மாதங்கள் பல கடந்தோட பள்ளி இறுதியாண்டில் இருவரும் இருந்தனர். அன்று பள்ளியிலிருந்து வீடு செல்லாமல் நேரே தன் ஜெயா அத்தையைக் காண வந்திருந்தாள் மஹிமா.
“ஆனாலு அத்தை இன்னைக்கி நான் இங்க வராட்டி நீங்க அவனுக்கு மட்டும் பஜ்ஜி சுட்டு குடுத்திருப்பிங்க. இப்பலாம் உங்க பையன் கூட இருக்கான்னு என்னை தேடறதில்ல. துணைக்கு தூங்கக் கூட கூப்பிட்றதில்ல, போங்கத்தை.” சமையலறை மேடையில் ஏறி அமர்ந்து பாதி பஜ்ஜியை வாயில் அடைத்த படி பேசினாள் மஹிமா.
“அப்படி எல்லாம் இல்ல மஹிம்மா, முத நான் தனியா இருந்தேன். காலும் கட்டு போட்டிருந்தேன். ராத்திரிக்கு அண்ணி உன்னை அனுப்பினாங்க. இப்ப தான் சுசி கூடவே இருக்கானே.”
“ஹுக்கும், உங்க பேர சொல்லி எங்க அம்மா கிட்ட இருந்து தப்பிச்சேன். இப்ப டெய்லி நாலு மணிக்கே எழுப்பி படிக்க விடறாங்க. அதுலயும் உங்க பையனாள எனக்கு ஏகப்பட்ட ப்ரஸர் ஏறுது. நல்லா பாடறான் படிக்கிறான்னு.
ஆனா கிளாஸ்ல எப்படி எல்லாம் வம்ப விலைக்கு வாங்குறான்னு எனக்கு தான் தெரியும். அத போட்டு குடுக்க தான் வந்தெத்தை.” என்று தான் வந்த காரணத்தை சொல்லத் தொடங்கினாள்.
“அபிநவ் வாய்ஸ் பொண்ணு மாதிரி இருக்குன்னு அந்த விஸ்வா கிண்டல் பண்ணா இவனுக்கென்ன. அபி இவனுக்கு பெஸ்ட் பிரெண்ட் கூட இல்ல. அவன் கூட இன்னைக்கு ஒரே சண்டை, கேட்டா பாடி ஷெமிங்ன்னு சொல்றான். அவன் பொண்ணு மாதிரி பேசினா பசங்க சிரிக்க தானே செய்வாங்க.”
அவளின் இந்த அறியாமையை போக்க எண்ணிய ஜெயா அவளிடம் நிகழ்ந்ததை மொத்தமாக கேட்டறிந்தார். பிறரின் புற தோற்றத்தைக் குறித்த கேலிகளைப் பற்றி அவளுக்கும் விளக்கினார்.
மக்கள் பேசும் உருவ கேலி என்பது காற்றோடு கலந்த மாசாய் நம்முள் கலந்து விட்ட ஒரு விஷம். நம்மில் பலரும் உருவ கேலியின் தீவிரம் அறிவதில்லை.
உருவ கேலி பலரின் தன்னம்பிக்கையை தரை மட்டமாக்கும் என்பது பலர் உணராதது.
“நீயே கருப்பு, உனக்கு ஏன் டார்க் கலர் மேல ஆசை?”
“அவ ஒரு குள்ள வாத்து.”
“அவ இருக்க உயரத்துக்கு அவங்கம்மா எங்கிருந்து மாப்பிளை தேட, ஆறடிக்கு இருக்கா. என் பையனுக்கு சமமா இருப்பான்னு அந்த பொண்ண வேண்டான்னுட்டேன்.”
“ஹையோ, அது பிகர் இல்ல மச்சி ட்ரம்மு. நீ சோறு வாங்கிப் போட்டே அழிஞ்சிடுவ”
“அது பொண்ணா, ஆம்பள குரல்ல பேசுது. நா அதுவொன்னு நினச்சேன்”
“அவனைப் பாத்தா சைனாக் காரனாட்டமே இருப்பான்”
“அவ கறுப்பி, அவங்கம்மா என்ன கலர். இவளப் பாரு.”
இன்னும் ஆயிரம் ஆயிரம் வாசகங்கள். நாம் அன்றாட வாழ்வில் கடப்பது.
இவைகளெல்லாம் ஒருமுறை கேட்க ஒன்றும் பெரிதில்லை. அனால் ஒரு தனி மனிதன் அவனைப் பற்றிய உருவ கேலியை ஓராயிரம் முறை கேட்கும் போது அவன் அறியாமலே அந்த சுழலில் சிக்கி சீரழிவதுண்டு.
அதிலும் ஆண்களை விட பெண்களின் மேல் விழும் உருவ கேலி அவர்களின் மன நிலையை சீர்கெடுக்கும் என்பது நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை.
உருவ கேலியில் உயிர் விட்ட கதைகளும் நம்மில் உண்டு. ஆயினும் நம் அறியாமையால் நாம் தொடர்ந்து செய்யும் ஒரு பெருங்குற்றமிது.
“பாடி ஷெமிங் தப்பு டா, அவன் வாய்ஸ் பொண்ணு மாதிரி இருந்தா அதுல அவன் தப்பு இல்லை மஹி. அதுவும் சுசிக்கு இந்த விஷயத்துல ரொம்ப கோவம் வரும்.
என்னோட இந்த கை கொஞ்சம் சின்னம்ன்னு ஊர்ல எல்லாம் நொண்டின்னு சொன்னாங்கன்னு இப்பவும் தூத்துக்குடிக்கு மாமா வீட்டுக்கெல்லாம் போக விடமாட்டான்.
வெளி உருவம் கடவுள் கொடுக்கறது தானே மஹி. என்னோட இந்த கை சின்னமா இருக்கதால எனக்கு எந்த குறையும் இல்ல.
ஆனா பாக்குறவங்க பார்வை என்னை ஊனமா தான் பாக்கும். அதை கடந்து வந்தவங்க பலர். ஆனா அந்த சூழல்ல சிக்கி உடல் ஊனத்தை மன ஊனமா மாத்தி மண்ணாய் போறவங்களும் இருக்காங்க தானே.
அவங்க பேசினா அவனும் பேசுவான். சுசியே அதெல்லாம் பாத்துக்குவான் விடு.”
“ஹ்ம்ம், நீங்க சொன்னா சரிதாத்தை. சுசி இதுக்கெல்லாம் சண்டை போட ஆரம்பிக்கவும் தான் எனக்கே கிளாஸ்ல என் பேர கேக்க முடியிது. இல்லைன்னா என்னைக்கு என்ன பேரு சொல்லி கூப்புட்டாங்க. எப்பவும் லாம்ப் போஸ்ட் தான் என் பேரு. இத சொல்ற பல பேரு என் தோள் உயரம் கூட இல்லத்தை. பொறாமைலசும்மா பொங்குறது.”
இருவரும் பேசியதில் பின்னே வந்து நின்றவனை அவர்கள் கவனிக்கவில்லை.
“என்னம்மா என்ன போட்டுக் குடுக்க வந்தாளா?” என்றவனின் குரலில் இருவரும் திரும்ப, “அவ என்ன சொன்னாலும் நம்பாதீங்கம்மா.” என்றான்.
“உன்னை ஒன்னும் சொல்லல. தேவை இல்லாத வம்பு எதுக்குன்னு தான் சொல்ல வந்தேன்.”
“டேய், அவ உன்ன கவி பாரதில இருந்து காப்பாத்தும் பாரதிக்கு ப்ரமோட் பண்ணா. வேற ஒன்னும் இல்ல.” மகனை தோளோடு அணைத்து பெருமையாய் சொன்னார் ஜெயா.
அன்று பெருமையில் முகம் சிவந்த மகன் அறியவில்லை தானும் இதே தவறை செய்வோம் என்று.
தவறி நடக்கும் தவறுகள் தானே வாழ்வின் திருப்பங்கள். அத்தகைய திருப்பங்கள் இவன் வாழ்விலும் உண்டு.
அவன் பிறிதொரு நாளில் கறுத்து முகம் சிவந்து வாழ்க்கையே தொலைந்து போகும் நிலை, உருவ கேலியால் வரும் என்று அந்த சுசீந்திரன் அன்று எண்ணவும் இல்லை.
அரசு பொதுத் தேர்வுக்கான வேகத்தில் நாட்களும் வேகமாக ஓட, மைதானத்தில் வேகமெடுக்கும் அவள் கால்கள், படிப்பிலும் வேகம் கூட்ட நினைத்து ஓட, விளைவு கால் எலும்புகளில் முறிவு.
மஹிமா வீட்டிலேயே முடங்கிவிட தினமும் மாலை வேலைகளை அவளுடன் கழித்தான் சுசீந்திரன்.
அன்றும் அவளைக் காண வந்தவன் முன்னறிவிப்பு ஏதுமின்றி அவளின் அறைக் கதவைத் திறக்க அங்கே அவன் கண்ட காட்சி விழியில் விழுந்து இதயம் நுழைந்து இளமைக் கதவுகளை இயல்பாய் திறந்து விட்டது.
அவனின் திடீர் வருகையில் நொடி நேரத் தடுமாற்றம் மட்டுமே அவள் உடல் மொழியில். பின் இயல்பாய் அவள் மீண்டுவிட்டாள்.
ஆனால் அவன் இமைக்க மறந்த காட்சியில் இதயம் பிறழ, நட்பு அங்கே உறவாகத் துடித்தது.
கவி பாரதி இரவெல்லாம் கவிதை பாரதியானான். அன்று அவளுடன் கழித்தவன் இன்று ஆவலுடன் களித்தான்.
அவளைக் காணும் போதெல்லாம் அவளோடு பாடினான். அவளால் பாடினான். அவளுக்காகவே பாடினான்.
அன்றும் அது போல் பாடினான்.
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா
அவன் பாட அவளும் கேட்டிருந்தாள்.
ஆனால் அது அவன் உள்ளத்துக் காதல் பாடல் என அன்று ஏனோ அவளும் அறியவில்லை.
ஆறடி அணங்கவளை அவனும் அறியவிடவில்லை.
நட்பின் நிறம் மாறும் உறவு நிலையில் அவனிருக்க, நீண்டு வளரும் நட்பென்று அவளிருக்க, இருவரின் நிலையும் அன்று நித்திய நிதர்சனத்தை ஏற்றிருந்தது.