குளிர் – 10
இரவு உணவு நேரம் தாண்டியும் அமர்நாத் வராமல் இருக்க பரமேஸ்வரன் கடைக்கே சென்றுவிட்டான்.
“என்னாச்சு அமர்? வீட்டுல சொந்தங்காரங்க எல்லாருமே இருக்காங்க. போன் பண்ணாலும் வேலை இருக்குன்னு சொல்லிட்டு வரலையே. ஒன்னும் பிரச்சனை இல்லையே?…” என கேட்க,
“ச்சே ச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஒரு முக்கியமான ஆடர். இங்க நானும் இருக்கனும். அதான் அவசரமா கிளம்பி வந்துட்டேன்…” என்றான்.
“இல்லை எல்லாரும் கிளம்பறாங்க. அதான் உங்கட்டையும் சொல்லிட்டு போகலாம்னு வெய்ட் பன்றாங்க…”
“ஓஹ், இதோ வரேன்…” என சொல்ல,
“வேலை முடிஞ்சதா?…” என அவன் இன்னும் நிற்க அதற்கு மேலும் தள்ளி போட முடியாமல் எழுந்துகொண்டான் அமர்.
“வாங்க, வந்து பார்த்துக்கறேன்…” என்றுவிட்டான். ரகுவிற்காக காத்திருந்தவன் வேறு வழியின்றி கிளம்பினான்.
“இன்னும் வேலை இருக்கா?…” என பரமேஸ்வரன் கேட்க,
“ஆமா, பெரிய ஆடர். ஒரு ரிசப்ஷன் பார்ட்டிக்கு. அதனால நான் இருந்தா பெட்டரா இருக்கும். ஓகே அரைமணி நேரம். வந்திடலாம்…” என்று சொல்லியே கிளம்பினான்.
பரமேஸ்வரனாலும் ஒன்றும் பேசமுடியவில்லை. அமர்நாத் பேச்சிற்கு தலையாட்டிவிட்டு அவனுடன் இணைந்து கிளம்பினான்.
வீட்டிற்கு வந்ததும் ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் கேட்க அவனின் பார்வை குறிஞ்சியை மேலோட்டமாக தேடினாலும் அவன் தேடுவதை யாராலும் கண்டுகொள்ளமுடியவில்லை.
“குறிஞ்சி, அவர் வந்துட்டாரு. போய் பாரு…” என சுபா சொல்ல,
“ஒன்னும் வேணாம் சுபாக்கா. நான் போன் பண்ணா எடுக்கவே இல்லை. நீ சும்மா இரு…” என முறுக்கிக்கொள்ள அருகில் இருந்தவர்களை கருத்தில்கொண்டு சுபாவினாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
வந்ததும் இருந்த உறவினர்கள் அனைவரும் அமருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பிவிட அவனும் சாப்பிட்டு முடித்து மீண்டும் கடைக்கே கிளம்பிவிட்டான்.
“என்ன திரும்பவும் கடைக்கு கிளம்பிட்டார்?…” என்று வனஜா கவலையுடன் பார்க்க,
“தொழில் பார்க்கறவங்க. அங்கயும் ஒரு பார்வை இருக்கனும்ல. இதெல்லாம் நாமதான் புரிஞ்சுக்கனும் வனஜா…” என தயாளன் சொல்லிவிட்டு,
“இங்க பாரு குறிஞ்சி, உன் அம்மாவை பார்த்து கத்துக்கனும்டா. அப்பா இல்லனாலும் உங்களை எப்படி பார்த்துக்கிட்டா. சூழ்நிலை புரிஞ்சு நடந்துக்கனும். அவருக்கு நீ தான் உறுதுணையா இருக்கனும். புரியுதா?…” என மகளிடம் அறிவுரையை ஆரம்பிக்க,
“அதெல்லாம் புரிஞ்சுப்பா. நான் தான் கூட இருக்கேன்ல…” என மருமகளை காப்பாற்றினார் சாரதா.
குறிஞ்சியின் முகமே மாறிவிட்டது. எந்த வாழ்க்கை தனக்கு வேண்டாம் என்று நினைத்தாளோ அந்த வாழ்க்கை அதிலும் திருமணம் ஆனா மறுநாளே என்னும் போது மனது விம்மியது.
ஒன்றும் பேசாமல் மௌனமாக இருக்க எஞ்சி இருந்த ஒருசிலரும் புறப்பட்டுவிட வீட்டாட்கள் மட்டுமே இப்போது இருந்தனர்.
ஒன்பதை தாண்டியதும் அமர் இன்னும் வராமல் இருக்க குறிஞ்சியை தனியே அழைத்து கேட்டாள் சுபாஷினி.
“உன்னை தேடி மத்தியானம் அமர் வந்தார். நீ தூங்கறன்னதும் அவர் முகமே ஒருமாதிரி ஆகிடுச்சு. உன்கிட்ட எதுவும் சொல்லிட்டு போனாரா?…” என கேட்க திருதிருவென அவள் விழிக்க,
“குறிஞ்சி, உண்மையை சொல்லு…”
“ப்ச், சுபாக்கா அவர் என்னை மத்தியானம் மேல வான்னு சொன்னார். நான் போகாம தூங்கிட்டேன்…” என,
“அறிவிருக்கா குறிஞ்சி? எதுக்கு கூப்பிட்டார்ன்னு போய் கேட்டுருக்க வேண்டியது தானே? இப்பவும் சாப்பிட வந்தப்போ எல்லாரோடையும் பேசி அரட்டை அடிச்சுட்டு நிக்கிற? போன்னு சொன்னாலும் போகாம…”
“எல்லாரும் கிளம்பிருவாங்க. அடுத்து எப்போ வருவாங்களோ? நான் இங்க தான இருக்க போறேன். அதான் எல்லார்ட்டயும் பேசிட்டு இருந்தேன். இது தப்பா சுபாக்கா?…”
“தப்பு தான் குறிஞ்சி. உனக்கு நேத்து தான் கல்யாணம் ஆகியிருக்கு. அவருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும் தானே? நீ பன்றது தப்பு…”
“சுபாக்கா உனக்கு புரியலை. எனக்கு பயங்கர டயர்ட்…”
“எனக்கா புரியலை? நீ டிமிக்கி குடுக்க உனக்கு இது ஒரு சாக்கு. உன்னை தெரியாதா எனக்கு?…” என பேச இதை கேட்டுக்கொண்டு இருந்த வனஜாவும் வந்துவிட,
“ஏன்டி இந்த பாடு படுத்தற? உன்னால…” என வனஜா ஆரம்பிக்க குறிஞ்சிக்கு திக்கென்று ஆனது.
“ம்மா, மெதுவா பேசுங்க. நான் தான் கேட்டுட்டு இருக்கேன்ல. உங்களை யார் வர சொன்னா?…” என சுபா சத்தம் போட,
“இவ வாழ்க்கையை இவளே சிக்கலாக்கிக்க பார்க்கறா. கேட்காம என்ன செய்ய? ஒரு நாள் நிம்மதியா இருக்க முடியுதா?…” என்று கண்ணீர் விட்டு குறிஞ்சியை இன்னும் திட்ட,
“ம்மா அப்பாவுக்கு கேட்டுட போகுது. மெதுவா பேசுங்க…” என சுபா தான் அதட்டினாள்.
“இவ பண்ணி வச்ச வேலைக்கு. புருஷன்னா அப்படித்தான் இருப்பாங்க. அந்த தம்பி சும்மாவே ஒன்னும் பேசாது. என்னவோ அதுவே வந்து கட்டிக்குடுங்கன்னு கேட்டு கட்டிக்கிடுச்சு…”
“ம்மா, அப்படி பேசாதீங்க. நான் என்ன பண்ணேன்? நானும் ஒன்னும் வேணும்னு நிக்கலை. எல்லாரும் சேர்ந்து தான கட்டி வச்சீங்க?…” என குறிஞ்சியும் மூக்கை உறிஞ்சியபடி பேச,
“அப்படியே வாய்ல போட்டேனா? அடக்கி பேசுடி…” என கையை ஓங்கிவிட கரகரவென நீர் இறங்கிவிட்டது.
“நான் என்னம்மா பண்ணேன்? அடிக்க வரீங்க?…” என விசும்ப,
“குறிஞ்சி அமைதியா இரு. சொன்னா கேட்க மாட்ட?…” என சுபாவும் திட்ட,
“நான் பேசவே கூடாதா? ஏன் இப்படி பன்றீங்க எல்லாரும்? நான் கால் பண்ண கூட செஞ்சேன். அவர் தான் எடுக்கலை…” என்றவள் உடனே அவனுக்கு அழைக்க அவனும் அட்டன் செய்தவன்,
“வேலை இருக்கு குறிஞ்சி. முடிச்சுட்டு வருவேன்…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
“இப்பவும் நாங்க கேட்கவும் தான் கால் பன்ற. உனக்கே அக்கறை வேண்டாமா? அவர் கடைக்கு போயிருக்காருன்னு நான் சொல்லவும் அப்படியான்னு அசால்ட்டா போன தான நீ?…” என சுபாஷினி கேட்க,
“இது வேற பண்ணாளா?…” என்று வனஜா முறைக்க சாரதா வந்துவிட்டார்.
“என்னாச்சு? என்ன பன்றீங்க?…” என உள்ளே வரவும் வேகமாய் கண்ணீரை துடைத்தாள் குறிஞ்சி.
“ஸாரி சாரதாம்மா…” என்று அவரை பார்த்ததும் சொல்லியவள்,
“வேணும்னே பண்ணலை. இப்படி அவங்க கோச்சுட்டு போவாங்கன்னும் தெரியாது. கால் பண்ணினாலும் சரியா பேசமாட்டேன்றாங்க…” என்று ஒப்பித்துவிட அதிர்ந்து போய்விட்டனர் சுபாஷினியும், வனஜாவும்.
‘ஹையோ’ என்றானது அவர்களுக்கு இவளின் பேச்சில். சாரதா ஒரு நொடி அதிர்ந்தாலும் உடனே புன்னகைத்தவர்,
“இவ்வளவு தானா? இதுக்கா புள்ளைய திட்டிட்டு இருக்கீங்க ரெண்டுபேரும்?…” என்று குறிஞ்சியின் தோளில் கை போட்டு அமர்ந்துகொண்டார்.
“உதை வாங்குவீங்க ரெண்டுபேரும் என் மருமகளை எதாச்சும் சொன்னா. நேத்தே சொன்னேன்ல வனஜா, என்ன இன்னைக்கு பேசற நீ?. உனக்கு தெரியுமா அவன் கோவமா தான் போனான்னு…” என்றவர்,
“நிஜமாவே பெரிய ஆடர். அவன் இருந்தா தான் முடியும். இல்லைன்னா போக மாட்டான். எனக்கு தெரியாதா?…” என வனஜாவை சமாதானம் செய்தார் அவர்.
சுபாஷினிக்கு இன்னும் கோபம் கூடியது தங்கை மேல். என்னதான் மாமியார் நல்லவிதமாக இருந்தாலும் எதை பேசவேண்டுமோ அதைதான் பேசவேண்டும். தங்கை புரியாமல் நடந்துகொள்வதில் அதிருப்தியுடன் நின்றாள்.
“சரி, சரி. கொஞ்சம் நேரத்துல அவன் வந்துருவான். போய் படுங்க…” என்றவர் வனஜாவை அங்கேயே நின்றால் இன்னும் குறிஞ்சியை திட்டுவாரோ என்று தன்னுடனே அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
“சுபாக்கா…” என குறிஞ்சி மெதுவாய் அழைக்க,
“பேசாத குறிஞ்சி, நீ பண்ணினது தப்பு. புருஷன்னா அப்படித்தான் இருப்பாங்க. பார்க்கறதில்லை, பேசலை, பீல் வரலைன்னு நீயே சொல்லிட்டு அவருக்கு எந்த வாய்ப்பும் தரமாட்டேன்னு நிக்கற. இங்க எல்லாரும் தூங்க தான செஞ்சாங்க? போய் என்னன்னாச்சும் கேட்டிருக்கனும் தானே?…”
எப்போதும் இத்தனை கடிந்திராத சுபாஷினி அன்றைக்கு பேச பேச கண்ணீர் நிற்கவே இல்லை குறிஞ்சிக்கு. சத்தமில்லாமல் அழுதுகொண்டே இருக்க முகம் சிவந்துவிட்டது.
“முகத்தை கழுவு, இதுல ஒன்னும் குறையில்லை. உடனே அழுதிடறது. அமர் வரவும் பேசுவாரு. நீ பக்குவமா பேசு. உன் விளையடடுத்தனம், துடுக்கு பேச்சு எல்லாத்தையும் தூக்கி தூர போடு. உனக்குன்னு ஒரு குடும்பம் ஆகிருச்சு. புரியுதா?…” என குறிஞ்சியின் தலையில் ஏற்றிக்கொண்டே இருந்தாள் அவள்.
எங்கே குறிஞ்சி மேலும் மேலும் இப்படியே செய்து அமரின் கோபத்திற்கு இன்னும் ஆளாகி தன் வாழ்க்கையை சிக்கலாக்கிகொள்வாளோ என்ற பயம் அவளை அப்படி பேசவைத்தது.
அதிலும் திருமணம் ஆனா மறுநாளே அமரும் இப்படி கிளம்பி சென்றது, மீண்டும் வந்த போதும் குறிஞ்சியை கேட்காதது என்று மனதிற்கு ஒப்பாத நிகழ்வுகளாக இருக்க தங்கையின் எதிர்காலத்தை எண்ணிய அச்சம் அவளும் பொங்கிக்கொண்டே இருந்தது.
“சரி நீ கிளம்பு குறிஞ்சி. மாடிக்கு போ…” என்று சொல்ல,
“அவங்க இன்னும் வரலைல. அதுவரைக்கும் இங்க இருக்கேன். ஏன் விரட்டிட்டே இருக்க? இன்னைக்கு என்னை ரொம்ப திட்டிட்ட சுபாக்கா…” என இன்னும் தேம்பல் குறையாமல் அவள் சொல்ல,
“நான் இங்க தான இருக்கேன். நாளைக்கு பார்க்கலாம். இப்போ கிளம்பு…”
“அங்க தனியா என்ன பண்ண?…”
“நீ இதெல்லாம் பழகிக்கனும்டி. ஒண்ணொண்ணா உனக்கு சொல்லனுமா? வயசு பொண்ணு தானே? சிலதெல்லாம் தானாவே புரியனும். உனக்கு சொல்லியும் கேட்கமாட்டேன்னு வீம்புக்கு பிடிவாதம் பன்ற?…”
“பிடிவாதம் பிடிச்சு என்ன பிரயோஜனம்? அதான் கல்யாணம் பண்ணிவச்சுட்டீங்களே…”
“இதை சொல்லிட்டே இருப்பியா? கல்யாணம் ஆனா அதை ஏத்துக்கிட்டு அதுக்கு தகுந்தா போல வாழ நினை. இப்படி பண்ணிட்டீங்க, பண்ணிட்டீங்கன்னு அங்கயே நின்னேனா அடுத்தகட்டத்துக்கு உன் மனசும் செல்லாது. அதனால எல்லாருக்கும் கஷ்டம்….”
“இப்ப எப்படி மெதுவா சாந்தமா அமைதியா சொல்ற. அது மாதிரி பேசவேண்டியது தானே? என்னை திட்டினே தானே நீ?…”
“ப்ச், நிஜமாவே எனக்கு பொறுமை போய்டுச்சு…”
“அதை விடு சுபாக்கா. நிஜமாவே என் மேல உள்ள கோவத்துல தான் ஓனர் ரொட்டிக்கடைக்கு போய்ட்டாரா?…” என கையில் இருந்த தாலியை பார்த்தபடி கேட்க,
“இருக்கும். ஆனா அதுக்கெல்லாம் நீ பயப்பட கூடாது. அமர் வரவும் சமாதானமா பேசு…”
“அவர் என்கிட்டே பேசலைன்னா?…”
“அதெல்லாம் பேசுவார்…”
“சுபாக்கா உனக்கு தெரியுமாக்கும்? அவர் பேசலைன்னா என்ன செய்ய அதை சொல்லு….” என்று அதிலேயே நிற்க,
“நேத்துதான்டி கல்யாணம் ஆகியிருக்கு. பேசாம இருக்கமாட்டாங்க…” என கத்த,
“கத்தாத, திரும்பவும் அம்மா வந்து அடிக்க வருவாங்க…”
“புரியுதுல. அப்போ கிளம்பு…” என்று என்று அவளை கிளப்புவதிலேயே முனைப்பாய் இருந்தாள்.
“நான் போறேன். நீ என்ன பண்ண போற? தூங்கிருவியா?…” என கேட்க,
“வேலை இருக்குது. அம்மாவுக்கு செய்ய முடியாதே. அதான் வீட்டை ஒழுங்கு படுத்தனும்…”
“அதுவரைக்கும் நான் கூட இருக்கட்டா?…”
“வேலை செய்யவா?…”
“அதெதுக்கு செய்ய? என்னால முடியாது. கால் வலிக்குது…”
“அடிப்பாவி, இங்க என்ன செஞ்சியாம்? இப்ப எதுக்காம் கூட இருக்க?…”
“அவங்க வர வரைக்கும் உனக்கு பேச்சுத்துணைக்கு…”
“அதானே பார்த்தேன். வேலை செய்யாம என்னையும் செய்யவிடாம ஆக்க தான? ஒன்னும் வேண்டாம். ஆளை விடு. சுபாக்கான்னு போட்டு உயிரை வாங்குவ. கொஞ்சம் நேரம் எனக்கும் உன்கிட்ட இருந்து ரெஸ்ட் குடு…”
“சுபாக்கா…” என முறைக்க,
“போ போ, போய் புருஷனை பாரு…” என,
“இங்க தான வருவாரு. சேர்ந்தே போறேனே…” என எத்தனை அடம் பிடித்தும் குறிஞ்சியை விடாமல் சொல்லி அவளை கிளப்பிவிட்ட பின்பு தான் சுபாஷினிக்கு நிம்மதியானது.
அமர் வரும் பொழுது குறிஞ்சி இங்கே இருந்துவிட்டு அதன் பின் செல்வதை விட அங்கே அவனுக்காக அவள் காத்திருப்பதை பார்த்தால் அவனின் கோபம் கூட மட்டுப்படுமே என்று யோசித்து இருக்க குறிஞ்சிக்கு இந்த எண்ணங்கள் எதுவும் இல்லை.
மாடிக்கு சென்றவள் டிவியை போட்டுவிட்டு சோபாவில் சாய்ந்து படுத்துக்கொண்டாள்.
இரவு சரியாக உண்ணாமல் இருந்தது வேறு நேரம் செல்ல செல்ல வயிற்றை கிள்ளியது.
கிட்சனுக்கு சென்று பார்க்க மைதா மாவும் அதன் சார்ந்த பொருட்களும் இருக்க எடுத்து பார்த்தவளுக்கு எரிச்சலான எரிச்சல்.
“சுபாக்கா…” என போனை போட்டுவிட அப்போதுதான் வேலையை முடித்து வீட்டை துடைத்துவிட்டு வந்து படுத்திருந்தாள்.
“என்னடி?…” என கேட்டதும்,
“பசிக்குது. எல்லாரும் அவரை எங்க எங்கன்னு கேட்டே என்னை சரியா சாப்பிட விடலை…” என குறை பாட,
“உன்னோட இம்சை. இரு அவிக்கிட்ட குடுத்தனுப்பறேன். திரும்ப கூப்பிட்ட பார்த்துக்கோ…” என சொல்ல,
“நான் கீழே வந்து சாப்பிட்டா? எதுக்கு பாத்திரத்துல எடுத்து அடுக்க, அதை விளக்கன்னு…” என சொல்ல,
“ஒன்னும் தேவை இல்லை. சாப்பிட்டு அங்கயே கழுவி வை…” என்று போனை வைத்துவிட்டாள்.
“என்ன சுபா? குறிஞ்சியா?…” என வனஜா கேட்க,
“ஆமாம்மா, பசிக்குதாம்?…” என்று தங்கைக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க,
“மாப்பிள்ளைக்கும் சேர்த்தே எடுத்து வை. அவரும் நல்லா சாப்பிட்ட மாதிரியே தெரியலை. மத்தியானம் கூட நல்லா சாப்பிட்டாரு…” என சொல்ல,
“ஹ்ம்ம். நீங்க போய் படுங்க. நான் குடுத்துட்டு வரேன்…” என சுபாஷினி மேலே கிளம்பினாள்.
“அவிட்ட குடுக்க வேண்டியது தான? இப்பத்தான் வேலையை முடிச்ச நீ…”
“ம்மா, உங்க சின்னபொண்ணு சரியான சேட்டை. தனியா இருக்கேன்னு சொல்லி அவியை கூடவே இருக்க வச்சுக்குவா. அமர் எப்போ வேணாலும் வரலாம்…” என்று தங்கையை சரியாய் கணித்து சொல்ல,
“ஹ்ம்ம், இந்த பொண்ணு என்னன்னு குடும்பம் பண்ணுமோ?…”
“ப்ச், முதல்ல அப்படித்தான் இருக்கும். போக போக புரிஞ்சுப்பா. அவளுக்கு என்ன கோவம்ன்னு நமக்கு தெரியாதா? விடுங்க…” என சொல்லி தானே கிளம்பினாள்.
“சுபாக்கா…” என்று அவளை பார்த்ததும் துள்ளிக்கொண்டு சென்றவள்,
“வா வா. அவி வருவான்னு சொன்ன? நீயே வந்துட்ட?…” என்று அவளை அமர வைக்க,
“எனக்கு தூக்கம் வருது குறிஞ்சி. நீ சாப்பிடு. அமருக்கும் வச்சு குடு. ரெண்டு பேருக்கான சாப்பாடும் தான் இருக்குது…” என்று சொல்லிவிட்டு செல்ல,
“சுபாக்கா…” என்றவளின் அழைப்பை காதில் வாங்கவே இல்லை.
சுபாஷினி கீழே சென்றதுமே அமரின் பைக் வந்துவிட்டது. அவனை மேலே இருந்தே குறிஞ்சி பார்க்க அமர் கேட்டை திறந்து பைக்கை நிறுத்திவிட்டு மாடிக்கு சென்றான்.
அவன் வருவதை பார்த்ததும் மீண்டும் சோபாவில் சென்று அமர்ந்துகொள்ள உள்ளே வந்தவன் கதவை பூட்டிவிட்டு குறிஞ்சியை கண்டுகொள்ளாமல் படுக்கையறைக்கு சென்றுவிட ஐந்துநிமிடம் பார்த்துவிட்டு போனை போட்டுவிட்டாள் சுபாவிற்கு.
அப்போதுதான் அமர் வந்துவிட்டதை உள்ளிருந்தே பார்த்தவள் விளக்குகளை அணைத்துவிட்டு சென்று படுத்திருந்தாள். கண்ணை மூடியதும் தங்கை அழைக்க,
“என்ன குறிஞ்சி?…” என்றாள் சோர்வாக,
“சுபாக்கா, அவங்க என்னை பார்க்க கூட இல்ல. நீ என்னமோ சொன்ன பேசுவாருன்னு. பார்த்தியா சண்டை தான் போல. இப்ப நான் என்ன செய்ய? சண்டை போட்டா எனக்கு சண்டை தான் வரும்…”
“சரி நீ போய் பேசு…”
“நானா எப்படி சுபாக்கா போய் பேச? அதெல்லாம் முடியாது…” என்றவளை என்ன செய்யவென்றே தெரியவில்லை சுபாவிற்கு.
‘அமரை வச்சுட்டே இப்படி உளறி வைக்கிறாளே’ என ஆற்றாமையுடன் நினைத்தவள்,
“இப்பத்தான வந்திருக்காரு. அவர் பேசலைன்னா நீ பேசு. சும்மா தேவையில்லாம சண்டை போடறேன்னு உளறாத…” என சொல்லி போனை வைத்தவள் உடனே சைலண்டில் போட்டுவிட்டாள். ஆனாலும் உறக்கம் வரவில்லை சுபாஷினிக்கு.
உள்ளே சென்ற அமர்நாத் உடை மாற்றி பாத்ரூம் சென்றுவிட்டு அப்போதுதான் மீண்டும் ஹாலுக்கு வந்தவன் இவள் சுபாவிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தபடி அங்கேயே நின்றான்.
“சுபாக்கா…” என பல்லை கடித்தபடி மீண்டும் அவளுக்கு அழைக்க போக அமர்நாத்தின் பார்வை குறுகுறுப்பில் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க அவன் முதலில் பேசட்டும் என குறிஞ்சி மௌனமாக இருந்தாள்.
அதுவரை ஓரளவு சமாதானம் என்று இருக்க நினைத்தவள் அவனை பார்த்ததும் முருங்கைமரம் ஏறியது அவளின் கோவம். இவனால் தானே அத்தனை திட்டும் என்று பார்த்துக்கொண்டே இருக்க,
“வா தூங்குவோம்…” என்றான்.
“இல்லை எனக்கு தூக்கம் வரலை…” என குறிஞ்சி சொல்ல,
“தூக்கம் வரலைன்னா? உள்ள வா…” என்றான் அமர்நாத்.