“அட வச்சுக்கோங்க ரகுண்ணே, எல்லாம் சரியாகிட்டா சாயங்காலம் வாங்க…” என்று சொல்லிவிட்டு போனை வைக்க,
“என்ன ஆச்சு? என்ன பிரச்சனை? கடை அடைக்கனும்னு சொல்றீங்களே?…” என்று குறிஞ்சி கேட்க,
“ஹ்ம்ம், அங்க ஏதோ கட்சி தகராறு. கலவரமா பெருசு பன்றாங்க போல…” அதான் கடை எல்லாம் அடைச்சுட்டாங்க…” என்று விவரத்தை சொல்ல,
“இப்ப எப்படி வீட்டுக்கு போக?…” என்று அவள் பதற,
“ப்ச், இதெல்லாம் வழக்கமா பார்க்கறது தான். நம்ம ஏரியா சென்டர் பிளேஸ். அப்பப்ப இப்படி கிளம்புவாங்க. ஒரு நாள் ரெண்டு நாள். சரியாகிடும். பார்த்துக்கலாம்…” என்றவன் காரை வேறு பக்கம் திருப்பி வீடு வந்து சேர்ந்தான்.
“நீ உள்ள போ, நான் காரை ஷெட்ல விட்டுட்டு வரேன்…” என்று சொல்லவும் குறிஞ்சி மட்டும் மாடிக்கு வந்தாள்.
“நல்ல வேளையா வந்தீங்க…” என்று சாரதா மருமகளிடம் பேச ஆரம்பிக்க நேரலை நாராயணன் செய்திகளை பார்த்தபடி இருந்தார்.
குறிஞ்சிக்கு பேச்சு சாரதாவிடம் இருந்தாலும் பார்வை மொத்தமும் தொலைக்காட்சியில் தான் இருந்தது.
அதில் காவலர்கள் பிரச்சனைவாதிகளை அடித்து துரத்த அவளின் நினைவு வாசுதேவகிருஷ்ணன் பக்கம் தாவ உடல் தூக்கி போட்டது.
“என்னாச்சு குறிஞ்சி? ஒரு மாதிரி ஆகிட்டம்மா?…” என அவளின் முகம் பார்த்து சாரதா கேட்க,
“சாரதாம்மா, நான் ட்ரெஸ் மாத்திட்டு வரட்டா? டயர்டா இருக்குது…” என்று சொல்லும் பொழுதே அமர் மேலே வந்துவிட்டான்.
பின் அவனிடம் நாராயணன் கடை பற்றி பேசிக்கொண்டிருக்க குறிஞ்சி மாடிக்கு சென்றுவிட்டாள்.
“என்ன அமர், கோவில்ல ரொம்ப கூட்டமா? குறிஞ்சி ரொம்ப அசதியா இருக்கா?…” என கேட்டதும் தான் அமருக்கும் கோவிலில் நடந்தவை ஞாபகம் வந்தது.
“ஹ்ம்ம் ம்மா. இன்னைக்கு அங்க திருக்கல்யாணம். அதனால கூட்டமும் அதிகம். ரொம்ப நேரம் ஆகிடுச்சு தரிசனம் பார்க்க…” என்றவன் வாசுதேவகிருஷ்ணனை அவனின் குடும்பத்துடன் பார்த்ததை மட்டும் சொல்லவில்லை.
சாரதாவிடம் சொன்னால் அக்கம்பக்கத்தினரிடம் பேச்சுவாக்கில் இதை பற்றி சொல்லிவிடுவார் என்று வாயே திறக்கவில்லை அவன்.
“சரி நீ போய் அவளை பாரு. போய்ட்டு ட்ரெஸ் மாத்திட்டு சாப்பிட வாங்க ரெண்டு பேரும். சமையல்க்கார பொண்ணு நைட்டுக்கும் சேர்த்தே செஞ்சுட்டு கிளம்பிருச்சு. இப்படி கலவரமா இருக்க நைட்டுக்கு தனியா வர முடியாதுன்னு…” என்று சொல்லவும் அவரிடம் தலையசைத்து மேலே வந்தான்.
தனதறைக்குள் நுழைய அங்கே குறிஞ்சி சுடிதாரில் மாறி இருந்தாள். தலையை நன்றாக அவிழ்த்து விரித்து விட்டவள் ஹேர்ப்பின்களை எல்லாம் அதனிடத்தில் வைத்துவிட்டு ஒரு பேண்டை மட்டும் தலைக்கு மாட்டிக்கொண்டாள்.
அமர் வந்ததையும் கவனித்தவள் அவன் மீதான கோவத்தில் வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் அவனை தாண்டி செல்ல பார்க்க,
“ப்ச், கார்ல நல்லா தான இருந்த? அதுக்குள்ளே என்ன நுழைஞ்சது உன் தலைக்குள்ள?…” என அவளின் கையை பிடித்து அவளின் தலையில் குட்டு வைக்க,
“ஒன்னும் வேண்டாம். தேவை இல்லாம எதையோ இழுத்து மடில விட்ட மாதிரி இப்படி செஞ்சி வச்சிருக்கீங்க. நமக்கு இதெல்லாம் தேவையான்னு கேட்டா நான் பேசவே கூடாதுன்னு அங்க வச்சே சொல்றீங்க. அதான் எதுக்குன்னு ஒன்னும் பேசாம போறேன்…” என்று முகத்தை திருப்பிக்கொண்டு அவள் சொல்ல,
“அவ்வளோ தானா?…” என சிரித்தான் அமர்நாத்.
“இது உங்களுக்கு அவ்வளவு தானான்னு போச்சா? எனக்கு மனசுக்கு சரியா படலை. இது வம்புன்னு தோணுது. ஆனா நீங்க? உங்களுக்கு யாரை பத்தியும் கவலை இல்லை. அப்படித்தான?…” என கேட்டுக்கொண்டே கையை உதறிவிட்டு ஹாலுக்கு வர,
அதே நேரம் வாசுதேவகிருஷ்ணன் சொல்லியதை சொல்லவும் தயக்கமாக இருந்தது. சொன்னாள் இன்னும் பயந்து போவாளோ என்று நினைத்தான்.
“சரி சொல்லுங்க. எங்க புரிய வைங்களேன் பார்ப்போம்…” என கையை கட்டிக்கொண்டு அவனை பார்க்க,
“இன்னைக்குன்னு பார்த்து கடை அடைப்பு. உன்னோட ஸ்பென்ட் பண்ணலாம்ன்னா நீ முறுக்கிட்டு நிக்கற. இப்ப பேசவேண்டிய விஷயமா அது? அதை விடு….” என்று அவளை நெருங்கியவன் அவளின் முகத்தை தன்னருகே இழுக்க,
“இந்த பேச்சை மாத்தற வேலை எல்லாம என்கிட்டே வேண்டாம். என்னவோ சொல்லனும்னு சொல்றீங்களே. இதுல காலை விட்டா நமக்கு கஷ்டம்ன்னு பேச நினைச்சா…” என்றவளின் இதழ்களை பெருவிரலை கொண்டு மெதுவாய் அவன் வருட அவளின் பேச்சுக்கள் எங்கே காதில் விழுந்தது.
“ஓகே, நீ சொல்லு. பேசு நான் கேட்கறேன்…” என்றான் தன்னிலை மறந்து.
“இப்படியெல்லாம் பண்ணினா பேச வராது. நான் சொல்றதை கேட்கற நிலைமைல இப்ப நீங்களும் இல்லை…” என அவனின் கையை தட்டிவிட மீண்டும் அதையே தான் செய்தான் அவன்.
“ஓகே, பேசு. ஆனா இப்போ இல்லை. இன்னைக்கு என்னோட டே. பேசனும்னா ரெக்கார்ட் பண்ணி அனுப்பிவிடு. நாளைக்கு ப்ரியா இருக்கும் போது கேட்கறேன். இப்போ உன்னை பேச விடணும்னு எனக்கு தோணலையே…” என்று அவின் முகம் நோக்கி குனிய சில நொடிகளில்,
“ஹ்ம்ம்…” என்று அவனை தள்ளியவள் அவனின் ஷர்ட்டிலேயே முகத்தை துடைத்துவிட்டு,
“போயா ரொட்டிக்கடை. பட்டர் பன்…” என்று திட்டியவள் அவன் அசந்த நேரத்தில் நழுவி கதவை திறந்து கீழே இறங்க ஆரம்பிக்க,
“குறிஞ்சி…” என்றழைப்பில் பாதி படியில் திரும்பி பார்த்தாள்.
“உன் ஷால்…” என்று அவன் குறும்புடன் சுடிதாரின் துப்பட்டாவை காண்பிக்க,
“தூக்கி போடுங்க…” என அவங்கே நின்றாள் முறைப்போடு.
“சண்டை போடனுமா? மேல வந்து போடு…” என்றவன் ‘வா’ என்று தலையசைத்தான்.
அவள் அவனை பார்த்துக்கொண்டே நிற்க, மீண்டும் அமர் புன்னகையுடன் வேண்டாமா என்று தலையசைக்க,
“வந்தா சண்டை போட விடற மாதிரி தான்…” என்று அவன் தரமாட்டான் என தெரிந்து மேலே செல்ல தன்னருகில் வந்ததும் ஒற்றை கையால் அவளை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்.
“விடுங்க முதல்ல. எனக்கு பசிக்குது. அவங்க குடுத்த ப்ரசாதம் நல்லா இருந்துச்சு. ஆனா கோவத்துல சரியா சாப்பிடாம வேற வந்துட்டேன்…” எனவும்,
“ப்ச், சரி போ. நானும் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்…” என மனமில்லாமல் அனுப்பினான்.
“இல்லை நீங்க வர வரைக்கும் வெய்ட் பன்றேன். மாத்துங்க…” என ஹாலுக்கு வர,
“சொன்னா கேட்கமாட்டியா? போன்னு சொல்லும் போதே கீழே போய்டு. அப்பறம் சாப்பட்ட நான் மேல கொண்டுவரவேண்டி இருக்கும். என்னை தான அதுக்கும் குறை சொல்லுவ…” என்று முறைப்புடன் அவன் சொல்ல,
“அதான கொஞ்சம் கனிவா இருந்தாலும் டைம் கீப்பர் போல கொஞ்சம் நேரம் தான. உடனே அந்நியனா மாறிட வேண்டியது…” என்று அவனை திட்டிக்கொண்டே கீழே இறங்கி சென்றாள்.
அமரும் கீழே வந்துவிட இருவருமாக சாப்பிட்டு முடித்து மாடிக்கு வரும் பொழுதே குறிஞ்சிக்கு உடலுக்கு என்னவோ போல் இருந்தது.
“என்ன செய்யுது? ஏன் முகமெல்லாம் மாறி இருக்குது?…” என்றான் அவளை பார்த்ததுமே.
“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை…” என்றவள் யோசனையுடன் தேதியை பார்த்தவள் ‘ஐயோ’ என்று நொந்து போனாள்.
“குறிஞ்சி…” என்றவனிடம் என்ன சொல்ல என்று தெரியாமல் நிற்க,
“வாயை திறந்து பேசேன். என்னன்னு சொல்லாம இப்படி பார்த்து வைக்கிற?..” என்றவனுக்கு அவளின் தயக்கம் புரியவில்லை.
“இல்லை, ஒண்ணுமில்லை…” என்றாள் மீண்டும்.
“சரி என்கிட்டே சொல்ல வேண்டாம். போ…” என்று ஹாலுக்கு சென்றுவிட்டான் கோபத்துடன்.
அவனிடம் சொல்ல சங்கடப்பட்டு நின்றவள் ஒரு நைட்டியை எடுத்துக்கொண்டு சென்று குளித்துவிட்டு வந்து படுத்துக்கொண்டாள்.
வெகு நேரம் அவளை காணவில்லை என்றதும் டிவியை அணைத்துவிட்டு குறிஞ்சியை அமர் தேடி வர உறங்கிக்கொண்டிருந்தவளை பார்த்ததும்,
“சரி ஓகே. தூங்கு. ஒன்னும் பண்ணலை…” என்று சொல்லவும் தான் அடங்கி அவனின் அணைப்பில் உறங்க ஆரம்பித்தாள்.
உடல்நிலை சரியில்லை போல என நினைத்துக்கொண்டவன் இப்போது வெளியே இருக்கும் சூழ்நிலையில் மருத்துவமனை செல்வது சரிவராது என நினைத்தவன் மெதுவாய் எழுந்து சாரதாவிடம் வந்தான்.
“அவளுக்கு முடியலை போலம்மா. என்ன பண்ணுதுன்னு சொல்லவும் மாட்றா. நீங்க கேளுங்க…” என்றதுமே மேலே வந்துவிட்டார் சாரதா.
“நல்லா தூங்கறாளே…” என்றவர் அவள் குளித்துவிட்டு படுத்திருந்ததை பார்த்ததுமே புரிந்துபோக,
“அவ ரெஸ்ட் எடுக்கட்டும். நீ விடு. ரெண்டுமூணு நாள்ல சரியாகிடும்…” என்றதுமே அமரும் ஓரளவு அனுமானத்துடன் குறிஞ்சியை பார்த்தான்.
‘இதை என்கிட்டே சொன்னா என்னவாம் இவளுக்கு? இன்னும் என்னை இவள் முழுதாக ஏற்கவில்லையா?’ என மனது சுணங்கி போனது.
“மேலையும் கீழேயும் அலைய வேண்டாம். நைட் சாப்பாட்ட நீயே வந்து வாங்கிக்கோ. நான் அப்பறமா வரேன்…” என்று சென்றுவிட்டார்.
சிறிது நேரம் அமர்நாத்தும் உறங்கி எழுந்தவன் வீட்டில் இருந்தபடியே தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான். மாலை அவள் எழுந்து வந்ததுமே அவளை மேலும் கீழும் பார்த்தவன்,
“இப்போ ஓகேயா?…” என கேட்க,
“ஹ்ம்ம்…” என சொல்லியவள் கிட்சனுக்கு சென்றாள்.
“என்ன வேணும் குறிஞ்சி?…” என்று அவளின் பின்னால் வந்தான்.
“டீ குடிக்கனும். அதான் பால் இருக்கான்னு பார்த்தேன்…”
“அம்மா டீ போட்டு ப்ளாஸ்க்ல குடுத்துவிட்டிருக்காங்க. வந்து குடி…” என்றான்.
அவன் வேறு எதுவும் கேட்காமல் வெறுமனே பேசியது குறிஞ்சிக்கு என்னவோ போல் ஆக,
“கோவமா இருக்கீங்களா?…”
“இல்லையே. உனக்கு ஏன் அப்படி தெரியுது?…” என்றவன் அப்போதும் அவள் முகம் பார்க்காமல் பேச குறிஞ்சிக்கு கஷ்டமாக இருந்தது.
சிறிது நேரம் அவனருகே அமர்ந்திருந்தவள் அவனாக எதுவும் பேசுவானா என்று பார்க்க அவனோ தன் மேக்புக்கில் தீவிரமாய் இருந்தான்.
அவளும் தன் மொபைலோடு இருக்க இன்ஸ்ட்யூட்டில் இருந்து மெசேஜ். இரண்டு நாட்கள் இன்ஸ்ட்யூட் திறக்கப்படமாட்டாது என்று.
“எனக்கு ரெண்டு நாள் லீவ். மெசேஜ் பண்ணிருக்காங்க…” என்றாள் அவள்.
“ஹ்ம்ம், தெரியும். இந்த பிரச்சனையப்போ உங்க இன்ஸ்ட்யூட் கண்ணாடி எல்லாம் உடைச்சிருக்காங்க. அதனால இப்போதைக்கு வேலைக்கு போகவேண்டியதில்லை…” என்றான் சாதாரணமாக.
“ஓஹ், அப்போ கடையும் லீவா?….” என பேச இல்லை என்று தலையசைத்தவன்,
“நீ திரும்ப ரெஸ்ட் எடுக்கனும்னா போய் படு. இல்லையா டிவி பாரு. எனக்கு வேலை இருக்கு…” என சொல்லி எழுந்தவன் நோட், மேக்புக் சகிதம் ஜிம் ரூமிற்கு சென்றுவிட்டான்.
“ஓனருக்கு எவ்வளவு கொழுப்பு? பேசினா கூட பேசலை. நான் என்ன பண்ணிட்டேன்னு கோவம் வேற வருது…” என கோபமாய் புலம்பியவள் தொலைக்காட்சி சேனல்களை மாற்றினாலும் மனது லயிக்கவில்லை.
சிறிது நேரம் பார்த்தவள் அமர முடியாமல் அங்கேயே குறுகி படுத்துக்கொள்ள சுபாஷினி அவளுக்கு அழைத்தாள். பார்த்ததுமே ஒரு சலிப்போடு அழைப்பை ஏற்றவள்,
“என்ன சுபாக்கா?…” என்றாள்.
“இப்பலாம் சுபாக்கா மறந்து போச்சா உனக்கு?…” என்று அவள் கிண்டல் பேச,
“என்னை தான் எல்லாரும் மறந்துட்டீங்க. நானா தான் பேசனும். அப்பவும் ஏதாவது ஒரு காரணம் சொல்றது. இப்பவும் நீ ரெண்டு வார்த்தை பேசிட்டு வச்சிருவ. அதான் சொல்ல வந்ததை சொல்லுன்னு சொல்றேன்…” என்றாள் கடுப்புடன்.