குளிர் – 5
அமர் அமைதியாக நிற்க வந்தவர்களும் அங்கே வைத்து எதுவும் பேச வேண்டாம் என நினைத்து கிளம்புவதாய் சொல்லி கிளம்பிவிட எல்லோரும் கிளம்பவும் தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டான்.
“என்னாச்சு அமரண்ணே?…” என கடை ஊழியர் கேட்க,
“ஒன்னும் ஆகலை. வேலையை பாருங்க…” என்றவனுக்கு எந்த வேலையிலும் கவனம் செல்லவில்லை. வீட்டிற்கு செல்லவும் தோன்றவில்லை.
இந்த திருமணம் பற்றிய பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் அவனுக்குள்ளும் சிறு ஆசைவிதை வேர் விட தான் செய்தது.
‘பார்க்கலாம். தாமாக எதுவும் வீட்டில் சொல்லவேண்டாம்’ என்ற முடிவுடன் இருந்துகொண்டான்.
அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி வந்த குறிஞ்சிக்கு தெரியவில்லை தான் செய்து வைத்த காரியத்தின் விளைவு எங்கே சென்று நிற்க போகிறதென?
வீட்டிற்கு வந்ததும் எரிச்சலோடு ஐஸ்வர்யாவுக்கு அழைக்க அவள் போனில் ஓவென்று அழ,
“கிளம்பும் போதே சொன்னேன். வரமாட்டேன்னு. இப்படி போறப்போ விட்டுட்டு போய்ட்டீங்க. எனக்கு இது தேவையா? உங்களை கூட்டிட்டு போனதுக்கு ஓனர் என்னை திட்டறார்…” என்று அவளும் திட்டிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
“என்னக்கா டென்ஷனா இருக்கியா?…” என்ற தம்பியிடம் ஒன்றும் சொல்லாமல் தன்னறைக்கு சென்று கதவை சாற்றிவிட்டு வந்து படுத்தவளுக்கு சுபாஷினியிடம் இருந்து அழைப்பு வந்தது.
“என்ன குறிஞ்சி, கால் பண்ணிருந்தேன். ரிங் போய்ட்டே இருந்துச்சு?…” என கேட்க,
“அதை ஏன் கேட்கற? இந்த லவ்பேர்ட் சிறகை பிச்சு தூர வீசிட்டாரு ரொட்டிக்கடை….” என்றவள் ஐஸ்வர்யாவுடன் சென்றதை பற்றி சொல்லவும் சுபாஷினிக்கு அத்தனை கோபம்.
“அறிவிருக்கா குறிஞ்சி? என்ன பண்ணிவச்சுட்டு வந்திருக்க?…” என்று திட்டவும்,
“சுபாக்கா ஐஸ் தான் ஹெல்ப்புக்கு வான்னு சொன்னாங்க. நானும் போனேன். இதுல நான் என்ன பண்ணேன். என்னை அவர் திட்டினார். நானும் பதிலுக்கு பேசினேன்…”
“ஐயோ குறிஞ்சி, உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்க? நீ சண்டை போட்டது தப்பு. ஐஸ்வர்யாவுக்கு வேணும்னா அவ தான் பேசனும். நீ கூட போனது தப்பு. அதிலயும் பொண்ணு வீட்டு முன்னாடியே நீ இப்படி செஞ்சு வச்சிருக்க…”
“என்னை என்ன செய்ய சொல்ற? அவங்களை வச்சுட்டே முறைச்சுட்டு நான் கேக் வாங்க வந்ததா சொன்னார். அதான் கோவத்துல இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன்…” என்றவளுக்கு அப்போதுதான் அது எப்படியான தோற்றத்தை மற்றவர்களுக்கு தரும் என்பதே விளங்கியது.
“சுத்தம், எனக்கு ஆகவே ஆகாது. இதுல இப்படி ஒரு கற்பனை வேறையா? சுபாக்கா நீ சும்மா இரு…” என்றாள் கலக்கத்துடன்.
குறிஞ்சிக்கு இது பெரிய பிரச்சனை ஆகி தந்தைக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயம் பிடித்துக்கொண்டது.
“வேணும்னு எதுவும் பண்ணலை சுபாக்கா. எனக்கு அந்த நேரம் கோவம். அதான். சுபாக்கா இது அப்பாவுக்கு தெரிய கூடாது…”
“தெரிய கூடாதுன்னா? இது உன் மாமா தலையிட்டு நடத்தி வைக்கிற கல்யாணம். இந்த பிரச்சனை பெருசாச்சுன்னா மாமாவே அப்பாக்கிட்ட இதான் விஷயம்னு சொல்லிடுவார்…” என்றாள் சுபாஷினியும்.
“அன்னைக்கு என்னவோ சொன்ன? ஜாதகம் குடுத்துவிட்டாங்க. கொண்டு வந்தோம். வேற எந்த சம்பந்தமும் இல்லைன்னு…” என்று தங்கை பேச,
“எல்லாம் உன்னால தான். உன் வாய்க்கு பயந்து தான் அப்படி சொன்னேன். இப்ப அதுவா முக்கியம்? ப்ச், சரி விடு. என்ன செய்யலாம்ன்னு பார்க்கலாம்…” என்று சொல்லிய சுபாவுக்கும் அச்சம் தான்.
“மாமாவுக்கு என்னை புடிக்காம போய்டும். எனக்கு தெரியும். சும்மாவே அப்பாவும், அம்மாவும் திட்டறாங்க. இனி மாமாவும்…” என சஞ்சலத்துடன் சொல்ல,
“குறிஞ்சிடா. அமைதியா இரு. எப்படியும் மாமாட்ட விஷயம் வரும். அவங்க தப்பா எதுவும் நினைக்கலைன்னா பிரச்சனை இல்லை. இல்லை பொண்ணு வீட்டுல அவங்களுக்கு ஏதாவது நெருடலா இருந்தா நம்ம மூலமா தான் பேசுவாங்க. பார்த்துப்போம்…” என்று சுபாஷினி சொல்லிவிட்டு,
“இங்க பார், இனியாவது உன் கோவத்தை குறை. இது அர்த்தமில்லாத கோவம். சொன்னா நீ ஏத்துக்க மாட்டேன்ற…”
“உனக்கு நான் எப்படி சொல்றதுன்னு தெரியலை சுபாக்கா. இந்த ஓனர், அவன் பார்வையே என்னை நீயெல்லாம் ஒரு ஆளான்னு அலட்சியமா இருக்குது. எனக்கு புடிக்கலை…”
“அவர் எப்படியும் நினைக்கட்டும். நமக்கென்ன?…”
“ஐயோ சுபாக்கா, நாம இருக்கறது அவங்க வீட்டுலன்னு இருக்கும் போது அது எத்தனை கஷ்டம்ன்னு உனக்கு புரியாது. உனக்கு தான் ஈஸியா இந்த வீட்டுக்கு வரும் கல்யாணம் ஆகிடுச்சே…” என்றவள்,
“சும்மா வண்டியை கொண்டுவந்து நிப்பாட்டினாலே ஆராய்ச்சி பார்வை. என்னவோ போலீஸ்காரன் திருடனை பிடிக்க போறது மாதிரி மோப்பம் பிடிச்சுட்டு. சின்ன சின்ன விஷயத்துக்கும் கம்ப்ளைன்ட்…”
“உன்கிட்ட சொன்னாரா?…” என சுபா கேட்க,
“என்கிட்டே சொன்னா தானா? வெளில வெங்காயத்தோல் உறிஞ்சி காத்துல பறந்திருந்தா உடனே அம்மான்னு கூப்பிட்டு காமிக்கிறது. ஒரு நாள் கேட்ல குப்பை கவர் வச்சுட்டேன். அதுக்கு அம்மான்னு கூப்பிட்டு கம்ப்ளைன்ட்…”
“நீ ஏன் கேட்ல வைக்கிற? வெளில தான் பெட்டி இருக்குதே. அதுல போடறது தானே?…”
“சுபாக்கா ஒரு போன் வரவும் உள்ள போய்ட்டேன். வந்து போட்டுக்கலாம்ன்னு அங்கயே வச்சுட்டேன். இது ஒரு தப்புன்னு அம்மாவும் சொல்றாங்க. ஒரு ப்ரீயாவே இருக்க முடியலை. ஒன்னொண்ணுக்கும் நோட்டம் பார்த்துட்டு ரொம்ப இரிட்டேட் ஆகுது…”
“இதுல அம்மா வேற ஒன்னொண்ணுக்கும் நுணுக்கம் பார்க்கறாங்க. எதுவும் சொல்லிடுவாங்களோன்னு பார்த்து பார்த்து கவனமா இருக்காங்க. இதுக்குத்தான் ஓனர் இல்லாத வீடா பார்த்து போகனும்னு சொல்றது. நான் எல்லாம் வாடகைக்குன்னு வீடு விட்டா இப்படி டார்ச்சர் பண்ண மாட்டேன்…”
தங்கை புலம்புவதை கேட்க சிரிப்பாக இருந்தாலும் ஒருபுறம் கஷ்டமாகவும் தான் இருந்தது. சாரதா பற்றி கவலை இல்லை. ஆனால் அமர்நாத் கீழே இறங்கி வரும் பொழுதே ஒவ்வொன்றையும் கூர்மையாக பார்த்தபடி தான் வருவான்.
அவளுமே அதை கண்டிருக்கிறாளே. ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை அவன் சுபாவமே அதுதான் என்று. குறிஞ்சியுடையது ஒருவிதம் என்றால் அமர்நாத் சுபாவம் இன்னொரு வகை.
“சுபாக்கா என்ன சைலன்ட் ஆகிட்ட?…” என குறிஞ்சி கேட்க,
“ஹ்ம்ம், உங்க பஞ்சாயத்து எப்போ தீரும்ன்னு தான் யோசிக்கறேன். இங்க பாரு செல்லம், ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத. அவங்க வாடகைக்கு விட்டிருந்தாலும் அது அவங்க வீடு. அவங்க எப்படி வச்சிருக்காங்களோ அதே மாதிரி தான் மத்தவங்கட்டையும் எதிர்பார்ப்பாங்க…”
“இருக்கட்டும் சுபாக்கா. ஆனா நம்மளை மாதிரி வீட்டை சுத்தமா வச்சிருப்பாங்களான்னு டவுட்லையே இருக்க கூடாதுல. பர்ஸ்ட் டைம் நான் ஸ்கூட்டில அப்படி வந்துட்டேன். என்னவோ எப்பவும் அப்படித்தான் இருப்பேன்னு ரொம்ப கீழா பார்க்கறது எல்லாம்…”
“சரி சரி, அதை விட்டு வெளில வா…” என்ற சுபா பேச்சை மாற்ற,
“பொண்ணோட குடுத்திருக்காங்க. இந்த அமர் எப்படி பேசுவாரோ? ஹ்ம்ம் இந்த கல்யாணம் முடியறதுக்குள்ள…” என சுபாஷினி பெருமூச்சு விட,
“போன் நம்பர் தானே? அப்படியே கழுத்து சுழுக்கிக்கற அளவுக்கு பேச்சோ பேச்சு தான். போ சுபாக்கா. அந்த பொண்ணு பாவம். ஹலோன்னு ஓனர் சொல்லும் போதே நாலு இரும்பு கம்பியை காதுக்கு பக்கத்துல வச்சு அறுத்த மாதிரி கிர்ர்றுன்னு கேட்க போகுது. அப்பறம் என் காது கேக்காது தான்…”
“வாயை மூடுடி. உனக்கு ரொம்ப சேட்டையா போச்சு. பன்றதையும் பண்ணிட்டு வந்துட்டு நக்கல் வேற. நாளைப்பின்ன உனக்கு பார்க்கற மாப்பிள்ளையும் இது மாதிரி ரஃப் & டைப் கேரக்டரா வந்துட போறாரு. நீ அனுபவிக்க போற…” என கிண்டலாய் சொல்ல,
“என்னது எனக்கு அமரபுஜங்கன் மாதிரியா? சுபாக்கா. வாய்ல அடி. வாய்ல அடி. பலிச்சுட போகுது…” என கத்தியவள்,
“பார்த்தியா நீயே ஒத்துக்கற ரஃப் டைப்ன்னு…” என்று சொல்ல,
“ஹ்ம்ம் நீ இருக்கியே…” என பேசிக்கொண்டிருந்தவள்,
“குறிஞ்சி மாமா பைக் சத்தம் மாதிரி கேட்குது. என்னன்னு பார்த்துட்டு வரேன்…” என சொல்ல,
“என்ன இன்னேரமா? வர நைட் ஆகும்ன்னு சொல்லிட்டு போனதா சொன்ன?…”
“அதான்டி தெரியலை…” என பேசிக்கொண்டே சுபாஷினி நடந்து செல்வது கேட்டது.
“சரி நான் வச்சிடவா? அப்பறமா பேசறேன்….” என சொல்ல,
“ஓகே டா. நான் நைட் பேசறேன்…” என்று சொல்லி வைத்து ஐந்து நிமிடம் ஆகவில்லை பரமேஸ்வரன் குறிஞ்சியின் எண்ணிற்கு அழைத்துவிட்டான்.
“சொல்லுங்க மாமா, இப்பதான் அக்காட்ட பேசினேன்…” என இவள் ஆரம்பிக்கும் பொழுதே படபடவென பொரிந்தவன்,
“நான் மாமாட்ட தான் நேரா பேசனும்னு இருந்தேன். உன் அக்கா தான் வேண்டாம்ன்னு சொன்னா…” என்றதுமே திக்கென்று ஆனது குறிஞ்சிக்கு.
“மாமா நான்…”
“இப்ப இந்த கல்யாணமே நிக்க போகுது குறிஞ்சி. எனக்கு அங்க இருந்து கிளம்பும் போதே போன் பண்ணிட்டாங்க பொண்ணு வீட்டுல இருந்து. என்ன பார்த்தாங்களோ என்னவோ இது சரிவராதுன்ற மாதிரி பேசறாங்க…” என்றதும் குறிஞ்சிக்கு திக்கென்று ஆனது.
“மாமா நான் வேணும்னு எதுவும் பண்ணலை…” என்று நடந்ததை சொல்ல,
“இப்ப இதை நான் உங்கப்பாவுக்கு சொல்லாம எதுவும் முடிக்க முடியாது குறிஞ்சி. அவங்க வீட்டுல உனக்கு அமருக்கும் நடுவுல ஏதாவது இருக்கும்ன்னு…”
“இது தப்பு மாமா. நான் எப்பவும் அப்படி ஒரு பார்வைல இருந்ததில்லை. நான் மட்டுமில்ல. அவரும் தான். எப்படி இப்படிலாம் நினைக்காங்க? ரெண்டு பேர் சேர்ந்து நின்னா அதானா?இன்ஃபேக்ட் அவங்க வரும் போது கூட நான் சண்டை தான் போட்டேன்….”
“ஆனா அவங்களுக்கு அப்படி தெரியலை. அப்பவும் அமர் சொன்னதுக்கு நீ இல்லைன்னு மாத்தி கோவமா வேற பதில் சொல்லிருக்க. சும்மா சும்மா சொல்லாதீங்கன்னு சொல்ல இப்ப அவங்க அமர் ஏதோ மறைக்கிறதா நினைக்கறாங்க…” என கோபமாய் சொல்ல,
“இல்லை, அது என் தப்பு தான். அந்த நேரம் கொஞ்சமும் யோசிக்கலை. என்னோட கோவம் எல்லாம்…”
“ப்ச், இப்ப இதுக்கு என்ன பண்ணன்னு எனக்கு தெரியலை. இதுல தலையிடாம இருந்திருந்தாலே நீ பண்ணினதுக்கு நான் உன்னை தான் சொல்லிருப்பேன். இப்ப எவ்வளவு பெரிய சிக்கலை இழுத்து விட்டிருக்க. இதால உங்கப்பாம்மாவுக்கும் கஷ்டம்…” என்றதும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“ஸாரி மாமா…”
“என்கிட்டே இதை கேட்கனும்னு அவசியமில்லை. உனக்கு முன்கோவம் இருக்கும்னாலும் உன்னோட குடும்பத்துல மூத்த பிள்ளை மாதிரி எல்லாத்துக்கும் நீ நிப்ப. விளையாட்டுத்தனம் இருந்தாலும் தெளிவா யோசிக்க கூடிய பொண்ணுன்னு நினைச்சிருந்தேன்…”
“ஏன் நானே உன் அக்காக்கிட்ட நிறையதடவை குறிஞ்சி மாதிரி துணிச்சலா இருன்னு கூட சொல்லிருக்கேன். ஆனா இன்னைக்கு…” என்றவனின் பேச்சு குறிஞ்சியை காயப்படுத்த அமைதியாய் இருந்தாள்.
“நான் என்ன பண்ணனும் மாமா? அவங்க வீட்டுல அப்படி எல்லாம் இல்லைன்னு வேணா சொல்லட்டுமா? நானே பேசறேன். இது கூட உங்களுக்காக தான்…” என்று விசும்பலுடன் கேட்க,
“ப்ச், நான் பார்த்துக்கறேன். ஆனா இனியாவது இப்படி நடந்துக்காம இரு. அதுதான் எல்லாருக்கும் நல்லது. என் பேச்சுக்கு மதிப்பு குடுப்பன்னு நம்பறேன். நம்பலாம் தானே?…” என கேட்க,
“சத்தியமா இனி நான் ஓனர்க்கிட்ட. ஸாரி இனி யாரோடையும் எந்த வம்புக்கும் போக மாட்டேன். என்னை பிரச்சனைக்குள்ள இழுத்தாலும். போதுமா? என்னை நம்பலாம் மாமா. ஆனா அப்பாட்ட சொல்ல வேண்டாம்…”
“அதை நான் பார்த்துக்கறேன். நான் சமாளிச்சுக்கறேன். ஆனா உங்க கொழுந்தியா தானேன்னு கேட்கும் போது ப்ச், என்ன சொல்ல? இதுல என்னோட மதிப்பும் சேர்த்து போச்சு…” என்றதும் அதிர்ந்து போனாள்.
அவனிடம் இத்தனை பெரிய வார்த்தையை அவள் எதிர்பார்க்கவே இல்லை. போனை வைத்ததும் ஓய்ந்து போய் அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டாள் குறிஞ்சி.
கண்ணீர் சொல்ல சொல்ல கேட்காமல் வடிந்துகொண்டே இருக்க துடைக்க கூட தோன்றாமல் அப்படியே படுத்திருந்தாள்.
“குறிஞ்சி…” என வனஜா வந்து கதவை தட்டவும் தான் சுயவுணர்வு வந்தவள் எழுந்து முகத்தை துடைத்துவிட்டு கதவை திறந்தாள்.
“என்னடி இது? புதுசா பகல்ல கதவை லாக் பண்ணிட்டு இருக்கற? உனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லையே?…” என நெற்றி, கழுத்து என்று சோதித்தவர்,
“என்ன செய்யுது குறிஞ்சி?…” என்றார் கவலையுடன்.
“ஒண்ணுமில்லம்மா, தூங்கிட்டு இருந்தேன்ல. அதான். நீங்க போங்க…” என்று மீண்டும் வந்து படுத்துக்கொண்டாள். அதுவே வனஜாவிற்கு ஆச்சர்யம்.
“தூக்கத்துல எழுப்பினா ஆட்டமா ஆடுவா. இன்னைக்கு இந்த பொண்ணுக்கு என்னாச்சு?…” என ஒருபக்கமாய் சாற்றி வைத்திருந்த கதவை பார்த்துக்கொண்டே சென்றார்.
குறிஞ்சி பயந்ததை போலவெல்லாம் தயாளனின் காதுக்கு இந்த செய்து செல்லவில்லை. பரமேஸ்வரன் ஒருவழியாய் பெண் வீட்டினரை பேசி சமாதானம் செய்திருந்தான்.
அதனால் சொல்லியபடி பேசிய தேதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். முதல்நாள் இரவு நிச்சயதார்த்தம் என்றும் மறுநாள் காலை திருமணம் என்றும் முடிவாகி இருக்க சுபாஷினியிடம் தான் காரணம் கேட்டாள் எப்படி சமாதானம் ஆனார்கள் என்று.
“நீ வீட்டு வாடகை பத்தி பேச தான் போனதா மாமா சொன்னாங்க. வாடகை கூட்டறதா இருக்கவும் நேரா அங்க போய் கேட்க போனதாவும் அதுல ரெண்டு பேருக்கும் வாக்குவாதமானதால நீ கோவத்துல அப்படி சொன்னன்னு சொல்லி சமாளிச்சுட்டாங்க…”
“அந்த பொண்ணு வீட்டுல நம்பிட்டாங்களா?…”
“ஹ்ம்ம் கிட்டத்தட்ட நம்பிட்டாங்க தான். பொண்ணுக்கு அமரை ரொம்ப பிடிச்சிருச்சு போல. அதனால சரின்னுட்டாங்க. அங்க நிறைய விசாரிச்சு பார்த்திருக்காங்க. அதுவும் சம்மதிக்க ஒரு காரணம்…”
“ஆனா காரணமே இல்லாம என்னையும் சேர்த்து விசாரிச்சிருக்காங்க சுபாக்கா…” என சொல்லும் பொழுதே அவளின் குரல் உள்ளடங்கி இருந்தது.
“குறிஞ்சி, இது ஒரு விஷயமா? விட்டுத்தள்ளு…”