குளிர் – 13
அத்தனை நேரம் யாரிடமும் பேசாமல், பேசமுடியாமல் வார்த்தைகள் மறந்துவிடுமோ என பயந்திருந்தவளுக்கு அமரின் வருகையும் அவனின் ஆறுதலான அருகாமையும் நிம்மதியை தந்திருக்க பேசிக்கொண்டே இருந்தாள்.
“எங்களுக்கு விவரம் தெரிஞ்சு அப்பா கூட இருந்ததே இல்லை. எப்பவும் வேலை வேலைன்னு ஓடுவார். எதுவா இருந்தாலும் அம்மா தான். எல்லாமே அம்மா. இப்ப அளவுக்கு கூட அம்மா பேசமாட்டாங்க. யாராவது எதாச்சும் சொன்னாலே உடைஞ்சு போயிட கூடிய ஆள்….”
“எங்களுக்காக நிறைய தாங்கி வாழ்ந்திருக்காங்க. நிம்மதியான்னா இல்லை. அப்பா இல்லாம ரெண்டு பொம்பளை பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கறது எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியுமா?…”
“பல ராத்திரி தூக்கமில்லாம வெளில போகவே பயந்துட்டு வீட்டுக்குள்ளயே முடங்கி இருந்திருக்காங்க. ஏன் தெரியுமா? நாங்க எல்லா விதமான ஏரியாவிலையும் இருந்திருக்கோம். காலனி, காம்பவுண்ட் வீடு இப்படி நிறைய. ஆனா அப்பா இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டோம்…”
“புருஷன் உயிரோட இல்லாத பொண்ணுங்களுக்கு மட்டும் இல்லை, புருஷன் இருந்தும் அவர் பக்கத்துல இல்லாத பொண்ணுங்களுக்கும் எவ்வளவு இடைஞ்சல் தெரியுமா இந்த உலகத்துல வாழறதுல. பார்க்கிற எல்லாருமே நல்லவிதமா பார்க்கமாட்டாங்க. அதை எல்லாம் தாண்டி தாங்கி தான் வாழனும்…”
“நேரடியா வழியற ஆளை கூட நம்பிறலாம். ஆனா அக்கம்பக்கம், தெரிஞ்சவங்க, ஒருசில உறவுகள், ப்ரென்ட், வெல்விஷர்ன்னு சொல்லிட்டு சீண்டி பார்ப்பானுங்க பாருங்க. அவனுங்க இன்னும் மோசம். அம்மாவுக்கு இதை யார்க்கிட்டயும் சொல்லவும் முடியாது. முடிஞ்சளவுக்கு விலகியே இருப்பாங்க…”
“எனக்கு விவரம் தெரிஞ்ச வரைக்கும் நானுமே அம்மாவை மாதிரி பயந்துட்டு தான் இருப்பேன். நான் பரவாயில்லை. ஆனா சுபாக்கா சுத்தம். டிட்டோ அம்மா தான். நாங்க விளையாட கூட வெளில போகமாட்டோம். எல்லாம் வீட்டுக்குள்ள தான். அதனால அப்பா வெளியூர் போறது எனக்கு சுத்தமா புடிக்காது…”
“ஆனா பிழைப்பு அதுலன்னும் போது என்ன செய்ய? ரொம்ப கஷ்டமா இருக்கும். ஒரு நல்ல நாள்ல கூட கூட இருக்கமாட்டாங்க. எதிர்பார்க்கவும் முடியாது. அம்மாவுக்கு கஷ்டம் தான்னு இருந்தாலும் காமிச்சுக்கமாட்டாங்க. அப்போங்க அப்பா கூலிக்கு தான் லாரி ஊட்ட போனாங்க. சொந்தமா இல்லை…”
“அப்பா இல்லாதது எங்களுக்கு ஒரு கவலைன்னா சுத்தி இருக்கற சில கழுகுங்களுக்கு கொண்டாட்டம். அம்மாக்கிட்ட ஒரு தடவை பக்கத்துவீட்டு ஆள் வந்து பேச அம்மா அழுதுட்டாங்க. எனக்கு பயங்கர கோவம், அதை அப்படியே அவரோட பொண்டாட்டிட்ட போய் எங்கம்மாவை அழ வச்சு பயங்காட்டறாங்கன்னு எதார்த்தமா நான் சொல்ல நல்லா டின்னு கட்டுச்சு அந்தம்மா அது புருஷனை….”
“அப்பத்தான் எனக்கு புரிஞ்சது. சும்மா பயந்து ஒதுங்கறதை விட எதிர்த்து நிக்கனும்னு. உன் மக வாய் பேசறா. அங்க வந்து இப்படி பேசறா அது இதுன்னு அம்மாகிட்ட வந்து கம்ளைன்ட் பண்ணினாலும் இன்னும் பேச தான் தோணுச்சு. உண்மையை தானே சொல்றேன்னு…”
“அப்போ இருந்தே நிறைய பேச, தைரியமா காட்டிக்க ஆரம்பிச்சேன். எங்கப்பா இல்லாததை எல்லாம் தூக்கி தூர போட்டுட்டு நாங்க எப்படி இருக்கனும்னு பார்க்க ஆரம்பிச்சேன். வாயாடின்னு தான சொல்றாங்க. தப்பா இல்லையே. எனக்கு பெருசா படலை. சொல்லிட்டு போகட்டும்னு விட்டுட்டேன்…”
“அவளா அவக்கிட்ட வாயக்குடுக்க முடியாதுன்னு ஒதுங்கி போவாங்க. அப்பவும் நூல் விட்டு பார்க்காத ஆளுங்களும் இல்லை. ஆனா யாரையும் நம்ப கூடாதுன்னு மட்டும் முடிவு பண்ணுனேன். யாரையும்ன்னா யாரையுமே….” என்று சொல்லும் பொழுதே அவனை நிமிர்ந்து பார்த்த அவளின் கண்ணில் மழுக்கென்று கண்ணீர் வடிந்துவிட,
“ப்ச், இதென்ன அழுதுட்டு? குறிஞ்சி நீ உன் வீட்டுக்கு காவலா இருந்திருக்க. இதை நினைச்சு நீ பெருமைப்படனும்…” என்ற அமர்,
“அப்போ என்கிட்டே எரிஞ்சு விழுந்ததும் இதனால தானா?…” என கேட்க,
“லைட்டா…” என்று தோளை குலுக்கி மெலிதாய் சிரித்தாள்.
“நல்லா ஜட்ஜ் பன்ற போ…” என்று அவன் சலித்துக்கொள்ள,
“எதுக்கு ஒரு முன்னெச்சரிக்கை. இப்போ கூட இது நான் என்னை விளக்கறதுக்காக சொல்லலை. சொல்லனும்னு தோணுச்சு. இன்னும் அப்பா இல்லைன்னா அவியை வச்சுட்டு அம்மாவால சமாளிக்க முடியுமான்னு தான் கஷ்டமா இருக்குது…”
“சரி, சரி. நாம இங்க இருக்கோம்ல. பார்த்துப்போம். சரிதானே?…” என்று அவன் தட்டிக்கொடுக்க சிலநொடி மௌனம் அவளை உறக்கத்தில் தள்ளியது. அவனின் தோள் சாய்ந்தவண்ணம் தூங்கிவிட தன் மடியில் கடத்திக்கொண்டான் அவளை.
அவள் கடந்துவந்த பாதைகளை இலகுவாகவே அவள் சொல்லிவிட்டாலும் அதன் பின்னால் இருக்கும் கனங்கள் இவனை தான் அழுத்தியது.
இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து எடுத்ததிற்கெல்லாம் சண்டைக்கு பாய்பவள், எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நேரடியாய் கேட்டுவிடுபவள், இந்த பொண்ணுக்கு கொஞ்சமும் பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருக்காதா என்று நினைத்ததற்கு ஏன் எதற்கென்ற காரணம் இப்போது அவனுக்கு விளங்கியது.
அவன் வரும் போதே நேரமாகியிருக்க இப்போது இரவும் கவிழ்ந்துவிட மெல்ல எழுப்பினான் அவளை.
“எழுந்துக்கோ குறிஞ்சி, கீழே போவோம்…” என்று அவளின் கன்னத்தில் தட்ட கண் விழித்தவள் மெதுவாய் எழுந்தமர்ந்தாள்.
“ரொம்ப நேரம் தூங்கிட்டேனா?…” என்று அவனை கேட்டுக்கொண்டே கையை நீட்டி ஒரே பக்கமாய் படுத்திருந்ததில் கழுத்து பிடித்ததை போலிருக்க மெல்ல உடலசைத்துக்கொண்டவள்,
“இங்க ஒரு ரூம் போட்டா இங்கயே தூங்கிருவேன். எனக்கு மொட்டைமாடில தூங்கனும்னா ரொம்ப இஷ்டம். ஆனா அதுக்கு இதுவரைக்கும் வாய்ப்பே இல்லை. எங்கயும் தனி வீடுன்னு பார்த்து போனதில்லை. அப்பா அது பாதுகாப்பில்லைன்னு சொல்லி மேல, இல்ல கீழேன்னு வீடுக இருக்கற மாதிரி தான் பார்ப்பாங்க…”
“இங்கையும் அப்படித்தான் பீல் பண்ணுனியா குறிஞ்சி?…” என்றான்.
“தெரியலை. முதல்ல இருந்தே ஒரு மைண்ட் பிக்ஸ் ஆகிடுச்சு. இப்படித்தான் இருக்கும் போல. எதையும் சமாளிக்கனும்ன்னு. அதனால நல்லதா கூட சிலதை பார்க்க தோணாது…” என்றவள்,
“மத்தவங்கள பார்த்து பயந்தே அம்மா மொட்டை மாடிக்கு தூங்க விடமாட்டாங்க. என்னவோ இப்ப பார்த்த வீடு நீங்க பார்த்ததால அப்பா சரின்னுட்டார். இல்லைன்னா இதுவும் மூணு மாடி, நாலு மாடி இருக்கற மாதிரி தான் பார்த்திருப்பார். அவசரத்துக்கு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு…”
குறிஞ்சி சொல்லவும் தான் அமருக்கு ஞாபகம் வந்தது அவினாஷ் உடல்நிலை சரியில்லாத பொழுது அவளாக தனியே மெடிக்கல்ஷாப் சென்றது.
“அதான் இங்க இருந்தப்போ முன்னாடி எங்கக்கிட்ட எந்த ஹெல்ப்பும் கேட்கறதில்லையா?…” என கேட்டு எழுந்தவன் அவளுக்கு கை கொடுத்தான்.
“ஆமா, அப்போ நீங்க ஓனர். உங்ககிட்ட ஏன் கேட்கனும்? உங்கட்டன்னு இல்லை. யார்ட்டையுமே நிக்கமாட்டேன்…” என்று சொல்ல,
“பூ மட்டும் வேணும்? இல்ல…” என்றான் நக்கலாக.
“சும்மாவா பூ பறிச்சேன்? அதை பார்த்துக்கிட்டேன் தானே? போதாதா? அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு…” என்று அதற்கும் பதில் சொல்ல,
“உன்கிட்ட பேசி ஜெயிக்கமுடியுமா?…” என்று அவளுடன் கீழே இறங்கி வந்தான்.
“இன்னும் வேற என்னலாம் இருக்குது?…” என்று கேட்க,
“நிறைய இருக்கே. ஆனா போர் அடிச்சுடும்…” என்று அவள் சொல்லவும் கீழே வந்து அமர் கதவை திறக்கவும் விளக்கின் வெளிச்சத்தில் தான் பார்த்தான்.
கண்கள் சிவந்து தடித்து இருந்ததை. தான் வரும் முன்புமே அழுதிருப்பாளோ என்று தோன்றியது.
“சரி நான் கடை வரை போய்ட்டு வரேன். நீ இருப்ப தானே?…” என கேட்க,
“ஏன்? இங்கதான இருக்க போறேன். இருப்பேனே…” என்றாள்.
ஆனால் விட்டு செல்லத்தான் அவனுக்கு மனம் வரவில்லை. கடைக்கு அழைத்து தந்தையிடம் பேசியவன் ரகுவிற்கும் அழைத்து பேசிவிட்டு போனை வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தான்.
“நான் கீழே சாரதாம்மா என்ன பன்றாங்கன்னு பார்த்துட்டு வரேன்…” என குறிஞ்சி கீழே செல்ல போக அவளின் கை பிடித்து நிறுத்தியவன்,
“அம்மா பக்கத்து வீட்டு ஆன்ட்டி கூட கோவிலுக்கு போயிருக்காங்க. நான் வரும் போது தான் சொன்னாங்க. வர நேரமாகும். நீ உட்கார்…” என்றவன்,
“சொல்ல மறந்துட்டேன். நாளைக்கு என் ப்ரெண்ட் மேரெஜ். நாம போய்ட்டு வந்துருவோம் காலையில…”
“நானுமா?…” என்றாள் அவள்.
“என் வொய்பை கூட்டிட்டு வர சொல்லிருக்கான். அப்போ நீ யாராம்?…” என்று முறைக்க,
“உடனே நெற்றிக்கண்ணை திறக்காதீங்க. போலாம் போலாம். ஆனா…”
“என்ன ஆனா?…” என அவளை பார்க்க,
“எனக்கு அவங்க யாருன்னு தெரியாது. அதோட இப்போ போறதா இருந்தா சுடிதார் போட முடியாது. சேரி தான் கட்டனும். அதான்…”
“ஓகே, சேரி கட்டு. உனக்கு சுடிதார் விட சேரி தான் ரொம்ப சூட் ஆகுது. கொஞ்சம் பெரிய பொண்ணா மெச்சூர்டா காட்டுது. எனக்கும் அதுதான் நல்லா இருக்குது…” என்று சிரிப்போடு சொல்ல,
“இருக்கும் இருக்கும். ஏன் இருக்காது. ஆனா சேரி கட்டிட்டு பைக்ல வர முடியாதே?…” என்றாள் கொஞ்சம் ஏமாற்றமான முகத்துடன்.
“குறிஞ்சி, உனக்கு பைக் ரைட் புடிக்குமா?…” என்று அவளின் முகத்தை பார்த்து கேட்க,
“ரொம்ப ரொம்ப. ஆனா உங்களுக்கு தெரியாதுல. என்னோட பர்ஸ்ட் பைக் ரைட் உங்களோட தான். யாரோடதும் நான் பைக்ல போனதில்லை…” என அவள் சொல்லியதை அதிசயமாக பார்த்தான். அவளே தொடர்ந்தாள்.
“அப்பா பைக் எதுவும் வச்சுக்கலை. அப்பாவோட பைக்ல போனதும் இல்லை. அப்பாவோடன்னு இல்லை யாரோடையும். ஆசையா இருக்கும். இருந்து என்ன செய்ய? எனக்கு ஸ்கூட்டி வாங்கவும் அம்மாவோட முதல் கண்டிஷன் வேகமா ஓட்ட கூடாதுன்னு தான். அப்படி செஞ்சா நோ ஸ்கூட்டின்னாங்க…”
“அவங்க என்ன பார்த்துட்டா இருக்க போறாங்க?…”
“இல்லைதான். ஆனா அம்மாவுக்குன்னு நான் இருக்கனும்ல. என்னாலையும் எந்த கஷ்டமும் வந்திர கூடாதுன்னு தோணும். அதனால வேகமா ஓட்ட மாட்டேன்…”
“இதுல என்ன கஷ்டம்?…”
“பொண்ணை பெத்துருக்காங்க இல்ல. வண்டில விழுந்து வச்சு கை, கால் எதுவுமின்னா கரையேத்த கஷ்டமா போய்டும்ன்னு அவ்வளவு பயம் அம்மாவுக்கு….”
“திஸ் இஸ் ரெடிகுலஸ்…” என்றான் அமர் அதிருப்தியான முகபாவனையுடன்.
“ஆனா இதுதான் உண்மை…” என்றவள் நெற்றியை பிடித்தாள்.
“தலை வலிக்குது…” என்றதும் ஒரு மாத்திரையை எடுத்து வந்து அவளுக்கு நீட்டியவன்,
“இதை போடு. கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தா சரியா போகும்…” என்று தர வாங்கி பட்டென்று தண்ணீர் இன்றியே விழுங்கிக்கொண்டாள்.
“என்ன பன்ற நீ? தண்ணி எடுத்துட்டு வரதுக்குள்ள?…” என அவன் திட்ட,
“பழகிருச்சு. உடம்புக்கு முடியலைன்னா உடனே சரியாகனும்னு டேப்லட் எல்லாம் போட்டு போட்டு பழகிருச்சு…” என்று சொல்லி சிரித்தவளை பார்த்தவனுக்கு மனது அத்தனை கஷ்டமாக இருந்தது.
முடிந்துவிட்டவைகளாக இருந்தாலும் அவள் கடந்து வந்திருப்பதை கேட்டவனுக்கு வேதனை சுரக்க ஒரு பெருமூச்சுடன் குறிஞ்சியை பார்த்தான்.
அவனுக்கு தெரிந்தவரை குறிஞ்சி சேட்டைக்கார பெண், வாய் அதிகம், கொஞ்சம் பிடிவாதம், சில நேரங்களில் மதிப்பில்லாமல் நடந்துகொள்ளும் பெண். இவ்வளவு தான்.
“என்னாச்சு ஓனர்?…” என குறிஞ்சி அவனிடம் இருந்து தண்ணீரை வாங்கி குடிக்க,
“போய் படு. வரேன்…” என்று சொல்லி அவளை அனுப்பியவன் சாரதாவுக்கு அழைத்தான். அவர் கோவிலில் தான் இருந்தார் இன்னும்.
போனை வைத்துவிட்டு கீழே வந்தவன் குறிஞ்சிக்கு சாப்பிட எடுத்துக்கொண்டு மீண்டும் மாடிக்கு வந்தான். அவள் இன்னும் உறங்காமல் இருக்க,
“சாப்பிடாம டேப்லெட் போட வச்சுட்டேன். சாப்பிடு….” என்று நீட்டினான்.
“நானே கொஞ்சம் நேரத்துல கீழே வந்திருப்பேன்ல…” என எழுந்தவள்,
“உங்களுக்கு?…” என்று கேட்டதும் தனக்கும் எடுத்து வந்திருக்கலாமோ என்று தோன்றியது.
“கொண்டுவர மறந்துட்டேன்…” என்றான் தலையை கோதியபடி.
“ஓகே, நோ ப்ராப்ளம். இதை ஷேர் பண்ணிக்கலாம். கொஞ்சம் நேரம் கழிச்சு செகென்ட் ரவுன்ட்…” என்று அவள் சொல்லவும்,
“ஓகே, பெட்ல உட்கார்ந்து சாப்பிட கூடாது. வா ஹாலுக்கு போவோம்…”