ்வளவு சீரியஸ்ஸா எடுத்திருக்க மாட்டேன். ‘ஏன்டா அவனுக்காக என்ன இப்படி சொல்லுவியான்னு’ கேட்டுட்டு விட்டிருப்பேனா இருக்கும்.
நீ தான் சுசீ என்னை பொண்ணா பீல் பண்ண வச்சவன். உனக்கு வெட்கம் வருதுன்னு நீ தான் எனக்கு சொன்ன.
உன்னோட ஒரு முத்தம் போதும் சுசீ நான் பெண்ணுன்னு சொல்ல. என்னோட எல்லா உணர்வுகளும் உன்னால, உன்கிட்ட மட்டுமே வெளிப்படுது. இதை மத்தவங்க சொல்லணும்ன்னு எனக்கு அவசியம் இல்ல.” என்றவள் அவளின் அறைக்குள் நின்றபடி அவனை பார்க்க, கணவனாக அவனின் பார்வையின் பேதம் புரிந்தாலும் அவன் நெருங்காமல் இருக்கவும் அவளுக்கு அந்த நிமிடம் அவஸ்த்தையாக இருந்தது.
ஏன் அறைக்கு வந்தாள் என்பது நினைவின்றி மீண்டும் கூடம் செல்ல நினைத்து அவனைக் கடக்க, அவளின் கைகளை பற்றியவன் “ஏன் என்ன விட்டு தள்ளி ஓடற? அங்கேயிருந்து வந்த, இப்ப திரும்பவும் அங்கேயே போற?” என அவளை நெருங்கி நின்று கண் பார்த்து கேட்டான்.
அவ்வளவு நேரமும் அவளின் உணர்வுகளை அடைத்து வைத்திருக்க அவை எல்லாம் அவனின் நெருக்கத்தில் உடைத்து வர காத்திருக்க அவனின் கண்களை நேர்கொண்டு பார்த்தவளுக்கு அவர்களின் முதல் முத்தம் நினைவில் வந்தது.
அதன் பிறகு அவளுக்கு தயக்கம் எல்லாம் தகர்ந்தோட ஆண் தொடங்கட்டும் எனும் அர்த்தமற்ற கோட்பாடுகளை தகர்த்து அவளே தொடங்கிவிட்டாள். அவர்களின் காதல் மரணிக்கும் முன் அவர்களின் முத்தத்தின் ஈரத்தால் அதை உயிரூட்ட.
நொடி நேரம் தடுமாறியவன் தான் சுசீந்திரன், வேகத்தில் அவள் தொடங்கியதை விதையாக்கினான் அவளின் விருப்பமானவன். இமை மூடி அவள் நின்றிருக்க இதழ்கள் மூடி இதயத்தின் கீதத்தை காதலால் இசைக்க விட்டான். இதழ்களுக்குள் நுழைந்து இதயம் தொடும் வித்தை அறிந்த வித்தகன் அவன். இணைந்த இதழ்களுக்குள் இழந்ததை மீட்டெடுக்க இமை மூடாது பார்த்திருந்தான்.
நிமிடங்கள் கரைய இமை திறந்தவள் இதழ்கள் இன்னும் அவனிடமே இருக்க மெல்ல அவனிலிருந்து விலகியவள் பார்வை அவன் பார்வையோடு கலந்திருக்க, இருவரின் பாரமும் இறங்கிய கணத்தில் கண்களின் புன்னகை கண்ணீராய் கன்னம் நனைத்தது.
“ப்ளீஸ் வேணாம் பாரதி,” என்றவள் அவனின் கண்ணீர் துடைக்க, அவனால் அதுவும் கூட செய்ய முடியாத உணர்வுகளுக்குள் சிக்கியிருந்தான். அவளை தன் கையணைவில் இன்னும் இறுக பற்ற அந்த இறுக்கம் அவனின் உள்ளத்தின் இறுக்கம் எல்லாம் தகர்த்து இளமையின் உணர்வுகளைத் தூண்ட முதலில் உயிர் பெற்றது அவனின் மொழி, அது சங்கீத மொழி.
பலமுறை அவன் பாடியது தான். ஆனால் இன்று இது அவளுக்காக, அவளே தனது சித்தம், தன் மொத்தம் என உணர்ந்தவனின் இசை இது.
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா
அவனின் இசை அவளின் இதயம் தொட பாரதியின் கண்ணம்மா அவன் கைகளுக்குள்ளே.