குளிர் – 8
காலை ஆறரை மணிக்கே மண்டபத்திற்கு சென்றுவிட்டனர் இரு குடும்பத்தினரும்.
காலை உணவு நேரம் கடந்ததும் முகூர்த்தம் என்றிருக்க சொந்தங்களும், அக்கம்பக்கத்தினரும் வந்து சேர்ந்திருந்தனர்.
“குறிஞ்சிக்கு சாப்பாட்டை ரூம்க்கே கொண்டு போய் குடு சுபா…” என சாரதா சொல்ல,
“இல்லை அவ அங்க வந்தே சாப்பிடட்டும். தனியா அவளுக்குன்னு ஒருக்கா எதுக்கு எடுத்துட்டு போய்ட்டு?…” என வனஜா மகளை அழைத்து வரும் படி மூத்த மகளிடம் சொல்ல சுபாவும் குறிஞ்சியுடன் டைனிங்ஹால் வந்தாள்.
“சாப்பிட்டா மட்டும்? போ சுபாக்கா…” என அப்போதும் கூட முரண்டுபிடித்தபடி வந்தாலும் அவளின் பேச்சுக்கள் எல்லாம் சுபாவிடம் மட்டுமே.
சுபாவை அந்த பாடு படுத்திக்கொண்டு இருந்தாள் குறிஞ்சி. அப்போதுதான் அமர்நாத்தும் சாப்பிட அங்கே வர அவனை கவனிக்காமல் சுபாஷினியின் காது தீயும் வரை ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தவள் சாப்பிட்டுக்கொண்டும் இருக்க,
“குறிஞ்சி, கொஞ்சம் நேரம் பேசாம சாப்பிடேன். அங்க பார் அமர் வந்தாச்சு…” என அவள் காண்பிக்க வேகமாய் திரும்பி பார்த்தாள்.
அவளுக்கெதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவன் அசோக்குடன் பேசிக்கொண்டிருந்தான்.
“பார்த்தியா? எதிர்த்தாப்புல நான் இருக்கேன். என்னை பார்க்கனும்னு தோணலை. இவரு மாப்பிள்ளையாம். இதுக்குத்தான் வேண்டாம்னு சொன்னேன். எனக்கு என்னவோ கல்யாணம் ஆகற மாதிரியே பீல் ஆகல…” என கடுகடுவென குறிஞ்சி சொல்ல சுபாஷினிக்கு ஐயோ என்றானது.
‘எல்லா கோட்டையும் அழிங்க. முதல இருந்து ஆரம்பிக்கறேன்’ என்பதை போல ஆதிக்கு சென்றுவிட்டாள் குறிஞ்சி.
“அவர் ஏதோ சீரியஸா பேசிட்டு இருக்கார். நீ சாப்பிட்டு வா. கொஞ்சம் நேரத்துல முகூர்த்தம். இங்கயே இருக்கனும்னு பார்க்காத…” என சுபா சொல்ல,
“இல்லன்னா மட்டும்? என்னை குண்டுக்கட்டா தூக்கிட்டு போ தாலி கட்டியே தீருவான் இந்த அமரபுஜங்கன்…”
“ப்ச், குறிஞ்சி, மரியாதையா பேசு. இனிமே இந்த அவன் இவன் எல்லாம்…”
“நான் கோவம் வந்தா சொல்லத்தான் செய்வேன். என்னை எவன் கேட்பான்? என்னை கேட்டா கல்யாணம் பன்றீங்க எல்லாரும்? அப்போ என் இஷ்டத்துக்கு பேசவும் கூடாதா? எங்க என்னன்னு யாரையாச்சும் கேட்க சொல்லு பார்ப்போம்…” என்று சுபாவிடம் வாய்ச்சண்டையில் வெளுத்து வாங்கினாள்.
“இன்னும் சாப்பிட்டு முடிக்கலையா?…” என பரமேஸ்வரன் வந்துவிட அதுவரை வளவளவென பேசிக்கொண்டிருந்த குறிஞ்சி,
“எனக்கு போதும். நீ வேணா சாப்பிட்டு வா…” என்று கோபமாய் முறைப்போடு சொல்லியவள் எழுந்து விறுவிறுவென கை கழுவும் இடத்திற்கு நகர,
“கூட போ சுபா. எப்படி போறா பாரு எல்லாரும் பார்க்க. கல்யாண பொண்ணு மாதிரியா இருக்கா?…” என பரமேஸ்வரன் சொல்ல சுபாவும் எழுந்துகொண்டாள்.
“நான் வர வரைக்கும் என்ன உனக்கு? மெதுவா தான் நடையேன்…” என அழமாட்டாத குறையாக சுபா சொல்ல,
“என்ன உன் வீட்டுக்காரன் சொன்னாரா? உடனே இங்க வந்து அப்டேட் பன்ற?…” ஏற்று சுபாவையும் திட்ட,
“என்னை என்னடி பண்ண சொல்ற?…”
“நீ மட்டும் அன்னைக்கு வாயில அடிச்சிருந்தா இப்படி ஆகியிருக்குமா? நீயும் எனக்கு சதி பண்ணிட்ட…”
“என்னைக்கு? நான் ஏன் வாயில அடிக்கனும்?…” சுபாஷினிக்கு ஒன்றும் புரியவில்லை.
“நீ தான சொன்ன, ரொட்டிக்கடை மாதிரி மாப்பிள்ளை அமையும்னு. உன் வீட்டுக்காரர் பண்ணின ட்விஸ்ட்டால இன்னைக்கு அந்த ஆங்கிரிபேர்டே என்னோட புருஷனா வர போகுது. இனி நீ வாயை திறந்த பார்த்துக்கோ…”
“என்னடி சொல்ற?…”
“சொல்றாங்க சொத்துமூட்டைக்குள்ள சோளபொரின்னு. நீ சொன்னா பலிக்குது. அதனால இனி எனக்கு நீ எது சொல்றதா இருந்தாலும் என்கிட்டே கேட்டு எனக்கு பிடிச்ச மாதிரி சொல்லு…”
“குறிஞ்சி, லூஸு மாதிரி பேசாத. இதுதான் நடக்கனும்னு இருக்குது. மாத்த முடியாது…”
“எனக்கு இப்ப இங்க இருந்து ஓடனும்னு இருக்குது. அதையும் மாத்த முடியாது. என்ன செய்ய? வா போவோம்…” என்று திரும்ப அங்கே சாப்பிட்ட கையுடன் அமரும், அவனுக்கு பின்னால் அசோக்கும் சிரிப்பை அடக்கியபடி நின்றனர்.
“ப்ச், பார்த்தியா மூக்குல வேர்த்துடும் நான் பேச ஆரம்பிச்சாலே? எப்ப இவரை பத்தி பேசினாலும் டான்னு வந்து நின்னு கேட்கறது…” என முணுமுணுக்க,
“ப்ச், வா முதல்ல…” என குறிஞ்சியை இழுத்துக்கொண்டு அமரிடம் ஒரு சமாளிப்பு புன்னகையை சிந்தியவளாக சென்றாள் சுபாஷினி.
“அமரா நீ பாவம்டா. நீயும் சீக்கிரம் நான்ஸ்டாப் பேச்சுக்கு மாறிடு. அப்பத்தான் சமாளிக்க முடியும் போல…” என அவர்கள் சென்றதும் அசோக் சிரிக்க,
“ஏய் ச்சீ, வாடா…” என அவனுடன் கையை கழுவியவன் குறிஞ்சியின் பேச்சை அசைபோட்டபடி வெளியே வந்தான்.
“என்னதான்டா நினைக்கிற? ஒரு எமொஷனும் மூஞ்சில காணும். ஹ்ம்ம் இப்ப அந்த பொண்ணு தான் பாவம். உன்னை புரிஞ்சி என்னனு வாழுமோ?…” என்று சொல்ல,
“அதை நான் பார்த்துப்பேன். நீ வா…” என நகர்ந்தான்.
முகூர்த்த நேரமும் வந்துவிட சம்பிரதாயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பித்தது. சாப்பிட்டு வந்தவளுக்கு லேசாய் கண்களை சுழற்றியது.
கண்ணாடிக்கு முன்னால் இருந்த மேஜையில் கை வைத்தபடி அமர்ந்த விதத்தில் அப்போதுதான் லேசாய் அசந்திருந்தாள் குறிஞ்சி.
“என்னடி தூங்கறா இவ?…” என வனஜா வர,
“ம்மா, மேடைக்கு கூட்டிட்டு போற வரைக்கும் தூங்கட்டும். விடுங்களேன். காலையில நேரமே எழுப்பி அவளை படுத்தியாச்சு. இப்ப என்ன? போங்க. நான் பார்த்துக்கறேன்…” என அனுப்பி வைத்தாள் சுபாஷினி.
அவளுக்கு அவள் கவலை. பேசி பேசியே சுபாவின் காதை ஓட்டை ஆக்கியிருந்தாள் தங்கை.
சட்டென கேட்ட மேளசத்தத்தில் உடல் தூக்கிப்போட பதறி முழித்தவள் நெற்றியில் வைத்திருந்த நெற்றிச்சுட்டி விலகி லேசாய் தலை கலைந்துவிட்டது.
“சுபாக்கா, எனக்கு தான இது?…” என குறிஞ்சி மலங்க மலங்க விழித்தபடி கேட்டதும் சுபாவுக்கு உருகிவிட்டது.
“ஏன்டா குறிஞ்சி, கல்யாணம்ன்றது எல்லாருக்கும் நடக்கறது தானே?…”
“ஆனா எல்லாருக்கும் மாதிரியா எனக்கு நடக்குது? என்னை ஏமாத்தாத…” என சொல்லவும் சுபாஷினிக்கு எங்கே பேச.
“வந்து இதை சரி பண்ணிவிடு. இதாச்சும் ஒழுங்கா இருக்கட்டும்…” என்று கண்ணாடி பக்கம் திரும்பி அமர சுபாவும் எழுந்து தங்கைக்கு உதவினாள்.
“ஏன் சுபாக்கா, இனி நான் பேசினா பதிலுக்கு அந்த அமரபுஜங்கன் பேசுவாரா? அட்லீஸ்ட் ஒரு வார்த்தை பதிலாச்சும் வருமா?…” என,
“அதெல்லாம் பேசுவாங்க…”
“எனக்கு நம்பிக்கை இல்லை. இனி நான் தனியா தான் பேசனுமா? ப்ச், ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க? இப்ப உங்க யாரையுமே எனக்கு புடிக்கலை…” என்றாள் சிறுபிள்ளையாய்.
“குறிஞ்சி, சத்தியமா சொல்றேன். உன்னை எப்படி சமாளிக்கன்னே எனக்கு தெரியலடி…”
“பார்த்தியா நீ சரண்டர் ஆகற முடியலைன்னு. அந்தாள் ஒரு பார்வை தான். அதுக்கு மேல எதுவும் இருக்காது. எல்லாம் சுவத்துக்கிட்ட பேசற பேச்சு தான்…” என்றவள்,
“கல்யாணம்ன்னா இப்படியா இருக்கும்? எனக்கு வெட்கம் கூட வரலை சுபாக்கா. பாரு ஒரு மாதிரி நடுக்கமா இருக்குது. இதோ இன்னும் பத்து நிமிஷத்துல என் லைஃபே மாற போகுது. எப்படி இருக்குமோன்னு தோணுது…”
“குறிஞ்சி அதெல்லாம் நல்லா தான் இருக்கும்…” சுபா தேற்ற,
“சும்மா சொல்லாத. நான் உன் கல்யாணத்துல உன்னை பார்த்திருக்கேனே. அது எவ்வளவு மெமெரிஸ் உனக்கு. ஆனா எனக்கு?…” என்றவள்,
“அந்த ரொட்டிக்கடையை நான் கவனிச்சு கூட பார்க்கலை. எப்பவும் யோசிச்சா பொம்மை மாதிரி ஒரு லுக்கோட ஒரு பேஸ். அதுல அக்மார்க் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தின முறைப்பு. எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாதுன்னு மொத்த முறைப்பும் அந்த மூஞ்சில தான் குடியிருக்கும்…”
“குறிஞ்சி…”
“உனக்கு தெரியாதுக்கா, உன் கல்யாணத்துல கல்யாணத்துக்கு முதல் நாள் உன் வீட்டுக்காரர் எப்படி எல்லாம் உன்னை பார்க்க ட்ரை பண்ணினார். செம த்ரில்லிங். நாளைக்கு உன் பிள்ளைகளுக்கு இதை எல்லாம் சொல்லிக்க மாட்டியா?…”
“எப்போ இருந்து மாமா உனக்கு என் புருஷன் ஆனாரு? நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். இப்போலாம் அவரை மாமான்னு சொல்றதே இல்லை…”
“ஆமா சொல்லமாட்டேன். எனக்கு முதல் வில்லனே உன் வீட்டுக்காரர் தான். அவர் பேசாம இருந்திருந்தா அப்பா கண்டிப்பா சம்மதிச்சிருக்கமாட்டாங்க. எல்லாம் அவரால…”
“உன்னோட நல்லதுக்கு தான்டா…”
“எது, இப்படி உப்புச்சப்பே இல்லாத ஒரு கல்யாணம் எனக்கு நல்லதா? கல்யாணத்துல ஒரு எதிர்பார்ப்பு, ஒரு குறுகுறுப்பு, அட்லீஸ்ட் மனசுக்குள்ள ஒரு ஓரத்துல லவ் பீல். எதுவுமே இல்லை. இது கல்யாணமா? போ சுபாக்கா…” என அவள் பேச பேச சுபாஷினிக்கு கலக்கமாக இருந்தது.
அவளுக்கு தெரியும் தங்கையின் எதிர்பார்ப்புகள் மிக பெரியவை என்று. அதில் சொந்த தொழில் செய்பவன் தனக்கு வேண்டாம் என்றிருந்த முதல் எதிர்பார்ப்பே இங்கு பொய்த்து போக, அடுத்தடுத்ததும் அமரின் நடவடிக்கையில் குறைந்துகொண்டே வந்தது.
“சுபாக்கா அக்காவை அழைச்சுட்டு வர சொன்னாங்க…” என அவினாஷ் வர,
“இவன் கூட மாறிட்டான். இவனுக்காக எத்தனைதடவை அந்த ரொட்டிக்கடை கடையில கேக் வாங்கிட்டு வந்திருப்பேன்…” என அவனின் தலையில் குட்ட,
“இன்னும் இங்க என்னம்மா பன்றீங்க? வந்து முகூர்த்த புடவையை வாங்கிட்டு வந்து மாத்தனும்…” என்று உறவு பெண்கள் வந்துவிட குறிஞ்சி மணமேடைக்கு அழைத்து செல்லப்பட்டாள்.
அமர்நாத் அப்போது தான் தன்னுடையை வாங்கி மாற்ற சென்றிருக்க குறிஞ்சியும் வந்து சம்பிரதாயங்களை செய்துவிட்டு தன்னுடையை வாங்கிக்கொண்டு சென்றாள்.
“சீக்கிரம் குறிஞ்சி. மசமசன்னு நிக்காத….” என புது புடவையை அவிழ்த்து நிற்க சுபாவின் முன்னால் புடவையை மாற்றியவளுக்கு அப்போதுதான் சுரீரென்று ஒரு ஞாபகம்.
“ஐயோ…” என வாய்விட்டு பதற,
“என்னாச்சுடி? சேஃப்டி பின் எதுவும் குத்திருச்சா?…” என கேட்க,
“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை…” என்றவள் கண்மூடி தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.
“இன்னைக்கு மட்டும் வரட்டும். இருக்குது. ஆனா வந்தா? அய்யோ…” என புடவையை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள,
“என்னடி பன்ற? வெளில கூப்பிடறாங்க பாரு…” என்று சுபா அவளை உலுக்க,
“சுபாக்கா, எனக்கு இப்ப பயமா இருக்குது. உன்கிட்ட எப்படி சொல்லுவேன்?…” என்றவள் கண்கள் கலங்கி நிற்க உதடு கடித்து அழுகையை அடக்கினாள்.
அவள் நினைத்து கலங்குவதை ஓரளவு புரிந்துகொண்ட சுபாஷினி மென்மையாய் தங்கையை அணைத்துக்கொண்டாள்.
“குறிஞ்சி எதையும் பேஸ் பண்ண தயங்கமாட்டாளே? ஏன் பயப்படற?…” என சொல்லி அவளை ஆறுதலாய் தட்டி கொடுத்து அவள் வழியிலேயே போய் பேச கொஞ்சமாய் முகம் தெளிந்தது.
“இனி ஒன்னும் பண்ண முடியாதுல சுபாக்கா?…” என்றாள் பாவமாய்.
“என்னடா இப்படிலாம் பேசற? ஒண்ணுமே இல்லை. நீ ஏன் இத்தனை நெவர்ஸா இருக்க? அமரை இத்தனை வருஷம் பார்த்திருக்கோம். பேசமாட்டாரே தவிர ரொம்ப நல்லவர்…”
“அந்த நல்லவரை நான் கேட்டேனா?…” என்றாள் குறிஞ்சி துடுக்காக.
“ஹப்பா இப்படி பேசு. இதுதான் உனக்கு செட் ஆகும்…” என சுபா தங்கையின் கன்னம் வழித்து சொல்லி,
“நாங்க கீழே தான இருப்போம். சாரதாம்மா இருக்காங்க. அப்பறம் என்ன பயம் உனக்கு?…”
“எனக்கொண்ணும் பயம் எல்லாம் இல்லை. ஆனாலும் ஒரு மாதிரி. சுபாக்கா எப்படி சொல்லு?…” என திணறலுடன் சொல்ல புடவை கட்டி முடிந்து சரிபார்த்து நிற்க,
“ஹ்ம்ம் பர்பெக்ட்…” என்றாள் பாராட்டுதலுடன்.
“நான் எப்பவும் பர்பெக்ட் தான். அம்மாவுக்கு தான் புரியாது…” என சலிப்புடன் சொல்லிக்கொண்டிருக்க வனஜாவும் சாரதாவும் வந்துவிட்டனர்.
“கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கு குறிஞ்சி…” என தங்கையை பணிக்க,
“முதல்ல யார் கால்ல விழனும்?…” என கேட்டு நின்றாள் அவள்.
“யார் கால்லயும் விழ வேண்டாம். இப்படியே இரு. அது போதும்…” என மருமகளை கன்னம் வழித்து கொஞ்சிய சாரதா அவளின் நெற்றிக்கு முத்தம் தர,
“சாரதாம்மா கொஞ்சம் குனியறேன். உங்களுக்கு எட்டலை…” என்று அவர் உயரத்திற்கு குனிய,
“குறிஞ்சி என்ன இது பேச்சு? அவங்க உன் அத்தை…” என வனஜா அதட்ட,
“அதெல்லாம் இல்ல. நீ சும்மா இரு வனஜா. புள்ளைய இன்னைக்கும் எதாச்சும் சொல்லிட்டு…” என்றவர்,
“நீ எப்பவும் போலவே சாரதாம்மான்னே கூப்பிடு. உன் இஷ்டம்டா…” என சொல்ல அவரை அணைத்துக்கொண்ட குறிஞ்சி,
“இனி உங்களால என்னை திட்ட முடியாதே? சும்மாவே சாரதாம்மா எனக்கு தான் சப்போர்ட். இனி மருமக…” என வனஜாவிடம் கெத்து காட்ட,
“ஆமா, விடமாட்டேன்ல. எம்மருமவ என்ன சொல்லுறாளோ அதான்…” என சாரதாவும் சேர்ந்துகொள்ள பார்க்கவே கண்கொள்ளாகாட்சியாக இருந்தது.
“உங்களுக்கு முதல்ல சுத்தி போடனும்…” என்றார் வனஜா.
ஒருமாதிரி தொண்டை கரகரக்க மனதுக்கு நிறைவாய் இருந்தது மகளை பார்க்கும் போதே.
“ம்மா, சென்டிமென்ட்டா? அழாம இருங்க…” என்று குறிஞ்சி சொல்ல,
“அங்க கூப்பிடறாங்க. இங்க என்ன பன்றீங்க?…” என வந்தான் பரமேஸ்வரன்.
“இதோ வரோம் தம்பி…” என சாரதா முன்னே செல்ல வனஜாவின் கையை பிடித்துக்கொண்டாள் குறிஞ்சி.
“ம்மா, அப்பா எப்படி இருக்காங்க? சந்தோஷமா இருக்காங்களா?…” என கேட்க,
“ஏன்டா குறிஞ்சி? அப்பா நல்லா இருக்காங்க…”
“வந்திருக்கறவங்கட்ட எல்லாம் எப்படி பேசறாங்க?…”
“நல்லா தான்டா பேசறாங்க. நீயா எதையும் நினைச்சு குழப்பிக்காத. முகத்தை சரி பண்ணிட்டு வா…” என்றவர் சுபாவுக்கு தலையசைத்துவிட்டு சென்றுவிட்டார்.
திருமணம் என்று முடிவாகி இருந்தாலும் வெளியில் இந்த பேச்சுக்களை பெரிய கேலிக்கூத்தாக்கியிருந்தனர் சுற்றத்தார்.
முன்னால் ஒரு பேச்சு, பின்னால் ஒரு பேச்சு என்று. அதில் தயாளன் மிகவும் தளர்ந்து தான் போனார்.
“என்ன இது? கல்யாணம் செஞ்சு வச்சாலும் இதை விடமாட்டாங்க போல? அடுத்த வீட்டுல ஒரு கஷ்டம்னா இவங்களுக்கு எல்லாம் எப்படித்தான் அது சந்தோஷமா இருக்கோ? வார்த்தையாலையே சாவடிக்காங்க…” என வனஜாவிடம் புலம்பிக்கொண்டு இருந்ததை கேட்டிருந்தாள் குறிஞ்சி.
“இதுக்கே இப்படி பேசறாங்க, மாப்பிள்ளை அமர் தம்பியா இல்லாம வெளில பார்த்திருந்தா இன்னும் என்னலாம் பேசிருப்பாங்க? நக்கலா கேட்கறானுங்க முதல்லையே பேசி முடிச்சிருந்திருக்கலாம்லன்னு…” என்று உறக்கமில்லாமல் அவர் தவித்தது பார்த்திருந்தாள்.
“குறிஞ்சி…” என சுபாஷினி அழைக்கவும் தன்னை நிதானப்படுத்திக்கொண்டவள் தண்ணீரை குடித்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள் மேடையை நோக்கி.
உள்ளங்கால் எல்லாம் வியர்த்து நடக்கவே முடியாதளவிற்கு உதறியது. அங்கே அமர்நாத் அமர்ந்து சம்பிரதாயங்களை செய்துகொண்டிருக்க அவனை பார்க்கவும் ஒருநொடி அப்படியே நின்றுவிட்டாள்.
இவள் நின்றதை உணர்ந்தானோ என்னவோ இவளை நோக்கி பார்த்தவன் வா என்பதை போல சிறு தலையசைப்புடன் அழைக்க திடுக்கென்றானது குறிஞ்சிக்கு.
“சுபாக்கா பார்த்தியா?…”
“எதைடி? முதல்ல நட…” என அவளை நகர்த்தினாள்.
“ஓனர் என்னை வான்னு சைகை காமிக்கிறதை தான். பார்க்கலையா நீ?…” என பேச மேடைக்கே வந்திருந்தாள்.
“சுபாக்கா…” என சொல்லி குறிஞ்சி திரும்பும் முன் மணமேடையில் அமர்த்திவிட்டாள் சுபாஷினி.
அமர்நாத் அருகே அமர்ந்ததும் படபடவென்று வர ஹோமகுண்டத்தின் புகை வேறு கண்களை எரித்தது.
என்ன நடக்கிறது என்று வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்தவள் மனதில் எதுவும் பதியாமல் போக நேரம் ஆக ஆக கண்களை கரித்துகொண்டு வந்தது புகையினால்.
“ப்ச், சுபாக்கா கண் எரியுது…” என்று இடது கையால் கண்ணை கசக்க,
“குறிஞ்சி…” என்றவனின் கணீர் அழைப்பில் கையை எடுத்துவிட்டு அவனை பார்க்க மங்கலநாணை பூட்டி மூன்று முடிச்சிட்டிருந்தான் அமர்நாத்.
“அதுக்குள்ளே முடிஞ்சிருச்சா?…” என அவனிடமே இவள் கேட்டு வைத்து திரும்பி சுபாவை பார்த்தவள் உதடு பிதுக்க அமர்நாத்தோ அவளின் தலையை தன் பக்கம் திருப்பியவன்,
“கொஞ்சம் நேரம் முன்னாடி பாரு…” என்று கழுத்தை சுற்றிக்கொண்டு வந்து உச்சி வகிட்டில் குங்குமம் இட்டான்.
அவன் தன்னை பிடித்து திருப்பியதில் அவனின் கைவளைவிற்குள் இருந்தபடி புருவம் உயர குறிஞ்சி அவனை அண்ணாந்து பார்த்திருக்க அவனுமே என்னவென்பதை போல அவளை பார்த்தான்.
“ஸார் கையை எடுக்க வேண்டாம். அப்படியே ஒரு போட்டோ…” என அதை அப்படியே புகைப்பட கலைஞர் படம் பிடித்துக்கொள்ள,
“மூச்சு விடமுடியலை. கையை எடுங்க…” என்றாள் குறிஞ்சி.
நிதானமாய் அவளை விட்டு விலகி அமர்ந்தவனை லேசாய் யாரும் அறியாமல் முறைத்தவள்,
“சுபாக்கா…” என திரும்ப,
“இப்படியே நீ சுபாக்கான்னு கூப்பிட்டுட்டே இருந்த உன் மாமா இன்னைக்கே என்னை ஊருக்கு கூட்டிட்டு போய்டுவாரு. ஐயர் சொல்றதை எல்லாம் முழுமனசோட செய் குறிஞ்சி…” என்றாள் சுபாஷினி. தங்கையின் கழுத்து மாலையை சரி செய்வதை போல.
“மாலை ரொம்ப வெய்ட்டா இருக்குது. கழுத்து வலிக்குது சுபாக்கா…” என சொல்ல,
“உன்னோட முடியலைடி. கொஞ்சம் நேரம் பொறுத்துக்க…”
“கொஞ்ச நேரமா? உன் கல்யாணத்துல அன்னைக்கு முழுக்க போட்டுட்டு தான இருந்த?…”
“ஐயோ ஆமா, இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்க. உனக்கு கல்யாணம் பன்றதுக்குள்ள என்னை ஒரு வழி ஆக்கிட்ட…”
“இப்படி கல்யாணம் பண்ணினா?…” என அதற்கும் பதில் கொடுக்க தவறவில்லை குறிஞ்சி.
அதன் பின் அவ்வப்போது சுபாவை படுத்திக்கொண்டே எல்லா சடங்குகளையும் செய்து முடிக்க குறிஞ்சியை தவிர அனைவருக்குமே மனதில் அப்படி ஒரு நிம்மதியும், நிறைவும்.
ஹோமகுண்டத்தை இருவும் சுற்றி வர அவனின் கையோடு கை கோர்த்திருந்தவளுக்கு அவன் கை கொடுத்த அழுத்தம் லேசாய் வலிக்க,
“சுபாக்கா, கை வலிக்குது. இறுக்கமா புடிச்சுட்டாரு ஓனர்…” என அதை சொல்லி வேறு புலம்ப சுபாஷினிக்கு மயக்கம் வராத குறை தான்.
குறிஞ்சிக்கு எல்லாமே குறை தான். ஒவ்வொன்றாய் குற்றம், நொட்டை சொல்லியபடியே இருந்தாள்.
மதிய உணவு நேரம் வரை விருந்தினர்கள் மாற்றி மாற்றி வந்துகொண்டிருக்க அவர்களுடன் போட்டோவுக்கு நின்றே களைத்து போனாள்.
லேசாக அமரின் கை அவளின் மேல் உரசினால் கூட அவனை முறைத்துவிட்டு தள்ளி நிற்க அவனுக்கு அதில் புன்னகையே வந்தது. அதை கண்ட சுபாஷினிக்கு கவலை இன்னும் அதிகமானது.
‘இன்னைக்கு நைட் இந்த பொண்ணு என்ன செய்ய காத்திருக்காளோ?’ என சுபாவிற்கு தான் அந்த பதட்டம் எல்லாம்.
“சுபாக்கா எப்போ வீட்டுக்கு போவோம். நின்னு நின்னு கால் வலிக்குது…” என்றாள் குறிஞ்சி.