குளிர் – 12
அன்று முதல்நாள் இரவில் இருந்தே முகம் அத்தனை சோர்வுடன் இருந்தது குறிஞ்சிக்கு.
அமர் என்ன செய்கிறான் என்று பார்க்க தான் வந்திருந்தாள் மாடிக்கு. இரவு கீழே தாயுடன் தாங்கிக்கொள்ள அவளை ஒன்றும் சொல்லவும் முடியாமல் வனஜா தான் தவித்து போனார்.
“உங்களுக்கு உதவியா இருக்கட்டும் அத்தை…” என்று சொல்லிவிட்டான் அமர்நாத்.
அதனால் அவர்களால் மறுக்கவும் முடியவில்லை. குறிஞ்சி வேறு அழுதுகொண்டே இருக்க மகளை சமாதானம் செய்யவே சரியாக இருந்தது.
“அவங்க தான் இருக்க சொல்றாங்கல்லம்மா? ஏன் கேட்கமாட்டேன்றீங்க?…” என்று காலை எழுந்ததில் இருந்து ஆரம்பித்திருந்தாள்.
“எப்படியும் வீட்டை காலி செய்யனும்னு தான முதல்லையே முடிவு பண்ணிருந்தோம். இப்ப ஏன்டா?…” என வனஜா சொல்லியும் பார்த்துவிட்டார்.
சுபாஷினி கிளம்பும் அன்றே காலை அந்த வீட்டிற்கு சென்று பாலை காய்ச்சிவிட்டு வந்துவிட்டனர். அன்று அவளும் கிளம்பிவிட இதோ கொஞ்சம் கொஞ்சமாய் அத்தனையையும் ஒதுக்கி கட்டி முடித்தனர்.
வீடு பார்த்து முடித்தது கொஞ்சமும் எதிர்பாராமல் தான. அதுவும் தயாளன் அதில் முடிவாக இருக்க அமர் தான் வீடு பார்த்து கொடுத்தான்.
இதே போல குறைந்த வாடகையில் நல்ல வீடாகவும், இப்போது அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் அருகிலேயும் பார்த்திருக்க அதுவே வசதியாக போனது.
மூவர் தானே என்றெல்லாம் தயாளன் சிறிய வீடாக பார்க்கவில்லை. மகள், மருமகன் வந்து தங்க ஏற்ற மாதிரியே பார்த்திருந்தார்.
குறிஞ்சியிடம் சொல்லி அவளுக்கு ஏற்கவே முடியவில்லை என்றாலும் தந்தையின் பேச்சை மீறவும், ஆட்சேபிக்கவும் முடியவில்லை.
புலம்பல் எல்லாம் வனஜாவிடமும், அவினாஷிடமும் தான். வேறு யாரிடம் சொல்ல? அமரிடம் கேட்க தோன்றவில்லை.
‘ஏன் வீடு பார்த்து கொடுத்தாய்?’ என்று கேட்க வரவில்லை. அத்தனை சண்டை போட்டிருந்தாலும் அது தன்னைக்கொண்டே இருக்க தன் குடும்பத்தினர் பற்றி அவனிடத்தில் பேசும் அளவிற்கு ஒரு மனநெருக்கம் இன்னும் அவளிடம் ஏற்படவில்லை.
முதல்நாள் இரவு முழுவதும் வனஜா, அவினாஷுடனே நேரத்தை கழித்தவள் முகத்தில் இருந்த கவலையை பார்த்து அமர் அங்கேயே அவர்களுடன் இரு என்றுவிட்டான்.
இதோ காலை எழுந்ததும் வனஜா முதலில் செய்தது உன் புருஷனை போய் பார்த்துவிட்டு வா என்பது தான்.
“ஏம்மா இப்படி செய்யறீங்க? இங்க இருக்கலாம்ல. நீங்களும் போய்ட்டா நான் மட்டும் என்ன செய்ய?…” என்றவள்,
“இப்பதான் கல்யாணம் ஆகிடுச்சே…” என சொல்ல,
“கல்யாணம்னு பேச்சு வரும் முன்னவே அந்த பிரச்சனையால அப்பா இங்க இருக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டார். இப்ப கல்யாணமும் பண்ணி வச்சுட்டு இங்கயே இருந்தா நல்லா இருக்காதுடா. உனக்காகவும் சேர்த்து தான் சொல்றேன்…”
இப்படி என்ன சொன்னாலும் வனஜா மறுத்தே பேச மனது ஏகத்திற்கும் துடித்தது.
“எனக்கு எதுவுமே தெரியாதும்மா, நான் இங்க என்ன செய்வேன்? தப்பு பண்ணா கூட சொல்ல நீங்க இருக்கனும்ல…” என சொல்லிய மகளை பார்க்க பாவமாய் இருந்தது.
“குறிஞ்சிம்மா, அதான் போன் இருக்குலடா. அம்மாட்ட எப்போ வேணா பேசு. இப்ப இங்க இல்லாம வெளில நாங்க இருந்திருந்தாலும் எங்களை பிரிஞ்சு தான நீ வந்திருக்கனும். இதெல்லாம் யோசி…” என்றார் தன்மையாக.
அவருக்கு மகளை கடிந்துகொள்ளவும் மனது வரவில்லை. இப்படி இருக்கிறாளே என்று கவலையாகவும் இருந்தது.
“நீ முதல்ல மேல போய் குளிச்சுட்டு மாப்பிளைக்கு என்ன வேணும்னு கவனி…” என சொல்லி அனுப்பி வைக்க மாடிக்கும் வந்துவிட்டாள்.
அவன் தங்கள் வீட்டில் இல்லாது போக வந்தவள் வழமை போல பெட் கவரை மாற்ற அமர்நாத் வந்துசேர்ந்தான்.
“இன்னைக்கு நீ சீக்கிரம் எந்திச்சுட்ட போல?…” என்று வந்தவன் உடற்பயிற்சி முடித்து வியர்வையுடன் நிற்க,
“ஹ்ம்ம் அம்மா எழுந்திக்கவும் நானும் எந்திச்சுட்டேன்…” என்றவள் அமைதியாய் இருக்க அவளாக ஏதாவது கேட்பாள் என்று பார்த்தான்.
காலை அவர்களுக்கும் சேர்த்து தான் தன் வீட்டில் சமையல் நடந்துகொண்டு இருக்க சாப்பிட்டதும் லாரி வரவழைத்து பொருட்களை ஏற்றும் வேலை தான்.
அவர்களுடன் செல்ல நினைப்பாள் என்று அமர்நாத் நினைத்துக்கொண்டு இருந்தான்.
“நீங்க குளிக்கறீங்களா? இல்லை நான் பாத்ரூம் யூஸ் பண்ணிக்கட்டுமா?…” என கேட்டவளின் முகம் சுரத்தே இல்லாதிருந்தது.
“நீ போய்ட்டுவா. இந்த ஸ்வெர்ட்டிங்கோட குளிக்க முடியாது…” என சொல்லவும் வேகமாய் ஒரு சுடிதாரை எடுத்துக்கொண்டு குளித்துவிட்டு துரிதகதியில் வந்தவள் தலைபின்னி,
“நான் கீழே இருக்கேன்…” என சொல்லி கீழே இறங்கிவிட்டாள்.
“சாரதாம்மா, நானும் ஹெல்ப் பண்ணவா?…” என குறிஞ்சி தன் மாமியாரிடம் கேட்க,
“நானே சும்மா வேடிக்கை தான பார்க்கறேன். நீ கீழ போய் வனஜா கூட இரு. நான் இதெல்லாம் முடியவும் எடுத்துட்டு வரேன்…” என சொல்லி அனுப்பினார் அவர்.
சம்பந்தி ஆகிவிட்டாலும் தயாளனிடம் ஒரு ஒதுக்கம் இருக்க சாரதா அவருக்காகவே கீழே உணவை கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்துக்கொண்டார். அமரும் கடைக்கு கிளம்பி அடுத்த பத்துநிமிடத்தில் கீழே வந்தவன்,
“ம்மா, டிபன் வைங்க…” என்று அமர்ந்தான்.
“இப்பதான் குறிஞ்சி கீழே போனா. இரு வர சொல்றேன்…” என,
“ப்ச், அவ அங்க அவங்கம்மாவோட இருப்பா. நீங்க எனக்கு வைங்க. கடைக்கு கிளம்பனும்…” என்று அவசரப்படுத்தினான்.
அவனின் மனது இவள் என்ன எதுவுமே என்னிடம் கேட்பதில்லை என்பதிலேயே சுழன்றது. முதல் நாளும் தானாக தான் முன்வந்து கீழே இரு என்று சொல்லியிருந்தான். இப்போதும் எதையும் வெளிப்படுத்தாமல் இருக்க அமைதியாக சாப்பிட்டவனையே ஆராய்ந்துகொண்டு இருந்தார் சாரதா. அதை கண்டு,
“என் முகத்துல எதுவும் எழுதி ஒட்டியிருக்கா?…” என தாயிடம் பட்டென்று கேட்க,
“எதுவும் ஒட்டலை. அதான் பார்த்தேன். ஒட்டியிருந்தா அப்பவே சொல்லிருக்கமாட்டேனா?…” என்று சாரதா பேச,
“ஹ்ம்ம், சும்மாவே உங்க பேச்சு அப்படி. இப்ப அவளோட சேர்ந்து இப்படி…” என்று சொல்லி சாப்பிட்டுவிட்டு கையை கழுவி வந்தான்.
“கடைக்கு கிளம்பறேன். போய்ட்டு அப்பாவை அனுப்பிவிடறேன்…” என்று எழுந்துகொள்ள,
“குறிஞ்சி அங்க போறாளா அமர்?…” என்றார் சாரதா.
“என்கிட்டே எதுவும் சொல்லலையே. உங்ககிட்ட பேசினாளா?…” என கேட்க,
“இல்லையேப்பா. அந்த பொண்ணு கல்யாணத்துக்கு முன்ன கூட ஏதாவது பேசுவா. கேட்பா. இப்ப எதுவுமே இல்லை. நல்லா பேசறா. ஆனா தயங்கறா. கொஞ்சநாள்ல சரியாகிடும்….”
“ஹ்ம்ம், சரி…” என்று வாசலுக்கு வர,
“குறிஞ்சி போய்ட்டு வேணா வரட்டுமே? நீ என்ன சொல்ற?…”
“ம்மா, அதை பார்த்துக்கலாம். நான் கிளம்பறேன்…” என்று கீழே இறங்கிவிட உணவை கீழே கொண்டு செல்ல சமையல்கார பெண்ணை சொல்லிக்கொண்டு இருந்தார்.
கீழே சென்றவன் அங்கே குறிஞ்சியும் அவினாஷும் சேர்ந்து சின்ன சின்ன பெட்டிகளை வாசலில் கொண்டுவந்து வைத்துக்கொண்டிருப்பதை பார்த்தான்.
“நீங்க ஏன் இதெல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கீங்க? பேக்கிங் மட்டும் முடிக்க வேண்டியது தானே?…” என வர,
“பேக்கிங் எல்லாம் நேத்தே முடிச்சாச்சு. லாரி இப்ப வந்திரும் மாப்பிள்ளை. அதான் சின்ன சின்ன பொருட்களை எல்லாம் எடுத்து வச்சிடுவோம்ன்னு…” என தயாளனும் தன் கையில் ஒன்றை தூக்கியபடி வந்து சொன்னார்.
“நான் அதுக்கும் சேர்த்து தான் பசங்களை சொல்லிருக்கேன் மாமா. யாரும் எதுவும் செய்ய வேண்டாம்…” என்றவனை சங்கடத்துடன் பார்த்தவர்,
“இல்ல, லாரி ஆபீஸ்ல இருந்து பசங்க வருவாங்க. அவங்களே உதவுவாங்களே. எதுக்கு மாப்பிள்ளை?…” என சொல்லவும்,
“இருக்கட்டும். அவங்களே வந்து செய்யட்டும். தனியா உங்களுக்கு கஷ்டம்…” என்று அவன் சொல்லிவிட சரி என்றுவிட்டார் தயாளன்.
இதையும் மறுத்தால் என்ன நினைப்பானோ என்று யோசித்தபடி அவர் இருந்துவிட வனஜாவுடன் பேசிக்கொண்டிருந்த குறிஞ்சியை பார்த்தவன் ஏதாவது சொல்லுவாள் என்று நினைக்க அவளோ இதோ நேரம் ஆகிவிட்டதே, கிளம்பிவிடுவார்களே என பரிதவிப்புடன் இருந்தாள்.
“குறிஞ்சி மாப்பிள்ளை பார்க்கறார். என்னன்னு போய் பேசு…” என வனஜா தான அதை கண்டு சொல்ல,
“ம்மா, அவர் கடைக்கு கிளம்பிட்டார்…” என்பதும் அவனுக்கு கேட்கத்தான் செய்தது. அதற்கு மேலும் அங்கிருக்க முடியவில்லை அவனால்.
‘அவளுக்கு தேவை என்றால் அவள் தானே கேட்கவேண்டும்’ என்று நினைத்து பைக்கை வெளியே எடுக்க அவினாஷ் கேட்டை திறந்தான்.
“டேய் நான் பார்த்துக்கமாட்டேனா?….” என்றவன் இறங்கி வர,
“இருக்கட்டும் மாமா. நீங்க வாங்க. கிளம்பிட்டீங்க தான?…” என்றான் அவினாஷ்.
“அவி உள்ள வா…” என்ற வனஜா,
“போய் அவரை அனுப்பிட்டு வா…” என்று மகளிடம் சொல்லிவிட்டு அவர்கள் உள்ளே சென்றனர்.
இன்னும் வாசல்படியிலேயே குறிஞ்சி நிற்க அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமர் பைக்கை ஸ்டார்ட் செய்ததும் இறங்கி அவனருகே சென்றாள். அவன் எதுவும் பேசமாட்டானா என பார்த்து நிற்க,
“கிளம்பறேன். பார்த்துக்கோ…” என்று சொல்லவும் குறிஞ்சி முகம் வாடிவிட்டது.
“ப்ச், இப்ப எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்க?…” என்றான் அவனாகவே மனது கேட்காமல்.
“இல்லை இன்னும் கொஞ்சம் நேரத்துல கிளம்பிருவாங்க…”
“ஹ்ம்ம், தெரியும் தானே?…” என சொல்ல அவள் இன்னும் வாயை திறக்காமல் நின்றாள்.
“உன்னோட இம்சைடி. மத்ததுக்கு மட்டும் வாய் கிழிய பேசுவ. இப்ப ஒன்னும் சொல்லாம நிக்கிற. எல்லாம் நானே தெரிஞ்சி உனக்கு சொல்லனுமா?…” என்று முறைப்போடு கேட்க,
“நான் ஒன்னும் கேட்கலையே. எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோவம்?…” என்றாள் அவளும் பதிலுக்கு.
“அதான் பிரச்சனையே. ஒன்னும் கேட்காம இப்படி இருக்க. எனக்கு இப்படி பார்த்துட்டு கிளம்ப மனசே இல்லை…” என்று அவன் சொல்லவும் அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள்.
“சரி நீயும் கூட போய் செட் பண்ணனும்னா போ. நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்…” என சொல்லவும்,
“நிஜமாவா?…” என்று இன்னும் அவனை நெருங்கி நிற்க,
“இவ்வளோ நேரம் அழுது வடிஞ்சுட்டு இப்ப லைட் எரியுது உன் முகத்துல…” என்றவன் தலையை கோதியபடி சுற்றி திரும்பி பார்த்தான் யாராவது தங்களை பார்க்கிறார்களா என்று.
“அப்போ அம்மாட்ட சொல்லிருங்க. நான் சொன்னா நம்ப மாட்டாங்க…” என்று சொல்லி வனஜாவை கூப்பிட போக,
“ஹேய் நில்லு குறிஞ்சி…” என்று அவளின் கையை பிடிப்பதற்குள் ஓடிவிட்டாள்.
இந்த பத்துநாட்களாக அவளோடு கழித்த நிமிடங்கள் எல்லாம் முதல் நாள் இரவு அவளில்லாமல் அவனை வாட்ட அருகில் கூட வருவேனா என்று சோக கீதம் வாசித்தவளை ஒன்றும் சொல்லமுடியாமல் நின்றான்.
போன வேகத்தில் வனஜாவுடன் குறிஞ்சி வர அமருக்கு ஐயோ என்றிருந்தது. அவர்களும் இவனை குறிஞ்சி சொன்னது உண்மையோ என்னும் வண்ணமே பார்க்க,
‘அராத்துக்கு தெரிஞ்சிருக்குது வீட்டுல நம்ப மாட்டாங்கன்னு. இதுல எல்லாம் விவரம் தான்’ என நினைத்தவன்,
“குறிஞ்சி உங்க கூட வரட்டும் அத்தை. நானே மதியம் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்…” என்று சொல்ல,
“மதியமா?…” என்று அவனின் வன்மையான பார்வைக்கு ஆளானவள்,
“ஓகே ஓகே…” என சரண்டர் ஆனாள்.