குளிர் – 6
சொந்தங்கள் எல்லாம் வந்துவிட மணமகள் அறையில் நிரஞ்சனா தயாராகிக்கொண்டு இருக்க அவர்களை பார்க்க வனஜாவுடன் சாரதாவும், சுபாஷினியும் சென்றனர்.
அன்றுதான் வனஜா நிரஞ்சனாவை நேரில் பார்த்தார். பார்த்ததும் திருப்தியாக இருந்தது. வனஜாவுக்கு ஏக சந்தோஷம் இந்த திருமணத்தில்.
தனது மகளும், மருமகனும் ஏற்பாடு பண்ணிய சம்பந்தம் இன்று நல்லவிதமாக நடைபெற இருக்கிறது என்பதிலேயே அத்தனை மகிழ்ச்சி.
“இன்னும் கொஞ்சம் நேரத்துல மேடைக்கு கூப்பிட்டுடுவாங்க. எல்லாம் முடிஞ்சதா?…” என சுபா கேட்க,
“ஆச்சு. இது சும்மா பினிஷிங் தான்…” என்றாள் அவளும்.
“சரி வாங்க சாரதா, மேடையில எல்லாம் எடுத்து வச்சாச்சான்னு பார்ப்போம். அங்கே உங்களை தேடுவாங்க…” என சொல்லி வெளியே வனஜா சாரதாவுடன் வர சுபாஷினி அங்கேயே மணமகளுடன் இருந்துகொண்டாள்.
“உங்க சிஸ்டர் எங்க? பார்க்கலாம்ன்னு சொன்னீங்க இங்க…” என்றாள் நிரஞ்சனா.
அவளுக்கு குறிஞ்சியை தெரிந்திருந்தது முதலிலேயே. அவள் வீட்டினர் அமரை பார்த்துவிட்டு வந்து வீட்டில் வைத்து பரமேஸ்வரனை வரவழைத்து பேசியதை எல்லாமே கேட்டுக்கொண்டு தான் இருந்தாள்.
அவள் அப்படி கேட்டதும் சுபாஷினிக்கு என்னவோ போல் இருந்தது. இது வரை நான்கைந்து முறை குறிஞ்சியை பற்றி பேசிவிட்டாள் நிரஞ்சனா. அவளின் மொபைலில் இருந்த தங்கையின் போட்டோவையும் பார்த்தாள்.
“உங்களைத்தான், அவங்க வந்திருக்காங்களா?…” என சுபாவை மீண்டும் அவள் கேட்க,
“இல்லை நிரஞ்சனா. குறிஞ்சி வேலை முடிஞ்சு வர எட்டு மணி ஆகிடும். வந்து கிளம்பி வர நேரம் இருக்காது…”
“எட்டு மணி வரை எந்த இன்ஸ்ட்யூட்ல வேலை இருக்குது? டீச்சிங் ஸ்டாஃப் தானே?…” என்று ஒரு மாதிரி குரலில் சற்றே எள்ளலாக கேட்டதை போல இருந்தது சுபாஷினிக்கு. ஆனாலும் முகம் மாறாமல்,
“இல்லம்மா, அந்த இன்ஸ்ட்யூட்ல வெளில இருந்து நிறைய ப்ராஜெக்ட் வொர்க் எல்லாம் பன்றாங்க. அதையும் சேர்த்து பார்த்துப்பா என் தங்கச்சி. அதான் முடிச்சுட்டு வர டைம் ஆகும்…” என்று சொல்லிவிட்டு பேச்சை நிறுத்தினாள் சுபா.
“ஓஹ், அப்போ நாளைக்கு வருவாங்களா?…” என விடாமல் நிரஞ்சனா கேட்க,
“தெரியலை. அவளுக்கு லீவ் இருக்காதுன்னு தான் நினைக்கறேன்…” என்ற சுபாஷினி,
“இப்போ என்ன? அதான் கல்யாணம் முடிஞ்சி நீ அங்க தான இருக்க போற. அப்போ பார்த்துக்கோ…” என்றதும் யோசனையுடன் பார்த்தாள் நிரஞ்சனா.
“என்ன நிரஞ்சனா?…” என சுபாஷினி கேட்க,
“எப்போ நீங்க அதாவது உங்கப்பா எப்போ வீட்டை காலி பண்ண போறதா சொன்னீங்க?…” என்றாள் உடனே.
சுபாஷினிக்கு ஒருமாதிரி ஆகிவிட முகமே சட்டென்று மாறிவிட்டது. இதை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.
“என்ன? ஏன் கேட்கற?…” என்றாள் சுபாஷினி.
“இல்லை நீங்களும், உங்க வீட்டுக்காரரும் எங்க வீட்டுக்கு வந்தப்போ சொன்னேங்களே. நிஜமா எந்த பிரச்சனையும் இல்லை. சொந்த வீடு கட்டி முடிஞ்சதும் இந்த வீட்டை காலி பண்ணி போறதா. அதுவும் முடியுற ஸ்டேஜ்ல இருக்குன்னு. அதான்…”
“ஹ்ம்ம், போய்டுவோம். சீக்கிரம்…”
“சீக்கிரம்னா. எப்போன்னு தெரியாதா உங்களுக்கு?…” என்றாள் நிரஞ்சனா.
“ம்ஹூம், எனக்கு தெரியாது…” என்று சொல்லிய சுபாஷினி,
“நான் அம்மாவோட இருக்கேன்…” என எழுந்து வந்துவிட்டாள்.
‘இந்த பெண் என்ன இப்படி இருக்கிறது?’ என நினைக்கும் பேசியது குறிஞ்சி பேசியது ஞாபகம் வந்தது.
சாரதா குணத்திற்கு இந்த பெண் அந்த வீட்டிற்க்கு சரிவருமா என்று இப்போதே தோன்றிவிட்டது சுபாஷினிக்கு.
முதலில் இந்த திருமண பேச்சை ஆரம்பித்து அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுதே நிரஞ்சனாவும், அவளின் தாயும், சித்திகளும் சேர்ந்து மாற்றி மாற்றி கேட்டனர் அத்தனை கேள்விகளை.
தனியாக எத்தனை வீடு? எங்கே அமர் தங்கியிருப்பான் என்பதில் இருந்து யார் யார் எல்லாம் வந்து செல்வார்கள் என்பது வரை அவ்வளவு கேள்விகள்.
அதிலும் நிரஞ்சனா கேட்ட ஒவ்வொன்றும் புன்னகை முகத்துடன் ஒன்றும் அறியாததை போல, தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கப்பட்டதாகவே இருக்க இப்பொழுது அவளின் முகத்தில் தெரிந்த சூட்சமம் சுபாஷினிக்கு ஒப்பவில்லை.
ஆனால் இப்போது இதை பேசவும், யோசிக்கவும் தேவையற்றதே என்று மனதை தேற்றி வெளியே செல்ல நிரஞ்சனாவின் தாய் அழுதுகொண்டே வந்தார் எதிரே.
“என்னாச்சும்மா, ஏன் அழறீங்க?…” என சுபாஷினி கேட்க,
“நீயெல்லாம் நல்லா இருப்பியா? என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ண தான இப்படி ஒரு சம்பந்தத்தை ஏற்பாடு பண்ணிருக்க?…” என்று கேட்டு சுபாவை பிடித்து சுவற்றில் தள்ளிவிட்டார்.
தாயின் அழுகுரல் கேட்டதும் அறையில் இருந்து வெளியே எட்டிப்பார்த்த நிரஞ்சனா,
“மம்மி என்னாச்சு?…” என்றதும் அவளை கட்டிக்கொண்டு ஓவென்று ஓலமிட தள்ளிவிட்டதையும் மறந்து,
“என்னன்னு சொல்லுங்கம்மா, இப்படி அழறீங்க? யாருக்கும் ஏதாவது ஆகிடுச்சா?…” என கேட்க,
“போடி அந்த பக்கம்…” என்று மீண்டும் சுபாவை அடிக்க கை ஓங்க,
“இருங்கம்மா…” என வந்து தடுத்தார் சாரதா.
பெண்ணின் தாய் அழுதுகொண்டே வரவும் என்னவோ என்று ஓடி வந்தனர் சாரதாவும், வனஜாவும், உடன் சாரதாவின் உறவினர்கள் சிலரும்.
“என்ன இருங்கம்மா? என் பொண்ணு வாழ்க்கையையே பாழாக்கிட்டீங்களே. உங்க மகன் பண்ணின காரியத்தால இப்ப என் பொண்ணும், நாங்களும் தான அசிங்கப்பட்டு நிக்கறோம்…” என்று சத்தம் போட,
“என் மகனா?…” என்ற சாரதா உடனே அங்கிருந்து மறுபக்கம் இருந்த மணமகன் இருக்கும் அறைக்கு செல்ல அனைவருமே பின் தொடர்ந்தனர்.
அங்கே பெண் வீட்டினர் கூட்டத்தின் நடுவில் இறுகிய முகபாவனையுடன் நின்றிருந்தான் அமர்நாத்.
பரமேஸ்வரனும், தயாளனும், நாராயணனும் மாற்றி மாற்றி சொல்லியும் அத்தனை பேச்சு பேசிக்கொண்டு இருந்தனர் நிரஞ்சனாவின் குடும்பத்தினர்.
“ஏங்க உங்களுக்கு கேட்கனும்னா பொறுமையா கேட்கனும்ங்க. அதுக்குன்னு சட்டையை பிடிப்பீங்களா?…” என பரமேஸ்வரன் அமர்நாத்திற்கு ஆதரவாக பேசிக்கொண்டு இருந்தான்.
இதில் அவனின் வீட்டு பெண்ணுமல்லவா சம்பந்தப்பட்டிருக்கிறாள். இதை இன்னும் தன்மையாக பேசிக்கொண்டா இருக்க முடியும்? இருக்கவும் விடவில்லை நிரஞ்சனாவின் குடும்பத்தினர்.
“இவன் கெட்டகேட்டுக்கு கட்டிக்க ஒருத்தி, சொத்துக்கு ஒருத்தியா? நல்லா பிள்ளைய வளர்த்து விட்டுருக்கானுங்க…” என்று தகாத வார்த்தைகளை பிரயோகப்படுத்த,
“வயசாகிருச்சேன்னு பார்க்கறேன். இல்லன்னா பல்லு பேந்துரும். நானே இதுல என்ன குழப்பம்ன்னு யோசிச்சுட்டு இருக்கேன். வாயை அடக்கி பேசுங்க…” என்றான் அமர்நாத்.
“டாடி, என்ன ஆச்சுன்னு சொல்றீங்களா? எதுக்கு அவரோட சண்டை போடறீங்க?…” என நிரஞ்சனா கேட்டதும் அத்தனை பேரும் திரும்பி பார்க்க,
“நீயே பாருடா கண்ணு….” என நிரஞ்சனா தந்தை அவரின் கையில் இருந்தவற்றை அவளிடம் நீட்ட வாங்கி பார்த்தவளுக்கு அத்தனை அதிர்ச்சி.
போட்டோக்களில் ஒவ்வொரு இடத்திலும் குறிஞ்சியும், அமர்நாத்தும் சேர்ந்து இருந்தனர். போதாததிற்கு திருமண சான்றிதழ் வேறு.
“என்ன அமர் இதெல்லாம்?…” என அவள் அமர்நாத்தை பார்த்து கேட்க அவன் பதில் சொல்லும் முன்,
“வாசல்ல உன் மாமா நின்னுட்டிருந்தப்போ யாரோ ஒருத்தன் வந்து இதை குடுத்திட்டு போயிருக்கான். என்னன்னு பார்த்தா இந்த கன்றாவி. இவங்கட்ட கேட்டா இல்லைன்னு மறுக்கறாங்க…” என சொல்ல,
“அப்போ அதான் அவ இந்த பங்க்ஷனுக்கு வரலையா? என்னவோ வேலை, அது இதுன்னு அவ அக்கா சொன்னா டாடி…” என்றாள் நிரஞ்சனா ஆங்காரத்துடன்.
“நிரஞ்சனா…” என அமர்நாத் கத்த,
“எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்தறீங்க இல்லையா? உங்க மேல சந்தேகம் இருந்தாலும் எனக்கு பிடிச்சிருக்குன்றதாலையும், இவர் கெஞ்சி கேட்டு விளக்கம் சொன்னதாலயும் தான் இந்த கல்யாணத்துக்கே எங்க வீட்டுல சம்மதிச்சாங்க….” என பரமேஸ்வரனை காட்டி சொல்லியவளை வெறுப்புடன் பார்த்தான்.
“என் பொண்ணை கலங்க வச்சுட்டு நீங்க எல்லாம் நல்லாவே இருக்கமாட்டீங்கடா…” என நிரஞ்சனாவை சேர்ந்தவர்கள் இன்னு அதிகமாக பேச,
“என்னை பேச விட்டா தான் என்ன விவரம்ன்னு என்னால சொல்ல முடியும். இந்த சர்டிபிகேட் கண்டிப்பா ஃபேக் சர்ட்டிபிகேட் தான். என்னால ப்ரூவ் பண்ண முடியும்…” என அமர்நாத் சொல்ல,
“இந்த போட்டோவுல இருக்கற அன்னைக்கு நான் தான் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு போனேன். என் பொண்ணு உள்ள கூட வரலை. என்னை கூப்பிடத்தான் என் பொண்ணு வந்தா. இதெல்லாம் அபாண்டமா யாரோ செஞ்ச வேலை…” என தயாளன் அழாத குறையாக பேசினார்.
“போயா நீ. ஆஃப்ட்ரால் லாரி ட்ரைவர், உனக்கு எங்களுக்கு சமமா பேசற அளவுக்கு துணிச்சல் ஆகிடுச்சா? எல்லாம் இவங்க குடுக்கற இடம்…” என நிரஞ்சனா அப்பா சொல்ல,
“ஆமா சித்தப்பா, இந்தாளுக்கு அவ்வளவு பெரிய வீட்டையே இவன் ரொம்ப கம்மி வாடகைக்கு தான் விட்டிருக்கான். பார்த்துக்கோங்க அதுலயே…” என நிரஞ்சனாவின் அண்ணன் பேச,
“யூ ராஸ்கல்…” என்று அவனின் சட்டையை பிடித்துவிட்டான் அமர்நாத்.
“படிச்ச அறிவில்லாத முண்டங்களாடா நீங்கலாம். கண்ணுக்கு முன்னாடி ஒரு பொண்ணை வச்சுட்டு மக வயசுல பார்த்தே இராத பொண்ணை எவ்வளவு கேவலமா பேசறீங்க…” என கொதித்து போய் அமர் பேச,
“பார்த்தீங்களா குடும்பமா இவனுக்கு சப்போர்ட்டுக்கு வராங்க. அவளை சொன்னா இவனுக்கு எவ்வளவு கோவம் வருது…” என மீண்டும் நிரஞ்சனா அண்ணன் பேச,
“அப்படித்தான்டா கேட்பேன். எனக்கு கோவம் வரத்தான் செய்யும். உன்னை மாதிரி பிறவிக்கு தான் இப்படி சாக்கடை பேச்சு வரும்…” என்று பேச அவனை பரமேஸ்வரன் பிடித்து நிறுத்தும் முன் பெரும்பாடாக போயிற்று.
“அமரா இருப்பா, எதுவா இருந்தாலும் பேசி முடிவு பண்ணுவோம். அவசரப்படாம பேசு. இது நாம மட்டும் இல்லை, இன்னொரு பொண்ணும் சம்பந்தப்பட்டு இருக்குது…” என்று நாராயணன் சொல்ல,
“பார்த்தீங்களா? பெருசுக்கு மருமக மேல அக்கறையை. இதுக்குத்தான சொல்றேன் ரெண்டு குடும்பமும் சேர்ந்து சொத்துக்காக எங்க பொண்ணை கல்யாணம் பண்ண நினைக்கறீங்கன்னு…” என்ற நிரஞ்சனா அம்மா,
“இல்லன்னா நீ ஏன்ப்பா நாங்க இவனை மாப்பிள்ளை வீடு பார்த்துட்டு வந்த அன்னைக்கே விழுந்தடிச்சு வந்து இந்த சம்பந்தத்தை நல்லபடியா நடக்கனும்னு அம்புட்டு மெனெக்கெட்ட?…” என்று பரமேஸ்வரனிடம் கேட்டு இன்னும் நிறைய சேர்த்து பேச,
“என்னங்க?…” என வனஜா அழுதுகொண்டே அழைத்தார் தயாளனை.
“என்ன நடக்குதுன்னே தெரியலை வனஜா. நம்ம பொண்ணு…” என்று அவர் மனைவியை பார்த்து அழ,
“அவ்வளவும் ட்ராமா. போங்க முதல்ல இங்க இருந்து…” என்று நிரஞ்சனாவின் தந்தை அவர்களை துட்சமாக பேச,
“அப்போ நாங்க சொல்ற எதையும் நீங்க நம்பலை. அப்படித்தானே?…” என்றான் அமர்நாத்.
“ஆமா, எதுவும் நம்பற மாதிரி இல்லையே. எதை வச்சு நம்ப?…”
“இந்த சர்ட்டிபிகேட் பொய்ன்னு சொல்றேன். இந்த போட்டோஸ் எங்க எப்போ எடுத்ததுன்னும் சொல்றேன் அதையும் நம்பலை. அப்படித்தானே?…”
“அட ஆமா, நம்ப முடியாது. அவ வண்டி ரிப்பேர்ன்னா இந்த போட்டோவுல அந்த வண்டியையே காணோமே? நீயும் அவளும் மட்டும் தானே பேசிட்டு இருக்கீங்க…” என்றவர்,
“இதெல்லாம் எங்களை ஏமாத்தறதுக்கு பன்றதோன்னு தோணுது. இப்படி ஒரு பிழைப்புக்கு…” என நாராயணனை கீழாக பார்த்து சொல்லிய நிரஞ்சனாவின் தந்தையின் முன்னால் ஒற்றை நீட்டி எச்சரித்தவன்,
“வெல்…” என்றவன் அந்த போட்டோ, மற்றும் சர்ட்டிபிகேட்டை கைப்பற்றினான் முதலில்.
பின் வேகமாய் அந்த அறையை விட்டு வெளியேற அவன் எங்கே செல்கிறான் என்று பார்த்து அனைவரும் அவனுடனே செல்ல சென்றவனோ சபையில் அத்தனை பேரின் முன்னிலையிலும் திருமணத்தை நிறுத்துவதாக அறிவிக்க பெண் வீட்டினர் பதறி போயினர்.
என்னவாக இருந்தாலும் இந்த திருமணத்தை நிறுத்துவதாக தான் அவர்களுமே இருந்தனர். ஆனால் அமர்நாத் முந்திக்கொண்டதும் மட்டுமல்லாமல் அவர்களையும் வெளியேற சொல்லிவிட்டான்.
அவமானம் அவர்களுக்குமே இருக்க செல்லும் முன் அத்தனைபேரின் மத்தியிலும் குறிஞ்சியை சம்பந்தப்படுத்தி எவ்வளவு பேசமுடியுமோ அவ்வளவு பேசிவிட்டு தான் இடத்தை காலி செய்தார்கள்.
கலைந்த மொத்த கூட்டமும் உண்மையாக இருக்குமோ என்னும் விதத்தில் பேசி சென்றது தான் பெரும் வேதனையாக இருந்தது தயாளனுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும்.
தனது வீட்டினரை கிளம்ப சொல்லியவன், தயாளனையும் சேர்த்தே அனுப்பி வைத்தான். இப்போது எதையும் பேசும் நிலையில் அவனும் இல்லை. கேட்கும் நிலையில் அவர்களும் இல்லை.
அமருடன் அவனின் நண்பர்கள் சிலர் இருக்க அவர்களை வைத்துக்கொண்டு பரபரவென ஆகவேண்டியதை பார்த்தான்.
அவனுக்கு இந்த திருமணம் நின்றதில் எந்தவித வருத்தமும் இல்லை. சிறு சஞ்சலமும் இல்லை. இப்பேர்ப்பட்டவர்கள் திருமணத்தின் பின்பும் கூட என்னவேண்டுமென்றாலும் பேசலாம் என்று தான் தோன்றியது.
மண்டபத்தில் இருந்த உணவுகளும், மறுநாள் சமைக்க வாங்கியிருந்த உணவு பொருட்களும் எல்லாம் பிரித்து எங்கெங்கு சேர்ப்பிக்க வேண்டுமோ அதை செய்தான்.
“அமர், செஞ்ச சாப்பாட்டை வேணும்னா குடுக்கலாம். பலசரக்கு, மத்த பொருட்களை எல்லாம் கடைக்கே ரிட்டர்ன் பண்ணிட்டா திரும்ப பணம் குடுத்துருவாங்க. ஏன்டா?…” என்ற நண்பன் அசோக் சொல்லியதையும் மறுத்து அதையும் ஆசிரமங்களுக்கே அனுப்பினான்.