மண்டப உரிமையாளரிடம் அதற்கு இருந்த தொகையை செட்டில் செய்து முடிக்க நேரம் ஆகியது.
“அமர் நீ வீட்டுக்கு போ. பேலன்ஸை நாங்க பார்த்துக்கறோம். இப்போ நீ அம்மாகூட இருக்கனும். அதுதான் முக்கியம். அந்த பொண்ணு வீட்டுல என்ன பிரச்சனையோ? அது வேற இருக்குது…” என அசோக் சொல்ல,
“ஹ்ம்ம், சரி…” என்று கிளம்பிவிட்டான்.
“இரு நானே உன்னை ட்ராப் பண்ணிட்டு திரும்ப இங்க வரேன். மத்ததை பசங்க பார்த்துப்பாங்க…” என்றவன் தனது பைக் சாவியை எடுத்துக்கொண்டு வந்தான்.
இவன் வீட்டின் வாசலில் சென்று இறங்க அப்போதுதான் குறிஞ்சியுமே தனது ஸ்கூட்டியில் வந்து சேர்ந்தாள்.
வந்தவளுக்கு வாசலில் கேட்டிற்கு வெளியே அமர்நாத் நிற்பதை கண்டு ஆச்சர்யமானாள். அவனை அந்த நேரத்தில் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு இன்னும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
‘இந்நேரம் நிச்சயம் முடிந்திருக்குமே. அமரபுஜங்கன் ஆர்ம்ஸ் காட்டி போட்டோவுக்கு போஸ் குடுக்காம இங்க என்ன பன்றான்?’ என மனதிற்குள் நினைத்தபடி அவள் ஸ்கூட்டியை விட்டு இறங்க அமர்நாத் குறிஞ்சியை தான பார்த்தபடி நின்றான்.
“அமரா அந்த பொண்ணு தானே?…” என அசோக் கேட்க,
“ஹ்ம்ம்…” என்று தலையை அசைத்தான்.
“இன்னும் எதுவும் தெரியலை போல இருக்கே…”
“ஹ்ம்ம்…” என்றன் அமர்நாத் அதற்கும்.
“சரி நீ உள்ள போ. நான் மண்டபத்துக்கு போய்ட்டு தகவல் சொல்றேன்…” என்றவன் அந்த சர்டிபிகேட், போட்டோஸ் இருந்த கவரையும் அவனிடம் நீட்ட அதையும் வாங்கிக்கொண்டு சலிப்புடன் நிமிர்ந்தவன் பார்வை சுற்றிலும் பரவியது.
அருகில் உள்ள வீட்டினர் எல்லாம் பார்க்காததை பார்த்தபடி அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க,
“அமர் இதை எல்லாம் கண்டுக்காம போ நீ. மேலே போ…” என்று அசோக் சொல்லவும் குறிஞ்சி கேட்டை திறந்துகொண்டு உள்ளே செல்ல வீடு திறந்திருந்ததை பார்த்தாள்.
“அதுக்குள்ள வந்துட்டாங்களா?…” என்றவளின் குரலை கேட்டுக்கொண்டே அவளின் பின்னே உள்ளே நுழைந்தவன் மாடிக்கு ஏறிவிட்டான்.
வீட்டின் கதவு ஒருக்களித்து சாற்றி இருக்க வண்டியை நிப்பாட்டிவிட்டு வேகமாய் குதித்துக்கொண்டு உள்ளே சென்றாள் குறிஞ்சி.
“என்ன ஒரு ஆச்சர்யம்? எங்கம்மா அவங்க ப்ரென்ட் வீட்டு விசேஷத்தை விட்டுட்டு இன்னேரமே வந்துட்டாங்க?…” என வனஜாவை கிண்டல் செய்துகொண்டே பேக்கை சோபாவில் போட்டுவிட்டு வழக்கம் போல முகம் கழுவ உள்ளே சென்றாள்.
“அவி என்னடா மெனு அங்க? நல்லா என்னை விட்டுட்டு மொக்கிருப்பியே…” என்ற பேசிக்கொண்டே முகத்தை துடைத்துவிட்டு வர மகளின் இந்த கள்ளமற்ற பேச்சில் கதறி அழுதுவிட்டார் வனஜா.
“ம்மா…” என ஓடிவந்து தாயை பிடித்தவள்,
“ம்மா, என்ன செய்யுதும்மா? எங்கயும் வலிக்குதா?…” என பதறியவள்,
“அவி, அப்பாவை போய் கூட்டிட்டு வாடா….” என்று சொல்ல அவன் அசையவே இல்லை.
“அவி சொல்றேன்ல…” என சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே உள்ளே தந்தையின் அறையில் இருந்து சுபாஷினி வந்துவிட்டாள்.
“நீ எப்போ வந்த சுபாக்கா? உள்ள தான் இருந்தியா?…” என்ற தங்கையின் முகத்தை பார்த்து கலங்கி போனவள்,
“அப்பா உள்ள தான் இருக்கார்…” என்றவள்,
“அம்மா, அழாதீங்க. அழுது அழுது உங்க உடம்புக்கு எதாச்சும் வந்துட போகுது…” என தேற்ற உள்ளே தயாளனின் விசும்பல் குரல் கேட்க எழுந்து உள்ளே சென்றாள் குறிஞ்சி.
“அப்பா…” என அவள் அழைத்ததுமே மகளை பார்த்ததும் சிறுபிள்ளை போல முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார் தயாளன்.
அதுவரை தந்தையின் கண்கள் கூட கலங்கி பார்த்திராதவள் அவ ஓவென்று அழுதுவிட அடிவயிற்றில் பயப்பந்து சுழல அவரை சென்று கட்டிக்கொண்டாள்.
பரமேஸ்வரன் தயாளனின் அருகே அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தவன் குறிஞ்சியை கண்டதும் நகர்ந்து அமர்ந்துவிட்டான்.
“ப்பா என்னாச்சுப்பா? அம்மாவும் அழறாங்க. நீங்களும் அழறீங்க? எனக்கு பயமா இருக்குதுப்பா. என்னன்னு சொல்லுங்கப்பா…” என சொல்லி அழ,
“இல்லைடாம்மா. ஒன்னும் இல்லடா…” என மகளின் தலையை கோதிவிட,
“என்னாச்சுன்னு சொல்லுங்கப்பா….” என்றதும் அவர் பேசமுடியாமல் விசும்ப,
“அமர்நாத் கல்யாணம் நின்னுடுச்சு குறிஞ்சி…” என பரமேஸ்வரன் வெறுமையுடன் சொல்ல,
“அதுக்கு நீங்க எல்லாரும் ஏன் அழறீங்க?…” என்றாள் வேகமாய் தன் கண்ணை துடைத்து தந்தையின் கண்களையும் துடைத்துவிட்டு.
“கல்யாணம் ஏன் நின்னுச்சுன்னு உனக்கு தெரியாது இல்ல…” என்றவன்,
“உனக்கு, அமருக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சுன்னு யாரோ ஒரு ஃபேக் டாக்குமெண்ட்ஸ் க்ரியேட் பண்ணிருக்காங்க. அதனால தான் நின்னுடுச்சு பெரிய பிரச்சனையாகி…” என்றதும் குறிஞ்சியின் விழிகள் தெறித்துவிடுவதை போல விழி விரித்து பார்த்தாள்.
“மாமா…”
“ஹ்ம்ம், ஆமா…” என்றவன் அங்கே நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்ல கல்லென சமைந்துவிட்டாள் அவள்.
இப்படி ஒரு பிரச்சனை அதிலும் தன்னை கொண்டு என்றதும் முகம் வெளிறி போனது.
தந்தையும், தாயும் அழுது கண்ணீர் வடிக்க அந்த கண்ணீரும் தன்னால் எனும் போது மனதளவில் நொறுங்கி போனாள்.
“அப்பா நான் எந்த தப்பும் பண்ணலைப்பா…” என திக்கி திணறி அவள் சொல்லும் போதே தயாளன்,
“என் பொண்ணை எனக்கு தெரியாதாடா…” என அவளை தாங்கிக்கொள்ள வெடித்து அழ ஆரம்பித்தாள் குறிஞ்சி.
வெளியே இருந்த வனஜா, சுபாஷினி, அவினாஷ் என உள்ளே எழுந்து சென்றார்கள் வேகமாய்.
அதன்பின் குறிஞ்சியை தேற்றவே வெகுநேரம் பிடித்தது. அழுதுகொண்டே இருந்தாள். தயாளன் முகம் இறுகிவிட அமைதியாய் அன்றைய நாளை கடக்கவே சிரமமாக இருந்தது.
இரு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள மிகவும் தயங்கி அவரவர் இருப்பிடத்திலேயே இருந்தனர்.
அமர்நாத் பெற்றோர்களுக்கு அத்தனை பாடம் எடுத்தான். அதிலிருந்து ஓரளவு அவர்களை வெளிக்கொண்டுவந்தவன் தானும் தன்னுடைய வேலையில் திரும்பிவிட்டான்.
பெண்ணை பெற்றவர்கள் தான் வெளியே சென்று வர முடியாமல் அவதிப்பட்டனர். பரமேஸ்வரன் இரண்டு நாட்களிலேயே சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான் சுபாஷினியை மட்டும் விட்டுவிட்டு.
ஒருவாரம் கடந்த நிலையில் கடையில் பணிபுரியும் ரகு இவனிடம் வந்து மெதுவாய் எதையோ சொல்ல,
“நிஜமாவா சொல்றீங்க ரகு அண்ணே?…” என்றான் பார்வையில் சற்று கூர்மையுடன்.
“நெசந்தான் தம்பி. எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்ட்ட தான் இது விசயமா பேசிருக்காரு குறிஞ்சி பொண்ணு அப்பா. அதான் உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்…” என்றதும்,
“நான் பார்த்துக்கறேன். நீங்க போங்க…” என்றவன் அதுவரை இருந்த யோசனைகளை எல்லாம் தூரம் சென்று ஒரு ஸ்திரமான முடிவுக்கு வந்தான்.
அந்த ஒரு வாரமும் குறிஞ்சி வேலைக்கும் செல்லவில்லை. வீட்டிலேயே முடங்கிவிட்டாள்.
தயாளனும் வனஜாவும் கடிந்து ஏதாவது பேசியிருந்தால் கூட தானும் பதிலுக்கு பேசியிருக்கலாம்.
ஆனால் அவர்களே உடைந்து போய் இருக்க குறிஞ்சிக்கு குற்றவுணர்வு அதிகமானது தன்னால் தானே என்று.
இத்தனையிலும் சாரதாவோ, நாராயணனோ எந்த பேச்சும் வைத்துக்கொள்ளவில்லை இவர்களிடம்.
வனஜாவும் மேலே செல்லவும் இல்லை. வீட்டை விட்டும் வெளியேறவில்லை. சுற்றத்தார் பார்க்கும் பார்வை அப்படி இருக்க வீட்டிற்குள்ளேயே சுருண்டுகொண்டனர்.
அமர்நாத் வருவதும் போவதும் தெரிந்தாலும் எந்த பிரதிபலிப்பும் இல்லை. இப்போது அவர்களிடத்தில் இருந்த ஒரே எண்ணம் அவ்விருப்பிடத்தை விட்டு கிளம்புவது ஒன்றே.
தயாளன் மட்டும் வெளியே சென்று வந்துகொண்டிருக்க அப்படி செல்லும் பொழுது தான் கட்டிக்கொண்டிருக்கும் தங்கள் வீட்டருகே ஏதேனும் சிறிய வீடு இருந்தாலும் பரவாயில்லை என்று தெரிந்தவர்கள் இரண்டு, மூன்றுபேரிடம் விசாரிக்க சொல்லியிருந்தார்.
கடைசியாக அது அமர்நாத்தின் காதில் விழ ஏற்கனவே தான் எடுத்திருந்த முடிவு சரியா இல்லையா என்னும் ஊசலாட்டத்தில் இருந்தவன் இப்போது தன் முடிவில் ஸ்திரமானான்.
அன்று மாலை நேரம் இதை பற்றி பேசலாம் என வீட்டிற்கு வந்தவன் யோசித்துக்கொண்டே நடந்தே வர, வீட்டின் கேட்டும் ஒருக்களித்து திறந்திருந்தது.
அதன் வழியே நுழைந்தவன் பார்வையில் வீட்டு நிலைப்படியினருகே மாடத்தில் இருந்த பிள்ளையாருக்கு விளக்கேற்றிக்கொண்டிருந்த குறிஞ்சி விழுந்தாள்.
இவன் வந்த அரவத்தில் அவளுமே திரும்பி பார்க்க பார்த்ததும் நொடிப்பொழுதில் கவனம் சிதறி ஏற்றிய விளக்கருகே அவளின் விரல்கள் பட்டு சுட்டுவிட,
“ஸ்ஸ்ஸ் ம்மா..” என்று அலறிவிட்டாள் அதன் காயத்தில்.
“ஹேய் பார்த்து…” என அமர்நாத்தும் சொல்லிவிட சற்றும் தாமதிக்காமல் வீட்டினுள் கையை உதறியபடியே சென்றவளை கண்டவன் அங்கே நின்றது சில நொடிகள் தான்.
உள்ளே அவளின் குடும்பத்தினர் என்ன ஏதென்று விசாரிக்கும் குரல்கள் கேட்க மாடிக்கு ஏறிவிட்டான்.
“என்ன அமர் இத நேரம் கடையில தானே இருப்ப?…” என மகன் வந்ததை கண்டு சாரதா கேட்க,
“உட்காருங்கம்மா, உங்ககிட்ட பேசலாம்ன்னு தான் வந்தேன்…” என்றதும்,
“அப்பா எங்க? அவர் வரலையா?…”
“அவர் கீழே கடையை பார்த்துட்டு இருக்கார். எனக்கு முதல்ல உங்ககிட்ட தான் பேசனும்…” என்றவன் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.
“எனக்கு குறிஞ்சியை கேளுங்கம்மா….” என்றதும் சாரதா மிரட்சியுடன் மகனை பார்த்தவர்,
“அமரா நீ என்ன சொல்ற? கேளுங்கன்னா?…” என,
“கல்யாணம் செஞ்சுக்க தான்…” என்றான் அவன்.
“அமர் இந்த போட்டோஸ், இந்த மேரெஜ் சர்ட்டிபிக்கட்…”
“ம்மா, இது எல்லாமே எனக்கும் ஷாக் தான். ஆனா நான் பண்ணலை. எனக்கு குறிஞ்சி வேணும்னா நேரடியாவே சொல்ல போறேன். இப்போ சொன்ன மாதிரி. இப்படி சுத்தி வளைச்சு தான் சொல்லனும்னு இல்லை…” என்று சொல்ல,
“உனக்கு குறிஞ்சி, இது எப்படிப்பா ஒத்துவரும்? அதுவும் இப்ப இருக்கற சூழ்நிலையில…”
“எனக்குத்தான் குறிஞ்சின்னு சொல்றேன். எப்படி ஒத்துவரும்னு கேட்கறீங்க? ஏன் உங்களுக்கு எடுக்கறதுல இஷ்டம் இல்லையா?…” என்றான் தாயிடம்.
“ச்சே, ச்சே. அப்படின்னு இல்லை. ஆனா இந்த மாதிரி யோசிச்சதே இல்லை…” என்றார் இன்னும் தயக்கத்துடன்.
“குறிஞ்சியோட அப்பா இங்க வீடு பார்க்க வந்தது நம்ம சொந்தக்காரர் மூலமா அதானே?…”
“ஹ்ம்ம், ஆமா…”
“அவர் குறிஞ்சிக்கு சித்தப்பா வேணும். எனக்கு மாமா முறை. ரைட்…”
“ஆமாப்பா…”
மகன் இத்தனை தெளிவாய் கேட்பதில் சாரதாவிற்கு தான் கலங்கி போனது. எதை நினைத்து இப்படி முடிவுக்கு வந்தானோ என பயத்துடன் இருந்தார்.
“அப்போ முறையும் கரெக்ட் தானே? பேசுங்க. அப்பாட்ட இதை நீங்களே சொல்லுங்க. இல்லை நான் தான் சொல்லனும்னா நானே சொல்றேன்…”
“அமர் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தியா?…” என்றார் மீண்டும் அவர்.
“இத்தனை நாளா ஏன் யோசிக்கலைன்னு இப்போ பீல் பன்றேன். நான் சும்மா அவசரத்துக்கு எடுத்தோம்னு எந்த முடிவும் எடுக்கமாட்டேன்னு உங்களுக்கே தெரியும். மத்த விஷயங்களுக்கே அப்படி இருக்கறப்போ இது என் வாழ்க்கை. ப்ச், எங்க வாழ்க்கை….”
“இல்லை அமர் குறிஞ்சி…”
“ம்மா, சும்மா சும்மா என்னை இன்னும் பேச வைக்காதீங்க. முடிச்சு வைங்க. அவளை நான் பார்த்துக்கறேன்…” என்றவன் தாயிடம் அந்த பொது மனிதரின் எண்ணை வாங்கி கொண்டான்.
இரவு நாராயணன் வரவும் சாரதா விஷயத்தை பற்றி பேச அவருக்கு இதில் எந்த வருத்தமும், கலக்கமும் இல்லை. மகன் முடிவு செய்தால் சரியாக தான் இருக்கும் என்று உடனே சம்மதித்தார்.
அவருக்கு இப்படி ஒரு பேச்சு சொந்தபந்தங்களுக்கு மத்தியிலும், ஊருக்குள்ளும் அக்கம்பக்கத்தியும் பரவிய பின்பு வேறு விதமாய் யோசிக்க தோன்றவில்லை.
சில நாட்கள் செல்லவும் தானே இந்த முடிவைத்தான் எடுத்திருப்பேன் என்று சாரதாவிடம் சொல்லி அவரையும் சம்மதிக்கவைத்தார்.
அன்று இரவே இரு குடும்பத்திற்கும் பாலமாக இருந்த அந்த பொது மனிதருக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, பரமேஸ்வரனிடம் அமர்நாத்தே போனில் பேசிவிட்டான்.
“நீங்க கிளம்பி வாங்க. இப்ப நான் பேசின எதுவும் உங்க வீட்டுக்கு தெரியவேண்டாம். என்னோட அம்மாவும் அப்பாவும் வந்து பேசறப்போ நீங்க இருந்தா நல்லா இருக்கும்னு எனக்கு படுது. ஒரு சப்போர்ட்டிவா இருப்பீங்க தானே?…”
அமர்நாத் சிறிது நேர பேச்சிலேயே பரமேஸ்வரனை அவனின் வழிக்கு கொண்டு வந்திருந்தான். பரமேஸ்வரனும் இது தான் இரு குடும்பங்களுக்கும் நல்லது, மரியாதையும் கூட என்ற முடிவுக்கு வந்தவன் உடனே கிளம்பிவிட்டன.
சொல்லியதை போல பரமேஸ்வரன் திடீரென வந்து நிற்க தயாளன் குடும்பத்தினருக்கு ஆச்சர்யம். ஒருவேளை சுபாஷினியை அழைத்து செல்லத்தான் வந்திருக்கிறானோ என்று நினைத்தனர்.
“என்னங்க திடீர்ன்னு. வர்றதா போன் கூட செய்யலை….” என கேட்க,
“ஏன் சொல்லிட்டுதான் வரனுமா என்ன? பார்க்கனும்னு தோணுச்சு. அன்னைக்கு உடனே கிளம்பிட்டேன் இருக்கமுடியாம. இப்போ லீவ் கிடைச்சது வந்தேன்…” என நீளமாக சொல்லிமுடித்து குளிக்க சென்றுவிட ஒன்றும் புரியவில்லை சுபாஷினிக்கு.
காலை உணவு முடிந்த வேலை சாரதாவும், நாராயணனும் அந்த உறவினருடன் சேர்ந்து வர அவர்களை வரவேற்கவே அத்தனை தயக்கத்துடன் இருந்தனர் குறிஞ்சி குடும்பத்தினர்.
“உள்ள வாங்க. உட்காருங்க…” என பரமேஸ்வரன் தான் அவர்களை அழைத்தான்.
“அத்தை, என்ன பார்த்துட்டே இருக்கீங்க?…” என்று வனஜாவை சொல்லவும்,
“இல்ல ஏதோ ஞாபகத்துல…” என்றார் வனஜா சங்கடமாக.
“புரியுது வனஜா. நான் எதுவும் நினைக்கலை. நாம நினைக்காதது எல்லாம் என்னவோ நடந்து போச்சு. என்ன செய்ய?…” என சாரதா பெருமூச்சு விட,
“அமர் கல்யாணத்துல குறிஞ்சியையும் சேர்த்து பேசினது நாங்களே எதிர்பார்க்கலை. ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அதான் நாங்களும் உங்ககிட்ட பேச வர யோசிச்சு ரொம்பவே சங்கட்டத்தோட தான் இருந்தோம்…” என்றார் நாராயணன் தயாளனின் கையை பிடித்தபடி.
இதை எல்லாம் கேட்டுக்கொண்டே குறிஞ்சியும், அவினாஷும் சுபாஷினி அருகே நிற்க,
“சுபா எல்லாருக்கும் ஏதாவது குடிக்க எடுத்துட்டு வா…” என்று அனுப்பினான் பரமேஸ்வர்.
பின் மெல்ல அன்றைய சம்பவத்தை பேசி கடந்து வந்தவர்கள் சில நிமிடம் கழித்து,
“நாங்க ஒரு நல்ல விஷயமா தான் வந்திருக்கோம் இப்போ…” என சொல்ல,
“என்னது? புரியலையே?…” என்றார் தயாளன்.
“நடந்தது நல்லதுக்குன்னே எடுத்துக்குவோம். இப்போ அமருக்கு குறிஞ்சியை கேட்டு வந்திருக்கோம். நீங்க என்ன சொல்றீங்க?…” என கேட்டதும் பரமேஸ்வரன் தவிர அத்தனை பேரும் உறைந்துவிட்டனர்.
“நாங்க முதல்லையே கேட்டிருந்திருக்கனும். இப்பவுமே இந்த மாதிரி பேச்சு வந்திருச்சேன்னு மட்டும் கேட்கலை. எங்களுக்கு குறிஞ்சியை ரொம்ப பிடிக்கும். அதான்…” என சாரதா சொல்ல,
“இல்லைங்கம்மா, இது சரிவராது. நாங்க இந்த வீட்டை காலி பன்றதா முடிவு பண்ணிருக்கோம்…” என்று தயாளன் பட்டென்று சொல்லிவிட நாராயணனுக்கு என்னவோ போல் ஆனது.
மத்தியஸ்தம் பண்ண வந்தவர் மற்றவர்களை அமைதியாய் இருக்க சொல்லிவிட்டு தயாளனிடம் தன்மையாய் பேசிக்கொண்டிருக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் வேகமாய் உள்ளே வந்தான் அமர்நாத்.
வீட்டை வாடகைக்கு விட்ட பின்னர் அதிகமாய் அந்த வீட்டின் வாசலில் கூட நின்றிராதவன் வீட்டிற்குள் வந்து பரமேஸ்வரன் அருகில் அமர்ந்ததும் திடுக்கிட்டு பார்த்தனர் எல்லோரும்.
“தேங்க்ஸ் பரமேஸ்…” என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லியவன்,
“ஹ்ம்ம், சொல்லுங்க மாமா, அம்மாக்கிட்ட வீட்டை காலி பன்றதை பத்தி சொல்லிட்டு இருந்தீங்க போல?…” என அமர்நாத் தயாளனிடம் நேரடியாய் பேச அவனுக்கு எப்படி தெரியும் என்பதை போல அனைவரும் பார்த்தனர் பரமேஸ்வரனை தவிர்த்து.
“இல்லை, இது, இந்த விஷயம். இல்லைங்க தம்பி. அதை பேச வேண்டாம். நாங்க வீடு காலி பன்றதா முடிவு பண்ணிட்டோம். வீடு பார்த்துட்டே இருக்கோம். இந்த மாசம் அமைஞ்சிரும்…”
“எதுக்கு யார்க்கிட்டையோ சொல்லிட்டு மாமா? அதான் நான் இருக்கேனே? பார்த்து தர மாட்டேனா?…” என்றான் அழுத்தமான குரலில் தலையசைத்து கேட்டு.
அப்போது தான் அவனின் ‘மாமா’ என்னும் உரிமையான விளிப்பே அவர்களின் கவனத்தில் பதிந்தது.
“மாமாவா?…” என்று குறிஞ்சியை திரும்பி பார்த்தான் அவினாஷ்.
அவள் நடப்பதை எல்லாம் நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நடுக்கத்துடன் நின்றிருக்க சட்டென அவளை தீண்டி சென்றது அமர்நாத்தின் விழிகள்.
“இல்ல தம்பி…” என தயாளன் திணற,
“ஓகே, இங்க இருந்து போகனும் அவ்வளோ தானே?…” என கேட்க தயாளனும் ‘ஆமாம்’ என்று தலையசைக்க,
“காலி பண்ணிக்கோங்க. ஆனா உங்க பொண்ணை எனக்கு கட்டி வச்சுட்டு வீட்டை காலி பண்ணிக்கோங்க…” என்று நிதானமாக சொல்லியவன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிகொண்டு பின்னால் சாய்ந்து அமர்ந்தான்.