பத்திரிக்கை அடிக்க வேண்டியதில்லை, திருமணம் மிக எளிமையாக நடக்கட்டும் என்று அமர்நாத் சொல்லிவிட அது சாரதாவுக்கும், நாராயணனுக்கும் மனதிற்கு வருத்தமாக இருந்தது.
ஒரே மகனின் திருமணம், எப்படி எல்லாம் செய்யவேண்டும் என்று கனவு கண்டிருக்க அவனோ இப்படி சொல்லிவிட்டு மற்றதை பேசிக்கொள்ளுங்கள் என்று கிளம்பிவிட்டான்.
அதன் பின்னர் வீட்டினர் கலந்து பேசி முடிவுக்கு வந்தனர். மிக நெருக்கமான சொந்தங்கள் போதும். வேறு யாரும் வேண்டாம் என்று முடிவுக்கு வந்தனர்.
பதினைந்து நாளில் ஒரு நாள் இருக்க அதில் திருமணத்தை முடித்துவிடுவோம் என்று முடிவெடுத்து அமர்நாத்திற்கும் அழைத்து சொல்லிவிட அவனும் சரி என்றுவிட்டான்.
குறிஞ்சிக்கு நடப்பதை ஜீரணிக்கவே நேரம் பிடித்தது. பதினைந்து நாளில் திருமணம். தன்னுடைய வாழ்க்கை இப்படி திசை மாறி போகும் என்று கனவிலும் எண்ணியிராதவளுக்கு அழுகை போய் இப்போது கோபமே பிரதானமாக இருந்தது.
“என்னை நினைக்க மாட்டீங்களா யாரும்?…” என தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
சாரதாவும், நாராயணனும் கிளம்பிய பின்பு தான் தயாளன் மகளை அருகே அழைத்தார்.
“அப்பா உன்னை கஷ்டப்படுத்தறேன்னு நினைக்கிறியாடா?…” என தழுதழுப்புப்புடன் கேட்க அவரின் முகத்தை பார்த்து தன் மறுப்பை சொல்லமுடியாமல் மௌனமானாள்.
“அமர் தம்பி ரொம்ப நல்லவருடா…” என அவளின் தலையை வருட,
“அப்பா நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன். அவரையே கூட கட்டிக்கறேன். ஆனா இப்போ வேண்டாம்ப்பா. கொஞ்சம் நாள். நம்ம வீடு முடியட்டும். அங்க வந்து ஒரு ஒரு மாசமாச்சும் இருந்துக்கறேன். அப்பறமா…” என அவள் சொல்லுவது அங்கிருந்தவர்களுக்கு சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தது.
“என்னடா இது குழந்தை மாதிரி. அதுவும் நம்ம வீடு தான். எப்போ வேணாலும் நீ அங்க வந்து இருக்கலாம்டா. ஆனா கல்யாணம் இப்போ பண்ணிடறது நல்லதுடா…” என வனஜா சொல்ல,
“ம்மா…” என்றாள் ‘யாராவது என்னை புரிந்துகொள்ளுங்களேன்’ என்னை என்பது போல.
“குறிஞ்சி…” என பரமேஸ்வரன் அழைத்ததும் அவன் பக்கம் திரும்பியவள்,
“எனக்கு சம்மதம் மாமா. உங்க மதிப்பு குறையிற மாதிரி எதுவும் பண்ணமாட்டேன். ஏற்பாடு பண்ணுங்க…” என விசும்பலுடன் சொல்லியவள் அங்கிருந்து சென்றுவிட அனைவருக்கும் அந்த நொடி மனது கனத்து போனது.
“மாமா, கல்யாணம் ஆனா சரியாகிடும். கண்டிப்பா குறிஞ்சி சந்தோஷமா இருப்பா…” என பரமேஸ்வரன் சொல்லவும் அவனின் பேச்சை ஆமோதித்தனர்.
அவர்களுக்கும் அத்தனை நல்ல அபிப்ராயம் இருந்தது அமர்நாத் குடும்பத்தின் மீது.
அதன் பின்னர் எந்த வித சஞ்சலமும், குழப்பமும் இன்றி திருமண வேலைகளை ஆரம்பித்தனர்.
இந்த பேச்சுவார்த்தை அக்கம்பக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் பரவ இப்படி தான் ஆகும் என்று ஆளாளுக்கு பேச ஆரம்பித்திருந்தனர்.
அதை தாண்டி வரவே அத்தனை சிரமமாக இருக்க சாரதா இதை பற்றி அமர்நாத்திடம் சொல்ல,
“ம்மா, நாம இங்க தான் இருக்க போறோம். இதை எல்லாம் தாண்டி தான் வரனும். இதையே நினைச்சுட்டு கவலைப்பட்டுட்டே இருந்தா வாழ முடியாது. என்ன நடந்ததுன்னு நமக்கு தெரியும். இதை எல்லாம் விட்டு தள்ளுங்க…” என்றுவிட்டான் இலகுவாய்.
குறிஞ்சி வீட்டினரை விட்டுவிட்டு சுபாஷினியை போட்டு படுத்த ஆரம்பித்திருந்தாள்.
“உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? அந்த ரோட்டிக்கடைக்கு பக்கத்துல நின்ன கோழிக்குஞ்சு மாதிரி இருப்பேன். சுத்தமா செட் ஆகாது சுபாக்கா…” என கொந்தளிக்க,
“என்னை என்னடி பண்ண சொல்ற? நீயும் தானே சரின்னுட்ட?…” என்று சுபா சொல்ல,
“என்ன சரின்னேனா? உன் புருஷர் தான் என்னை அப்படி சொல்ல வச்சாரு. ஹைய்யோ…” என தலையில் கை வைத்தவள்,
“இங்க நில்லேன். இப்படி நீ நின்னா உன் பின்னால என்னால மறைய முடியுதா? நானும் கொஞ்சம் தெரியறேன் தானே? ஆனா அந்தாள் தூண் மாதிரி குட்டியூண்டா போய்டுவேன். உனக்கு ஏன் சுபாக்கா புரியமாட்டிக்கு?…”
“அதெல்லாம் பத்து நாள்ல நல்லா சாப்பிட வச்சு உன்னை தேத்திடலாம். இதுக்குத்தான் உன் கவலையா?…”
“சுபாக்கா, சத்தியமா கொலைகாரி ஆகிருவேன்…” என்றவள்,
“கல்யாணம்னு பேசியாச்சு. மூணு நாள் ஆகிடுச்சு பேசி. அன்னைக்கு பார்த்ததோட சரி. பொண்ணு கீழயே இருக்கேன். கொஞ்சமாச்சும் அந்த பீல் இருக்கா அந்த ரொட்டிக்கடைக்கு? சரியான ஆங்க்ரிபேர்ட்…”
“உனக்கிருக்கா முதல்ல? இந்த பேச்சு பேசற?…” என சுபா எதிர்கேள்வி கேட்க,
“நானா ஓனரை கட்டிக்க கேட்டேன். அவர் தான வந்து பொண்ணு கேட்டது. அப்போ அவருக்கு தான் பீல் இருக்கனும்…”
“இப்ப என்னடி சொல்ல வர? அமர் உன்னை பார்த்து பேச வந்தா உனக்கு ஓகேயா?…”
“என்ன என்னை பார்த்து பேசனுமா? அதெல்லாம் முடியாது முடியாது. என் முன்னாடி வந்தா?…”
“அதான் வரலையோ என்னவோ? நீ தான் பீலிங் இல்லைன்னு சொல்ற. வரவும் கூடாதுன்னும் சொல்ற. என்ன எதிர்பார்க்கற நீ?…” என சுபாஷினி கேட்க மொத்தமாய் குழம்பி இருந்தாள் குறிஞ்சி.
“எப்பவும் முசுட்டு மூஞ்சி. சின்ன சிரிப்பு கூட இத்தனை நாள்ல நான் பார்த்ததில்லை சுபாக்கா. ஓனர் சிரிச்சா எப்படி இருக்கும்?…” என கவலையாய் அவள் கேட்க சுபாவுக்குமே கஷ்டமாக போனது.
“யாரும் சிரிக்காம எல்லாம் இல்லை குறிஞ்சி. நீயா எதையும் நினைக்காத. எதுக்கு இத்தனை யோசனை உனக்கு? பேசாம இரு…” என்று அடக்கி வைத்தாள்.
அமர்நாத் அவசியமான பேச்சுக்கள் கூட பேசியதில்லை. பார்த்தால் கூட பார்வையை திருப்பிக்கொள்பவன், தங்களிடம் என்றில்லை அந்த சுற்றுவட்டம் எல்லோரிடமும் அவன் அப்படியே.
அவனின் சுபாவம் அப்படி. இதை தங்கை புரிந்து வாழ்வாளா என்ற கவலை தொக்கி நின்றது.
குறிஞ்சியை பொறுத்தவரை அமர்நாத் தனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதவன் என்ற எண்ணம் மனதில் அழுத்தமாய் பதிந்திருந்தது.
எந்த நேரமும் வாய் ஓயாமல் பேசும் தானும், பேசவே யோசிக்கும் அவனும் எப்படி என்ற பயம் வேறு அவளை நிலைகுலைய செய்தது.
தாலி எடுப்பதில் இருந்து, புடவை எடுத்து முடித்து திருமணத்திற்கு சிறிய மண்டபம் ஒன்றை முடிவு செய்து என பரபரவென வேலைகள் அரங்கேறியது.
விஷயம் ஐஸ்வர்யாவின் காதுக்கு சென்றதும் உடனே அழைத்துவிட்டாள் அவள் குறிஞ்சிக்கு.
“நான் கேள்விப்பட்டது நிஜமா குறிஞ்சி? அமருக்கும் உனக்கும் கல்யாணமா? நான் ஊருக்கு போயிருந்த இந்த நேரத்துல என்ன இது?…” என கேட்டவள் மீண்டும் காதல் என்று ஆரம்பித்துவிட்டாள்.
அவள் விடாமல் புலம்பி, குறிஞ்சியை என்னவோ குற்றவாளியை போலவும், அமரை தட்டி பறித்துவிட்டதை போலவும் பேசிவைக்க சுபாஷினி தான் போனை பிடுங்கி ஐஸ்வர்யாவை திட்டி குறிஞ்சியிடமும் அவளிடம் பேச கூடாது என்று சொல்லிவைத்தாள்.
இன்னும் நான்கு நாளில் திருமணம். ஐஸ்வர்யாவின் அழுகையும், பேச்சும் குறிஞ்சியை உறக்கமில்லாமல் அவஸ்தைக்குள்ளாக்க எழுந்து மணியை பார்க்க மணி ஒன்றரை என்றது.
மெல்ல எழுந்து காலில் இருந்த கொலுசை கழற்றி படுக்கையில் போட்டுவிட்டு தனது மொபைலையும் எடுத்துக்கொண்டாள்.
வெளியே வந்து கதவை திறந்து மாடிக்கு பூனை பாதம் வைத்து ஏற ஆரம்பித்தவள் மொட்டை மாடியை அடைந்ததும் முல்லைப்பந்தலின் கீழ் நின்ற பின்னர் தான் மூச்சு விட்டாள்.
பின் மொபைலில் இருந்து அமரனின் எண்ணிற்கு அழைக்க அழைப்பு நிற்கும் தருவாயில் தான் அவன் அட்டன் செய்தான்.
“நான் குறிஞ்சி பேசறேன்…” என ஹஸ்கி வாய்ஸில் இவள் கிசுகிசுக்க,
“இந்நேரம் என்ன? யாருக்கும் ஒண்ணுமில்லையே?…” என்று அவன் பதறினான்.
“ப்ச், யாருக்காச்சும் ஏதாவதுன்னா இப்படித்தான் கால் பண்ணி மெதுவா பேசுவேனா? நீங்கலாம். மொட்டை மாடிக்கு வாங்க பேசனும்…” என சொல்லி வைத்துவிட திக்கென்றானது அமர்நாத்திற்கு.
‘ப்ச், மொட்டை மாடில இந்நேரம் என்ன பன்றா?’ என நினைத்தபடி அப்படியே மேலே வர இவள் முல்லை பந்தலை மொபைல் டார்ச்சின் மூலம் பார்த்துக்கொண்டு நின்றாள்.
மூன்று மாதங்கள் ஆக போகிறது அவள் மேலே வந்தே. முன்பை விட இன்னும் நன்றாக படர்ந்து இருக்க அங்காங்கே கீழே வரை தொங்கிக்கொண்டு இருந்தது.
அதனை சரியாக பந்தலின் மேல் தொடுத்து எடுத்து விடாமல் புதரை போல வளர்ந்து ஒரு திரையை போல மறைத்து தனி அறையென வனமாகவே காட்சியளித்தது அந்த முல்லை பந்தல்.
“குறிஞ்சி மொபைல் டார்ச்சை ஆஃப் பண்ணு…” என்றான் வந்ததும்.
திடுக்கென்று ஆனது அவனின் சத்தத்தில். பதறி திரும்பியவள் போன் கை நழுவ இருந்து பின் கேட்ச் பிடித்தவள்,
“வரேன்னு சொல்லிட்டு வரமாட்டீங்களா?…” என்றவள்,
“இந்த பந்தலை கூட பராமரிக்க முடியலை. எப்படி ஆகிருச்சு பாருங்க…” என குறை சொல்ல,
“இதை சொல்லத்தான் வந்தியா? முதல்ல கிளம்பு. யாராச்சும் இந்நேரம் நம்மளை பார்த்தா என்ன நினைப்பாங்க?…” என்றான் லேசான பதட்டத்துடன்.
“உங்களால நான் என்ன கஷ்டம் அனுபவிச்சுட்டு இருக்கேன். அந்த ஐஸ்வர்யா என்னன்னா நான் உங்களை கரெக்ட் பண்ணிட்டதா பேசறா…” என சொல்ல,
“ஆங், என்ன? என்ன சொன்னா?…” என்றான் அமர்நாத் மீண்டும்.
ஒரு வேகத்தில் அவள் சொல்லிவிட்டதை சொல்லியவள் இப்போது மீண்டும் அதை சொல்ல முடியாமல் தடுமாற,
“என்கிட்டே சண்டை போடறா. அழறா…”
“ஓஹ், இதை ஏன் நிரஞ்சனாட்ட பண்ணலை அந்த பொண்ணு?…” என்று அமர்நாத் கேட்டதும்,
“ஆமா…” என்று யோசிக்க,
“இதை சொல்ல இந்நேரம் வர சொன்னியா? உனக்கு பேச வேற நேரமே இல்லையா? கீழே போ…” என்றான் கடுமையாக.
“நான் ஒன்னும் அதுக்காக வரலை. எல்லாரும் என்னென்னவோ பேசறாங்க. உங்களை நாங்க வேணும்னு. ப்ச், இந்த கல்யாணத்தை கூட நாங்க தான நிறுத்திருப்போம்ன்ற மாதிரி…” என்று சொல்லும் பொழுதே அவள் குரல் மாறிவிட,
“அவ உங்களை எப்படிலாம் லவ் பன்றாங்கன்னு சொன்னாங்க தெரியுமா?…”
“ப்ச், இதை பேசற நேரமும் இல்லை. இந்த டாப்பிக் எனக்கு தேவையும் இல்லை…” என்றவன்,
“எல்லாரும் பேசினா அதுக்கு உட்கார்ந்து அழுவியா? தூக்கி போட்டுட்டு வேலையை பாரு….”
“எல்லாரும் பேசறாங்கன்னு தானே என்னை கல்யாணம் பண்ண போறீங்க? என்னை பிடிச்சு ஒன்னும் நீங்க கல்யாணம் பண்ணலையே…” என்றவளை அமர் அதிர்வுடன் பார்க்க,
“இல்லைல, இப்ப கூட ஒன்னும் இல்லை விட்டுடுங்களேன். உங்களை என்னவோ நினைக்கவே முடியலை. ஒரு செகென்ட் கூட எனக்கு தோணமாட்டிக்குது…” என்றவளை அழுத்தமாய் பார்த்தவன்,
“நீ போகலாம் குறிஞ்சி…” என சொல்லி முகத்தை திருப்பிக்கொண்டான்.
“வேணும்னே பண்றீங்க இல்ல?…” என்றாள் மூக்கு விடைக்க.
“ஆமா, அதுக்கென்ன இப்போ? முதல்ல இங்க இருந்து போ. யாராச்சும் பார்க்க போறாங்க. அப்பறம் இதுக்கும் வாய்க்கு வந்தபடி பேசுவாங்க…” என அவளை அனுப்ப முயன்றான்.
“அதான் கல்யாணமே ஆக போகுதே. யார் பார்த்தா எனக்கு என்ன?…” என அவள் இன்னும் முரண்டு பிடித்து நிற்க,
“நான் இப்போ பேசற மூட்ல இல்லை குறிஞ்சி. போறியா?…”
“இதான் இதுக்குத்தான் எனக்கு பிடிக்கலைன்னு சொல்றேன். உங்ககிட்ட மனுஷி பேசுவாளா? அட்லீஸ்ட் இப்போவாச்சும் புரிஞ்சுப்பீங்கன்னு நம்பி வந்தேன் பாருங்க. என்னை சொல்லனும்…”
கோபமாய் தன் தலையில் அடித்துக்கொண்டு திரும்பி நடக்க காற்றில் அசைந்துகொண்டு இருந்த முல்லைகொடி அவளை சுற்றிக்கொண்டது. அதை வேகமாய் எடுக்க முயற்சிக்க அவளருகே வந்தவன்,
“ஹேய் இரு, கொடி அறுந்துட போகுது…” என வந்தவன் அவளை நெருங்கி நின்று அதை லாவகமாய் எடுத்துவிட திடீரென்ற அவனின் அருகாமை குறிஞ்சியை என்னவோ செய்ய தன்னை போல இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
“ப்ச், அசையாம நில்லு. எடுத்துட்டு இருக்கேன்ல…” என அவளின் தோளை பிடித்து நிறுத்த,
“தொடாதீங்க…” என பட்டென்று அவனின் கையை தட்டிவிட்டாள்.
அவளின் பதட்டத்தை அவதானித்தபடி மெல்ல முல்லைக்கொடியை நிதானமாகவே எடுத்துவிட்டவன் இதழ்களுக்குள் ஒரு உல்லாச புன்னகை.
கொடிகளில் இருந்து முழுவதுமாய் அவளை விடுவித்தவன் அவளின் தலையில் உதிர்ந்திருந்த முல்லை பூக்களையும் லேசாய் தட்டிவிட்டு,
“எடுத்தாச்சு போ…” என சொல்லவும் குறிஞ்சி வேகமாய் ஓட்டம் பிடிக்க மீண்டும் அவளின் கையை பிடித்து நிறுத்தி,
“மெதுவா போக மாட்டியா? நீ திடுப்புடுன்னு ஓடற சத்தத்துல கீழே முழிச்சுக்க போறாங்க. படில போகும் போது பார்த்து இறங்கனும்னு தெரியாதா?…” என கடிய,
“ப்ச், தொடாதீங்கன்னு சொன்னா கேட்க மாட்டீங்களா? விடுங்க…” என கையை உதறிக்கொண்டு சென்றாள்.
அவனின் அருகே செல்லாமல் இருப்பதே உசிதம் என்று தெளிவான முடிவுக்கு வந்தாள் குறிஞ்சி.
தன்னறைக்கு சத்தமில்லாமல் வந்து படுத்துக்கொண்டவளின் நெஞ்சத்தின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை.
கடைசி முயற்சியாக தான் அவனிடம் சென்று பேச சென்றது. எதற்கும் வளைந்துகொடுக்காமல் அவன் பிடிவாதமாய் நிறக் இன்னும் எரிச்சலானது.
‘ஐயோ இன்னும் நாளே நாள். நாலாவது நாள் காலையில விடிஞ்சது முடிஞ்சது’ என புலம்பியவள் புலம்பல் மூன்று நாட்களும் தொடர அவள் பயந்த அந்த காலையும் அழகாய் விடிந்தது.
“வம்படியா கட்டிட்டு போறார்ல ஓனர். என்னாகுதுன்னு பாரேன்…” என சுபாஷினியிடம் சொல்லி அன்றைக்கு காலை வேறு வாங்கிக்கட்டிக்கொண்டாள் காலையில் கிளம்பும் பொழுதே.
குறிஞ்சிக்கு தெரியவில்லை அவள் அதுவரை பார்த்திருந்த அமர்நாத் வேறு என்று. கணவனாக அவள் மட்டுமே பார்க்க கூடிய அந்த அமர்நாத் வேறு என்று.