குளிர் – 7
அமர்நாத் இப்படி சொல்லவும் அவ்விடத்தில் இருந்த அனைவரும் மூச்சுவிட்ட சத்தம் கூட கேட்காத அளவுக்கு நிசப்தமாக போக, குறிஞ்சி அப்படி நின்றது சில நொடிகளே.
“இல்லை இது நடக்காது. அப்பா வேண்டாம் சொல்லுங்க. இதுக்கு நான் ஒத்துக்க முடியாது. முடியாது…” என இரு கைகளையும் வேண்டாம் என்பதை போல மறுப்பாய் ஆட்டிக்கொண்டு வேகமாய் முன்னே ஓடி வர அவளை நிமிர்ந்து பார்த்தவன் பார்வை கூட அவள் மீது வன்மையாய் படிந்தது.
“குறிஞ்சி, நீ உள்ள போ…” என பரமேஸ்வரன் அதட்ட,
“இல்லை மாமா, அப்பாட்ட. மாமா நீங்க சொல்லுங்க…” என்றாள் லேசாய் கலங்கிய விழிகளுடன்.
மகளை பார்த்த தயாளனுக்கு இன்னும் கஷ்டமாய் இருந்தது. இப்போது என்ன முடிவு செய்வது என்ற யோசனையுடன் இருந்தவரின் மூளைக்கு எட்டியது என்னவோ மூத்த மருமகன் இதற்கு கூட வந்திருக்கலாமோ என்று.
அமர்நாத், பரமேஸ்வரன் இருவரின் பார்வை பரிமாற்றத்தை ஒருகணமேனும் கவனித்து பார்த்துவிட்டார்.
‘பார்க்கலாம், என்னதான் சொல்கிறார்கள்’ என்று என்று அமைதியாய் இருந்தவருக்கு அமர்நாத் பேசியது தான் லேசாய் நடுக்கத்தை தந்தது.
“சுபா அவளை உள்ள கூட்டிட்டு போ. பேசி முடிக்கிற வரை வெளில வர கூடாது…” என பரமேஸ்வரன் சொல்ல அவனை மீறி அங்கே பேசமுடியவில்லை குறிஞ்சியால்.
“வா குறிஞ்சி, பெரியவங்க பேசட்டும்…” என சுபாவும் உள்ளே அழைத்து செல்ல திரும்பி திரும்பி பார்த்தபடி செல்பவளை அமர்நாத்தும் பார்த்துக்கொண்டே இருந்தான் கொஞ்சமும் மற்றவர்கள் தன்னை கவனிக்கிறார்கள் என்ற கவலை இன்றி.
“ஹ்ம்ம், இப்போ சொல்லுங்க மாமா…” என அவனே மீண்டும் தயாளனை பார்க்க அவருக்கோ இந்த திடீர் அழைப்பு தர்மசங்கடத்தை அளித்தது.
“தம்பி, நான் சொல்றது என்னன்னா…”
“நான் நல்ல மாப்பிள்ளை இல்லைன்னு நினைக்கறீங்களா? இல்லை உங்க பொண்ணுக்கு நான் பொருத்தமில்லைன்னு நினைக்கறீங்களா?…” என கேட்க,
“இல்லை அதுக்கில்லை. இந்த கல்யாணம் நடந்தா சும்மாவே பேசறவங்களுக்கு அந்த விஷயம் உண்மைன்னு ஆகிடாதா?…” என்று தயாளன் பேசினார்.
“அந்த விஷயம் அபாண்டம்ன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். இப்ப நாமலே அதை உண்மை ஆக்கனுமா? இதனால…” எனவும் பேசினார்.
“தயா…” என நாராயணன் இடையில் பேச வர,
“அப்பா நான் பேசறேன். நான் புரிய வைக்கறேன்…” என்று யாரையும் பேசவிடவில்லை அவன்.
“சரி, இப்போ இங்க இருந்து வேற இடம் போயிடறீங்க, அப்போ இந்த பேச்சு அங்கயும் வராதுன்னு நினைக்கறீங்களா?…” என கேட்க தயாளனுக்கு வார்த்தை வரவில்லை.
“அப்பா இதுக்காகவெல்லாம் கல்யாணம் பண்ண முடியாது. ஊர்ல ஆயிரம் பேர் என்னவெல்லாமோ பேசுவான். அதுக்கெல்லாம் நாம ரியாக்ட் பண்ண முடியுமா?…” என உள்ளிருந்து வேகமாய் மீண்டும் வெளியே சீறிக்கொண்டு வந்தாள் குறிஞ்சி.
“ப்ச்…” என்ற சத்தத்துடன் அதிருப்தியை அமர்நாத் காண்பிக்க,
“சுபா, நீ கிளம்பு. இவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்….” என எழுந்துவிட்டான் பரமேஸ்வர்.
குறிஞ்சிக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. இதென்ன இப்படி செய்கிறார் என்று பரமேஸ்வரனை பரிதாபமாக பார்த்தவள் அமர்நாத்தை தீயாய் முறைத்துவிட்டு சென்றாள்.
இப்போது அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மனநிலை அவனுக்கு சுத்தமாக இல்லை.
“சொல்லுங்க மாமா, நீங்க என்ன நினைக்கறீங்கன்னு வெளிப்படையா பேசுங்க…” என சொல்ல ஏற்கனவே மூத்த மருமகன் குறிஞ்சியின் மறுப்பிற்கு எழுந்து கிளம்பியதில் ஆடிபோயிருந்தார்.
“இல்ல அது…” என தயங்க,
“என் மேல உங்களுக்கு ஏதாவது அதிருப்தி இருக்கா?…” என்றான் அமர்நாத்.
“இல்லை அப்படி இல்லவே இல்லை. நீங்க தங்கமாச்சே…”
“அப்போ ஏன் உங்களுக்கு இந்த தயக்கம்? சொல்லுங்க. இந்த பேச்சை பார்த்து பயப்படறீங்களா?…”
“ஹ்ம்ம்…” என்றார் ஆமோதிப்பாய்.
“சரி நீங்க சொல்ற மாதிரியே இப்போ இங்க இருந்து போய் அங்க குறிஞ்சிக்கு வேற இடம் பார்த்து அப்போ இந்த பிரச்சனை வந்தா என்ன செய்வீங்க?…” என்று அவன் கேட்க பயந்து போனார்.
“என்ன தம்பி இப்படி சொல்றீங்க?…” என தயாளன் பதற உள்ளே குறிஞ்சி கொந்தளித்தாள்.
“சுபாக்கா அவன் பயம் காட்டி பேசறான். எல்லாரும் சும்மா இருக்காங்க…” என பொறும,
“பேசாம இருடி. மாமா வேற கோவமா இருக்கார்…” என சுபாஷினி அடக்கினாள்.
“நான் நடக்காததை சொல்லலை மாமா. இதை செஞ்சது யார் என்னன்னு இப்ப வரைக்கும் தெரியலை. இதுமாதிரி ஏன் பண்ணினாங்கன்னும் தெரியலை. அப்படி இருக்கும் போது எல்லாம் யோசிக்கனும் தானே?…” என்றவன்,
“எனக்கு இன்னொரு இடத்துல பேசி அந்த பொண்ணு வீட்டுல விளக்கம் சொல்லி அவங்க திரும்ப நம்பாம அந்நேரம் உங்களை தேடிவந்து கூட்டிட்டு போய் நிரூபிச்சுட்டு இருக்க முடியாது…” என்றதும் அவனின் பேச்சின் அர்த்தம் புரிந்தது.
“இது மத்தவங்களுக்காக கூட இல்லை. நமக்காக. இவ்வளவு பேசறது எனக்காக மட்டும் இல்லை. குறிஞ்சிக்காகவும் தான். அவ எனக்கு கட்டிக்கிற முறை தானே?…” என்றான்.
தயாளனை பேசி பேசி கரைத்தான். அமர்நாத் சொல்வதை கேட்டு அவன் சொல்வது தான் சரி என்னும் நிலைமைக்கு வந்துவிட்டார் தயாளனும். அவரின் முக மாற்றத்திலேயே இளக்கம் குடுத்தவன்,
“இந்த பிரச்சனை இல்லாம நாங்க முதல்லையே குறிஞ்சியை கேட்டிருந்தா குடுத்திருந்திருப்பீங்க தானே?…”
“கண்டிப்பா தம்பி. சந்தோஷமா…” என்றார் முழுமனதுடன்.
“அப்போ அந்த சந்தோஷத்தோட இப்பவும் குடுங்க…”
அமர் அவருக்கு எந்த ஆப்ஷனும் குடுக்கவில்லை. கண்டிப்பாக பெண்ணை குடுத்துவிடவேண்டும் என்று நெருக்காமல் நெருக்கினான்.
ஒருவழியாய் அவன் பேசியதை கேட்டுவிட்டு வனஜாவை பார்க்க அவருக்கும் சரி என்றுதான் பட்டது.
“நீங்க என்ன சொல்றீங்க மாப்பிள்ளை?…” என பரமேஸ்வரன் பதில் என்னவாக இருக்கும் என தெரிந்திருந்தாலும் கேட்க வேண்டிய கடமைக்கு கேட்டார்.
“எனக்கு இதுல முழு சம்மதம் மாமா. நானே இதை பேசலாம்ன்னு தான் இருந்தேன். இப்படி ஒரு பேச்சு வந்த பின்னால எப்பவும் அது காலத்துக்கும் தொடர்ந்துட்டு தான் இருக்கும்…”
“ஹ்ம்ம், சரிதான்…” என தயாளன் ஆமோதிக்க,
“இங்க நமக்குள்ள மனசு ஒத்து போகும் போது எதுக்கு தயங்கனும்? மனசுக்கு பிடிக்கிற மாதிரி மாப்பிள்ளை. இங்க இருந்தவரைக்கும் கூடவே இருந்து பழகின குடும்பம். எந்த சங்கடமும் இல்லை. அப்பறம் என்ன மாமா?…”
“எல்லாம் சரிங்க மாப்பிள்ளை. ஆனா குறிஞ்சி…” என தயாளன் பார்க்க,
“அவ சின்ன பொண்ணு மாமா. நாம நல்லது தான செய்வோம்னு தெரியாதா? எப்படியும் நாம பார்க்கிற மாப்பிள்ளை தான் கல்யாணம் பண்ணிக்க போறா. அது அமரா இருக்கும் போது மாட்டேன்னு சொல்ல என்ன இருக்கு?…”
கொஞ்சம் நஞ்சம் இருந்த தயாளனின் தயக்கத்தையும் பரமேஸ்வரன் துடைத்தெறிய இப்போது முழுமனதாக சம்மதித்துவிட்டார்.
“குறிஞ்சிட்ட நான் பேசறேன்…” என்றான் அமர்நாத்.
“இல்ல, அவ எதாச்சும்…”
“ம்ஹூம், நான் பேசனும். பேசிட்டு வரேன்…” என்றவன் எழுந்து குறிஞ்சி இருந்த அறைப்பக்கம் சென்றவன் மீண்டும் அனைவரையும் திரும்பி பார்த்து,
“பேசலாம் தானே?…” என கேட்டான்.
“அதான் போயாச்சே…” என அந்த சூழ்நிலையை இலகுவாக்க சிரிப்புடன் பரமேஸ்வரன் சொல்ல அனைவருக்குமே கொஞ்சம் நிம்மதி.
“சுபா நீ இங்க வா….” என மனைவியை அழைத்துக்கொண்டான் பரமேஸ்வரன்.
சுபா அங்கிருந்து செல்ல போக குறிஞ்சி அவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டு,
“சுபாக்கா நீ போன பார்த்துக்கோ. எல்லாரும் சேர்ந்து என்னை அந்த அமரபுஜங்கனுக்கு கட்டி வைக்க பார்க்கறீங்க. நான் மாட்டேன்னு சொல்றேன்ல…” என அவளை விடாமல் நிற்க அறையின் வாயிலில் அவள் பேசியதை கேட்டபடி நின்றான் அவன்.
“ப்ச், குறிஞ்சி விடு. அமர் பார்க்கறார். என்ன இது? இல்லைன்னா இதுக்கும் மாமா கோச்சுப்பார்…” என்றதும் தான் கைகள் தளர்ந்தது.
சுபாஷினி அங்கிருந்து வெளியேற அமர்நாத் குறிஞ்சியை நோக்கி மெதுவாய் வந்தான். அவன் பேசும் முன்னே,
“என்னால கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது. என்னோட சம்மதம் இல்லாம…”
“இல்லாம?…” என்றவனின் குரல் அவளை அச்சுறுத்த,
“எனக்கு பிடிக்கலை…” என்றாள் பட்டென்று.
“ஓஹ்…”
“என்ன ஓஹ்? யாரோ ரோட்ல போறவங்க பேச்சுக்கு எல்லாம் என்னால மதிப்பு குடுக்க முடியாது. அப்படி நடந்திருமோன்னு நினைச்சு இந்த கல்யாணம் பன்றது எல்லாம் சத்தியமா ஒத்து வராது…” என்றவள்,
“அதுவும் உங்களுக்கும் எனக்கும் சுத்தமா ஆகாது. உங்களுக்கும் என்னை புடிக்காது தானே?…” என பேச,
“நான் உன்கிட்ட எப்பாவாச்சும் அப்படி சொல்லிருக்கேனா?…” என்றான் அவளிடத்தில்.
“என்ன? அதான் பார்க்கும் போதெல்லாம் முறைப்பீங்களே…”
“நான் உன்னை அவ்வளவா பார்த்ததில்லை. நீயா நினைச்சா நான் பொறுப்பில்லை…”
“ப்ச், அதான் என்னை சரியா கூட பார்க்காதவருக்கு இந்த கல்யாணம் அவசியமா?…” என்றாள் என்னவோ அவனை லாக் செய்துவிட்டதை போல.
“ஹ்ம்ம் சரிதான். எனக்கு அந்த கல்யாணத்தை நிறுத்தற வரைக்கும் உன்னை கவனிக்கனும்னு நினைக்கனும்னு தோணவே இல்லை. ஆனா அதை நிறுத்தினதுல இருந்து உன்னை தான் நினைச்சுட்டே, கவனிச்சுட்டே இருக்கேன்…” என சொல்ல,
“அது வந்து அந்த போட்டோஸ் வந்ததால தான? அதை மறந்திருங்க…” என சொல்ல,
“நான் இதுவரைக்கும் இவ்வளவு பேசினதில்லை. இத்தனை நேரமா, இத்தனை நீளமா. என்னை ரொம்ப பேச வைக்காத குறிஞ்சி…” என்றான் பொறுமையாக.
“என்னோட நம்பர்ல இருந்து உனக்கு மெசேஜ் பண்ணிருக்கேன். சேவ் பண்ணிக்கோ. இல்லைன்னாலும் ஒன்னும் இல்லை…” என்றான் அவள் அமைதியாக இருப்பதாய் கண்டு.
அமர்நாத் முகத்தில் சிறிதும் சிரிப்பின்றி ஒரு அமைதியான அழுத்தமான பாவம் மட்டுமே இருக்க எப்படி பார்த்தாலும் அவளால் அவனை ஏற்க முடியவில்லை.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவோம் என்று முடிவெடுத்தவள்,
“இல்லை, என்னால முடியலை. இங்க பாருங்க நான் உங்களோட நிறைய பிரச்சனை பண்ணிருக்கேன். வெறுப்பேத்திருக்கேன். எல்லாம் ஒத்துக்கறேன். ஸாரி கேட்கட்டுமா? கேட்கறேன். ஆனா இந்த கல்யாணம் வேண்டாம்…” என முழுதாய் மண்டியிட,
“சரி அப்பறம்?…” என்றான் கைகள் இரண்டையும் பென்ட் பக்கெட்டில் நுழைத்தபடி கால்களை அகற்றி நின்று.
“நீங்க வேற லைப் பாருங்க. இந்த போட்டோஸ், சர்ட்டிபிகேட்ஸ், இதை எல்லாம் நினைக்காதீங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை. இது உங்க மேல உள்ள காண்டுல கூட யாராச்சும் பண்ணிருந்திருக்கலாம்…”
“ஓஹ், அப்படியா?…” என அவன் யோசனையுடன் சொல்லவும் குறிஞ்சிக்கு குஷியானது.
‘ஆடு சிக்கிருச்சு. அப்படியே ஒரே அமுக்கா அமுக்கி அமரபுஜங்கனை என்னை விட்டு நாடு கடத்தறேன்’ என நினைத்துக்கொண்டவள்,
“நீங்க என்னை பத்தி கவலைப்பட வேண்டாம். உங்க கவலை எல்லாம் இதனால எனக்கு என் கல்யாணத்தப்போ எதாச்சும் பிரச்சனை வரும்ன்னு தானே? அதெல்லாம் வராது. வராது…” என அவள் புன்னகையுடன் சொல்ல அவளின் முகத்தையே அளவெடுத்துக்கொண்டு நின்றவன்,
“வரும்ன்னு சொல்றேன். நீ நம்ப மாட்டேன்னு சொல்றியே?…” என கேட்க,
“அதெப்படி வரும்?…”
“கண்டிப்பா வரும்…”
“அதான் வராதுன்னு சொல்றேன்ல. கொஞ்சம் நாள்ல இதை எல்லாம் மறந்திருவாங்க. அப்பறம் எப்படி பிரச்சனை வரும்?…”
“அப்போ நான் சொன்னா நம்ப மாட்டியா?…” என்றான் அவளை ஆழந்து பார்த்து. எங்கே நம்பமாட்டேன் என்று சொன்னால் கோவித்து மீண்டும் திருமணம் செய்ய சொல்வானோ என்று நினைத்தவள் பல்ட்டி அடித்தாள்.
“ச்சே, ச்சே. உங்களை நம்பாமலா? அதுக்கில்லை. ஆனா எப்படி வரும்ன்னு சொல்றீங்க? அதான்…” என்று சொல்லி ஐஸ் வைக்க அவளின் போக்கு புரிந்தவன்,
“வரும், ஏன் நான் இல்லையா? நானே அந்த போட்டோஸ், சர்ட்டிபிகேட் எல்லாம் கொண்டு வந்து காண்பிப்பேன். என் பொண்டாட்டி இவ தான்னு சொல்லுவேன். அப்போ பிரச்சனை ஆகும் தானே?…” என அமர்நாத் அமர்த்தலாய் சொல்லி அவளை பார்க்க குறிஞ்சி வாயடைத்து போனாள்.
“அந்த போட்டோஸ், மேரேஜ் சர்ட்டிபிகேட் எல்லாம் என்கிட்டே தான் இருக்குது…” என்று சொல்ல,
“என்ன? அதை வச்சு என்ன பன்றீங்க நீங்க?…” என்றாள் கோபமாய்.
“இதோ நீ இப்படி பேசறியே. அதுக்குத்தான் வச்சிருக்கேன். தருவேன் உன்கிட்ட. கல்யாணம் முடியவும். இப்போ இதை பேச தான் வந்தேன். கல்யாணத்துக்கு ரெடி ஆகிரு…” என சொல்ல மீண்டும் அவளின் கண்ணில் நீர் நிறைய அதை துடைக்க எழுந்த கையை அழுத்தமாய் மூடிக்கொண்டான்.
“வரேன்…” என்றவன் வெளியேறிவிட தொப்பென்று கட்டிலில் அமர்ந்தவள் முகம் வெளுத்து போனது.
‘இப்படி மிரட்டுகிறான் என்று கூட சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்களே’ என அழுகையுடன் கோபமாய் நினைத்தவளுக்கு எல்லாம் கைமீறி சென்ற பிரம்மை.
அது உண்மையானது. திருமணம் பற்றிய பேச்சுக்கள் எல்லாவற்றையும் அங்கே முடிவு செய்ய இரு குடும்பங்களும் சேர்ந்து முடிவு எடுத்த பின்பு அங்கே ஜாதங்கங்களுக்கு வேலையின்றி போனது.