“முன்ன கூட இந்த வீட்டுல இருக்கறதுக்கு பிடிக்கலைன்னாலும் புலம்பிட்டாவது இருப்பேன். ஆனா இந்த கல்யாணம் முடிஞ்சு அந்த பொண்ணு இங்க வந்து என்னை பார்க்குமே, அப்படி ஒரு பேச்சு அதோட மைண்டுக்கு வராமலா போகும்? அதுக்குள்ளவாச்சும் இங்க இருந்து போகனும் சுபாக்கா….”
“டேய் குறிஞ்சி? என்ன இதெல்லாம்? நீயா இத்தனை கவலைப்படற? யாரும் என்னவும் நினைக்கட்டும். நான் இப்படித்தான்னு எப்பவும் இருக்கற குறிஞ்சி தான் எங்களுக்கு வேணும். இதெல்லாம் நினைக்காம ஹேப்பியா இருடா…” என தங்கையை ஒருவாறு தேற்றினாள்.
இந்த நிகழ்வுக்கு பின்னால் பரமேஸ்வரன் இரண்டொரு முறை பேசினாலும் முன்பிருந்த ஒரு கலகலப்பு அவனிடத்தில் இல்லை. நன்றாக இருப்பதை போல இருந்தாலும் குறிஞ்சியால் அவனின் அதிருப்தியை உணர முடிந்தது.
தானாக அவனுக்கு அழைப்பதையும் நிறுத்தினாள். மாடிக்கு செல்வதை நிறுத்தினாள். முல்லை பூ பறிப்பதை நிறுத்தினாள். வனஜாவிற்கு இவை எல்லாம் தாயாய் ஒரு பயத்தை விதைத்தது.
முன்பு போல அமரனை திட்டுவதில்லை. எதெற்கெடுத்தாலும் குறை சொல்வதில்லை. பூ பறிக்க செல்வதில்லை. அந்த துடுக்கு பேச்சு இல்லை.
இப்படி இருக்கும் பெண் என்றிலிருந்து இப்படி என யோசித்து அமர்நாத்தின் வீட்டிற்கு பெண் வீட்டினர் வந்து சென்றதில் இருந்து தான் என்ற எண்ணமும் தோன்ற மகளை ஆராய்ந்து பார்த்தார்.
“குறிஞ்சி, அம்மாக்கிட்ட நீ எதையும் மறைக்கலையே…” என கேட்டும்விட அவள் ஐஸ்வர்யா பிரச்சனையை கொண்டு தான் கேட்கிறாரோ என்னும் பயத்தில் அரண்டு போனாள்.
“இல்லையேம்மா, இல்லையே. ஏன்?…” என எச்சிலை கூட்டி விழுங்கியபடி சொல்ல,
“இல்லடா, சும்மா தான் கேட்டேன். என்னவோ மாதிரி இருக்கியேன்னு தான்…” என்று சமாளித்தார்.
அவருக்கு நேரடியாக கேட்கவும் அச்சமாக இருந்தது. அப்படி எதுவும் இல்லாமல் தானாக நினைக்கிறோமோ என்று.
அமர்நாத்தின் வீட்டினரின் காதுக்கே செல்லவிடாமல் பரமேஸ்வரன் சுமூகமாக முடித்திருந்தான் இந்த குழப்பத்தை. அதனால் எதுவும் அவனுக்கோ, அவனின் குடும்பத்திற்கோ தெரியவில்லை.
பெண் வீட்டினர் பேசி முடித்த பின்பும் விசாரித்தது மட்டும் அவனின் காதுக்கு வர எரிச்சலாக இருந்தாலும் பெண்ணை கொடுப்பவர்கள் அவர்கள், விசாரிப்பது இயற்கை தானே என்றுவிட்டான்.
குறிஞ்சியோடு தன்னை அப்படி பார்த்துவிட்டு சென்ற பின்னரும் அவர்கள் எதுவும் சொல்லாமல் இருந்தது சற்றே நெருடினாலும் பெரிதாய் அதில் மனதை செலுத்தவில்லை.
நிரஞ்சனா. அந்த பெண் போன் செய்யும் நேரமெல்லாம் பொதுவான பேச்சுக்கள், அதுவும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே. எப்போதும் இவன் வேலையாய் இருக்கும் நேரம் அவள் அழைப்பாள். இரண்டு நிமிட பேச்சுக்கள். அவ்வளவு தான்.
அவளும் அதிகம் பேசவேண்டும் என்று நினைக்கவில்லை என்பதால் அமர்நாத் நிம்மதியானான்.
இப்போதெல்லாம் குறிஞ்சி அவனின் பார்வையில் படுவதே இல்லை. முன்பு எங்கிருந்தலும் அவளின் முறைப்பை அரூபமாய் உணருபவனுக்கு அவளின் பார்வை இல்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது.
அதை விட அவனின் கவனத்தை ஈர்த்தது முல்லை பந்தல். சுத்தமாய் அது பறிக்கபடாமல் மலர்ந்து சருகாய் உதிர்ந்து இருந்தது.
சாரதாவும் மேலே வருவது அபூர்வம் என்பதால் முன்பெல்லாம் வீட்டிற்கு அவ்வப்போது தானே பறித்துக்கொடுப்பான்.
குறிஞ்சி வந்ததில் இருந்து இரு வீட்டிற்கும் அவளே பறித்து, செடிகளுக்கு நீர் விட்டு என கவனித்து கொள்வதால் அந்த வேலையும் இல்லாதிருக்க இப்போது மீண்டும் அதை தானே கையிலெடுத்தான். சாரதாவிடமும் இதை பற்றி எதுவும் கேட்கவில்லை.
மாதம் இரண்டு அல்லது மூன்று முறை கடைக்கு வந்து ஹனி கேக் வாங்கி செல்பவள் இந்த இரண்டரை மாதத்தில் ஒருமுறை கூட வரவில்லை என்பதும் அவன் கவனித்து தான் இருந்தான்.
அவினாஷிற்கு பரிட்சை சமயம் என்பதால் அவனும் வரவில்லை. என்னவென்று யோசிக்க முடியாதளவிற்கு திருமண வேலைகள் வேறு இருந்ததால் பெரிதாய் அமர்நாத் யோசிக்கவில்லை. ஆனாலும் மனதின் ஓரத்தில் இது இருந்தது.
அவளின் திடீர் மாற்றம் புரிந்தாலும் இந்த அமைதி ஒருவகையில் அவனுக்கு என்னவோ போல் இருந்தது. ஒரு பெருமூச்சுடன் அதை கடந்துவிடுவான்.
அன்று முகூர்த்த கால் நடும் வைபவம். சாரதா எத்தனை அழைத்தும் வரமுடியாதென மறுத்துவிட்டாள் குறிஞ்சி.
‘உன்னால என் மதிப்பும் போச்சு.’ என்ற பரமேஸ்வரனின் வார்த்தை அவளை சாய்த்திருந்தது.
‘மதிப்பில்லாமல் போகுமளவிற்கு என் செயல் இல்லையென்றாலும் நான் செய்த தவறுக்கு இத்தனை பெரிய வார்த்தையா?’ என்னும் எண்ணமே அவளை எதனோடும் ஒன்றவிடவில்லை.
சாரதாவை பிடிக்கும் என்றாலும் இந்த பிரச்சனைக்கு பின்னர் ‘போதும், உங்க சங்காத்தமே வேண்டாம் சாமி’ என்று நினைத்திருந்தாள். கேட்டதற்கு தூரம் என்று சொல்லி சமாளித்துவிட்டார் வனஜா.
திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்க மறுநாள் அவினாஷ் பிறந்தநாள். என்ன செய்யவென்று தெரியாமல் இருந்தவள் சுபாஷினிக்கு அழைத்தாள்.
“சுபாக்கா, ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்ட தானே?…” என ஆரம்பிக்க,
“என்னடி பீடிகை போடற? என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?…” என சுபாஷினி கேட்டதுமே முணுக்கென்று கோபம் வந்தது.
“இதுக்குத்தான் நான் வேண்டாம்னு நினைச்சேன். ஆனாலும் மனசு கேட்கலை. அவிக்காக பேசலாம்ன்னு நினைச்சேன்…” என சீரியஸாக பேச,
“அச்சோ இல்லைடா குறிஞ்சி. என்னன்னு சொல்லு…” என்று கெஞ்சி, கொஞ்சி சமாதானம் செய்யவும் தான் பேசினாள் அடுத்து.
“அவிக்கு கேக் வாங்கனும். அவனுக்கு நாம வேற ஏரியால இருக்கும் போதே ஜஸ்ட் ப்ரெஷ் கேக் தான் புடிக்கும். உனக்கு தெரியுமே?…”
“ஆமா, நாளைக்கு அவன் பர்த்டே. போய் வாங்கிட்டு வா…” என சாதாரணமாக சொல்ல,
“இல்ல, மாமா எதுவும் நினைச்சு…”
“லூஸாடி நீ? அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ கேக் தானே வாங்க போற?…” என சொல்ல,
“நிஜமாவா சொல்ற? இதனால ஒன்னும் பிரச்சனை வராதுல. இல்லை திரும்பவும் உன்னால மதிப்பு போச்சுன்னு சொன்னா?…” என சொல்லும் பொழுதே குறிஞ்சி குரல் உடைந்து போனது.
“ப்ச், அதெல்லாம் இல்லை. நீ போய்ட்டு வா…” என்று தேற்றி சுபாஷினி சொல்லவும்,
“நீ என்னைக்கு வருவ சுபாக்கா?…” என்றாள்.
“கல்யாணத்துக்கு முதல் நாள் தான் வருவோம். நான் மட்டும் கிளம்பி வரேன். மாமா பொண்ணு வீட்டோட வருவாங்க…” என சொல்ல,
“ஹ்ம்ம்…” என்று மேலும் சில நிமிடம் பேசியிருந்தவள் பின் போனை வைத்துவிட்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்.
தானே சென்று வாங்கி வரவும் விருப்பமில்லை. வெகு நேரம் யோசித்தவன் கடையின் எண்ணிற்கு அழைத்தாள்.
அந்த நேரம் அமர்நாத் அங்கே இருக்கமாட்டான் என்று தெரிந்து அழைக்க எடுத்தும் அவள் எதிர்பார்த்ததை போல நன்கு தெரிந்த ரகு அண்ணன்.
“ரகு அண்ணா நான் குறிஞ்சி பேசறேன்…” என சொல்ல,
“என்ன பாப்பா இந்த நம்பருக்கு கூப்பிட்டிருக்க? என்ன விஷயம்?…” என்றார் அவரும்.
“இல்ல நாளைக்கு அவினாஷ்க்கு பர்த்டே. கேக் வேணும்…”
“அவ்வளோ தான? வந்து வாங்கிக்கோ. நான் செஞ்சிடறேன்…” என சொல்ல,
“இல்லை நான் வரலை. இப்ப ஆன்லைன் ஆடர் குடுக்கறேன். செஞ்சிட்டு எனக்கு ஒரு கால் மட்டும் பண்ணுங்க. வீட்டுக்கு போகும் போது கீழே வந்து குடுத்தா போதும்ண்ணா…” என கேட்க,
“என்ன பாப்பா, இங்க எப்பவும் வருவ தானே? ரெண்டு மாசமா வரவே இல்ல…” என அவர் கேட்க ஒரு நொடி மௌனமானவள்,
“அண்ணா ப்ளீஸ். நான் ஆன்லைன்ல பே பண்ணிடுவேன். ஆனா நைட் போகும் போது குடுத்தா போதும். உங்க மொபைல் நம்பர் தாங்க. நான் கால் பன்றேன்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம் சரி…” என்று சொல்லிவிட்டார்.
அதை அமர்நாத் வரவும் வேறு சொல்ல அவனும் கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லவில்லை.
இரவு ஆனதும் கடையில் கூட்டம் அலைமோத சமாளிக்க இருக்கும் ஆட்கள் போதவில்லை.
அன்றைக்கென்று பார்த்து கஸ்டமர்ஸ் வந்துகொண்டே இருக்க ரகுவிற்கும் வேலை இழுத்தது. கீழேயும், மேலேயுமாக மாறி மாறி அவர் பார்த்துக்கொண்டு இருந்ததில் இதை மறந்து போனார்.
எட்டு மணி போல கடையின் கீழே இருந்தபடி குறிஞ்சி போன் செய்ய அவர் எடுக்கவே இல்லை.
மீண்டும் மீண்டும் அழைத்தவள் சிறிது நேரம் அங்கேயே இருந்தபடி கடையை பார்ப்பதும் போனை பார்ப்பதுமாக டென்ஷனுடன் இருந்தாள்.
தற்செயலாக கீழே இறங்கி வந்த அமர்நாத் இவள் ரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்துகொண்டு இருப்பதை பார்த்ததும் நேரடியாக வந்துவிட்டான்.
“இங்க என்ன நின்னுட்டு இருக்க?…” என்றவனை எதிர்பார்க்காத குறிஞ்சி வழக்கமாக அவனை பார்த்ததும் வரும் முறைப்பை முகத்தில் கொண்டுவந்து பின் பரமேஸ்வரனின் பேச்சும் வரை முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“உன்கிட்ட தான் கேட்கறேன்…”
“கேக் ஆடர் குடுத்திருந்தேன். ரகு அண்ணாட்ட சொல்லிருந்தேன்…” அத்தனை அமைதியாக அவள் பேசக்கூடும் என்று அவனுக்கு அன்றைக்கு தான் தெரிந்தது.
“கேக் ரெடி தான். ட்ரெஸ்ஸிங் பண்ணனும். நீ வீட்டுக்கு போ. நான் குடுத்தனுப்பறேன்…” என சொல்ல,
“இல்லை, நான் வாங்கிட்டே போறேன்….”
“இப்ப எல்லாரும் பிஸி. நைட் தானே கட் பண்ணுவீங்க. அதுக்குள்ளே வந்திரும். போ…” என்றான் அவனும் அமைதியாக.
“என்னால யாருக்கும் எந்த கஷ்டமும் வேண்டாம். ப்ளீஸ். என் வேலையை நான் பார்த்துக்கறேன்…” என குறிஞ்சியும் சொல்ல,
“நீ சண்டை போட்டாலும் பிரச்சனை. இப்படி பிடிவாதமா பேசினாலும் பிரச்சனை. சுத்தி பாரு. ரோட்டுல இத்தனை கூட்டத்துக்குள்ள நிக்காதன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா நீ?…”
அமர்நாத் கடுமையாய் சொல்லிவிட அவனிடம் அதற்கு மேலும் பேச விரும்பாதவள் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டாள்.
“இந்த ரோஷத்துக்கொன்னும் குறைச்சல் இல்லை…” என்றபடி அமர்நாத்தும் கடைக்குள் சென்றவன் ரகு வந்து வீட்டிற்கு செல்லும் பொழுது கேக்கை குடுத்துவிடுவதாக சொல்ல,
“இல்லண்ணே. நானே குடுத்திடறேன். இன்னும் அரை மணி நேரத்துல கடையை அடைச்சிருவோம்ல…” என்று சொல்லிவிட ரகுவும் கிளம்பிவிட்டார்.
சொல்லியதை போல கடையை அடைத்துவிட்டு கேக்குடன் கிளம்பினான் அமர்நாத்.
வீட்டிற்குள் வந்து பைக்கை நிறுத்தியவன் குறிஞ்சி வீட்டின் பெல்லை அடித்துவிட்டு நிற்க வனஜா அதன வந்தார்.
“கேக் சொல்லிருந்தாங்க. அதான்…” என்று அமர்நாத் நீட்டவும்,
“அடடா, கேக் ரெடி ஆகலை. லேட்டா ஆடர் குடுத்தேன்னு சொல்லிட்டு குறிஞ்சி ஸ்வீட் பண்ணிட்டு இருக்கா அவினாஷ்க்கு. நீங்க கொண்டு வந்துட்டீங்களா தம்பி…” என சிரிப்புடன் வாங்கிக்கொள்ள தலையசைத்துவிட்டு கேட்டை அடைத்துவிட்டு மாடிக்கு சென்றான்.
அந்த நேரத்தில் கேசரியின் மனம் நெய்வாசத்துடன் அவ்விடத்தை நிரப்பிக்கொண்டிருந்தது.
‘அராத்துக்கு அவசரம். கொண்டுவரதுக்குள்ள’ என எரிச்சலாய் இருந்தது அவனுக்கு.
“குறிஞ்சி கேக் வந்திருச்சு. ஏன் நீ ஸ்வீட் பண்ணிட்டிருந்த?…” என வனஜா கேட்க,
“இப்ப என்னம்மா? ரெண்டும் இருக்கட்டும். அவங்க கடை கூட்டமா வேற இருந்ததா. அதான்…” என்றவள் பன்னிரெண்டு ஆகும் வரை காத்திருந்து உறங்கும் தம்பியை எழுப்பி தாயுடன் சேர்ந்து கேக் கட் செய்ய சுபாஷினியும் அழைத்துவிட்டாள் வாழ்த்து சொல்ல.
தந்தையிடம் இருந்து வாழ்த்து வராது என்று தெரிந்திருந்தாலும் மனதின் ஓரம் வருடா வருடம் தோன்றும் ஏக்கம் தோன்றாமல் இல்லை பிள்ளைகளுக்கு.
ஆனாலும் திருப்தியாகவே கொண்டாடி முடித்தனர். சுபாஷினி சொல்லியதை போல நிச்சயத்தன்று காலையே காலையே வந்திறங்கிவிட வீட்டில் ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களமாக இருந்தது.
அன்று மாலையே வீட்டினர் மண்டபத்திற்கு செல்ல வேலையில் இருந்து வர எட்டு மணி ஆகும் என்று குறிஞ்சி காரணம் சொல்லி மறுத்துவிட்டாள்.
குறிஞ்சியின் மறுப்பு சுபாஷினிக்கு வருத்தமாக இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. குறிஞ்சியை தவிர அனைவரும் கிளம்பி சென்றனர்.
தயாளன் வந்ததில் இருந்து அவர்களுக்கு அத்தனை உதவிகள் கேட்டு கேட்டே செய்தார்.
இன்னும் சில நிமிடங்களில் நிச்சயதார்த்தம் என்று இருக்க மண்டபத்தில் சொந்தங்கள், சுற்றத்தினர் என்று குழுமி இருக்க மணமகன் அறையில் இருந்து மேடைக்கு வேகமாய் வந்த அமர்நாத்,
“எல்லாரும் மன்னிக்கனும் இந்த கல்யாணம் நடக்காது. சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன். எல்லாரும் கிளம்பலாம்…” என்று நடு மேடையில் நின்று மன்னிப்பை கேட்க,
“இதென்னதிது பேசிட்டு இருக்கும் போதே கல்யாணத்தை நிப்பாட்டறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க? நாங்க கண்ணை மூடிட்டு பொண்ணை குடுக்க முடியுமா?…” என பெண் வீட்டினர் அவனின் பின்னோடு வந்து கொந்தளிக்க,
“அதான் நீங்க பேசவேண்டியதை ரூம்ல வச்சே பேசிட்டீங்க இல்ல. அப்பறம் என்ன? நீங்க பொண்ணையும் குடுக்க வேண்டாம். ஒன்னையும் குடுக்க வேண்டாம்…” என்று அவனும் உக்கிரமாக சொல்ல,
“ஏற்கனவே உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஆதாரத்தோட போட்டோக்களோட சொல்றோம். அதுக்கு தகுந்த விளக்கம் எதுவும் குடுக்காம நிறுத்தறேன்னு சொல்றீங்க?…”
“ஆமா, நிறுத்தத்தான் வேணும். எவ்வளவு சொல்லியும் நம்பாம போட்டோவும், சர்ட்டிபிகேட்டும் காமிச்சு உண்மையான்ற மாதிரியே மதிப்பில்லாம பேசறீங்க. அப்போ எனக்கு இது தேவையே இல்லை. உங்களுக்கு இதுக்கு மேல விளக்கனும்னு அவசியமும் இல்லை…” என்றான் அமர்நாத்.
மேடையின் கீழே சாரதா அழுதுகொண்டு நிற்க வனஜா அவரை தாங்கி பிடித்திருந்தார்.
“எப்போ என்னை பெத்தவங்களையும் பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசின பின்னாடியும் இந்த ஆதாரம் பொய்ன்னு நிரூபிச்சு உங்க பொண்ணை கட்ட எனக்கு எந்த அவசியமும் இல்லை. அவுட். இங்க இருந்து எல்லாரும் வெளில போங்க. கெட் லாஸ்ட்…” என்றான் ஆக்ரோஷமாக.
“கல்யாணம் ஆகிருச்சுன்னு ரெஜிஸ்டர் மேரேஜ் சர்ட்டிபிகேட் இருக்குது. இதுக்கு என்னன்னு கேட்டா வெளில போக சொல்லுவீங்களோ? இதுக்கு எங்களால என்ன செய்ய முடியுமோ நாங்க பார்த்துக்கறோம்…” என பெண் வீட்டினர் கொந்தளிக்க,
“ஆனத பார்த்துக்கய்யா. வெளில போங்க. இந்த செலவு எல்லாம் எங்களோடது தானே? இங்க யார் இருக்கனும், இருக்க கூடாதுன்னு முடிவு செய்யவேண்டியது நான். வெளில போயிடுங்க…” என்றவன்,
“ம்மா, அழாம இருங்க. முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க. நான் இங்க எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிட்டு வரேன்…” என்றான்.
கீழே வந்து ஒரு சேரை இழுத்து போட்டவன் கடை ஊழியர்களை எல்லாம் அழைத்து உணவை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பும் படி பணித்து மண்டபத்தை காலி செய்யும் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
அவனின் இந்த வேகத்தை கண்டு மிரண்டுகொண்டே வீட்டினர் கிளம்பி சென்றனர்.
மண்டபத்திற்கு வந்து ஒரு மணி நேரம் ஆவதற்குள் இத்தனை ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
அதிலும் அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதென மண்டபத்தில் பரவிய செய்தி அவர்கள் வீட்டிற்கு செல்லும் முன்பே மொத்த ஏரியாவையும் தொட்டிருந்தது.