குளிர் – 14
நிரஞ்சனாவை பார்த்ததும் முகம் சுளித்தவள் இவள் ஏன் தங்களிடம் வருகிறாள் என்று பார்த்தான்.
“ஹாய் அமர். உங்களை இங்க மீட் பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லை. அதுவும் ஜோடியா?..” என சொல்லியவள் குறிஞ்சியை நோட்டமிட,
“கால் மீ அமர்நாத்…” என்றான் அமர் அழுத்தமாய்.
“நான் உங்ககிட்ட பேசும் போது அப்படித்தானே பேசிருக்கேன். அப்போ எல்லாம் அப்ஜெக்ஷன் எதுவும் நீங்க சொன்னதில்லையே…” என்றதும் குறிஞ்சி அமரின் பக்கம் திரும்பவே இல்லை.
அவனுமே குறிஞ்சியின் முகத்தை ஒருநொடி பார்த்துவிட்டே நிரஞ்சனாவிற்கு பதில் கொடுத்தான்.
“அப்பவும் சொல்லனும்னு தான் நினைச்சேன். ஆனா டைம் கிடைக்கலை. அதான் இப்போ சொல்றேன்…” என சொல்ல நிரஞ்சனாவின் முகம் கன்றி போனது.
“இப்ப ஏன் இங்க நின்னுட்டு இருக்கோம்? போகலாம்…” என குறிஞ்சி சொல்ல,
“உங்களுக்கு என்னை தெரியாதுல. நான்…” என்றவள் அமரின் பக்கம் திரும்ப போக,
“ஏன் தெரிஞ்சுக்கனும்? சொல்லனும்னா என் ஹஸ்பண்ட் சொல்லிருப்பார். அவர் முகமே சொல்லுதே நீங்க யாரோன்னு…” என்றாள் குறிஞ்சி.
ஆனால் அவளுக்கும் நிரஞ்சனாவை தெரிந்திருந்தது. அவள் மண்டபத்தில் பேசிய பேச்சுக்கள் எல்லாமே ஞாபகம் இருந்தது. அதனால் உண்டான கோபமும் கூட மிதமிஞ்சியே இருந்தது.
‘இவள் யார் என் குடும்பத்தை பேச?’ என்ற கடுப்பும் இன்னும் இருக்க பேசாமல் செல்வதே மரியாதை என்று நினைத்து தன்னை கட்டுப்படுத்தியபடி நின்றாள்.
“நான் நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய ஆள் தான். ஆனா நீங்க போறேன்னு சொல்றீங்க?…” என்று நக்கலாய் கேட்டவள்,
“உங்களை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் குறிஞ்சி. உங்கக்காவோட போன்ல நிறைய தடவை உங்க போட்டோவை பார்த்திருக்கேன். உங்க முகத்தை மறக்கமுடியாது…” என்று சொல்ல,
“ஓஹ்…” என்றவளுக்கு இப்போது புரிந்துபோனது. வேண்டுமென்றே வம்பிழுக்க வந்திருக்கிறாள் என்று.
“அமர்…” என்ற நிரஞ்சனாவை எரிச்சலுடன் பார்த்தவன்,
“அமர்நாத்…” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
“ஓஹ் உங்களுக்கு கோவம் வேற வருதா? என்னவோ அன்னைக்கு தாம்தூம்ன்னு குதிச்சீங்க. இப்படி ஒரு விஷயமே நடக்கலை. அந்த சர்டிபிகேட் பொய்ன்னு சொல்லி அவ்வளோ பேசினீங்க. இப்போ உண்மையா இருக்க போய்தானே ஹஸ்பண்ட் & வொய்பா ஜோடி போட்டுட்டு வந்திருக்கீங்க…”
“அதுக்கு இப்போ என்ன?…” என்றான் அமரும்.
“என்னவா? எங்களை எதுக்கு கல்யாணம் வரை இழுத்தடிச்சீங்க? இவளோட மாமா என்னன்னா இவளுக்கும் உங்களுக்கும் வக்காலத்து வாங்கிட்டு கால்ல விழாத குறையா வந்தாரு. அவர் மட்டும் வரலைன்னா அன்னைக்கே பேச்சோட எல்லாம் முடிஞ்சிருக்கும்…” என்று நிரஞ்சனா இளப்பமாக பேச,
“ஏய் இங்க பார், உன் பேச்சு அவர்க்கிட்டன்னா அவர் பதில் சொல்லுவார். எதுக்கு என்னை என் மாமாவை இழுக்கற? நான் என் புருஷனை மாதிரி பார்த்துட்டு சும்மா போகமாட்டேன் பார்த்துக்க…” என்று குறிஞ்சி எகிறிவிட ஒருநிமிடம் திகைத்து நின்றாள் நிரஞ்சனா.
இப்படி பட்டென்று கொஞ்சமும் மரியாதை இல்லாமல் பேசும் குறிஞ்சியை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சுபாஷினி சொல்லியவரை குறிஞ்சி ஸ்வீட். அவ்வளவு தான். இப்படி ஒரு பேச்சு நிரஞ்சனாவை இன்னும் கோபமூட்டியது.
“பண்ணினது ஏமாத்துத்தனம். இதுல கேள்வி கேட்டா கோவம் வேற வருதா? ஆஃப்ட்ரால்…” என்றவளின் முன்னால் கை நீட்டி பேச்சை நிறுத்தியவள்,
“இந்த ஆஃப்ட்ரால் அரைக்கால் எல்லாம் என்கிட்டே வேண்டாம். நான் சுபாக்கா இல்லை. அன்னைக்கே சுபாக்கா சொன்னா நீ எங்கப்பாவை என்னலாம் பேசினன்னு. இது கல்யாணவீடேன்னு பார்க்கறேன். இல்ல…”
“வெரிகுட், நல்ல பொண்ணுதான் உங்களுக்கு அமர்…” என்று குறிஞ்சியிடம் பேச முடியாமல் அமர்நாத்திடம் திரும்ப,
“ப்ச், வழியை விட்டா நாங்க போய்ட்டே இருப்போம்…” என அமரும் பொறுமையாக தான் பேசினான்.
“எனக்கு ஒரு பதில் தெரியனுமே. சொல்லிட்டு போங்க. ஏன் அன்னைக்கு எதுவுமே நடக்கலை, எல்லாமே க்ரியேட் பண்ணினதுன்னு சொன்னேங்க? எங்க வசதிக்காக, பணத்துக்காக தான என் குடும்பத்தையும், என்னையும் ஏமாத்த ப்ளான் பண்ணிருக்கீங்க. அப்படித்தான?…” என்று நிரஞ்சனா தோன்றியதை எல்லாம் பேச,
“லூஸா நீங்க? இப்ப என்ன பிரச்சனை? கல்யாணம் ஆனதை மறைச்சு நிச்சயம் வரைக்கும் வந்தது தான? ஆமா மறைச்சேன். நானும் குறிஞ்சியும் விரும்பினோம். வீட்டுக்கு தெரியாம மேரெஜ் பண்ணிக்கிட்டோம். அது உங்களுக்கு தெரிஞ்சு போச்சு….”
“அதான் எங்களுக்கு தெரியுமே. நாங்க கண்டுபுடிச்சுட்டோம். அதான் உங்க சாயம் அங்க வெளுத்து போச்சு…” என்று நிரஞ்சனா சொல்ல,
“இப்படி வேற நினைப்போ? மேடம், அன்னைக்கு நீங்க கல்யாணத்தை நிப்பாட்டலைன்னா மறுநாள் நானே நிப்பாட்டி இருப்பேன்…” என்றான் அமர்.
“என்ன?…” என நிரஞ்சனா மட்டும் இல்லை குறிஞ்சியுமே அவனை தான் பார்த்தாள்.
“என்ன என்ன? எனக்கும் என் வொய்ப்க்கும் சண்டை. இவ வீட்டுல சொல்லவே மாட்டேன்னு சொல்லிட்டிருந்தா. எப்படி சொல்லன்னு நானும் யோசிச்சுட்டு இருந்தேன். அந்த நேரம் தான் யாரோ அந்த போட்டோஸ், டாக்குமெண்ட் அனுப்பிவச்சது…”
“இல்லைன்னா நானே மறுநாள் கல்யாணத்தை நிப்பாட்டி இருப்பேன். குறிஞ்சிக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். அதுக்குள்ளே ஊரே தெரியற மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் போட்டீங்க. குறிஞ்சி அப்பாவுக்கும் ஷாக். அதான் சமாளிச்சேன். ஆனா எப்படியும் உங்களை கல்யாணம் செஞ்சிருக்கமாட்டேன்…”
நிரஞ்சனா இந்த பதிலை சுத்தமாக நினைக்கவில்லை. அமரிடம் வந்து வேண்டுமென்றே அவனை சீண்டுவதற்காக தான் பேசினாள்.
அவனை அவமதித்து குறுக வைத்துவிட வேண்டும் என்னும் கோபமும், ஆத்திரமும் கண்ணை மறைத்து. ஏற்கனவே குறிஞ்சி மீது துவேஷம் கொண்டிருந்தவள்.
“இப்ப புரிஞ்சிருக்குமே, யார் கல்யாணத்தை நிறுத்தினான்னு. பெருமை பேசாம உங்க வேலையை நீங்க பாருங்க…” என்றவன்,
“வழி விட்டு நில்லுங்க முதல்ல…” என்று சொல்லவும்,
“சீட்டிங். அப்போ இதை நீங்க என்கூட போன்ல பேசும் போதே சொல்லியிருக்கனும் தானே? அப்போ மட்டும் அவ்வளவு நல்லா பேசிட்டு…” என்று அவள் சொல்லவும் குறிஞ்சி கடுமையாக முறைத்தாள் அமரை.
“என்ன? நான் நல்லா பேசினேனா?…” என்று அவன் ஆரம்பிக்க,
“இப்ப என்ன உங்களுக்கு வேணும்? இவரோட இப்பவும் நல்லா பேசனுமா? பேசுங்க. நோ ப்ராப்ளம். பதிலுக்கு அவர் பேசலைன்னு சொல்ல கூடாது…” என வேண்டுமென்றே கடுப்படிக்க அமர் குறிஞ்சியை முறைத்தான்.
நிரஞ்சனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. கணவனும், மனைவியும் சேர்ந்து தன்னை கலாய்க்கிறார்களோ என்று தோன்ற,
“எப்படி கொஞ்சமும் கில்டிநெஸ் இல்லாம இருக்கீங்க?…” என்றாள் கடுப்புடன்.
“அடடா, இப்ப உங்களுக்கு என்னதான் வேணும்? நானும் பொறுமையா பார்த்துட்டே இருக்கேன். திரும்ப திரும்ப, திரும்ப திரும்ப அதையே பேசறீங்க?..” என்றவள்,
“மிஸ் பண்ணிட்டோம்னு நினைக்கறீங்களோ?…” என்றாள் கொஞ்சம் குரலை தழைத்து.
“குறிஞ்சி…” என்று அவளின் கையை பிடித்தவன்,
“ப்ச், தள்ளுங்க…” என சொல்ல, இன்னும் நிரஞ்சனா அங்கே நிற்பதை பார்த்துவிட்டு,
“நீ வா. அந்த வழி போவோம்…” என்று திரும்பியவன் மீண்டும் நிரஞ்சனாவை பார்த்து,
“பழைய கோவத்தை வச்சுட்டு இனி இப்படி பேசாதீங்க. இன்னொரு தடவை நான் இவ்வளவு பொறுமையா பேச மாட்டேன். உங்களுக்கு என்னை பத்தி தெரியாது. தெரிஞ்சுக்கவும் வேண்டாம். புரியுதா?…” என்று எச்சரிக்கும் தொனியில் பேசியவன்,
“வா குறிஞ்சி…” என அவளின் கையை பற்றிக்கொண்டு வேறு பக்கம் திரும்பி நடந்தான்.
தான் வந்து பேசினால் மாட்டிக்கொண்டதை போல தலைகுனிவான் என்று நிரஞ்சனா அவனை குத்தி பேசவே வந்திருக்க அவனும் சரி குறிஞ்சியும் சரி அவளுக்கு அப்படி ஒரு வாய்ப்பையே தராததை போல இருந்தது.
அதையும் தாண்டி அமரை இழந்தது ஆத்திரமாய் வந்தது. அவனை அத்தனை பிடிக்கவும் தான் வீட்டில் வேண்டாம் என்றாலும் சமாதானம் செய்து திருமணம் வரை கொண்டுவந்திருந்தாள்.
நிச்சயத்தன்றும் கூட அப்படி ஒரு சர்ட்டிபிகேட் பார்த்ததும் அவள் அடைந்த ஏமாற்றமும், கோபமும் எல்லையில்லாதது. இவன் எப்படி இப்படி செய்யலாம்? என்னும் ஆத்திரம் கண்ணை மறைக்க வழக்கமான சுபாவத்தை அவளாலும் மறைக்கமுடியவில்லை.
அமரும், குறிஞ்சியும் கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள். சொந்தக்காரர் வீட்டு கல்யாணத்திற்கு என்று வந்துவிட்டு இப்படி அவனையும் பார்த்து, இப்படி வாங்கிக்கட்டிக்கொண்டு அவமானத்துடன் நின்றாள்.
காரில் ஏறும் வரை அமைதியாக இருந்தவள் முகம் கடுகடுவென்று இருக்க அமரும் அவளாக ஏதாவது பேசுவாள் என்று பார்த்துவிட்டு தானே ஆரம்பித்தான்.
“என்னவாம் முகம் ரெட்டிஷா மாறிருக்கு?…” என்று கேலியாய் பேச,
“அவ்வ்வா நீங்கல்லாம் என்ன ஆள்? பொய்யும் பேசறீங்க? அதுவும் வாய் கூசாம. இன்னும் எத்தனை கெட்டபழக்கம் எல்லாம் இருக்குது உங்கட்ட?…” என்று அவனின் மேல் பாய்வதை போல கேட்க,
“சீட்ல உட்கார்ந்து பேசு. நான் ஸ்ட்ரியரிங்கை பிடிக்கவா? உன்னையா?…” என்றவன்,
“என்ன பொய் பேசினேன்?…” என்றான் இலகுவாக.
“என்ன பொய்யா? பேசின அத்தனையும் பொய். நாம லவ் பண்ணினோமா? வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணினோமா? இதெல்லாம் பொய்யில சேராதா?…” என்று கொந்தளிக்க,
“அட சில் குறிஞ்சி. இதை தான் ஊரே சொல்லுதே…”
“ஊர் ஆயிரம் சொல்லட்டும். நீங்க ஏன் அது உண்மைன்னு பேசறீங்க?…”
“அந்த பொண்ணு வேணும்னே ஹர்ட் பண்ண வந்து நின்னு வம்பிழுக்குது. பார்த்துட்டு சும்மா வர சொல்றியா? என்னவோ கண்டுபிடிச்சேன் அப்டின்னு பேசிட்டு நக்கலா பார்க்குது. அதான் நீ வொர்த்தே இல்லைன்னு காமிச்சேன்…”
“உங்களுக்கு வெஞ்சன்ஸ் கூடவா இருக்குது? சரியான ரொட்டிக்கடை தான் நீங்க…” என்று சொல்லியவள்,
“வெஞ்சன்ஸ் அப்படின்னு எல்லாம் இல்லை. அதுக்குன்னு ஒரு ஆள் பார்க்க வேண்டாமா? இந்த பொண்ணு பேச்சு எனக்கு அன்னைக்கே சுத்தமா புடிக்கலை. ஆடர் போடற மாதிரி அதட்டி பேசுது. நீயெல்லாம் பேசுவியான்னு தான் நல்லா குடுத்தேன். ஆமா நானே நிறுத்தியிருப்பேன்னு. இந்த மாதிரி ஆளுங்க பேச வாய்ப்பே தர கூடாது…”
“ஆஹா, ரொம்ப தான் தெரிஞ்சது உங்களுக்கு நிச்சயத்தன்னைக்கு. அதான் சொன்னாளே போன்ல பேசுவோம்ன்னு. பொண்ணு பேசி முடிக்கவும் அவ கூட நல்லா வறு வறுன்னு தீஞ்சு போகற மாதிரி வறுத்துட்டு இப்ப வந்து ஒண்ணுமே இல்லாத மாதிரி சலிப்பா பேச்சு. உங்களை நம்ப மாட்டேன்…”
“அட நிஜம் தான் குறிஞ்சி. நான் ரொம்ப எல்லாம் பேசலை…”
“பேசினீங்க தானே? அதுவும் ரொம்ப புடிச்சு…” என்று பல்லை கடித்துக்கொண்டு சொல்லியவள் கோவத்துடன் தன் விரல் நகத்தை கடிக்க காரை மெதுவாய் ஓட்டிக்கொண்டே அவளை திரும்பி பார்த்தான்.
கோவத்தையும் தாண்டிய ஒரு உரிமையுணர்வு அவளின் பேச்சில் முதன்முதலாக தென்பட்டது. புன்னகையுடன் அவளின் முகத்தை அளந்தவன் கடித்துக்கொண்டிருந்த விரலை எடுத்துவிட்டு தன்னருகே கொண்டுவந்தவன் மென்மையாய் அதற்கொரு முத்தம் பதிக்க,
“ப்ச், கையை விடுங்க. சும்மா சும்மா…” என அவனிடமிருந்து இழுத்துக்கொண்டாள்.
“கோவமா இருந்தா என்கிட்டே சொல்லேன். எதுக்கு உன் நகத்தை கடிச்சு பனிஷ் பண்ணிக்கற?…”
“நினைப்பு தான். அப்படி ஒன்னும் இல்லை. நீங்க பேசுங்க என்னவும் செய்ங்க. இப்பவும் பேசுங்க. நான் கேட்கமாட்டேன். என்னை இழுத்து ஏன் பொய் சொன்னீங்கன்னு தான் கோவம்…” என்று கொஞ்சம் திக்கி திணறி சொல்ல,
“ஆஹாங்…” என்றான் ஒரு உல்லாசப்புன்னகையுடன்.
“என்ன ஆ வூன்னு? வாயை திறக்காதீங்க. வாயை திறந்தாலே நேரத்துக்கு ஒரு பேச்சு. அதுவும் விதம் விதமா. உங்களை போய்…” என்றவள் வாயை மூடிக்கொள்ள,
“சொல்லேன். என்னென்ன எப்பெப்போ பேசினேன்னு…”
“உங்க இஷ்டத்துக்கு நான் பேச முடியாது…” என்றவள்,
“ஆமா நிஜமாவே உங்களுக்கு அந்த பொண்ணை புடிக்கலையா?…” என கேட்க இல்லை என்று தலையசைத்தான் யோசிக்காமல்.
“அப்பறம் எதுக்காம் போன்ல பேசினீங்க?…” என்று மீண்டும் அவலோன் பேசியதை பற்றியே அவள் பேச,
“சும்மா தான்…”
“ப்ச், இது பதில் இல்லை. என்ன சும்மா?…” என்றவள்,
“மறுநாள் கல்யாணத்தை நிறுத்திருப்பேன்னு சும்மா தான சொன்னீங்க அந்த பொண்ணை வெறுப்பேத்த…” என்று அவனின் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்து கேட்க,
“இல்லை, நிஜமா தான் சொன்னேன்…” என்றான் அவனும் தீவிரமாய்.
“இதுவும் நம்பமாட்டேன். அவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் ஆகற இடத்துக்கு கொண்டு வந்துட்டு நிப்பாட்டுவீங்கலாம். நம்பிட்டேன்…”
“ஓகே, நம்பாத…” என்றான் விட்டேற்றியாய்.
“ஐயோ தலை வெடிக்குது. கல்யாணத்தை நிஜமாவே நிறுத்தறதா இருந்தீங்களா?…” என்று மீண்டும் சீரியஸாக கேட்க அவனும் தலையசைத்து ஆமோதிக்க,
“நிறுத்திட்டு என்ன பன்றதா இருந்தீங்க? உங்களை விட்டிருப்பாங்களா அப்படியெல்லாம்?…”
“சாமியாரா போகலாம்ன்னு இருந்தேன். போதுமா…” என்றான் மீண்டும் காரின் வேகத்தை கூட்டியபடி.
“நீங்க சாமியாரா? இதுதான் பெரிய காமெடி. கல்யாணம் ஆனதுல இருந்து ஒருநாள் என்னை விட்டு இருக்கமுடியலை. சாமியாராம்…” என்று படுநக்கலாக சொல்லியவள்,
“சொல்றதை பொருந்த சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு அவனின் பார்வையில் பேச்சை நிறுத்தினாள்.
“ரொம்ப பேசிட்டேனோ? போச்சு, இன்னைக்கு இதை சொல்லியே என்னை ஒரு வழி பண்ணிடுவான் இந்த ஆங்க்ரிபேர்ட்…” என தனக்கு தானே கேட்டுக்கொண்டு அப்படியே திரும்பி சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டாள் தூங்கும் பாவனையில்.
“இது உலகமகா நடிப்பு குறிஞ்சி…” என்று அவளுக்கு கவுன்ட்டர் கொடுத்தவன் வீடு வந்து சேர்ந்தான்.
மறுநாள் காலையில் குறிஞ்சியை கிளப்பி இன்ஸ்ட்யூட் வந்து அவளை விட்டுவிட்டு கடைக்கு சென்றுவிட முதலில் மறுத்த குறிஞ்சிக்கும் போக போக கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பொழுதும் போனது.
காலை எழுந்ததும் இருவருமாய் வீட்டு வேலையை பார்த்துவிட்டு கிளம்பி செல்பவள் கீழே சமைக்கும் முதற்கொண்டு எந்த வேலையும் இல்லாததால் தன்னுடைய வீட்டை மட்டும் சுத்தம் செய்து முடித்து கிளம்பி வர சரியாக இருக்கும்.
அமர் கடை திறக்கும் நேரத்தில் இருந்து அரைமணி நேரம் கழித்து தான் குறிஞ்சி கிளம்புவதாக இருப்பதால் அவனுடனே கீழே வந்து அவன் கிளம்பியதும் சாரதாவுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு இன்ஸ்ட்யூட் கிளம்பி செல்வாள்.
கிடைக்கும் நேரம் கீழே கழிய அமர் வரவும் மாடிக்கு வர என்று அந்த வாழ்க்கைக்கு நன்றாகவே தன்னை பழக்கப்படுத்தி இருந்தாள்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆக போகிறது. குறிஞ்சியிடம் மாறாத ஒன்று அவளின் பேச்சு மட்டுமே.
அன்று காலை எழுந்து அமர் வழக்கம் போல உடற்பயிற்சிக்கு வந்துவிட குறிஞ்சியும் குளித்து முடித்து போர்வைகளை துவைத்து எடுத்துகொண்டு மாடிக்கு வந்தாள்.
அமர் ஒரு பக்கம் போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருக்க அவனை தொந்தரவு செய்யாமல் வந்தவள் தனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது தான் பார்வை எதிர் அப்பார்மென்ட் மேல் பதிந்தது.
அங்கே ஐஸ்வர்யா இங்கேயே இவர்களை பார்த்தபடி நிற்பதை கண்டவள் அமரையும், அவளையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு வேகமாய் அமரை மறைக்கும் விதமாய் முன்னால் வந்து ஐஸ்வர்யாவை பார்த்து இடுப்பில் கை வைத்து முறைத்து நின்றாள்.