“இப்ப என்ன? உனக்கு ரெண்டு வார்த்தை சொல்லித்தரவா?…”
“எங்கம்மா என் நாக்கை அறுத்து அடுப்புல போடவா? இதுக்கு நான் ஆளில்லை…” என்று சொல்ல,
“உன் அம்மாவை சொல்லியே உன்னை வழிக்கு கொண்டு வந்திடலாம் இல்ல…” என்றான்.
“இதுவரைக்கும் கொண்டு வராத மாதிரி தான்…” என சொல்லியபின்பே தான் சொல்லியதன் அர்த்தம் விளங்க,
“ஐயோ…” என்று அவனை பார்த்தாள்.
“ஹ்ம்ம்ம்…” என இதழ்களுக்குள் அதக்கிய புன்னகையுடன் அவளை பார்த்தவன்,
“பேசு, ஆனா பேசிட்டே வேலையை பாரு…” என சொன்னான்.
வீட்டை துடைத்து முடித்து மீண்டும் குளித்துவிட்டு வந்தவர்கள் கீழே இறங்கி செல்ல,
“பார்ரா குறிஞ்சிக்கா அதுக்குள்ளே கீழ வந்துட்டா?…” என சொல்ல அமர் பரமேஸ்வரனின் அருகே அமர்ந்துகொண்டான்.
“ம்மா இன்னைக்கு என்னலாம் வேலை பார்த்தேன் தெரியுமா?…” என அவள் அடுப்படியில் வனஜாவுடன் கதையளந்து கொண்டிருந்தது இங்கே அமர்நாத் வரை கேட்டது.
“வேலை பார்த்தியா? நீயா?…” என சுபாஷினி ஆச்சர்யப்பட,
“சுபாக்கா நீ நம்பமாட்டேன்னு சொல்ற பார்த்தியா?…” என்றவள் வனஜாவின் முகத்தை பார்த்தாள்.
இதை சொன்னாலாவது முந்தைய நல கோபம் குறைந்து சகஜமாய் தன்னிடம் பேசிவிடமாட்டாரா என்று நினைத்தாள்.
“உண்மைய சொல்லு குறிஞ்சி, நிஜமாவே நீ செஞ்சியா?…” என்று சுபாஷினியும் கிண்டலுடன் கேட்க,
“சுபாக்கா, நீ வேணும்னா ஓனர்ட்ட கேளேன்…” என்று சொல்லி,
“நீயெல்லாம் திருந்தவே மாட்ட…” என வனஜாவின் தலையில் குட்டு வாங்கினாள்.
“ம்மா…” என்று தலையை தடவியவள்,
“இதெல்லாம் கேட்கமாட்டியா சுபாக்கா?…” என்றாள் அக்காவிடம். அதை கண்டுகொள்ளாத சுபா,
“வெளில எங்கியாச்சும் போறீங்களா குறிஞ்சி?…” என கேட்க அதை பற்றி அமர் எந்த பேச்சும் பேசவில்லையே என்று அப்போது தான் ஞாபகம் வந்தது அவளுக்கு.
சுபாஷினி திருமணம் முடிந்தது மறுவீடு வந்திருந்த பரமேஸ்வரன் ஐந்து நாட்கள் இங்கே தான் தங்கியிருந்தான். அதில் இரண்டு நாட்கள் உறவினர்கள் இருக்க அதற்கடுத்த நாட்கள் எல்லாம் சுபாவுடன் வெளியே கிளம்பிவிடுவான்.
அதன் பின்பு வரும் பொழுதெல்லாம் தங்களையும் அழைத்துக்கொண்டு செல்வான். இப்போது அமர்நாத் அப்படி அழைத்து செல்லமாட்டானா என்ற எண்ணம் மனதோரம் ஏக்கத்தை தோற்றுவிக்க அடுக்களையில் இருந்தபடி அமர்நாத்தை எட்டி பார்த்தாள்.
அவள் எட்டி பார்த்த நொடி அவளின் இருப்பை கண்டு அவனும் திரும்பி பார்த்தவன் என்னவென கேட்டு அவளின் முகம் அப்படியே இருப்பதை பார்த்தான். அவளாக வரமாட்டாள் என்று தெரிந்தவன்,
“குறிஞ்சி…” என அழைத்துவிட,
“உன்னை தான் கூப்பிடறார். இப்ப யார் இருக்காங்க? போய் என்னன்னு கேளு….” என்று சுபாஷினி சொல்லவும் குறிஞ்சி அமரின் அருகே வந்தாள்.
“ஒரு டூ மினிட்ஸ், நாங்க பேசிட்டு வரோம்…” என்று அவளின் கை பிடித்து கூட்டிக்கொண்டு மாடிப்படி அருகே சென்றவன்,
“என்னாச்சு முகம் டல்லா இருக்குது? உங்கம்மா திட்டினாங்களா?…” என கேட்க,
“ஒண்ணுமில்லையே…” என்று மறைத்தாள்.
அவளுக்கு சொல்லித்தான் அவன் செய்யவேண்டும் என்று விருப்பமில்லை. இதெல்லாம் அவனுக்காகவே தெரியவேண்டும் என நினைத்தாள். அதனால் எதுவுமே வாயை திறக்காமல் நின்றாள்.
இப்படி ஒரு குணம் அவனுக்கு குறிஞ்சியின் இன்னொரு பரிமாணத்தை காட்டவிருக்கிறது என்பதை அப்போது அறியாமல் போனான்.
“கேட்டா பதில் சொல்லனும் குறிஞ்சி…” என்றான் அழுத்தமாக.
“ஹ்ம்ம். ஒண்ணுமில்ல…” என்றவள் இதற்கும் கோவித்துக்கொள்வானோ என நினைத்து,
“நீங்க எப்போ எங்க வீட்டுக்கு மறுவீடு வருவீங்க?…” என்றாள்.
“வாட்?…” என்றான் புரியாமல்.
“இல்ல, சுபாக்கா கல்யாணம் முடியவும் மாமா இங்க தான் அஞ்சு நாள் தங்கி இருந்தாங்க. அதான் நீங்க எப்போ தங்குவீங்கன்னு கேட்டேன்…” என்று சொல்லவும்,
“இதான் உன் மூளையை தின்னுதா?…” என புன்னகைத்தவன்,
“இப்போ இங்க உங்கம்மா வீட்டுல தானே இருக்கேன்? அப்பறம் என்ன?…” என்றான்.
அவனுக்கும் இது தோணவே இல்லை. குறிஞ்சியின் வீட்டினரும் சரி, அமரின் வீட்டினரும் சரி. இதை சம்பிரதாயமாக சொல்லவே இல்லை. எல்லாம் அவனின் வீடுதானே? எதற்கு இது? என்று விட்டுவிட்டனர்.
அமருக்கும் யாரும் அந்த சம்பிரதாயத்தை சொல்லாததே பெரும் நிம்மதியாக இருக்க எப்போதும் போல தன்னுடைய இடத்திலேயே இருந்துகொண்டான். இதோ அவனின் மனைவியே இதை அந்த பேச்சை எடுத்ததும் என்ன பதில் சொல்ல என முழித்தான்.
“சரி நான் உள்ள போறேன்…” என்று சென்றுவிட அமருக்கு இதை எப்படி அவளுக்கு விளக்க என்று புரியவில்லை.
திருமணத்தை திருவிழாவாக அவள் நினைத்திருக்க அந்த ஜரிகை கனவுகளுக்கு மத்தியில் இது போன்ற சூழ்நிலையினால் உருவாகும் நிதர்சனங்களை ஏற்கத்தான் அவளின் மனது தள்ளாடியது.
பொய்த்துப்போன எதிர்பார்ப்புகளை மனது தேட அதனை அடக்கி நிஜத்தில் இருப்பதன் பக்கம் பார்வையை திருப்பவே திணறினாள். இதுதான் என் வாழ்க்கை என்று கொஞ்சம் கொஞ்சமாய் உருபோட ஆரம்பித்திருந்தாள்.
அமர்நாத்திடம் பழக அவளுக்கு எந்தவித தயக்கங்களும் இல்லை என்றாலும் அவனிடம் மனது சென்றாலும் இந்த வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என்று அவளுக்கு தோன்றிக்கொண்டே இருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டில் சொல்லிக்கொண்டு கடைக்கு அவன் செல்ல அவனின் பின்னோடே வந்தாள் குறிஞ்சி. பைக்கை கேட்டின் வெளியே எடுத்தவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய குறிஞ்சியை பார்த்ததும்,
“என்ன குறிஞ்சி?…” என்றான்.
“இல்லை கடைக்கு போறீங்களே? காலையில போன்ல பேசினதா?…” என மெதுவாய் ரகசியம் போல கேட்க சுற்றிலும் திரும்பி பார்த்தவன்,
“முக்கியமா வீட்டுல யாருக்கும் எதுவும் தெரியகூடாது குறிஞ்சி. நீ எதுவும் சொல்லலை தானே?…” என கேட்க,
“இதை எப்படி சொல்லுவேன்? சொல்லலை. சொன்னா ரொம்ப பயந்துக்குவாங்க. அதுவும் நீங்க அவ்வளவு சொல்லியும் எப்படி சொல்ல?… என்றாள்.
“குட் கேர்ள்…” என்றான்.
“சரி உள்ள போ…” என சொல்ல,
“இல்லை நீங்க கிளம்புங்க. போறேன்…” என்று நின்றிருந்தாள் அவனை விட்டு செல்லாமல்.
முகத்தில் இன்னும் சிந்தனைக்கோடுகள் வளைந்துகொண்டிருக்க அவளின் பயந்த முகத்தை பார்த்தவன் அடுத்தநொடி,
“சரி வீட்டுல போய் சொல்லிட்டு வா…” என்றான்.
“என்ன சொல்லனும்?…” என அவள் கேட்க,
“என்னோட வெளில போறேன்னு சொல்லு. இதை கூடவா சொல்லித்தரனும்?…” என்றதுமே குறிஞ்சியின் முகம் மலர்ந்துவிட்டது.
“நிஜமாவா? நிஜமாவே வெளில போறோமா?…” என்றாள் அத்தனை மகிழ்ச்சியுடன் துள்ளினாள்.
“ஹேய், குதிக்காத. எல்லாரும் நம்மளைத்தான் பார்த்துட்டு இருக்காங்க…” என்றன மெதுவாய்.
“பார்க்கட்டும். நான் யாரை பத்தியும் கவலைப்படமாட்டேன்…” என அவனின் பைக் ஹேண்டிலை பிடித்துக்கொண்டு சொல்லியவள்,
“இந்த ட்ரெஸ் ஓகே தானா? சேரில இருக்கேன். நீங்க ஸ்பீடா போனா என்னால மேனேஜ் பண்ண முடியுமா? சுடிதார் மாத்திடட்டா? டூ மினிட்ஸ் இருப்பீங்களா?…” என கேட்க,
“ஏன் இவ்வளோ எக்சைட் ஆகற? ஓகே, போய் மாத்திட்டே வா…” என்றான் அவளின் இந்த சந்தோஷத்தை பார்த்து.
“வந்துடறேன். இப்போ வந்துடறேன்…” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் ஓடினாள்.
வனஜாவிடமும், சுபாஷினியிடமும் சொல்லியவள் பரமேஸ்வரனை கண்டுகொள்ளவே இல்லை. இங்குமங்கும் ஓடி அவளின் அனார்கலி ஒன்றை எடுத்து போட்டவள்,
“ஓனருக்கு இந்த கலர் புடிக்குமான்னு தெரியலையே…” என்று கண்ணாடியை பார்த்தபடி சொல்லிக்கொண்டவள்,
“ஓகே, கேட்டுட்டு வருவோம்…” என வெளியே வந்து,
“இந்த கலர் ஓகே வா?…” என கேட்க அமருக்கு அந்த வெட்டவெளியில் தெருவே இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க குறிஞ்சி அப்பை கேட்டு அவனிடம் நின்றது சற்று கூச்சத்தை கிளப்பியது.
“படுத்தறடி. வண்டில ஏறு…” என்றான்.
“ம்மா, அப்பா வரவும் சொல்லிருங்க…” என அங்கிருந்தே கத்தி சொல்ல,
“குறிஞ்சி இங்க வந்துட்டு போ…” என அவளை உள்ளே அழைத்த சுபாஷினி தலையில் பூவை வைத்துவிட்டவள்,
“இந்த எலுமிச்சை பழத்தை வச்சுக்கோ. எங்கயும் போட்டுடாத….” என சொல்லி அனுப்பிவிட வாசல் வரை,
“பை சுபாக்கா. பை அவி…” என சொல்லிக்கொண்டே வர பைக்கில் அமர்ந்தவண்ணம் இவளின் அளப்பறைகளை கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்தவககில் பார்த்துக்கொண்டிருந்தான் அமர்நாத்.
“போலாம், போலாம்…” என்று வண்டியில் ஏற,
“நல்லா புடிச்சுக்கோ…” என்று அமரும் சொல்ல அவனின் இடுப்பில் கை போட,
“ப்ச், உதை வாங்குவ. ஷோல்டரை பிடி…” என்று சொல்லி வண்டியை கிளப்பினான்.
ஐஸ்வர்யா அந்த சத்தத்தில் அவளின் வீட்டு மாடியில் இருந்து எட்டிப்பார்த்து புகைச்சலுடன் நின்றதை எல்லாம் குறிஞ்சி கண்டுகொள்ளவே இல்லை.
அந்த தெருவை கடந்ததும் தான் சாரதாவிடம் சொல்லிவிட்டு வராததே குறிஞ்சிக்கு புரிந்தது.
“ஐயோ சாரதாம்மாட்ட சொல்லவே இல்லை…” என்று அவனின் காதில் கத்த,
“நான் சொல்லிட்டேன். அவங்க மாடில இருந்து பார்த்துட்டு தான் இருந்தாங்க. நீ என் காதுல கத்தாம வா…” என்றான்.
அதன் பின்னர் குறிஞ்சி எதுவும் பேசவே இல்லை. ஆனால் மனதினுள் அப்படி ஒரு ஆர்ப்பரிப்பு. சற்று தூரம் வந்ததும்,
“இப்போ இடுப்பை பிடிச்சுக்கோ குறிஞ்சி…” என சொல்ல,
“ஒன்னும் வேண்டாம். இப்படியே போகலாம்…” என்று அவள் பிகு பண்ண,
“அப்ப இங்கயே நிப்போம்…” என்று வண்டியை நிறுத்திவிட்டான் அமர்.
“சரியான ப்ளாக்மெய்லர் ஓனர்…” என்று அவனின் தோளில் கிள்ளியவள் அவன் சொல்லிதை போல அவனின் இடுப்பை பிடித்துக்கொண்டு மறந்ததும் பைக் காற்றில் பறந்தது.
“ஹூ…” என்னும் சத்தத்துடன் குறிஞ்சி ஆள் அரவமற்ற பாதையில் சத்தம் போட புன்சிரிப்புடன் அதை அனுபவித்தபடி பைக்கை செலுத்தினான் அமர்நாத்.
வாழ்க்கை இப்படித்தான், இனி ஒன்றுமே இல்லை என்று நினைத்திருந்த நேரம் இந்த சின்ன விஷயம் கூட அவளின் மனதில் ஆயிரம் பூக்களை பூக்க செய்ய அதைக்கொண்டே அத்தனை சந்தோஷப்பட்டாள்.
அதிலும் தானாக அவனிடம் போய் கேட்காமல் தானாகவே நடந்தது. அமர் அவளின் முகம்பார்த்து கேட்டது என்று அவளின் மனதின் வருத்தத்தை சற்று ஆற்றியதை போல இருந்தது.
“போய்ட்டே இருக்கோம். எங்க போக?…” என்று ஆளில்லா இடத்தில் வேகத்தை குறைத்து அவன் கேட்க,
“எனக்கு தெரியலை? நீங்க எங்க போனாலும் சரி…” என்றாள்.
குரலில் அத்தனை நெகிழ்ச்சி. எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்ததை வைத்து மகிழவும் அவளுக்கு தெரிந்திருந்தது. அதை அன்று உணர்வுப்பூர்வமா அவள் உணர்ந்துகொண்ட நாள்.
தந்தையின் அருகாமை கிடைக்காது என்றாலும் பலநேரங்களில் அவரை தேடி தவித்திருக்கிறாள். அவள் இல்லாத கனத்த சூழ்நிலைகளை அவள் கடந்துவந்தது எல்லாம் கனவாகிவிடகூடாதா என்று நினைக்காத நாளில்லை.
தனக்கும் தன்னுடன் இருக்கும் கணவன் வேண்டும் என்றும், அவன் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்றும் அவளின் மனதில் மிகப்பெரிய கனவே இருந்தது. அதற்கு எந்த எல்லையும் இல்லை.
அழகு, பணம், அந்தஸ்து என இந்த எதிர்பார்ப்புகள் அவளுக்கு இல்லை. இது எதுவும் அவளுக்கு பொருட்டில்லை. அப்படி ஒன்றிற்கு ஆசைப்படவும் இல்லை.
அவளின் எதிர்பார்ப்புகள் தேடிய நிமிடம் தேவைக்கு தன் முன்னால் வந்து நிற்கும் ஒருவனே. முக்கியமான நேரங்களை சேர்ந்து இருந்து கழிக்கும் நிமிடங்களை தருபவனை. சின்ன சின்ன வாழ்த்துக்களை மறவாமல் பரிமாறிக்கொள்பவனை.
அனைத்தும் தவிடுபொடியானது அமர்நாத்தின் முடிவினால். மொத்தமாய் வாழ்க்கை புரண்டுவிட அதை சரிசெய்யவும் தெரியாமல், தன் ஏமாற்றத்தை மறைக்கவும் முடியாமல் இரண்டிற்கும் நடுவில் அந்த வாழ்க்கையுடன் ஒன்றவும் முடியாமல் அவள் தவித்தது தான் அதிகம்.
“குறிஞ்சி, என்ன சைலன்ட் ஆகிட்ட?…” என கேட்டவன் பைக்கை ஓரமாய் நிறுத்தி அவளை திரும்பி பார்க்க அவளின் கண்கள் கலங்கி இருந்தது.
“ஹேய், என்னாச்சு? தூசியா?…” என்றவன் அவளை இறங்க சொல்லி தன் முன்னால் கொண்டுவந்து கண்களில் ஊதிவிட அவனின் எந்த செயலையும் தடுக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
“இப்போ ஓகே தானே?…” என கேட்க,
“ஹ்ம்ம், ரொம்ப…” என்றாள் கைகளை விரித்து காண்பித்து.
“ஓகே, வண்டில ஏறி உட்கார்…” என்றவன் மனதோ அவளை இன்னும் நன்றாக பார்த்துக்கொள்ள நினைத்தான்.
அன்று மதிய உணவு கடந்துதான் வீடு வந்து சேர்ந்தனர் அமர்நாத்தும் குறிஞ்சியும். அவளை கையில் பிடிக்கமுடியவில்லை. சாரதாவிடம் சொல்லி சொல்லி ஓய்ந்து போனாள்.
“பரவாயில்லை சாரதாம்மா உங்க பையன் சூப்பர்…” என்று வேறு சொல்ல,
“என் பையனாச்சே…” என அவரும் அவளோடு இணைந்துகொண்டார்.
அந்த வாரம் முழுவதுமே அவளுக்கு அந்த ஒரு நிகழ்வே போதுமானதாக இருக்க அமருக்காக,
“ஓனர் நல்லவருதான்…”என்று மெச்சிக்கொண்டாள் மனதில்.
அடுத்த இரண்டு நாளில் சுபாஷினியும் பரமேஸ்வரனுடன் கிளம்பிவிட, அடுத்த பத்து நாட்களில் தயாளன் அந்த வீட்டை காலி செய்துகொண்டு தான் கட்டிக்கொண்டு இருக்கும் வீட்டிற்கு மாறிவிட்டார்.
அதுவரை பட்டாம்பூச்சியாய் சுற்றி வந்தவள் அந்த ஒருநாளில் யாருமின்றி ஒடிந்து போனாள்.
அத்தனை அழுகை, அத்தனை கெஞ்சல், அத்தனை வேண்டுதல் எதற்கும் தயாளன் மசியவில்லை.
“மருமகன் வீட்டுல வாடகை காசு குடுத்துனாலும் இருக்கறதுக்கு மனசு ஒப்பாதும்மா. புரிஞ்சுக்கோ. இதுதான் எல்லாருக்குமே நல்லது. குணமா வாழ பழகு…” என்று சொல்லி கிளம்பியேவிட்டார்.
சாரதா, நாராயணன், அமர்நாத் என யார் சொல்லியும் அவர் இருக்கவில்லை. கிளம்புவது உறுதியாகி கிளம்பியும்விட்டனர்.