“அதான பார்த்தேன். உங்க ரூல் புக் எங்கையோ தொலைஞ்சு போச்சோன்னு நினைச்சேன்…” என்று கிண்டல் பேசியவள் அவனுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்து போனை எடுக்க,
“யாருக்கு…” என்றான்.
“சுபாக்காவுக்கு…” என சொல்ல போனை பறித்தவன்,
“தலை வலிக்குதுன்னு சொன்ன தான? போய் படு…” என சொல்லி,
“உனக்கு எதாச்சும் கேட்கனும்னா என்கிட்டே கேளு, சுபாக்கான்னு போனை தூக்காத. அப்பறம் போன் இருக்காது…” என்று மிரட்ட,
“அமரபுஜங்கன் பேக்…” என்று அவனை பார்த்து சொல்லிவிட்டு படுக்க சென்றாள்.
“இவ வாய் ஓயாது…” என்றபடி சிரித்துக்கொண்டே சோபாவில் அமர்ந்து தனது மேக்புக்கில் கடை விவரங்களை கவனித்துக்கொண்டு இருந்தவன் மீண்டும் ரகுவிடம் இருந்து போன் வரவும் தான் குறிஞ்சி ஞாபகத்திற்கே வந்தான்.
“சொல்லுங்க ரகு அண்ணே…” என்றதும்,
“தம்பி அசோக் தம்பி வந்திருக்காங்க. அவங்க போனை வீட்டுல மறந்து வச்சிட்டு வந்துட்டாங்களாம். என்கிட்டே சொல்லி உங்கள வர சொன்னாங்க…” என சொல்ல,
“ஓகே, இப்போ வந்திடறேன்…” என்று எழுந்து உள்ளே சென்றவன் ஒரு பேப்பரில் கடைக்கு சென்றுவிட்டு அரைமணி நேரத்தில் வருவதாக எழுதி வைத்துவிட்டு கிளம்பினான்.
எதற்கும் இருக்கட்டும் என்று அவளின் மொபைலை சைலண்டில் போட்டவன் வாட்ஸ்ஆப்பில் எழுதியதையே குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டு வைத்தவன் பின் அவள் என்ன பெயரில் தனது எண்ணை பதிவு செய்திருக்கிறாள் என்று பார்த்தான்.
“ஓனர் அமரபுஜங்கன்…” என அவள் பதிந்து வைத்ததை வாசித்தவன்,
“இவளுக்கு இருக்கற ஏத்தம். வந்து வச்சுக்கறேன் உன்னை…” என வலிக்காமல் அவளின் தலையில் குட்டியவன் நெற்றியில் முத்தம் ஒன்றையும் பதித்துவிட்டு படுக்கையறை விளக்கை அணைத்துவிட்டு ஹாலில் மட்டும் லைட்டை போட்டு கதவை பூட்டி சென்றான்.
சாரதாவிற்கும் அழைத்து குறிஞ்சியை எழுப்ப வேண்டாம் என சொல்லியே வந்திருக்க கோவிலில் இருந்து வந்தவரும் அவளை எழுப்பவில்லை.
கடைக்கு வந்தவனுக்கு பரபரப்பாய் இருந்தது அசோக் என்ன சொல்ல வந்திருப்பான் என தெரிந்துகொள்ள.
“ஏன்டா டென்ஷனா வந்திருக்க? எல்லாம் ஓகே தான்…” என்று அசோக் சொல்லவும் அவனை தனியே உள்ளே அழைத்து சென்றான்.
“என்ன ஓகே? பிரச்சனை வராதுல?…” என கேட்க,
“வாய்ப்பே இல்லை. நல்லா தெரிஞ்ச ஒரு லாயர்ட்ட கேட்டு அவர் மூலமா தான் ப்ரசீட் பண்ணிருக்கேன். இதுல நம்ம பேரே வராது. எல்லாம தானா நடக்கறது மாதிரி தான் இருக்கும்…”
“இது சும்மா கை சண்டை, வாய் சண்டைன்னா பரவாயில்லை. என்னானாலும் இறங்கி செய்யலாம். இது கிரிமினல் அபென்ஸ். அவனுங்க ரொம்ப பெரிய கேங் போல. ரகு அண்ணே விசாரிச்சா வரை ரொம்ப பயங்கரமா தான் தெரியுது…” என்றான் தலையை கோதியபடி.
“ஒரு பிரச்சனையும் வராது அமர். ஏ.ஸி.பி. ரொம்ப ஸ்ட்ரிக் அன்ட் ஸ்ட்ரெய்ட் பார்வர்ட். அவனுங்க காலின்னு நினைச்சுக்கோ. அவர் பார்வைக்கு இந்த கேஸ் போய்ட்டா அதுவும் லட்டு மாதிரி நாம ஆளோட சொல்லிருக்கோம். சும்மாவே மனுஷன் பின்னி பெடலெடுப்பார்…” என அசோக் சொல்ல,
“ஹ்ம்ம், நானும் கேள்விபட்டிருக்கேன் தான். அந்த வகையில நிம்மதி. ஆனா பாரேன். இந்த கேசவன் குடும்பமா வாழறவாங்க மத்தியில இருந்துட்டு இந்த மாதிரி ஃபேக் டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணி தர தொழிலை பண்ணிருக்கறது யாருக்குமே தெரியாம போச்சு…”
“ஆனா அவர் விதி உன் கல்யாணத்தை நிறுத்தி உன்னை அசிங்கப்படுத்த நினைச்சு இப்ப வகையா சிக்கிட்டார். அவர் மட்டும் இல்லை. அந்த பசங்களும் நிறைய இப்படி போட்டோஸ் மார்பிங்க்ல பொறுக்கிங்க. சும்மா விடக்கூடாதுடா அமர்…”
“ஹ்ம்ம், ஓகே இதை எப்படி முடிச்சு விடறதுன்னு மனசை போட்டு அரிச்சுட்டே இருந்துச்சு. இப்பத்தான் நிம்மதி…” என்றவன்,
“சரி வா. வெளில போவோம்…” என்று அழைத்துக்கொண்டு வந்தான்.
சிறிது நேரமே இருக்க நினைத்து வந்தவன் அதன் பின் வேலையில் ஆழந்து போக கடையை அடைக்கும் நேரம் தான் குறிஞ்சி ஞபாகமே வந்தது.
கிளம்பும் பொழுது வேகமாய் டிஸ்ப்ளேயில் ஹனி கேக் இருக்கும் ட்ரேயை பார்க்க அது சுத்தமாய் தீர்ந்திருந்தது.
“ரகு அண்ணே, உள்ள ஹனி கேக் ஸ்டாக் இருக்கா?…” என்றான்.
“நம்ம கடையில அதெல்லாம் ஸ்டாக் இருந்தா தான் அதிசயம் தம்பி. எப்போவோ முடிஞ்சதே.எப்பவும் கடையடைக்கிற வரைக்கும் இருக்காதே…” என்று சிரிப்புடன் சொல்ல,
“ஓஹ். ஹ்ம்ம், ஓகே. கிளம்புவோம்…” என்று கடையை அடைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
“இப்பதான் வரியா நீ? இன்னும் குறிஞ்சி எழுந்துக்கலை போல? வனஜா போன் பண்ணிருந்தா. ரிங் போய்ட்டே இருக்குன்னு சொன்னா. நான் தான் குறிஞ்சி தூங்கறான்னு சொன்னேன்…” என்றார் சாரதா மகனிடம்.
“நான் பார்த்துக்கறேன்ம்மா. நீங்க சாப்பிட்டாச்சா? அப்பா தூங்கியாச்சா?…” என கேட்டவன் தனக்கும் குறிஞ்சிக்கும் கேரியரில் எடுத்து வைத்தான்.
“உங்கப்பா இவ்வளவு நேரமா முழிச்சிருப்பார்? சாப்பிட்டு மாத்திரையை போட்டதும் இன்னைக்கு பொழுது அடைஞ்சிருச்சு அவருக்கு…” என கிண்டலுடன் சொல்ல,
“உங்களுக்கு அப்பாவை சொல்லலைன்னா பொழுது அடையாது…” என்று சிரித்தவன்,
“ஓகே தூங்குங்க. காலையில பார்ப்போம்…” என்று மாடிக்கு ஏறிவிட்டான்.
கதவை திறந்து உள்ளே செல்ல இன்னும் நல்ல உறக்கத்தில் தான் இருந்தாள் குறிஞ்சி.
“சரியான கும்பகர்னி…” என்றபடி ப்ரெஷ் ஆகிவிட்டு உடை மாற்றி வந்தவன் குறிஞ்சியை எழுப்ப போய் பின் அவளின் மொபைலை சைலன்ட் மோடில் இருந்து எடுத்துவிட்டான்.
ஹாலில் நின்றுகொண்டு அவளுக்கு போன் செய்ய உறக்கம் கலைந்தவள் போனை எடுத்து அரைக்கண்ணில் பார்த்தபடி,
“ஹ்ம்ம், சொல்லுங்க. கடைக்கு போயாச்சா?…” என முணங்கினாள்.
“ஹ்ம்ம், நீ என்ன பன்ற?…” என இவனும் கேட்க அப்போது தான் வாட்ஸாப் செய்திகளை பார்த்தவள்,
“லைன்ல இருங்க…” என சொல்லிவிட்டு அவன் அனுப்பியதையும் சேர்த்தே பார்த்துவிட்டு,
“ஓகே வந்துட்டு எழுப்புங்க. குட்நைட்…” என சொல்லி படுத்துவிட்டாள் மீண்டும்.
“அடிப்பாவி…” என வேகமாய் வந்தவன்,
“எதுக்கு கால் பண்ணினேன்னு கேட்கவே மாட்டியா?…” என்று நிற்க,
“இங்க இருந்துட்டா கால் பண்ணுனீங்க?…” என அவனை பார்த்ததும் மீண்டும் எழுந்தமர்ந்தாள்.
“தலைவலி இப்ப எப்படி இருக்குது?…” என கேட்க,
“ஹ்ம்ம், பெட்டர்…” என்று முடியை மொத்தமாய் சுருட்டி கொண்டையிட்டவள்,
“நீங்க சாப்பிடுங்க. சுடிதாரை மாத்திட்டு வரேன்…” என்று எழுந்து செல்ல கொண்டு வந்ததை பிரித்து எடுத்துவைத்தான்.
இருவருமாய் பேசியபடி உண்டு முடித்து பாத்திரங்களை அங்கேயே அலசி வைத்துவிட்டு வந்ததும்,
“நாளை மறுநாள்ல இருந்து நீ இன்ஸ்ட்யூட் போக ஆரம்பி குறிஞ்சி…” என்றான் அமர்.
“இன்ஸ்ட்யூட்டா? ரீசனே சொல்லாம வேலைக்கு வர முடியாதுன்னு உங்க முதல் கல்யாண நாளுக்கு மறுநாள் சொன்னது. இப்ப போனா மதிக்கமாட்டாங்க…” என்றதும் அவளை உக்கிரமாய் முறைத்தவன்,
“என்ன பேசறோம்னு யோசிக்கவே மாட்டியா நீ? முதல் கல்யாணமா?…” என்று எகிறிவிட்டான் உடனே.
“அப்படி சொல்ல வரலை….” என அவனின் அருகே சென்றவள் அவனை சமாதானம் செய்யும் விதமாய்,
“என்னைக்குல இருந்து போகலைன்னு சொல்ல வந்து அன்னைக்கு சொல்லிட்டேன்…” என்றதும் ஒன்றும் பேசாமல் சென்று அமர்ந்துவிட்டான்.
“அவ்வளவு கோவமா? நான் ஒன்னும் வேணும்னு சொல்லலை. நிஜமாவே…” என்று அவனின் அருகே வந்தமர்ந்தாள்.
“ப்ச், ஒரு விளக்கமும் வேண்டாம். அதான் சொல்லிட்டேல. விடு…” என முறைப்புடனே இருக்க அவனை எப்படி சமாளிக்க என்று தெரியாதவள்,
“நீங்க ஏன் அந்த குரங்கு கூடன்னு நினைக்கறீங்க? அன்னைக்கு தான அந்த சர்ட்டிபிகட் வந்துச்சு. அப்போ நம்ம முதல் கல்யாணம் தெரிஞ்ச நாள், அந்த கல்யாண நாள். இப்போ ஓகேவா?…” என்று குறிஞ்சி அவனின் கையை பிடித்தபடி விவரிக்க,
“நல்லா சமாளிக்க மட்டும் தெரியுது உனக்கு. இந்த வாய் மட்டும் இல்லைன்னா?…”
“நீங்க ஒன்னும் சொல்லவேண்டாம். எங்கம்மாவே சொல்லுவாங்க, இந்த வாய் இல்லைன்னா என்னை நாய் தூக்கிட்டு போய்டும்ன்னு. நீங்களும் சொல்லி டேமேஜ் பண்ண வேண்டாம்…” என்று குறிஞ்சி சொல்லிய பாவனையில் அடக்கமாட்டாமல் சிரிக்க,
“அட ஓனர் நீங்க சத்தமா சிரிக்கறீங்க…” என்று அவள் அவனை ஆவென்று பார்க்க ஆரம்பிக்க,
“அப்பப்ப என்னை நீ ம்யூசியத்துல இருக்கறதை பார்க்கற மாதிரி பார்க்கற. கொஞ்சமாச்சும் பொண்டாட்டியா பாரு…” என்று அவளின் தோளில் இடித்து அமர் சொல்ல,
“புருஷன் பொண்டாட்டியை முதல்ல பொண்டாட்டியா பார்க்கட்டும். பொண்டாட்டியும் பொண்டாட்டியா தான் பார்ப்பா…” என அதற்கும் வாயடிக்க,
“உன்னை பேசவே விடக்கூடாது…” என்று அவளை தன் அணைவிற்குள் கொண்டு வந்தான்.
மறுநாள் காலை எழுந்ததும் குறிஞ்சியிடம் சொல்லிவிட்டே கிளம்பினான். சாரதாவும் புடவை கட்டி நகைகளை எல்லாம் போட்டு மருமகளை ஒருவழி செய்துவிட்டார்.
அலங்கார கொலு பொம்மையென அமர்ந்திருந்தவளை பார்க்க அமர்நாத்திற்கு சிரிப்பாய் இருந்தது.
“சிரிக்காதீங்க. இதோட பைக்ல எப்படி வருவேன்? ரெண்டுபக்கம் கால் போட்டு உட்கார முடியாது. ஒன்சைடா உட்கார்ந்தாலும் சேலை வழுக்கும்…” என்று கவலையுடன் சொல்ல,
“கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகலை. இன்னொரு கல்யாணத்துக்கு போகும் போது இப்படித்தான் போகனும்…” என சாரதாவும் வந்து சொல்லிவிட்டு போக,
“உன்கிட்ட பைக்ல போறோம்ன்னு யார் சொன்னா? கார் எடுத்து வெளில நிறுத்திட்டேன். இறங்கு போகலாம்…” என சொல்லியவன் வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் குறிஞ்சியுடன்.
அங்கே சென்றதும் அவனுடைய உடன் படித்த நண்பர்கள் இன்னும் சிலர் இருக்க அனைவரிடமும் குறிஞ்சியை அறிமுகப்படுத்திவைத்தான்.
மணமேடைக்கு சென்று கொண்டுவந்த பரிசுப்பொருளை கொடுத்து வாழ்த்திவிட்டு கீழே இறங்கி வர யாரோ தங்களை கவனிப்பதை போலவே அவனின் உள்ளுணர்வு எச்சரித்தது.
மீண்டும் மீண்டும் அந்த உணர்வே அவனுக்கு தொக்கி நிற்க மண்டபத்தை சுற்றிலும் பார்வையை ஓட்டியவனின் விழிகள் ஓரிடத்தில் நிலைபெற்றது.
“நடக்காம என்ன நின்னுட்டீங்க?…” என்ற குறிஞ்சியும் அவனின் பார்வையை கண்டு திரும்பி பார்க்க அங்கே நிரஞ்சனா நின்றிருந்தாள்.
அமர் பார்க்கும் வரை எட்ட இருந்தே அவர்களை கவனித்துக்கொண்டு இருந்தவள் அவன் பார்த்ததும் விறுவிறுவென நடந்து வந்து நின்றாள் அவர்கள் எதிரே.