விக்ரமின் வீட்டில் இன்னும் நான்கைந்து நண்பர்கள் குடும்பத்துடன் வந்திருக்க, சுசீந்திரனும் மஹிமாவும் தான் அவர்களில் ஓராண்டு கூட நிறைவாகாத புது மண தம்பதியர்.
இதில் பலரையும் மஹிமா முன்னமே பார்த்திருந்தாலும் இன்று அனைவரும் ஒரே வீட்டில் இருக்க நுழைந்ததும் அவளுக்குள் சிறு தயக்கமும் நாணமும். ஆனாலும் விருந்தின் கலகலப்பில் அவளின் தயக்கங்கள் எல்லாம் விட்டு அவர்களுடன் அவளும் பேச்சில் கலந்திருந்தாள்.
“வாவ் மஹி, என்ன ஒரு சேன்ஜ் ஓவர். ஹேர் கட் பண்ணவும் லுக் அப்படியே மாறிடுச்சு. இன்னும் டாலா அழகா மாடல் மாதிரி தெரியிற.” இவளைக் கண்டதும் அணைத்து விடுவித்துவிட்டு வித்யா சொல்லவும் நீண்ட புன்னகை மட்டுமே மஹிமாவிடம்.
எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து சிற்றுண்டியை உண்டபடி பேசி சிரித்து என பொழுது மெல்லக் கரையத் தொடங்கியது.
மஹியின் கண்கள் சிற்றுண்டியுடன் வைக்கப் பட்டிருந்த கிலியான் சாக்லட்டைக் கண்டதும் கண்கள் தன் போல் கணவனைக் காண அவனும் அவளின் பார்வையை உள்வாங்கி வெளிவந்த புன்னகையை இதழ் கடித்து பற்கள் கொண்டு அடக்கி இருந்தான்.
இருவரும் இணைந்திருந்த இனிய பொழுதுகளில் எல்லாம் கிலியான் இன்னட்டில் உள்ள சிப்பிகள் அவளின் சிப்பி இதழ்களில் சிக்குண்டு பின் அவனின் சிவந்த இதழ்களுக்குள் சிதைந்து போனதெல்லாம் இன்று சித்திரமாய் அவளின் இமைகளுக்குள் வந்து போனது.
அவன் புன்னகையை அடக்கவும் தான் அவள் ‘அச்சோ’ என மனதிற்குள் தன்னையே கொட்டிக் கொண்டு முயன்று கண்களை அவனிலிருந்து திருப்பி இருந்தாள்.
விருந்துக்கு யுவராஜ் அவன் மனைவி நைனிகாவுடன் வந்திருக்க அவளின் கருவுற்றிருந்த வயிற்றைப் பார்த்த மஹிமா வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு “தொட்டுப் பார்த்துக்கவா நைனி? இல்ல தொட்டா பாப்பாவுக்கு டிஸ்டர்ப் ஆகுமா?” மெல்ல அவளின் காதோரம் மஹி கிசுகிசுக்க,
“அதெல்லாம் ஒன்னும் தொந்தரவில்ல. ஆனா பப்ளிக் ஷோ பண்ணாத.” என சொல்ல அருகே இருந்த ரெஜினாவோ “ஹ்ம்ம், நீ ஏன் மஹிமா அவங்களைக் கேக்குற. இந்நேரம் நீங்களே தீயா வேலை செஞ்சிருந்தா …” என இழுக்க
“ஹ்ம்ம், செஞ்சிருந்தா … ” என ஏதோ ஒரு வேகத்தில் அவளும் பின் பாட்டு போல் கேட்டுவிட, வார்த்தைகள் வந்து விழுந்ததும் தான் அவள் கேட்டதின் அர்த்தம் அவளுக்கு விளங்கியது. அதற்குள் அங்கே அடங்காத சிரிப்பொலி எழுந்து அவர்களின் கூடத்தை நிறைத்திருந்தது.
அது ஒரு தொடக்கம் மட்டுமே என்பது போல அடுத்தடுத்து இன்று மஹிமா அவர்களின் நகைப்பொலிக்கு பல முறை வழிவகுத்தாள்.
வித்யா அவளே கணவனுக்காகச் செய்திருந்த அணிச்சலைக் கொண்டுவந்து அனைவரும் வாழ்த்துக் கூறி வெட்டி முடிக்க இரவு உணவு தயாரானது.
“விக்ரம், உன் புண்ணியத்துல இன்னைக்கு நல்ல சோறு சாப்பிட்டு ஒட்டகம் மாதிரி வயிர ரொப்பிட்டுப் போயிரணும். இல்ல அடுத்த பார்ட்டி வரைக்கும் என் வயிர நான் காயப் போட வேண்டியிருக்கும்.” என சுதன் சொல்ல,
“என்டா இப்படி சொல்ற நல்லா சூடு தண்ணி வைப்பா ‘என் உயிருள்ளவை உஷான்னு’ வசனமெல்லாம் பேசி ஆசையா தானே கல்யாணம் பண்ண.” என்று அவனை வாரினான் சுசீந்தரன்.
“டேய், ஆனாலும் உங்களுக்கெல்லாம் ஒரு உண்மை தெரியல. என் பொண்டாட்டி ‘செஞ்சுருவேன்னு’ மாறி மாறி மாரி டயலாக் பேசும் போதே நா முடிவு பண்ணிட்டேன் இன்னைக்கு சிக்கன் பிரியாணி பக்கம் கையே வைக்கக் கூடாதுன்னு.” என்றான் விக்ரம்.
“ஆமா, யாரும் பிரியாணி சாப்பிடாதீங்க. மிச்சமானா இந்த வாரமெல்லாம் வச்சு விக்ரம் மட்டுமே சாப்பிட்டு மொத்தமும் காலி பண்ண பிளான் போட்டுட்டான்” என்று அதற்கும் உசைன் சொல்லி சிரித்தான்.
“அப்படின்னா, வேற ஏதாவது சாப்பிட்டு தான் நான் என் வயிர ரொப்பணும்.ஹ்ம்ம். ” என இழுத்தான் சுதன்.
“ஆமா ஆமா, நீ தான் பரோட்டாவ பார்த்துட்டியே, இனி என்ன? கோட்ட எத்தனை வாட்டி அழிச்சு அழிச்சுப் போட்டாலும் நீ சாப்புடுவ மச்சி” மீண்டும் வாரினான் சுசீந்திரன்.
ஒருவர் மாற்றி ஒருவர் தங்களையே கலாய்த்துக் கொண்டு உணவு உண்டாலும் மஹிமாவின் கண்கள் புன்னகை முகமாய் சுற்றிய சுசீந்திரனையே சுற்றியது.
மாதங்கள் கழித்துக் காண்கிறாள் அவனின் சிரித்த முகத்தையும் அருவியெனக் கொட்டும் அவன் பேச்சையும்.
வருத்தங்கள் ஆயிரம் அவன் மேல் இருந்தாலும் கண்களும் மனமும் கணவனை ரசிக்கத்தான் செய்தது.
“என்ன வாயும் கையும் இங்க இருக்கு. கண்ணு மட்டும் அங்க சுத்துது. உன் புருஷன் தான் மா. பொறுமையா வீட்டுக்குப் போய் கூட பாக்கலாம். அதுவும் வீட்டுல பார்க்கும் போது இன்னும் விசேஷமா பாக்கலாம்.” என்று வம்பிழுத்தால் ரெஜினா.
“ஹுக்கும் போங்கக்கா. அவனே ஒரு தத்தி. சொல்லிகுடுக்க அவனுக்கு தெரியணுமே முதல்ல.” என்று சொல்ல “அடியே!” போதுண்டி இனி நாங்க தாங்க மாட்டோம். விட்டுடுடி.. ” என அடக்கிய சிரிப்புடன் வித்யா சொல்ல அந்த இரவு மஹிமாவிற்கும் மகிழ்ச்சியாகவே கழிந்தது உஷா அவளின் உடையைப் பற்றிப் பேசும் வரை.
பேச்சும் சிரிப்புமென மாலை தொடங்கி பின்னிரவுவரை நீண்ட விருந்து முடியும் நேரம் பெண்கள் தனியே அமர்ந்து அவர்களின் உடை, அலங்காரம் எனப் பேசிக் கொண்டிருந்தனர்.
“ஹ்ம்ம், இங்க சாதா ப்ளௌஸ் தைக்கவே ரெண்டாயிரம் குடுக்குறதுக்கு பதில் நானெல்லாம் ஊருல அழகா டிசைனர் ப்ளௌஸ் தச்சு வாங்கிருவேன்.” என ரெஜினா சொல்ல,
“நீ எங்க மஹி தைக்கிற? அழகா இருக்கும் உன் ப்ளௌஸ் எல்லாம். சொல்லு எங்க அக்காவையும் அங்கையே குடுக்க சொல்றேன்” என நைனிகா சொல்ல கடையின் பேரைச் சொன்னாள் மஹிமா.
“ஆனாலும் உனக்குப் புடவை எல்லாம் கொஞ்சமும் ஃபெமினைன் லுக் கொடுக்கல. உனக்கெல்லாம் இந்த மாதிரி டிரஸ்தான் கொஞ்சம் ஓகேவா இருக்கும்” என சொல்லிய உஷாவின் குரலில் வழிந்ததெல்லாம் ஏளனம் மட்டுமே.
“என்ன உஷா இப்படி சொல்லிட்ட, அவ ஹைட்டுக்கு சேலை கட்டுனா கம்பீரமா இருக்கும்.” என நிலைமையைச் சீராக்க வித்யா நினைக்க,
“ரொம்ப உயரமா இருந்தா தழைய எங்க புடவை கற்றது வித்யா. புடவைன்னா தரையை கூட்டுறாப்ல கட்டணும். அதெல்லாம் மஹிக்கு செட்டே ஆகாது. இந்த மாதிரி டிரஸ் தான் மஹிக்கு ஓகேயா இருக்கும். என்ன ஊருல இருந்தா இப்படி எல்லாம் போட முடியாது.” என பேசியவள் கண்கள் மஹியின் மேல் மட்டுமே.
“எங்க ஊர்ல எல்லாம் தரையைக் கூட்ட தொடப்பம் தான்.” என புன்னகையாய் ரெஜினா சொல்லி சிரித்தாலும், மஹிமாவின் மனம் நத்தைக் கூடாய் மீண்டும் சுருங்கிப் போனது.
அதன் பிறகு மஹிமா அனைவரிடமும் நன்கு பேசி விடை பெற்று வந்தாலும் அவளின் குரலில் முன்பிருந்த துள்ளல் காணாமல் போனதை சுசீந்திரனும் கண்டுகொண்டான். ஆனால் காரணம் அவனுக்குத் தெரிந்திருக்க வில்லை.
மகிழுந்திலும் அவள் கண்கள் அவனைப் பலமுறை வட்டமிட வீட்டிற்குள் வந்ததும் அவளிடம் பேச நினைத்தான்.
ஆனாலும் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?
குளியலறைக்குச் சென்று தன்னை சுத்தப் படுத்தி உடை மாற்றிக் கொண்டு வந்தவன் கண்டது எதையோ எடுக்க கைகளை மேலே தூக்கியபடி நின்ற மஹிமாவையும் அவளின் மேல்சட்டைக்கும் பாவாடைக்கும் இடையில் இருந்த இடைவெளியில் தெரிந்த அவளின் இஞ்சி இடையும் மட்டுமே.
இரும்பை இழுக்கும் காந்தம் போல அவளின் இடை அவனை இழுத்திருக்க அவனும் அவளை பின்னிருந்து இழுத்தவன் அணைக்கும் முன்னே “விடு சுசி” என்ன விலகி இருந்தாள்.
அவள் விலகி நிற்க, அவன் மீண்டும் அவளின் முகம் காண, “ஓமம் போட்டுட்டேன். சுடுதண்ணி குடிச்சுட்டு தூங்கு. நல்லா டைஜஸ்ட் ஆகும்.” என்று அவளுக்கும் ஒரு குவளையை எடுத்துக் கொண்டு அவளின் அறைக்குள் சென்று கதவை அடைத்திருந்தாள்.
கதவை அடைத்தபின் எங்கு அவன் பேச? பேசினால் அல்லவா பிரச்சனைகள் தீரும். அவள்தான் அவன் பேசிய பேச்சை அறிந்ததிலிருந்து அவனிடம் அது பற்றி பேசவே மறுக்கிறாளே.
அவளின் செயல்களால் அவள் தன் காயங்களை ஆற்ற நினைக்க, அவனின் ஒற்றை முத்தம் போதும் அவனவளின் வலி மாற எனும் வழியை அறியாதவன் இதழ்களுக்குள் இன்னமும் பாரதி மட்டுமே வாதித்துக் கொண்டிருந்தார்.