“என்ன குறிஞ்சி?…” என்று அவளை பார்த்ததும் போனை வைத்துவிட்டு அழைக்க அவனை திரும்பி முறைத்தவள்,
“நல்லா காமிச்சாச்சா? இதான் டெய்லி நடக்குதா?…” என்று இவனை பார்த்தும் மூச்சிரைக்க பேசியவள் மீண்டும் ஐஸ்வர்யாவை பார்த்தாள்.
அவள் இதற்கெல்லாம் அசரமாட்டேன் என்பதை போல ஐஸ்வர்யாவும் திண்ணக்கமாய் நின்றாள்.
“கொழுப்பை பாருங்க. எப்படி நிக்கறான்னு…” என்று குறிஞ்சி பொறுமினாள்.
“இப்ப நீ எதுக்கு இங்க வந்த?…” என்றவன் பெட்ஷீட்டை பார்த்துவிட்டு,
“இதை ஏன் இங்க காயவைக்கிற? அதான் கீழே இடம் இருக்கே?…”
“ஏன் சொல்லமாட்டீங்க? மழை வர மாதிரியே இருக்குது. துவைக்காம விட்டா உங்களுக்கு பிடிக்காது. கீழே போட்டு காயலைன்னா வாடை வந்துரும். அதான் இங்க போட்டு காயவும் எடுத்திருவோம்னு கொண்டுவந்தேன்…”
“சரி போடு. ஏன் பாதில விட்டுட்டு நிக்கிற?…” என்றான் ஒரு டவலை எடுத்து தன் மேலே போட்டுக்கொண்டு.
“இதை முதல்லையே செய்யனும்…” என்றவள் ஆராய்ச்சியாய் அந்த மொட்டை மாடியை சுற்றி பார்க்க,
“என்ன பன்ற குறிஞ்சி? அவ நின்னா நமக்கென்ன?…”
“நமக்கென்னவா? அவ பார்க்கிற மாதிரி மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசறது. கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்டே ஒருதடவையாச்சும் முகம் பார்த்து சிரிச்சிருப்பீங்களா?…” என சண்டைக்கு நிற்க அமருக்கு சிரிப்பு வந்தது.
“கல்யாணத்துக்கு முன்னாடி நீ யாரோ. நான் ஏன் உன்னை பார்த்து சிரிக்கனும்? இப்போ நீ என் வொய்ப். இப்ப சிரிக்கலைன்னா சொல்லு. என்னன்னு கேளு…” என்றான் அவன்.
“சரி அப்போ வேற யாரோ. மேரெஜ் பிக்ஸ் பண்ணினீங்க தானே? அப்போவும் ஏன் உர்ர்ருன்னு இருந்தீங்க?…”
“அப்போவும் நீ கல்யாணத்துக்கு மாட்டேன்னு மல்லுக்கு நின்னா உன்னை பார்த்து சந்தோஷமாவா இருக்கும்? அதான் சைலண்டா இருந்தேன்…”
“அந்த சைலன்ட் தான் எல்லாருக்கும் புடிக்குது…” என்றாள் பல்லை கடித்து ஐஸ்வர்யா இருந்த பக்கம் பார்த்துக்கொண்டே.
“அவ பார்க்கறா. எனக்கு இங்க நிக்கவே புடிக்கலை. வாங்க கீழே போவோம்…” என்று குறிஞ்சி திரும்ப,
“அவ பார்த்தா போவியா? நில்லு இங்க…” என்று பிடித்து தன்னருகே நிறுத்திக்கொண்டான் அவளின் தோளில் கையை போட்டுக்கொண்டு.
அமரிடம் அனைத்திற்குமே பதில் இருந்தது. ஆனாலும் குறிஞ்சியின் மனது தான் ஐஸ்வர்யா என்ன எண்ணத்துடன் பார்க்கிறாள் என்று தவித்தது.
அவளுக்கு தெரியுமே அவள் அமர்நாத்தை ஐஸ்வர்யா எந்தளவு விரும்பினாள் என்று.
முன்பெல்லாம் ஐஸ்வர்யா அமரை புகழ்ந்து பேசுவதை கேட்டு மனதிற்குள் கவுன்ட்டர் கொடுத்து குதூகலமாக இருப்பாள். சுபாஷினியிடம் சொல்லி சிரிப்பாள்.
“இந்த ஐஸ் என்ன இருக்குன்னு ஓனர் ஓனர்ன்னு பித்து புடிச்சு சுத்துதோ. நின்னா அப்படி, நடந்தா இப்படின்னு அவ்வளவு புகழ்ந்து தள்ளுது. என்ன ரசனை ரசனை…” என்று கிண்டல் பேசியவளுக்கு இப்போது அமர் தன் கணவனாகவும் ஐஸ்வர்யாவின் அந்த பேச்சுக்கள் எல்லாம் மிளகாயாய் எரிந்தது.
“எல்லாம் உங்களால…” என்று ஐஸ்வர்யாவிடம் காண்பிக்க முடியாத கோவத்தை அமரிடம் காட்ட,
“நான் என்ன பண்ணேன்?…” என்று அவன் முறைக்க,
“என்ன பண்ணலை? ஊருக்கெல்லாம் ஸீன் போட்டு காமிச்சுட்டு என்ன பண்ணினேன்னு பச்சை பிள்ளை மாதிரி பேசாதீங்க. அவ பார்க்கறா…”
“ப்ச், இனி ஃபுல் ஹேண்ட் ஷர்ட், டிஷர்ட் போட்டுக்கவா? அப்போ ஒன்னும் இல்லை தான? நீ மட்டும் பார்த்துக்கோ…”
“எல்லாத்துக்கும் கேட் போடாதீங்க…” என்றவள் அங்கிருந்தே ஐஸ்வர்யாவை பார்த்து இன்னும் முறைக்க,
“ப்ச், கடைக்கு கிளம்பனும் குறிஞ்சி…”
“கிளம்புங்க…” என்று மீண்டும் பார்வை அங்கே திரும்ப அவளின் கன்னம் பற்றி தன்னை பார்க்கவைத்தான்.
“சும்மா ஏன் அங்கயே பார்க்கற? நீ பார்க்கன்னே அந்த பொண்ணும் வீம்புக்கு நிக்கும்…” என்று சொல்ல,
“உங்களுக்கு தெரியாது அவ உங்களை எப்படிலாம் பார்ப்பான்னு…” என்று சொல்லும் பொழுதே அவளை குரல் உள்ளே சென்றுவிட,
“பொசஸிவ். ஹ்ம்ம், குறிஞ்சிக்கு என்னை பிடிக்குதே?…” என்றான் புன்னகையுடன்.
“புருஷனை புடிக்காம யாரும் இருப்பாங்களா?…” என்றாள் அவனிடம் அவன் சொல்வதை கவனத்தில் கொள்ளாமல்.
“அது வேற. இது வேற. கல்யாணம் ஆகிடுச்சுன்னு வர பிடித்தம் மாதிரி இல்லை இது…” என சொல்ல மீண்டும் குறிஞ்சி ஐஸ்வர்யா பக்கம் திரும்ப போக,
“ப்ச், நீ அவளை ஏன் பார்க்கற? சொன்னாலும் கேட்கமாட்ட. சரி வா கீழே போகலாம். இன்ஸ்ட்யூட் கிளம்பனும்ல…”
“இன்னைக்கு எனக்கு லீவ். மறந்துட்டீங்களா?…” என்று சொல்ல,
“ஆமா, மறந்துட்டேன்…” என்றான் தலையை கோதியபடி.
“இப்படித்தான் அடிக்கடி மறந்துபோய்டுவீங்களா?…” என்று அவள் கேட்பது எதை வைத்து என்று புரியாமல் அவளுடன் கீழே இறங்கியவன்,
“ஏன் என்ன திடீர்ன்னு? அப்படி எதுவும் மறக்கமாட்டேன். ஹ்ம்ம், எதுவும் மறந்துட்டேனா என்ன?…” என கேட்டான்.
“ஒன்னும் இல்லை…” என்று வந்தவள் தங்கள் அறையில் இருந்து ஜன்னல் வழியே ஐஸ்வர்யா எட்டி பார்க்கிறாளா என்று பார்க்க அவள் இன்னுமே அங்கே தான் நின்றாள்.
“அடிங், இவளை இன்னைக்கு சும்மா விடமாட்டேன்…” என கோபத்துடன் தனது போனை எடுத்தவள் ஐஸ்வர்யாவுக்கு அழைக்க குறிஞ்சியை முதலில் அமர் கவனிக்கவில்லை.
ஐஸ்வர்யா போன் எடுக்க காத்திருந்தவளுக்கு எடுக்கும் ம்முன்னர் பொறுமை பறந்தது. ஜன்னலில் அவள் இங்கே பார்த்துக்கொண்டே போனை எடுத்து காதில் வைக்க,
“கண்ணு ரெண்டையும் நோண்டிருவேன் பார்த்துக்கோ. என்ன நினைச்சுட்டு இருக்க? சும்மா பார்வை எல்லாம் இங்கயே இருக்குது?…” என்று அவள் கத்திக்கொண்டு இருக்க,
“குறிஞ்சி என்ன பன்ற?…” என வந்துவிட்டான் அமர்.
“நீங்க சும்மா இருங்க. அவளுக்கு இங்க என்ன பார்வை வேண்டி இருக்குது?…” என்று அவனிடமும் திமிறிக்கொண்டு ஐஸ்வர்யா பேச காத்திருக்க,
“என்ன மிரட்டுறியா? உன்னால என்ன பண்ண முடியும்?…” என்றாள் ஐஸ்வர்யா.
“என்ன ஒரு ஏத்தம் உனக்கு? பழகிட்டோமேன்னு பார்த்து பேசினா என்ன பண்ண முடியும்ன்னா கேட்கற?…” என்று இவள் சொல்லும் பொழுதே போனை பிடுங்கி அழைப்பை துண்டித்தான் அமர்.
“என்ன நான்சென்ஸ் இது? உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை…” என அவன் கோபப்பட,
“உங்களுக்கு இதெல்லாம் புரியாது. அவ உங்களை அப்படி பார்க்கறது எனக்கு புடிக்கலை….”
“அதுக்கு நாம ஒன்னும் பண்ண முடியாது குறிஞ்சி. தூர தூக்கி போட்டு போய்ட்டே இருக்கனும். நானே கண்டுக்கலை. உனக்கு ஏன் கவலை? ஆயிரம் பேர் ஆயிரம் நினைக்கட்டும். அதை பத்தி யோசிக்கமாட்டேன்னு சொன்னவ தானே நீ?…”
“ஆமா சொன்னேன். அது அப்போ. இப்போ உங்களை நான் நினைக்கலாம். அவ யாரு?…” என்று அவனுடன் மல்லுக்கு நிற்க,
“உன்கிட்ட எல்லாம் பேசமுடியாது. அவ என்னை பத்தி பேசும் போதே அவாய்ட் பண்ணிருக்கனும் அன்நெஸ்ஸரின்னு சொல்லி. இப்போ குத்துதே குடையுதேன்னுட்டு…” என்றவன் கோபத்துடன் கிளம்ப ஆரம்பித்தான் கடைக்கு செல்ல.
குளித்து வெளியே வந்தவன் குறிஞ்சியை தேட அவள் அங்கே இல்லை. ஓர் பெருமூச்சுடன் கிளம்பி கீழே சாப்பிட வர சாரதா அதான் டையனிங்கில் அமர்ந்திருந்தார்.
அவனும் அமைதியாகவே உண்டு முடிக்க சாப்பிட்டு முடிக்கும் வரை குறிஞ்சி வெளியே வரவே இல்லை.
“எங்கம்மா அவ?…” என தாயிடம் மெதுவாய் கேட்க,
“எவ? அந்த அவளுக்கு பேர் இல்லையா?…” என்றார் அவரும்.
குறிஞ்சி கீழே இறங்கி வரும் போதே அவளின் முகமே வாடி இருக்க சாரதா அவர்களுக்குள் ஏதோ சண்டை என புரிந்துகொண்டார்.
“அதான் உங்க மருமக…” என அமரும் பொறுமையாக கேட்க,
“மருமகளுக்கும் பேர் இருக்கும்ல…”
“ப்ச், உங்களோட, குறிஞ்சி எங்கன்னு கேட்டேன்…”
“உனக்கு வேணும்னா கூப்பிடு. உன் இஷ்டத்துக்கு நான் பதில் சொல்லமுடியாது. வீட்டுக்குள்ள தான இருக்கா. கூப்பிட்டுக்கோ. என்னை நடுவுல இழுக்காத…” என்றுவிட்டார்.
“யாரையும் இழுக்கலை. நான் கிளம்பறேன். சொல்லிருங்க…” என்று சொல்லியும் சாரதா ஒன்றும் பேசாமல் இருக்க எழுந்து கையை கழுவியவன் கிட்சனில் எட்டி பார்த்தான்.
சமையல்கார பெண் பாத்திரங்களை கழுவிக்கொண்டு இருக்க ஒரு கேரட்டை கடித்தபடி அவரிடம் என்னவோ பேசிக்கொண்டு நின்றாள் குறிஞ்சி.
அவளை அழைத்து கிளம்புவதாக சொல்ல இருந்தவன் ஒன்றும் பேசாமல் கிளம்பிவிட்டான்.
“என்னடா சொல்லாம கிளம்பிட்ட?…” என்ற சாரதாவிடம்,
“மேல இருந்து இங்க வரப்போ அவ சொல்லாம தான வந்தா?…” என்றுவிட்டு கீழே இறங்கிவிட்டான்.
பைக்கை வெளியே எடுத்தவன் சட்டென மேலே நிமிர்ந்து பார்க்க இவன் கிளம்புவதை பார்க்க வெளியே வந்த குறிஞ்சியை கண்டுகொண்டான்.
அமர் பார்த்ததும் முறைப்பை கைவிடாமல் குறிஞ்சி அப்படியே நிற்க அவள் எதுவும் பேசுவாள் என ஒரு நொடி நின்றவன்,
“போடி…” என்று வாயசைத்துவிட்டு வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.
“எவ்வளவு கொழுப்பு?…” என்று ஆறவே இல்லை குறிஞ்சிக்கு.
மீண்டும் பார்வை எதிர் அப்பார்மென்ட்க்கு செல்ல கடுப்புடன் உள்ளே வந்தவளுக்கு பலவித யோசனைகள். கண்டுகொள்ளாமல் இருக்கத்தான் ஒருமனம் நினைத்தது. ஆனாலும் முடியவில்லை.
சாப்பிட்டு முடித்து மீண்டும் முல்லை பந்தலுக்கு பெட்ஷீட்டை எடுக்க வந்தவளுக்கு சட்டென யோசனை பிறக்க ஒரு ஸ்டூலை எடுத்துக்கொண்டு வந்து பரபரவென வேலையை பார்த்தாள்.
மதியம் வரை வெயிலிலும் அவள் அங்கேயே இருக்க சாப்பிட வந்தவன் அவளை தேடி வந்தான் மாடிக்கு.
“ஹேய் என்னடி பண்ணிட்டிருக்க?…” என்று வேகமாய் வந்து அவளை பிடித்து கீழே இறக்க வியர்த்து போய் இருந்தது.
“பார்த்தா தெரியலை? முல்லைக்கொடி வசச் ஸ்க்ரீன் போட்டுட்டு இருக்கேன். இனி இப்படித்தான் இருக்கும். நானும் ஒன்னும் சொல்ல போறதில்லை. நீங்களும் என்னை திட்ட போறதில்லை…” என சொல்ல,
“ஏன் இப்படிலாம் பன்ற? அவ வர்த்தே இல்லை குறிஞ்சி…” என்றவன் மீண்டும் திரை போல மறைத்திருந்த பந்தலை பார்த்தான்.
எதிர் அப்பார்மெண்டே தெரியாத அளவிற்கு முல்லைகொடியை திரை போல எடுத்துவிட்டிருந்தாள். வெகு நேரம் பிடித்திருக்கும் ஒவ்வொரு கொடியாய் இப்படி எடுத்து ஒன்றுபோல செய்ய.
“எப்போ இருந்து இதை பன்ற?…” என்றான்.
“நீங்க கிளம்பினதுல இருந்து…” என்றவள் கையை உதற அதை பிடித்து விரித்து பார்த்தான். சிவந்து போய் இருந்தது அது.
“என்கிட்டே சொல்லிருக்கலாம் தானே? ஏன் இப்படி பன்ற?…” என்றான் மீண்டும் வருத்தமான குரலில்.
“சொல்லனும்னு தோணலை. அதுக்கும் ஏதாவது நீங்க நோ சொன்னா? நோ சொல்லியும் நான் செஞ்சா இன்னும் கோவம் வரும். சண்டை எதுக்கு? அதான் சொல்றதுக்கு முன்னாடியே பண்ணிட்டேன்…” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு.
“விவரம் தான்…” என அவளின் தலையில் கை வைத்து ஆட்டியவன்,
“வா, மருந்து போடலாம்…” என அவளுடன் கீழே சென்றான்.
அந்த வார இறுதியில் சாரதா கேட்டுக்கொண்டதன் பெயரில் இருவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள்.
எப்போதும் சாரதா வரும் கோவில். பிடித்தமான கோவிலும் கூட. இன்று கோவில் முழுவதும் கூட்டம் அலைமோத,
“என்ன இன்னைக்கு இவ்வளவு கூட்டம்?…” என யோசனையோடு உள்ளே செல்ல,
“திருக்கல்யாணம் நடக்குது. அதான் இவ்வளவு கூட்டம். அடிக்கடி வந்தா தெரியும்?…” என்றாள் குறிஞ்சி.
“நீ வருவியா?…” என பேசியபடி உள்ளே செல்ல,
“ஹ்ம்ம், அம்மாவோட. அம்மாவுக்கும், சாரதாம்மாவுக்கும் இது தான் பேவரெட் கோவில். நானும் சுபாக்காவும் நிறையதடவை வந்திருக்கோம்…” என சொல்ல தரிசனத்திற்கே நீண்ட நேரம் நிற்கவேண்டியதாக இருந்தது.
அதன் பின்னர் நெரிசலில் இருந்து சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து மண்டபத்தில் அமர்ந்துகொண்டனர்.
இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க யாரோ ஒரு குழந்தை ஓடி வரும் பொழுது கட்டியிருந்த வேஷ்டி தடுக்கி கீழே விழுந்துவிட்டான்.
“அச்சோ…” என குறிஞ்சி இறங்கி செல்ல அவளின் பின்னே அமர்நாத்தும் இறங்கி சென்று குழந்தையை தூக்கினான்.
“குட்டிப்பையா அடி பட்டுருச்சா?…” என கேட்டு அவனின் காலை தடவி விட்டவள் கையையும் பிடித்து ஆராய,
“நான் குட்டிப்பையன் இல்லை….” என்றது குழந்தை.
“ஆஹாங், அப்போ நீங்க யாராம்? தனியாவா வந்திருக்க? யாரும் கூட இல்லையா?…” என குறிஞ்சியும் சொல்லி,
“அழகா குட்டியா இருக்க. நீ குட்டிப்பையன் தான?…” என்று அவனின் கன்னத்தை லேசாய் கிள்ளி கொஞ்சினாள்.
“அகைன் அன்ட் அகைன் டோன்ட் கால்மீ குட்டிப்பையா. ஐ’ம் வருணேஷ் வாசுதேவகிருஷ்ணன். சன் ஆஃப் வாசுதேவகிருஷ்ணன்…” என முறைப்பும், விரைப்புமாய் தோரணையாக சொல்ல,
“வாவ் அழகா பேசவும் செய்யற…” என்று அவனை தூக்கி வந்து மண்டபத்தின் திண்டில் நிறுத்தினாள்.
“அடி எதுவும் பட்டிருக்கா? எங்க காமி?…” என்றவள்,
“இந்த பையன் பேரன்ட்ஸ் யாருன்னு தெரியலையே. செம சார்மிங்கா இருக்கான்…” என்று மீண்டும் அவனின் கன்னத்தை தொட்டே,
“ஐ’ம் பெர்பெக்ட்லி ஓகே. ஹெல்ப் பண்ணினதுக்கு தேங்க்ஸ். இப்ப என்னை இறக்கி விடுங்க…” என்று சொல்ல,
“கூட்டமா இருக்கே. உன் பேரன்ட்ஸ் நம்பர் தெரியுமா? சொல்லு இங்க வர சொல்லுவோம். உன்னை திரும்ப தனியா அனுப்ப முடியாதே…”
“ஆன்ட்டி, நான் வருணேஷ் வாசுதேவகிருஷ்ணன். டோன்ட் கெட் பேனிக்…” என்றான் குறிஞ்சிக்கே தைரியம் சொல்லுவதை போல.
இருவரின் சம்பாஷனையையும் பார்த்து ரசித்தபடி நின்ற அமர்நாத் குறிஞ்சிக்கு அவன் சொல்லியதை கேட்டதும் பக்கென்று சிரித்துவிட்டான்.
“ஓகே, நானும் கூட வரேன். உன் பேமிலிட்ட உன்னை விட்டுட்டு போய்டறோம். நீ குட் பாய் தான். ஆனாலும்…” என்று அமர் அவனிடம் விளக்கம் போல சொல்ல,
“ஹலோ…” என்று அவனின் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்க திரும்பி பார்த்தனர் குறிஞ்சியும், அமரும்.
வருணேஷ் போலவே வேஷ்டி சட்டையில் மிடுக்காய் நின்றவனை பார்த்ததுமே அமரின் கண்களை நம்பமுடியவில்லை.
“ஸார் நீங்க…” என்று அமர் ஆச்சர்யமாக பார்க்க,
“வாசுதேவகிருஷ்ணன்…” என்றவன்,
“என் பையன் தான்…” என வருணேஷை காண்பித்து சொல்லவும்,
“உங்களை நேர்ல பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை ஸார். வெரி வெரி ஹேப்பி…” என்று சொல்லவும் அவனுக்கு கை நீட்டினான்.
“நானும் உங்களை இங்க பார்ப்பேன்னு நினைக்கலை அமர்நாத் அன்ட் குறிஞ்சி, ஐ’ம் ரைட்…” என்றவனின் குரலில் அமர்நாத் ஒருநொடி திடுக்கிட்டு ஸ்தம்பித்து பார்த்தான்.
“எங்களை எப்படி?…”
“அசோக் உங்க ப்ரெண்ட் தானே?…” என்றதுமே அமர்நாத்திற்கு புரிந்துபோனது.
வாசுதேவகிருஷ்ணன் அனைத்தையும் அலசி ஆராய்ந்து தன்வரை விவரங்களை சேகரித்திருக்கிறான் என்று.
“இங்க எங்க சார்பா தான் திருக்கல்யாணம் நடத்தி இருக்கோம். வாங்களேன். அங்க போகலாம். பேசனும்…” என்று சொல்லவும் அமரும் குறிஞ்சியும் பதிலின்றி நின்றனர்.