மஹிக்கு காலில் அடி பட்டுவிட்டது எனப் பதறி ஓடி காணச் சென்றவன் கண்டது, கணுக் காலளவு தெரிந்த அவளின் ஓற்றைக் கொலுசணிந்த அந்த பஞ்சுப் பாதமும் கால் விரல்களில் இருந்து முழங்கால் வரை கட்டுப் போடப்பட்டு முழங்காலுக்கு மேலும் சில அங்குலம் அவன் பார்த்த அந்த வெண் பளிங்கு நிற தொடையும் கண் மூடும் வேளை எல்லாம் காட்சியாய் மீண்டும் மீண்டும் வருகிறது.
நொடி நேரக் காட்சிதான், ஆனாலும் அதன் அலைக்கழிப்புகள் இப்பொழுதெல்லாம் சற்று அதிகம் தான்.
இந்த அலைக்கழிப்புகளின் ஆரவாரமெல்லாம் அடங்கும் வழி அவன் பாட்டன் பாரதியின் வரிகளே அவனின் குரலிலும்.
“பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!
பின்னையே, நித்ய கன்னியே! கண்ணம்மா!”
மனதில் ஓயாமல் பாடிக் கொள்ளும் கலியுக கவி பாரதி இவன்.
அவள் என் கண்ணம்மாவா? இல்லை நான் அவளுக்கு வெறும் பெஸ்டி மட்டும் தானா? புதிதாய் ஒரு விடை அறியா வினோதம் அவனுக்குள்.
எண்ணம் எல்லாம் வானவில் வண்ணமாய் சிதற அமர்ந்திருந்தவனின் தலையில் நங்கென்று கொட்டினாள் அவள்.
“எவ்வளவு நேரமா கத்துறேன் எருமை, எங்க தொலைஞ்ச? ஸ்பேஸுல இருக்கியா?” என அவன் முன்னே வந்து நின்றாள் மஹிமா.
‘ஒற்றைக் கொலுசணிந்த உன் இடப் பாதமும், வழக்கத்துக்கு மாறாக, கட்டில் அடங்கிய உன் வலது பாதமும் அதற்கும் மேலாக என் கண்கள் கண்ட அந்தக் கால் அழகிலும் தான் நான் தொலைந்தேன் என சொல்லும் ஆசை தான் அவனிடம்.
ஆனால் அதெல்லாம் அவளிடம் நடக்குமா? இல்லை அவனால் தான் இதை எல்லாம் சொல்ல முடியுமா? மனம் ஏனோ தான் தவறுகிறோமோ என்று வேறு நினைத்துக் கணத்தது.
அதற்குள் மீண்டும் ஒரு கொட்டு பரிசாகக் கிடைத்தது அவளிடமிருந்து.
“டேய், என்ன டா அப்பப்ப யோசிக்கிற, போ டா மறுபடி எல்லாம் நீ கேட்டா என்னால சொல்ல முடியாது பாத்துக்க.” கோபத்தில் முறுக்கிக் கொண்டாள் மஹிமா.
“ச்ச, சும்மா வேற எதோ யோசனை தான். நீ சொல்லு சொல்லு. அப்படி என்ன சொன்னா அந்த அழகி ஐஸ்வர்யா?”
“ஹுக்கும், அவள் எங்க சொல்றா. அப்படியே நடந்ததெல்லாம் மறுபடி நடிச்சு தான் காட்டுவா.”, ‘நல்ல வேளை சென்சார் போட்டு’ என மனுதுக்குள் எண்ணிக் கொண்டாள்.
“உனக்கு பிடிக்கலைன்னா ரூம் மாத்திக்க வேண்டியது தானே? ஏன் எப்பவும் புலம்புற?” என்றவன் அருகில் வந்து அமர்ந்தவள்,
“நீ வேற வெறுப்பேத்தாத டா. எவ்ளோ தொல்லையா இருந்தாலும் இவங்க என் ஃபிரண்ட்ஸ். சமாளிச்சுக்குவேன். ஆனா அந்த ஓவர் ஆக்ட் ஓவியாகிட்ட எல்லாம் மாட்டுனா அவ்வளவு தான்.
கொன்னுடுவா என்னை. அன்னைக்கு இப்படி தான், ‘ஸ்ரீ பேசும் போதே டக்குன்னு இப்படி” என்றவள் சட்டென திரும்பி அவன் கன்னத்தில் மின்னலென முத்தமிட்டு விட்டு “எனக்கு முத்தம் கொடுத்துட்டான்.
என் முகமெல்லாம் சிவந்து போச்சு தெரியுமான்னு அடுத்த ஒரு மணி நேரம் என்னைப் பேசியே கொடுமைப் படுத்துனா.” என்று அவள் பேசிக் கொண்டே போக, அவன் கேட்டும் திறனை எல்லாம் அந்த ஒற்றை முத்தம் மொத்தமாக கொள்ளையிட்டிருந்தது.
இனி அவள் பேச்சுக்களெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் தான் என அவள் அறிவாளா?
மஹியோ அதை உணர்ந்தோ அல்லது திட்டமிட்டோ செய்யவில்லை. அவனிடம் சொல்லும் ஒரு வேகத்தில் முத்தமிட்டிருந்தாள்.
ஆனால், அவள் முத்தமிட்ட அந்த நொடியிலேயே அவன் உலகம் மொத்தமாய் உறைய உயிர் சிலையாய் அமர்ந்திருந்தான் சுசீந்திரன்.
‘அவள் ஏதோ ஒரு வேகத்தில் செய்து விட்டாள். அதன் நினைவுகள் கூட அவளுக்கு இருக்குமோ என்னவோ.’ மனதுக்குப் புரிகிறது. ஆனால் அவன் உள்ளே உறைந்து கிடைக்கும் உணர்வுகளுக்கு???
அவனின் மீசை போலவே அரும்பு விட்ட அவன் ஆசைக் காதல் இதை சாதாரணமாக கடந்து போக விட்டு விடுமா?
மன்மதன் அம்புகள் துளையிடத் துடிக்கும் அவன் இதயம் இந்த ஒற்றை முத்தத்தால் மொத்தமாய் அவளில் வீழ்ந்து போகாதா?
இன்று வரை அவளின் மீதான அவன் உணர்வுக்குப் பெயரிட பயந்தவனுக்கு செப்புப் பட்டயம் ஒன்றில் செதுக்கி விட்டது போல ஆழப் பதிந்தது அவனின் கன்னம் தோட்ட அவளின் இந்த அவசர இதழ் ஒற்றல்.
மனம் மீண்டும் அந்த நொடியையே எண்ண, வாய் தன் போல
“மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
கண் பாராயோ! வந்து சேராயோ!… கண்ணம்மா!”
பாடலை முணுமுணுத்தது.
“என்ன டா சொன்ன. பேயறைஞ்சது போல முகமிருக்கு. என்னவோ மொணங்குற, சரி விடு நான் இனி புலம்பல.” என பெருந்தன்மையாய் பேச்சை நிறுத்த முன் வந்தாள் மஹிமா.
“ஹ்ம்ம்” என முனகியவனுக்கு வார்த்தைகள் அவள் முன் வர வெகுவாய் தடுமாறின. அவன் இதயம் போல் அவைகளும் தடம் மாறி விட்டால்? நிலைமை மோசமாகிவிடும் எனத் தோன்ற வாயை இறுக்கி மூடிக் கொண்டான்.
மீண்டும் மஹியே தொடர்ந்தாள், “ஒருவேளை உங்க கூட எல்லாம் பழகிப் பழகி நானும் பசங்கள மாதிரி ஆகிட்டேன் போல டா. இந்த பொண்ணுங்க பீலிங் எல்லாம் ஏனோ எனக்கு வரவே மாட்டேங்குது.” குறைபாட்டுக்கு கொண்டாள் மஹிமா.
“அதுக்கு நீ அஞ்சு அடில நின்னுருக்கணும் இப்படி ஆறடி வளந்து எப்பவும் ஆம்பள பசங்களோடே சுத்துனா, எப்படி உனக்கு பொண்ணுங்க பீல் வரும்” என கேட்டபடி அவர்களின் நண்பன் சதீஸ் அங்கு வர சுசீந்திரனுக்கு நீர் ஊற்றி அவன் கனவைக் களைத்த உணர்வு.
ஆனாலும், “சரி சரி விடு. இப்ப கொஞ்சமாச்சும் படிக்கலாம்” என்று காதல் கதைகளை தற்காலிகமாக மூட்டை கட்டி இருந்தான் சுசீந்திரன்.
சதீஷ் இருக்கும் போது இந்த பேச்சுக்கள் தேவை இல்லை என அவன் நினைக்க வந்தவன் கண்களோ வேறு கதை சொல்லியது.
சுசீந்திரனுக்கோ வெளிப் பேச்சுக்கு தான் முடிவு கட்ட முடிந்தது. உள்ளே மனச்சாட்சியோ இன்னும் சத்தமாக அவனை கேள்வி கேட்கத் தொடங்கியது.
ஆனால் அவள் உணராத ஒன்றை இவன் மட்டும் உணர்ந்து என்ன பயன்?
ஆறடி ஆக்டோபஸ் போல அவள், அவனைத் தன் எண் கரம் கொண்டு சுற்றி வளைத்திருக்க அவனும் என்ன தான் செய்வான்?
அவளையே அவன் எண்ணிக் கொண்டிருக்க அவளோ தனக்கு ‘கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுமா?’ என அவளின் புத்தகத்தில் தலையைப் புதைத்திருந்தாள்.
வந்தவனின் கண்களோ இப்போது அவளில் மொத்தமாக உறைந்திருக்க “நீ ரூமுக்குப் போறேன்னு சொன்னியே மஹி. கிளம்பு நம்ம அப்புறம் பேசலாம்.” என மஹியிடம் சதீஷின் புறம் கண் காட்டி அவளை அங்கிருந்து விரட்டி இருந்தான்.
அவன் செய்தது சதீஷுக்கும் புரிய, இவர்களின் உறவு நிலை பற்றியும் சதீஷின் மனதில் சில நாட்களாய் தோன்றும் மஹிமா பற்றிய எண்ணங்களையும் சுசியிடம் கொட்ட, கேட்டவனோ பதட்டத்திலும் பயத்திலும் மஹியை கண்ணம்மாவாக அவன் கண்டு கொண்டிருக்கும் கனவிலும் அந்த நிமிடம் தோன்றிய பதிலை சொல்லியிருந்தான்.
அவள் தந்த முதல் முத்தத்தின் ஈரம் காயுமுன்னே அவனுக்குப் போட்டியாய் இன்னொருவனா? சுசியின் மனதில் சற்றே பொறாமை கலந்த பயம்.
அவள் என்னவள் எனக்கு மட்டுமே உரிமை எனும் உணர்வுகள் மேலெழ ஏதேதோ சொல்லி அவனை மொத்தமாய் விளக்கி இருந்தான்.
ஆனால் இந்த நாள் அவன் வாழ்வின் பகடை ஆட்டத்தில் அவனை மொத்தமாக வீழ்த்தப் போகும் நாள் என அன்று அவன் கிஞ்சித்தும் உணர்ந்திருக்கவில்லை.
சதீஸ் விலகி சென்றிருக்க அவன் மனமோ ஆசுவாசப் பெருமூச்சுடன் வழக்கம் போல்
“நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் ! கண்ணம்மா!”
எனப் பாடியது.
தன்னையே சகி என்று சரணமடைய ஒருவன் இங்கு காத்திருக்க, காதல் கொள்ள காலம் இன்னும் வரவில்லை என கண்மூடி இருண்ட உலகில் வாழும் இந்த கண்ணம்மாவின் கனவிலும் காதல் வருமா? யாதுமே கண்ணம்மாவாக காணும் கவி பாரதியின் காதல் கை கூடுமா?
அன்றைய இரவு சுசீந்திரன் சதீஷ் பேசிய விஷயத்தில் இன்னும் பதட்டத்தில் இருக்க மஹியோ வழக்கமான துள்ளலுடன் கைபேசியில் அழைத்திருந்தாள்.
“என்ன டா இன்னைக்கு என்ன வெரட்டிட்டு அந்த படிப்ஸ் கூட ரொம்ப நேரம் பேசின போல… என்னவாம் அவனுக்கு? கொஞ்ச நாளாவே அவன் பார்வையே சரி இல்லடா. அடிக்கடி என்னையே வாட்ச் பண்றான்.
கான்டீன்ல கூட நான் என்ன வாங்கி சாப்பிட்டேன்னு பார்த்தான் டா பாரதி. அவன் தான் நீ எனக்கு வச்ச ஸ்பையாடா?” அப்பாவியாக கேட்டாள் அவனின் கண்ணம்மா.
அவள் கேட்டதில் ஆரம்பத்தில் பதறியவன், முடிக்கும் பொது அவள் கேட்ட ‘ஸ்பையாவில்’ சிரித்தேவிட்டான்.
“நீ எல்லாம் ம்யூசியத்துல இருக்க வேண்டியவ. எப்படி டி இப்படி இருக்க? உனக்கு ஸ்பை வைக்கிற அளவுக்கு என்ன தப்பு செய்யிற சொல்லு.” என அவன் கேட்ட கேள்வியில் அவள் திருத்திருக்க அன்றைய நிகழ்வை அப்படியே மறைத்தவன் நாட்கள் வருடங்களாக அதை மறந்தே போயிருந்தான்.
ஆனால் மறந்தவர்கள் மறைவதில்லையே. கண்ணில் மீண்டும் வரவில்லை என்றாலும் கருத்தில் அல்லது கவனத்தில் அவை வரும் பொழுது, மறைத்தவைகள் நம்மை சில சமயம் மருக வைப்பது மட்டுமில்லாமல் மலையளவு பாரத்தை மனதில் ஏற்றிவிட்டு செல்கின்றன.
மனதில் ஏறிய பாரத்தில் கண்ணம்மாவும் அவளின் கவி பாரதியும் கடக்கும் மனப் போராட்டங்கள் மட்டுமே இனி அவர்களின் காதலை காப்பாற்றும்.