தனது திருமணத்தில் கொஞ்சமும் சோர்வின்றி ஓடியாடி போட்டோக்களுக்கு விதவிதமாய் போஸ் கொடுத்து என ஒரு கலக்கு கலக்கியவள் இப்போது மனதில் கொஞ்சமும் உற்சாகமின்றி பேசுவதை சஞ்சலத்துடன் பார்த்தாள்.
“சாப்பிடனும்டா. எல்லாரும் கிளம்பவும் நல்ல நேரம் பார்த்து கிளம்பனும்…” என சொல்ல,
“ஹ்ம்ம்…” என்றவள்,
“சுபாக்கா நான் போட்டோல எப்படி இருப்பேன்னு தெரியலை. இந்த ஓனர்…”
“ப்ச், இப்ப அவர் உன் புருஷன். மரியாதை…”
“ஆமா பெரிய புருஷர்ர்ர்ர்…” என ராகம் போட,
“கூப்பிட்டியா?…” என்றான் அவளிடம் திரும்பி.
“இல்லியே? ஏன் நான் சொன்னது கேட்டுருச்சா?…” என கேட்க அமர்நாத் சிறு தோள் குலுக்கலுடன் திரும்பிக்கொள்ள,
“குறிஞ்சி. சொதப்பாத. கொஞ்சம் நேரம் பேசாம இரேன்…” என்றாள் சுபாஷினி.
“சுபாக்கா, எனக்கு என்ன செய்யறேன்னு தெரியலை. நிஜமா ரொம்ப டயர்ட். தூங்கனும் போல இருக்குது. என்னவோ பண்ணுது…” என அயர்ந்து போய் சொல்ல சுபாஷினி பதில் சொல்லும் முன்னர்,
“முதல்ல ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிங்க. இன்னும் கொஞ்சம் நேரத்துல வீட்டுக்கு கிளம்பனும். நேரமாச்சு…” என்று வந்தார் சாரதா.
“வா போகலாம்…” என சுபாவுடன் செல்ல போக,
“இருடி. அமரும் வரட்டும்….” என்று சேர்ந்து சென்றனர்.
சாப்பிட்டு முடித்த ஐந்து நிமிடத்தில் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர். பெண் வீடும், மாப்பிள்ளை வீடும் மேலேயும் கீழேயும் இருக்க சட்டென முடிந்தது அந்த சடங்கும்.
முதலில் அமரின் வீட்டிற்கு சென்று விளக்கேற்றி பால் பழம் சாப்பிட்டு முடித்து மீண்டும் கீழே வந்து அங்கேயும் பால் பழம் சாப்பிட்டு முடிக்க சாரதாவுக்கு ஒரே சிரிப்பு.
சிறிது நேரம் அங்கே அமர்ந்திருந்தவன் உறவுகள் மத்தியில் சங்கடத்துடன் இருக்க,
“அமர் நீங்க வேணும்னா மேல ரெஸ்ட் எடுங்க…” என்று அவனை காப்பாற்றிவிட்டான் பரமேஸ்வரன்.
“தேங்க் காட்…” என்று அவனும் எழுந்து செல்ல குறிஞ்சியை தேடினான்.
“அவ இங்க இருக்கட்டுமப்பா. நீ வா…” என்று அவனுடன் மாடிக்கு சென்ற சாரதா,
“இனி நீ குறிஞ்சி வீட்டு சாப்பாட்ட அடுத்த வீட்டு சாப்பாடுன்னு சாப்பிடாம இருக்க முடியாது. ஏனா அது இனி உன் மாமியார் வீட்டு சாப்பாடு…” என்று சிரிக்க,
“இது ஒரு சந்தோஷமா? போங்கம்மா…” என்று உள்ளே சென்றுவிட்டான்.
கீழே குறிஞ்சி தான் சுபாஷினியை வைத்துக்கொண்டு அமர்ந்து புலம்பிக்கொண்டு இருந்தாள்.
“மறுவீட்டை பார்த்தியா சுபாக்கா? உன் கல்யாணத்தப்போ இங்க இருந்து எல்லாரும் பஸ்ல போனோம். எவ்வளவு ஜாலியா போய் உன்னை அங்க விட்டுட்டு திரும்ப விருந்துக்கு வந்து கூட்டிட்டு வந்தோம்?…”
“அதுக்கென்னடி? அவர் ஊர் திருநெல்வேலி. அதனால போனோம்…”
“அதுக்கென்னவா? நான் மறுவீடு போய்ட்டு இங்க வந்தது விவேக் மேல வேலை இருக்குன்னு மாடிக்கு போய்ட்டு ஒன்னுமில்லைன்னு போன வேகத்துல உடனே கீழே வருவார் பாரு. அந்த எபெக்ட் குடுக்குது…” என்று சொல்லவும் சுபாஷினி வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க,
“நீ சிரிப்ப, ஏன் சிரிக்கமாட்ட? இருக்குது உன் வீட்டுக்காரருக்கு ஒரு நாள் இருக்குது…” என்று உறுதிமொழி எடுக்க,
“சரி கொஞ்சம் நேரம் தூங்கு. சாயங்காலம் சடங்கு இருக்குது…” என்று சொல்லவுமே குறிஞ்சியின் முகம் கலவரமாகியது.
“சுபாக்கா…” என,
“என் பேர் வெறுத்துருச்சு போ. சும்மாவே ஆயிரம்வாட்டி சொல்லுவ. இந்த கல்யாணம் பேசினதுல இருந்து நொடிக்கு லட்சம் தடவை கூப்பிடற…” என சொல்ல,
“நீ ஏன் அதை ஞாபகப்படுத்தின?…” என்றவள் அப்படியே அமர்ந்திருக்க,
“நீ கொஞ்சம் நேரம் தூங்கி எழும்பு. அப்போதான் மைன்ட் ப்ரெஷா இருக்கும்…” என்று சொல்ல,
“சரி, கூட இரு. அம்மா கூப்பிட்டாங்கன்னு போகாத…” என்று சுபாவின் கையை பிடித்தபடி படுத்தவள் படுத்த நொடி உறங்கி போனாள்.
மாலை ஆறுமணிவாக்கில் தான் எழுப்பவே முடிந்தது அவளை. வனஜா அழைக்க அழைக்க புரண்டு புரண்டு உறங்கிக்கொண்டு இருந்தாள்.
“சுபா, மாப்பிள்ளை ரெடியாகி கீழே வந்துட்டாரு. என்னால இன்னைக்கு திட்டவும் முடியலை. இவ என்ன இன்னும் எழுந்துக்காம…” என பதற,
“நானும் எழுப்பறேன். கேட்க மாட்டேன்றா…” என சொல்ல,
“குறிஞ்சிக்கா, மாமா கூப்பிடறார்…” என்று அவினாஷ் எழுப்பவும் தான் கண் விழித்தாள்.
“உன் புருஷனை நினைச்சா தூக்கம் கூட வரமாட்டிக்குது எனக்கு…” என சுபாவை திட்டிக்கொண்டே முகம் கழுவி வர,
“போய் குளிச்சுட்டு வா. கோவிலுக்கு போகனும்…” என்று அவளை அனுப்பி குளித்து வந்ததும் புது புடவை கட்ட வைத்து தயாராகி வெளியே அழைத்து வர பரமேஸ்வரனுடன் பேசிக்கொண்டிருந்தான் அமர்நாத்.
“போகலாம்…” என சுபா சொல்லவும் அவினாஷையும் கூட்டிக்கொண்டு நால்வருமாக அருகே இருந்த கோவிலுக்கு சென்று வந்தனர்.
அமர்நாத் காரில் தான் சென்றிருந்தனர். சுபாவுக்கு தங்கையின் பழைய பேச்சை எண்ணி உள்ளுக்குள் சிரிப்பு பொங்கினாலும் வெளியே காண்பிக்கவில்லை.
அமர்நாத் முன்னால் ட்ரைவர் சீட்டில் அமர்ந்துகொள்ள அவினாஷ் பின்னால் ஏறவுமே அவனுடன் குறிஞ்சியும் ஏறிக்கொள்ள எல்லோரும் வேடிக்கை பார்ப்பதை கண்டு அவளை ஒன்றும் சொல்லவும் முடியவில்லை.
பரமேஸ்வரன் பல்லை கடித்தபடி முன்னிருக்கையில் அமர்நாத்துடன் அமர்ந்துகொண்டான்.
அவனுக்கேதும் இதில் கோவம் இருக்குமோ என்னும் விதமாய் பேச்சு கொடுக்க அமர்நாத் எதையும் காண்பித்துகொள்ளாமல் சாதாரணமாகவே பேசினான்.
வீடு வந்ததும் நேராக அமர்நாத் தன் வீட்டிற்கு செல்ல குறிஞ்சியும் சுபாவிடம் முரண்டிக்கொண்டே சென்றாள்.
“நம்ம வீட்டுல தானே இருந்தேன்?…” என்று கேட்க,
“நாளைக்கு தான் நம்ம வீட்டு விருந்து. இன்னைக்கு நீ அங்க தான் இருக்கனும்…” என சொல்லி அங்கே விட,
“கூட இரு சுபாக்கா…” என அவளை விடவே இல்லை.
அனைவருக்கும் இரவு உணவு மேலே அமர்நாத் வீட்டில் என்பதால் சாப்பிட்டு முடித்ததும் நல்ல நேரம் பார்த்து குறிஞ்சியை இரண்டாம் மாடியில் அமர்நாத் இருக்கும் வீட்டிற்கு அனுப்ப,
“வேணா சுபாக்கா. ப்ளீஸ், சொல்றதை கேளேன்…” என பயந்துகொண்டே வர,
“நீ கேளு குறிஞ்சி. இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள். இந்த கல்யாணம் எப்படி வேணாலும் நடந்திருக்கட்டும். ஆனா நீங்க வாழ்க்கையை ஆரம்பிக்கிறது சந்தோஷமா ஆரம்பிக்கனும்…”
“சும்மா என்னை சமாதானம் செய்ய சொல்லாத சுபாக்கா….”
“நான் நிஜமா தான் சொல்றேன் குறிஞ்சி. உன் கோபத்தை எப்போ வேணாலும் காட்டலாம். எப்போ வேணாலும் சண்டை போடலாம். ஆனா எப்பவும் இந்த நாளும் இந்த நேரமும் வராது. முதல் இரவுன்னு ஒன்னு அன்னைக்கு மட்டும் தான்….”
சுபா தன்னால் முடிந்தமட்டும் குறிஞ்சிக்கு எடுத்து சொல்ல அவள் கேட்டுக்கொண்டு தான் இருந்தாளே தவிர ஒரு பிரதிபலிப்பும் இல்லை.
“நான் கிளம்பவா? நான் போகவும் தான் அமர் வருவார்….”
“அப்ப நீ இங்கயே இரு சுபாக்கா…” என கையை பிடித்துக்கொள்ள,
“நீ என்ன சின்ன பிள்ளையா? ஒன்னொண்ணுக்கும் அடம் பண்ணிட்டு? இது உன் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நாள். புரிஞ்சுக்கோ குறிஞ்சி. நம்ம குடும்பத்துக்கும் அதுதான் சந்தோஷம்…” என்றாள் சுபாஷினி. அதுவரை அமைதியாய் இருந்தவள்,
“ட்ரை பன்றேன் சுபாக்கா…” என்றாள் கண்ணை மூடி.
“சமத்துடி…” என்று தங்கையை அணைத்து விடுவித்தவள் கீழே கிளம்பிவிட்டாள்.
சுபாஷினி சென்றதும் அந்த வீட்டின் முகப்பிலேயே நின்றிருந்தவள் பின் மெதுவாய் அதனை சுற்றி பார்த்தாள்.
கீழ் வீடு இரண்டும் விசாலமாக மூன்று படுக்கை அறைகளை கொண்டிருந்தது. ஆனால் இந்த வீடோ மிக பெரிய ஹால், ஒரே ஒரு பெரிய படுக்கை அறை, அங்கேயும் கிட்சன். அதில் கேக் செய்ய தேவையான உபகரணங்கள், பின்னால் பெரிய பால்கனி. இன்னொரு உடற்பயிற்சி அறை. இப்படி இருந்தது அந்த வீடு.
“இங்கயே கல்யாணத்தை முடிச்சிருந்திருக்கலாம் போல. மினி பார்ட்டி ஹால் மாதிரி இருக்கே…” என்று சுற்றி வந்தவள் அந்த படுக்கையறையை எட்டி பார்ப்பதும் பின் மனதை திருப்பி வேறு பக்கம் செல்வதுமாக நடந்துகொண்டிருந்தாள்.
மீண்டும் பால்கனிக்கு சென்று ஹாலிற்கு வர அங்கே கதவை பூட்டிக்கொண்டு நின்றான் அமர்நாத்.
பார்த்ததுமே பக்கென்று ஆக அவளை பார்த்துக்கொண்டே கிட்சனிற்கு சென்று ஒரு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்து குடித்தபடி வந்தான்.
“பால்கனி டோரை லாக் பண்ணுனியா?…” என அவளிடம் கேட்க,
“ம்ஹூம், இல்லை…” என்றாள்.
அதுவரை இருந்த தைரியம் மொத்தமும் பறந்துவிட்டிருக்க அந்த அசாதாரண சூழ்நிலையை ஏற்க முடியாமல் மனது அச்சக்குரல் எழுப்பியது.
“எப்பவும் அதை ஓபன் பண்ணினா வேலையை முடிச்சுட்டு திரும்ப லாக் பண்ணிடனும். புரியுதா?…” என தீவிரமாக பாடம் எடுக்க,
‘இவன் என்ன ரூல்ஸ் பாலோ பண்ண சொல்றான்?’ என பீதியாகி பார்த்தாள்.
அத்தனை பொறுப்பு எல்லாம் கிடையாதே அவள். கதவை லாக் செய்வதை கூட, அதிலும் இரண்டாம் மாடியில் இருக்கும் கதவை பூட்டுவதை பற்றி சிரத்தை எடுத்து சொல்ல ‘வகையாக மாட்டினோம்’ என்று தோன்றியது.
“போய் லாக் பண்ணிட்டு ரூம்க்கு வா…” என்று சொல்லிவிட்டு செல்ல,
“குறிஞ்சி, உனக்கு இப்படியாடி அமையனும்? இப்ப கூட அதை செய்யாதே இதை செய்ன்னு வேலை சொல்றானே…” என முணுமுணுத்தபடி கதவை அடைத்துவிட்டு விளக்கை அணைக்காமல் சென்றவள் பின் அதற்கும் சொல்வானோ என்று அணைத்தாள்.
ஹால், கிட்சன் என்று அந்த விளக்குகளையும் அமர்த்தி கதவுகளை பூட்டிவிட்டு வந்தவள் பெட்ரூமின் வாசலிலேயே நிற்க,
“குறிஞ்சி…” என்றான் உள்ளிருந்து.
“போச்சு..” என்று பதறி,
“போனதும், பேசாம தூங்கிடனும். குறிஞ்சி ஒரே ஓட்டம், போய் குப்புற படுத்துரு…” என மனதிற்குள் சொல்லியபடி அறைக்குள் நுழைந்தாள்.
சர்வ அலங்காரத்துடன் அந்த அறை இருக்க கண்ணை கட்டிக்கொண்டு வந்தது அங்கிருந்த அமர்நாத்தை பார்த்ததும்.
“அங்கயே ஏன் நிக்கற? வந்து உட்கார்…” என தன்னருகே கட்டிலை காண்பித்து சொல்ல எச்சிலை கூட்டி விழுங்கினாள்.
“என்ன?…” என்றான் அவனும் எழுந்து நின்று.
வெளியே ச்சோவென்று மழை பிடித்துக்கொள்ள ஜன்னலை இழுத்து சாற்றியவன் மீண்டும் அவளை பார்க்க,
“பேசனும்…” என்றாள் குறிஞ்சி. அவனின் பார்வையினால் உண்டான உணர்வில்.
“இப்பவா?…” என்றான் புருவம் உயர்த்தி.
“ஆமா, இல்லைன்னா நான் மறந்திருவேன்…” என்று ஜன்னலருகே சென்று நின்றுகொள்ள அவளுக்கு வியர்த்தது. தானும் வந்தவன் ஒரு பக்கம் மட்டும் ஜன்னலை திறந்துவிட்டவன்,
“ஓஹ், சரி சொல்லு. என்ன? ஆனா டைம் ஆச்சு…” என்றான்.
“பேசவும் டைம் பார்ப்பீங்களா? ஆனா நான் நிறைய பேசுவேன். தெரியும் தானே? தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிட்டீங்க. இப்ப டைம் ஆச்சுன்னு சொல்றீங்க?…” என்று படபடவென பேச,
“ஹ்ம்ம்…” என்றபடி கையில் இருந்த வாட்ச், கை காப்பு, ஷர்ட் என்று ஒவ்வொன்றாய் கழற்ற வைத்துவிட்டு அவளை நெருங்கி நின்றான்.
“பக்கத்துல வந்து நிக்காதீங்க. பேச முடியாது?…” என திணறி சொல்ல,
“அப்படியா?…” என்றவனின் கண்களில் அப்பட்டமான விஷமம்.
குறிஞ்சியின் நா வறண்டு பேச்சு வருவேனா என்று முரண்டு பிடிக்க புதிதாய் உண்டான குறுகுறுப்பில் அவனிடம் இருந்து பார்வையை அகற்றி வேறுபக்கம் பார்க்க அவளின் முகம் பற்றி திருப்பினான்.
“பேசனும்னு சொன்ன? இப்ப வேறே எங்கையோ பார்க்கற? என்னை பாரு. பேசு. நான் கேட்கலைன்னு சொல்லலையே…” என்றவன் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் இதழொற்றினான்.
அவளின் முகத்தை தன் இரு கைகளுக்குள் அணைத்துக்கொண்டவன் நெற்றியில் துவங்கி சின்ன சின்னதாய் அவளின் முகத்தில் பூத்திருந்த வியர்வை முத்துக்களுக்கு முத்தம் வைக்க குறிஞ்சிக்கு ஸ்தம்பித்த நிலை தான்.
“பேசறேன்னு சொன்ன? இப்போ இப்படி திகைச்சு போய் நிக்கற? பேசலையா?…” என்றான் தன் அதரங்களின் ஊர்வலத்தை தொடர்ந்தபடி.
அவளின் பேச்சற்ற நிலையில் அவளின் இதழ்களை லேசாய் அவன் உரச மீசை முட்களின் நெருக்கத்தில் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டவளின் கைகள் அவனின் உள்பனியனை கெட்டியாய் பிடித்துக்கொண்டது.
“குறிஞ்சி…” என்றவனின் மெல்லிய அழைப்பில் கண்களை திறவாமலே,
“என்ன பன்றீங்க?….” என்றாள் மெதுவாய்.
“தெரியலையா?…” என பதில் கேள்வி எழுப்ப,
“ம்ஹூம்…”
“அப்போ தெரிஞ்சிக்கோ…” என்றவன் அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.
“அமரபுஜங்கன், எனக்கு சரியாதான் பேர் வச்சிருக்க…” என சொல்ல ஐயோ என்றானது.
அவனை அப்படியும், அவனின் கைகளில் இத்தனை நெருக்கத்தில் தன்னை இப்படியும் பார்க்க முடியாமல் கூச்சம் பிடுங்கியது பெண்ணவளை.
‘ஓனர், இப்படி பன்ற? நீயாடா இது?’ என ஆச்சர்யம் ஒருபுறமும், அவஸ்தை ஒருபுறமும் மின்னலென அவளை தாக்கியது.
அவனை விட்டு விலகி இருக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் தூரே சென்று அடுத்து என்ன செய்வானோ என்னும் பய உணர்வு அவளை ஆட்டிப்படைத்தது. அவனின் நெருக்கம் ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் படுத்த,
“உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே?…” என்றாள் மீண்டும் அவனை, அவனின் செயலை தடை செய்யும் விதமாய்.
“நான் எப்போ அப்படி சொன்னேன்?…” என கேட்டவன் அவளின் நெற்றியில் லேசாய் முட்டி,
“பிடிக்காம பொண்ணு கேட்கவும் மாட்டேன். கல்யாணம் பண்ணவும் மாட்டேன் குறிஞ்சி. ட்ரஸ்ட் மீ…” என சொல்ல அடுத்த கேள்வி கேட்கும் முன் அமர்நாத் அவளை முழுதாய் தன் அணைப்பில் கொண்டு வந்தான்.
சடுதியில் அவனின் தீண்டல்களின் பயணம் வேறு வகையில் இருக்க அவனை விலக முடியாமல் கணவனாய் அவனை மனதில் பதிய வைக்கவும் முயன்றுகொண்டிருந்தாள்.
விரல்களை மடக்கி தன்னை முதலில் சமன் செய்ய பார்க்க அவளை அதற்குள் பெரும் சுழலுக்குள் இழுத்து சென்றான் அமர்நாத்.
“ஹைய்யோ ப்ளீஸ் அமர்…” என்றவளின் முணங்கலில் அவளின் முகத்திற்கு நெருக்கமானவன்,
“குறிஞ்சி, இங்க பாரு. என்னை பாரு….” என கன்னம் தட்டி அழைக்கவும் விழி திறக்க அவளின் கண்களில் முத்தமிட்டவன்,
“உனக்கு ஓகே தானே?…” என கேட்க அவனுக்கு என்ன பதில் சொல்லவென தெரியாமல் தடுமாறினாள்.
அவள் அப்படி விழித்ததில் லேசாய் புன்னகைத்தவன் அவளிதழில் குட்டியாய் முத்தமிட்டு,
“கஷ்டமிருக்காது. நான் பார்த்துக்கறேன். பயப்பட கூடாது. ஓகே…” என மென் புன்னகையுடன் சொல்ல அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவனின் சிரிப்பை ஒருநொடி திகைத்து தான் பார்த்தாள்.
அந்த புன்னகை அவளை அழகாய் கவர்ந்தது. இத்தனை வருடத்தில் அவன் அவளிடம் காட்டும் முதல் புன்னகை. அந்த நொடி முத்தாய்ப்பாய் இருக்க அவனை இன்னும் அதிசயமாய் பார்த்தாள்.
“ஹேய் இதென்ன பார்வை?…” என்றவன் அவளின் கன்னங்களோடு உரச தன்னுணர்வு வந்தவள் பாவனையை தனக்குள் உள்வாங்கியவன் அடுத்து வந்த அவளின் ‘ப்ளீஸ்’ எல்லாம் தனது ‘ஹ்ம்ம்’ என்னும் முணுமுணுப்பில் பத்திரமாய் ஒளித்துக்கொண்டான்.
மொத்தமாய் அவனின் ஆளுகையில் குறிஞ்சி நெகிழ்ந்து, கரைந்து, கண்மூடிய பின்பு தான் அவளில் இருந்து விலகினான் அமர்நாத்.
“இதுக்கு போய் பயந்துட்டு அத்தனை ப்ளீஸ் சொல்ற?…” என்று வேறு சொல்லி அவளை தோள் சாய்த்துக்கொள்ள நடந்து முடிந்துவிட்டதை இன்னும் நம்பமுடியாமல் இன்னும் அந்த வியப்பிலேயே இருந்தாள்.
“காலையில கோவிலுக்கு போகனும் குறிஞ்சி. தூக்கம் வரலையா?…” என்று அவளின் கன்னக்கதுப்பை பெருவிரலால் வருட ஒன்றும் பேசாமல் கண் மூடினாள் அவள்.
அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாத நாணம், அவனின் அணைப்பில் தானிருக்கும் நிலை என்று எதுவும் அவளை பேசவிடாமல் செய்தது.
‘இவனும், பேசாம என்னையும் பேச விடாம இப்படி பண்ணிட்டானே? இவன் சரியான கேடி ஓனர்’ என அவனை மனதிற்குள் எண்ணியபடி உறங்கியும் போனாள்.
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர் குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளி தான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும் பொழுது
மூங்கில் காடென்று ஆயினல் மாது