“அம்மாட்ட சொல்லிட்டு போ குறிஞ்சி…” என்றவன் கிளம்பிவிட,
“நீ தான் கேட்டியா? எங்களோட வரேன்னு?…” என வனஜா அவளை கடிந்தார்.
“ம்மா, நான் கேட்கமாட்டேன். உங்களுக்கு தெரியும்ல கேட்க கூடாதுன்னா கேட்கவே மாட்டேன்னு…” என்று சொல்லவும் மகளுக்காக சரி என்றுவிட்டார்.
சாரதாவும் வர நாராயணனும் சாப்பிட வந்துவிட்டார். அவருமே அனைவரோடும் கீழேயே சேர்ந்து சாப்பிடுவதாக சொல்லிவிட குறிஞ்சி புதுவீட்டிற்கு செல்வதை பற்றி சொல்லவும் சாரதாவும் உடன் உதவிக்கு வருகிறேன் என்றார்.
“அதெல்லாம் இல்லைங்க அண்ணி. எல்லாம் கிளீன் பண்ணி தான் செட்டா அடுக்கி வச்சிருக்கோம். போனதும் எடுத்து அடுக்கறது மட்டும் தான். ரொம்ப வேலை இல்லை…” என்று சொல்லிவிட சரி என்றுவிட்டனர்.
சற்று நேரத்தில் லாரி வந்துவிட அமர் சொல்லிய ஆட்களும் வந்து சேர்ந்தனர். வீட்டை காலி செய்துவிட்டு வெறுமையான வீட்டை பார்க்கும் போதே குறிஞ்சிக்கு கண்ணை கரித்துக்கொண்டு வந்தது.
வந்த இரண்டாம் நாளே அமருடன் ஆன பிரச்சனையால் அந்த வீடே பிடிக்கவில்லை, பிடிக்கவில்லை என்று சொன்னாலும் அந்த வீட்டின் நினைவுகள் ஏராளம்.
சுபாஷினியின் திருமணத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு நிகழ்வுகளும் அந்த வீட்டை நிறைத்திருந்தது. அதில் பெரும்பாலும் தயாளன் இருந்ததில்லை என்றாலும் அதை பிரிவது அவர்களுக்கு அத்தனை வருத்தமாக தான் இருந்தது.
“குறிஞ்சிம்மா…” என சாரதா வந்து அவளின் தோளை தொட,
“ஒன்னும் இல்லை சாரதாம்மா. நான் போய்ட்டு வரேன். இப்ப கதவை பூட்ட வேண்டாம். நாங்க கிளம்பவும் பூட்டுங்களேன்…” என கேட்க,
“என்னடா இது? இதுக்கு போய் அழுதுட்டு…” என்று அவளின் கண்ணை துடைத்துவிட்டவர் அவர்கள் கிளம்பி செல்லும் வரை அங்கேயே இருந்தார்.
புது வீடு அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் செல்லவே அரைமணி நேரத்திற்கும் மேலே பிடித்தது.
வீட்டிற்கு சென்று இறங்கியதும் அத்தனையையும் உதவ வந்தவர்களே எடுத்து எங்கே எங்கே வைக்கவேண்டும் என கேட்டு அங்காங்கே வைத்துவிட்டு செல்ல அனைவருமாக சேர்ந்து மதியத்திற்குள் பெட்டியில் இருந்தவற்றை பிரித்து எடுத்து ஓரளவு அடுக்கி முடித்தனர்.
மதிய உணவிற்கு வெளியே சொல்லியிருக்க எடுத்து சாப்பிட்டு முடித்து அமரவும் இரண்டு மணிவாக்கில் வந்துவிட்டான் அமர்நாத்.
சாப்பிட்டு போக சொல்லியும் வேண்டாம் என மறுத்தவன் சிறிது நேரம் இருந்துவிட்டு குறிஞ்சியை கிளம்புமாறு சொல்ல அவளுக்கு கிளம்பவே மனதில்லை.
“போம்மா, இன்னொரு நாள் வா…” என வனஜா அவளை கிளம்ப சொல்ல,
“ம்மா கிட்சன் இன்னும் அடுக்கி முடிக்கலையே…” என்றாள் பிரிய மனமின்றி.
“அதெல்லாம் பொறுமையா பார்த்துப்பேன். எனக்கும் பொழுது போகனுமே? நீ கேட்டதே எனக்கு அவ்வளவு நிம்மதியா இருக்குதுடா. இப்படியே பொறுப்பா இரு…” என்று சொல்லவும் அவரை கட்டிக்கொண்டவள்,
“ம்மா, தனியா இருந்துப்பீங்களா?…” என இன்னும் வனஜாவின் கையை பிடித்து மாறி மாறி தந்தை, தம்பி, தாய் என அனைவரையும் பார்த்துக்கொண்டே இருக்க,
“குறிஞ்சி கிளம்பும்மா. அவர் எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணுவார்?…” என வனஜா சொல்லவும்,
“நான் வேணா ஈவ்னிங்…” என்று அவள் முழுதாய் முடிக்கும் முன்,
“குறிஞ்சி கிளம்பு…” என்றார் தயாளன்.
அமருக்குமே பாவமாய் போக மாலை கூட வந்து அழைத்து சென்றிருக்கலாமோ என்று தோன்றியது.
மாலை கடைக்கு சென்றால் இரவு தான் வீட்டிற்கு வர முடியும். அதிலும் கஸ்டமர்ஸ் வந்து சென்றுகொண்டே இருக்க அவனால் வரமுடியாமலும் போகலாம் என்று நினைத்தே இப்போதே அழைக்க வந்துவிட்டான்.
“உடம்பை பார்த்துக்கோங்கம்மா. இங்க மேல மொட்டைமாடி மட்டும் தான். ஆனாலும் ரொம்ப ஏறி இறங்க கூடாது. அவியை கூப்பிடுங்க. அவன் ஹெல்ப் பண்ணுவான்…” என ஒவ்வொன்றாய் அவள் பெரியமனுஷி போல வனஜாவிற்கு அறிவுரை சொல்ல,
“என் பொண்ணு ரொம்ப வளர்ந்துட்டா…” என சிரித்தார் அவர்.
“அவி அம்மாவை பார்த்துக்கோ. அம்மாவுக்கு இந்த தரை அவங்களுக்கு கால்வலி வரும். அதனால மறக்காம அவங்களுக்கு தைலம் தேச்சு விடு. இனி நீ தான் பார்த்துக்கனும்…”
மகள் சொல்ல சொல்ல தயாளன் தன் குடும்பத்தில் தான் அறியாமல் இத்தனை உள்ளதா என்றுதான் பார்த்துக்கொண்டு இருந்தார்.
இவை எல்லாம் அவரின் கவனத்திற்கே வரவில்லை. சம்பாதிப்பதும், வீட்டிற்கு தருவதும் மட்டுமே அவருக்கு தலையாய கடமையாக இருக்க இப்படி மனைவிக்கு, பிள்ளைகளுக்கு என்ன ஏதென்று எதுவுமே அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
அவரின் முகம் பார்த்தே ஓரளவுக்கு புரிந்துகொண்ட அமர்நாத் அவரின் அருகே வந்து,
“ஒரு நிமிஷம் வாங்க மாமா…” என வெளியே அழைத்து வந்தான்.
“இதை நான் சொல்லகூடாது தான். எனக்கு வயசும் அனுபவமும் இல்லை. இருந்தாலும் உரிமையில சொல்றேன்…”
“நீங்க சொல்லுங்க மாப்பிள்ளை. எதுவானாலும் சொல்லலாம்…” என தயாளனும் கேட்க,
“சம்பாத்தியம் நமக்கு எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு யாருக்கு சம்பாதிக்கிறோமோ அவங்களும் நமக்கு முக்கியம். முடிஞ்சளவுக்கு லோடு போகறதை நீங்க குறைச்சுக்கோங்க. இங்க புது இடம். நீங்க கொஞ்சம் நாள் கூட இருங்க….” என சொல்ல,
“ஹ்ம்ம், சரிங்க மாப்பிள்ளை…” என்றார் மறுக்காமல்.
“பழைய இடம்ன்னா ஒண்ணுமில்லை. ஆனா இங்க யார் என்னன்னு இன்னும் பழகாததால கூட இருக்கனும். இதுக்குத்தான் சொன்னேன். வீடு கட்டி முடிக்கும் போது காலி பண்ணிக்கலாம்ன்னு…” என்ற அமர்நாத்தை எண்ணி சிரிப்பு தான் வந்தது தயாளனுக்கு.
பெண் கேட்டு வந்த தோரணை என்ன? இன்று இவர் பேசுவதென்ன? என்று நினைத்து லேசாய் சிரித்தவர்,
“சரிங்க மாப்பிள்ளை. நான் பார்த்துக்கறேன். எனக்குமே வீட்டு வேலை இருக்குது. அதனால நானும் இப்போதைக்கு எங்கையும் போக முடியாது தான்…” என்று சொல்லவும்,
“ரொம்ப நல்லது…” என்று சொல்ல குறிஞ்சியும் வனஜா, அவினாஷுடன் வந்துவிட்டான்.
“கிளம்புவோமா?…” என கேட்டதும் தலையசைத்தவள் வீட்டினரிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் குறிஞ்சி.
தன் வீட்டிற்கு வந்ததுமே கீழே காலியாக இருந்த வீட்டை பார்த்தவளுக்கு கண்ணீர் உடைப்பெடுக்க மாடிக்கு சென்றுவிட்டாள்.
சாரதாவை பார்த்ததும் அவரிடம் பேச ஆரம்பிக்க அவளை எட்டி பார்த்தவன் இப்போதைக்கு வரமாட்டாள் என்று அங்கேயே டிவியை போட்டுவிட்டு அமர்ந்தவன் சற்று நேரத்தில் கடைக்கு கிளம்பினான் அவளிடம் சொல்லிவிட்டு.
வெகு நேரம் சாரதாவோடு பேசிக்கொண்டிருந்தவள் அவரும் லேசாய் உறக்கத்திற்கு சொக்க மாடிக்கு வந்துவிட்டாள்.
தனியே சற்று நேரம் அங்கேயே உலாத்தியபடி இருந்தவளுக்கு நேரம் செல்லவே இல்லை. வனஜாவிற்கு அழைத்தாள். அவரோ வேலையில் இருக்க பிறகு பேசுவதாய் சொல்லி வைத்துவிட்டார்.
சுபாஷினிக்கு அழைக்க அவளும் வேலை என்று சொல்லி வைத்துவிட்டாள். யாரிடமும் பேசவும் முடியாமல் எப்போதையும் விட தனிமையாக உணர டிவியை போட்டுவிட்டு அமர்ந்தாள்.
எப்போதும் ரசித்து பார்க்கும் விஷயத்தில் கூட மனது ஒன்றவில்லை. அதையும் வைத்துவிட்டு மாடிக்கு சென்றுவிட்டாள்.
எப்போது வந்தாலும் சந்தோஷம் தரும் அந்த முல்லைப்பந்தல் அன்று அவளுக்கு ஆறுதல் தரவும் முன்வந்தது.
மீண்டும் கீழே வந்து சாவியை எடுத்துக்கொண்டு காலியாக இருக்கும் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு சிறிது நேரம் அங்கயே இருந்தவள் தானும் அவினாஷும் அந்த வீட்டில் கிறுக்கி வைத்தவை அனைத்தையும் ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து அவற்றை போட்டோவும் எடுத்துக்கொண்டாள்.
“குறிஞ்சி இங்க என்னம்மா பன்ற?…” என்ற சாரதாவின் குரல் அந்த காலி வீட்டில் முழுவதுமாய் எதிரொலித்தது.
“ஒண்ணுமில்லை சாரதாம்மா, தூக்கம் வரலை. என்ன செய்யன்னும் தெரியலை. போன் பண்ணினா அக்காவும், அம்மாவும் வேலை இருக்குன்னு சொல்லிட்டாங்க..” என சோகமாய் சொல்ல,
“என்னை எழுப்பிருக்கலாம்ல. உன் மாமா தான் எழுப்பி நீ சாவியை எடுத்துட்டு போறதை சொன்னாரு…” என சொல்லிவிட்டு அவளுடன் அங்கே இருந்தவர் சிறிது நேரத்தில் அவளையும் அழைத்துக்கொண்டு மேலே வந்துவிட்டார்.
எவ்வளவு நேரம் தான் குறிஞ்சியும் சாரதாவுடனே இருப்பாள். அவருக்கும் யாரோ ஒரு உறவினரிடம் இருந்து போன் வந்துவிட குறிஞ்சியை மறந்து அதில் மூழ்கிவிட அவளும் கிளம்பி மேலே தன் வீட்டிற்கு வந்தாள்.
வீட்டை காலி செய்யும் பொழுதே குறிஞ்சியின் பொருட்கள், உடைகள் என அனைத்தும் அமரின் இல்லம் வந்து சேர்ந்துவிட்டது.
அதை எல்லாம் எடுத்து அடுக்கி வைக்கவும் தோன்றாமல் மீண்டும் வழக்கம் போல மாடிக்கே செல்ல இதை கவனித்துக்கொண்டு இருந்த நாராயணனுக்கு அவளை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
“சாரதா நான் கடைக்கு கிளம்பறேன். போய் அமரை அனுப்பி வைக்கறேன்…” என சொல்ல,
“ஏங்க? இந்நேரம் அவன் வரமாட்டானே?…” என்றார் போனை வைத்துவிட்டு.
“ப்ச், சுத்த விவரங்கெட்டவளா இருக்கியே? குறிஞ்சி பொண்ணு ஒரு இடத்துல இருக்க முடியாம தவிக்குது. எவ்வளவு நேரம் உன் மூஞ்சியையும் என் மூஞ்சியையும் பார்த்துட்டே இருக்கும்? இன்னைக்குனு அவ வீட்டாளுங்களும் கிளம்பிட்டாங்க…”
அவர் சொல்லுவது சாரதாவுக்கு புரிந்தாலும் அவளை பார்த்துக்கொள்ள நினைத்தாலும் ஓரளவுக்கு மேல் முடியவில்லை.
“நான் என்ன செய்ய?…” என கேட்க,
“நீ ஒன்னும் செய்யவேண்டாம். இப்போ போய் அமரை அனுப்பி வைக்கிறேன்…” என்று கிளம்பியவர் நேராக கடைக்கு சென்று முதல் தளத்திற்கு செல்ல,
“என்னப்பா இங்க? கீழே தான இருப்பீங்க? கூப்பிட்டா வந்திருப்பேனே?…” என்றான் கேஷ்கவுண்டரில் அமர்ந்திருந்து எழுந்தபடி.
“உன்னை பார்க்க தான் அமர். வேலை எதுவும் இருக்கா?…” என கேட்க,
“இல்லைப்பா. ஆடர் எல்லாம் டெலிவரி ஆகிடுச்சு. இது சும்மா ரெகுலர் தான்…”
“அப்போ நீ ப்ரீ தான். இல்ல?…” என்றார்.
“இப்போ என்ன வேணும் உங்களுக்கு? என்ன வேணாலும் சொல்லுங்க. செய்யறேன். இவ்வளவு பீடிகை வேண்டாம்…” என்றதும்,
“அப்போ வீட்டுக்கு கிளம்பு. நான் இங்க இருக்கேன்…”
“என்ன? எதுக்கு வீட்டுக்கு?…”
“ப்ச், அமர் குறிஞ்சி பாவமில்ல?…” என்று அவள் வந்ததில் இருந்து செய்தவற்றை சொல்லியவர்,
“கொஞ்சம் பழகற வரைக்கும் நாம் அதான் துணையா இருக்கனும்ப்பா. நாமன்னா நீ, அவ புருஷன் நீ தான்…” என்று சொல்லி,
“இப்ப புரிஞ்சதா? போய் கூட இரு. இப்போ நீதான் குறிஞ்சிக்கு ஆறுதலா இருக்க முடியும்…” என்று பேசி பேசி மகனை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பெரிய வேலைகளும் எதுவும் இல்லை என்பதால் மறுக்காமல் அமரும் கிளம்பி வீட்டிற்கு வர குறிஞ்சி முல்லைபந்ததில் அமர்ந்திருந்தாள்.
கைப்பிடி சுவற்றில் சாய்ந்து கீழே அமர்ந்திருந்தவள் பார்வை எங்கோ வெறித்து இருக்க பார்த்தவனின் மனதை பிசைந்தது.
“குறிஞ்சி…” என்று அழைக்கவும் அவனின் பக்கம் திரும்பியவள்,
“இந்நேரம் இங்க என்ன பன்றீங்க? கடைல தான் இருப்பீங்க…” என அவனை பார்த்ததும் உடனே கேட்க அவளருகே அமர்ந்தவன் அவளை போலவே சாய்ந்து காலை நீட்டிக்கொண்டான்.
“சும்மா நீ இந்நேரம் என்ன பண்ணுவன்னு நினைச்சேன். அதான் பார்க்கலாம்னு வந்தேன்…” என்று அவன் சொல்ல,
“பொய், நம்பமாட்டேன்…” என்று குறிஞ்சி பட்டென்று சொல்ல,
“ஏனாம்?…” என்றான் அவள் கண்டுகொண்டத்தில் உண்டான புன்னகையுடன்.
“நீங்க சரியான ரொட்டிக்கடை. அதை விட்டுட்டு வருவீங்கன்னா நம்பற மாதிரி இல்லை…”
“ஓஓஹோ அவ்வளோ தெரியுமா என்னை?…” என்றான் கண்களை விரித்து சொல்லியபடி.
“அவ்வளோன்னு இல்லை. ஆனா ஓரளவு தெரியும் தானே? ஒரு ஜெனரல் ஜட்ஜ்மென்ட்…” என்று சொல்ல,
“இங்கே ஏன் தனியா இருக்க?…” என்று அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
“தனியா இருக்கற மாதிரி இருந்துச்சு. அதான் இங்க வந்தேன்…” என சொல்லும் போதே தொண்டை அடைத்தது.
“அம்மா பாவம் தெரியுமா? யாரும் லேசா அதட்டி பேசினா கூட பதிலுக்கு சண்டை போட தெரியாது. பேச்செல்லாம் வீட்டுல எங்கட்ட தான்…”
“அதான் அவங்களுக்கும் சேர்த்து தான் நீ பேசறியே?…” என அவளை இலகுவாக்க அவன் சொன்னது குறிஞ்சியின் முகம் மாறியது.
“ஹ்ம்ம், அவங்களுக்காக தான் பேசவே ஆரம்பிச்சேன். அப்படி பேசினதுதான் எங்களுக்கான பாதுகாப்பு. வாயாடி. இது எனக்கு எல்லாரும் குடுத்த பட்டம் தான். ஆனா என்னோட வாய்க்கு பயந்தே நிறைய வாலாட்ட மாட்டாங்க…” என்றாள் உணர்வற்ற குரலில்.
“குறிஞ்சி…” என்று அவளின் முகத்தை நிமிர்த்த,
“சத்தியமா நான் அவ்வளோ பயப்படுவேன் தெரியுமா? ஆனா காட்டிக்கிட்டா பலவீனத்தை பயன்படுத்திப்பாங்களோன்னு பயந்தே அதை காட்டமாட்டேன். என்னோட சத்தத்தை எங்களுக்கு பாதுகாப்பாக்கிட்டேன். எங்களுக்கு ஒரு சேஃப் கார்ட் மாதிரி…” என அவள் சொல்லியவை அமருக்கு புரியவே இல்லை.
ஆனால் அமர்நாத் புரிந்தான். புரிய வைத்தாள். அவளின்பால் இன்னும் ஆகர்ஷிக்க வைத்தாள் குறிஞ்சி.