“ஐயோ மஹி, என்ன இது? இந்த வேலை பார்த்ததுக்குத் தான் நீ போன் பண்ணாம இருந்தியா? அவன் ஆயிரம் சொல்லுவான். நீ யாரைக் கேட்டு இப்புடி முடி வெட்டுன? இடுப்புக்குக் கீழ இருந்த முடி. கொஞ்சமும் உனக்கு புத்தி இல்ல. பாக்கவே சகிக்கல. பொட்டுமில்ல பூ வைக்க வழியும் இல்ல. உங்க அம்மாவுக்குத் தெரியுமா மஹி இதெல்லாம்? என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? என்ன நடக்குது சுசி அங்க?” ஆரம்பமே அதிரடி சரவெடியென ஜெயா பேசப் பேச மஹியின் கண்ணீர் கரை கடந்து கன்னம் தாண்டி இருந்தது.
அதெல்லாம் உணரும் நிலையில் அவளின் ஜெயாத்தை இருக்கவில்லை. அவருக்கு அதிர்ச்சி, அதிர்ச்சி, அதிர்ச்சி மட்டுமே.
அவளின் கன்னம் தொட்ட கண்ணீரில் சில நொடி சுசீந்திரனுக்கும் அனைத்தும் மறந்த நிலை மட்டுமே.
ஆனால் நிலைமையின் தீவிரம் அவன் உணரும் முதலே கைபேசியை அவன் கைகளில் திணித்துவிட்டு சமையலறையை விட்டு வெளியேறி இருந்தாள் சுசியின் சுந்தர கண்ணம்மா.
“அம்மா, நான் தான் முடி வெட்ட சொன்னேன். உங்களுக்கே தெரியுமில்ல, அவளுக்கு சைனஸ் எப்பவும் பிரச்சனைன்னு. குளிர் காலத்துல அவ காலேஜ்க்கு இருபது நிமிஷம் நடந்து போயிட்டு வர்றதுக்குள்ள தினமும் தலை வலின்னு படுத்துக்குறா. இவ்வளவு அடர்த்தியான முடி. தலை குளிச்சா காயவே மணிக் கணக்காகும் ம்மா.
இதெல்லாம் தேவையா? அதுக்குதான் நான் அவளை கட்டாயப்படுத்தி முடி வெட்ட சொன்னேன். நீங்க என்னன்னா இப்படி சட்டுன்னு அவளை பேசுறீங்க? அவ மாட்டேன்னு சொல்லியும் நான்தா அவளை கூட்டிட்டு போனேன். இன்னும் அவங்க அம்மாக்கும் தெரியாது.
சும்மாவே சாவித்ரிம்மா அவளை பயங்கரமா பேசுவாங்க. இதுல நீங்களும் சேர்ந்து பேசீடாதிங்க.
ஒரு முடி வெட்டுனதுக்கு இவ்வளவு பேச்சாம்மா? நான் கூட உன்ன மார்டன் அம்மான்னு நினச்சா நீ இன்னமும் கற்காலத்துலயே இருக்கியேம்மா.” நீளமாக பேசியபடி அவன் கண்களால் மஹிமாவைத் தேட அவளோ அவன் காட்சிக்குள் தென்படவில்லை.
அறையின் கதவு சாற்றி இருக்க அவள் உள்ளே சென்றிருப்பாள் என எண்ணியவன் திரையில் ஜெயாவின் முகத்தைக் காண அவரின் முகம் முழுவதும் கோபம் மட்டுமே.
“நீ என்ன சொன்னாலும், அவ செஞ்சது தப்பு சுசீ. ஆயிரம் காரணம் இருந்தாலும் கல்யாணம் பண்ண பொம்பள இப்படியா முடிய வெட்டிக்குவா, ஒரு இணுக்கு பூ கூட வைக்க முடியாம?”
சுசிக்கு இந்த விவாதம் எல்லாம் இன்னும் இன்னும் மஹியுடனான அவனது உறவுக்குப் பழுது என விளங்கியும் விவாத்தைத் தடுக்கும் வழி தெரிந்திருக்கவில்லை.
உண்மை காரணத்தைச் சொன்னால் இன்னும் அவர்களின் திருமண வாழ்வு இரு குடும்பத்திற்கும் பொது விவாத தலைப்பாகிவிடும் என்பதால் தவறு தன் பெயரில் என சொல்லி உண்மையை மறைக்க முயன்றான். அவனுக்கும் அவனின் மஹிக்குமான உறவும், இடையில் சிறு பிரிவும், இந்த நாட்களின் இருவரின் தவிப்பும் என மொத்தமும் அவர்கள் இருவரின் உணர்வுகள் மட்டுமே சம்மந்தப்பட்டது.
அதில் அவர்களின் குடும்பம் நுழைவது கூட குழப்பத்தைக் கொடுக்கும் என எண்ணியவன் முற்றும் முழுவதும் தானே காரணம் எனக் கூறி ஜெயாவை சமாதானம் செய்ய முயன்றான்.
“ம்மா உனக்கு அவளுக்கு பூ வச்சு அழகு பாக்கணுமா, இல்ல நான் அவளை பொழுதோட தலைவலின்னு ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு அலையணுமா? சொல்லும்மா.” சொன்னவன் குரலிலும் சினம் எட்டிப் பார்க்க, மகனின் முகத்தில் தெரிந்த கோபத்திலிருந்தே இனி அவனிடம் பேசுவது வீண் என ஜெயாவுக்குப் புரிந்தது.
அதில் சட்டென அமைதியானவர், பின் மெதுவாக “ஹ்ம்ம், ஆமா டா அவளுக்கு சைனஸ் எப்பவும் படுத்துது. சரி போ, வளர்ற முடி தானே. ஊருக்கு வர்றதுக்குள்ள வளந்துரும்.” என்றார் சமாதானக் குரலில்.
“அவளும் சும்மா முடிய வெட்டலாமா. அந்த முடிய அவ கேன்சர்ல இருக்கவங்களுக்கு தான் ம்மா டொனேஷனா கொடுத்துருக்கா”
அவன் முன்பே அவளின் அறையில் கண்ட சிறு நன்கொடையாளர் அட்டையின் மூலம் விபரம் அறிந்தவன் அதை அன்னையிடமும் விளக்கினான்.
எட்டு அங்குல நீளத்திற்கு அதிகமாக வளர்க்கப்பட்ட முடி முதலில் பின்னலிடப்பட்டோ அல்லது தலைப் பட்டை கொண்டு சுற்றப்பட்டோ தயார் செய்யப் படும். பின்பு கத்தரித்ததும் பாதுகாக்கப்பட்டு பொது நலசங்கங்களின் மூலம் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு செயற்கை முடியாக பயன் படுத்தப்படும்.
இதெல்லாம் அவனும் அறிந்திருக்கவில்லை முதலில். கோபம் கொண்டு சண்டையிட்ட பொழுதிலும் அறியாததை, பின்பு அவளின் செயல் அறிந்ததும் இன்னும் இன்னும் அவளின் மேல் காதல் கூடிப் போனது.
“வெட்டுன முடியவா? அதை வச்சு விக் செஞ்சு விப்பாங்களாடா?”
“மா, விக்க மாட்டாங்க. ஃப்ரியா தான் குடுப்பாங்க. அது கீமோ தெரபி பண்றவங்களுக்கு முடி கொட்டுமில்ல அவங்களுக்கு யூஸ் பண்ணுவாங்கம்மா. சாரிட்டில குடுத்துட்டா அவங்க பார்த்துப்பாங்க. ஆனாலும் ஒரு முடிக்கு நான் முடிவில்லாமல் பேச வேண்டி இருக்கு. ஃப்ப்பூ” என பெரு மூச்சை வெளியிட்டவனுக்குள் குற்ற உணர்ச்சி மட்டுமே.
அவனின் வார்த்தைகளின் தாக்கம் அல்லவா அவளை இந்த நிலைக்குத் தள்ளியது. அவன் அவளைக் குறைவாகப் பேசிய நிமிடங்களில் அவன் நின்றிருந்த நிலை மஹிமாவும் அறியவில்லை. அவனின் மனம் அன்று இருந்த நிலையில் அவன் பேசிய எதுவும் அவனுக்குத் தவறாகத் தோன்றவில்லை.
அதனால் மட்டுமே இன்றும் அவன் அவளிடம் வாதாடிக் கொண்டிருக்கிறான். இன்றோ அவனின் அன்னையே அவனைக் கேள்வி கேட்க, மஹிமாவின் அன்னையை நினைத்து இன்னமும் அவன் முகம் வாடியது.
தன் எண்ணங்களை ஒதுக்கியவன், “சரிம்மா நீங்க பாருங்க. தேவை இல்லாம இதெல்லாம் அப்பாவுக்கு சொல்லிட்டு இருக்காதிங்க. சாவித்ரிம்மாவுக்கும் நாங்க பேசிக்கிறோம். நான் போய் மஹிய பார்க்குறேன். நீங்க பேசினத்துல பயந்து ஓடிட்டா.” எனும் போதே அவனின் குரலிலும் தடுமாற்றம்.
“ஓஹ், அவளுக்கு அதெல்லாம் ஒன்னும் பயமில்லடா. வேலை ஏதாவது செய்ய போயிருப்பா. அவ என்னைக்கு பயந்தா?
உன் பொண்டாட்டி நல்லவதான், ஆனா என்ன பட்டு பட்டுன்னு பேசுவா, கொஞ்சமும் அடக்கம் இருக்காதுடா.
அவளை குறை சொல்றேன்னு கோவிச்சுக்காத. நீ பாத்து இருந்துக்க. அவளுக்கு நீ அடங்கிப் போனா நல்லா இருக்காது. அவளை அடக்க ஒடுக்கமா இருக்க சொல்லு. இனியும் முடிய வெட்டி விட்டுடாத டா.
இதெல்லாம் அவளுக்கே தெரியணும். நான் சொல்ல வேண்டி இருக்கு.” என்று மகனை என்றும் தன் மகனாக மட்டுமே இருக்க சொல்லி கைபேசியை அணைத்திருந்தார்.
‘அப்பாடி, நம்ம அம்மாவை சமாளிக்கவே இந்த கஷ்டம்ன்னா இனி அவ அம்மா? எப்படியும் எனக்கு சங்கூதிடுவாங்க போல’ எண்ணியபடியே அவளின் அறைக்குள் நுழைய இன்னும் கன்னத்தில் கண்ணீரின் ஈரம் மிச்சமிருக்க அவனையே பார்த்திருந்தாள் மஹிமா.
“மஹி, அம்மா பேசினது தப்பு. எனக்கும் புரியுது. இதெல்லாம் என்னாலன்னு நீ சொன்னாலும் நம்ம பிரச்சனை அவங்களுக்குத் தெரிய வேணாம்ன்னுதான் நா அப்படி பேசினேன்.”
“நீ எப்படி பேசினாலும் அத்தைக்கு இனி என் மேல இருக்க கோவம் போக நாள் ஆகும் சுசி. ஆனா என்னோட பக்க நியாத்தை நான் எங்கையும் எப்பவும் சொல்லவும் முடியாதில்ல. அந்த வலி உனக்கு புரியாது சுசி.
ஏதோ நீ சொன்னதுக்கு நான் ரியாக்ட் பண்ணிட்டேன்னு சாதாரணமா சொன்னாலும் அது சாதா ரணம் இல்ல. அதுவும் ஆற நாள் ஆகும்.” என்றவள் அமைதியாக கண் மூடி இருக்க, மஹியின் மணாளன் மெல்ல பாரதியை பக்கத்தில் அழைத்தான்.
காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!
அவன் கும்மிப் பாட்டிசைக்க, தன்னை சமன் செய்தவள் மனம் மீண்டும் அவனை குற்றம் சாட்ட அவளும் பாரதியின் சாட்டை கொண்டே அவனைச் சாடினாள்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
பாரதியும் கண்ணம்மாவும் காதலால் இணைவார்களா? இல்லை மகாகவியின் மாயத்தால் இணைவார்களா?