குளிர் – 9
சுபாஷினி காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்டவள் வனஜாவிற்கு உதவியாக இருந்தாள்.
வீட்டில் சில நெருங்கிய உறவினர்கள் இன்னும் தங்கியிருக்க அவர்களுக்கு தேவைனவற்றை செய்துகொடுக்கவேண்டுமே? அதனால் காலை நேரம் பரபரவென்று இருந்தது.
“சுபா, இந்த பொண்ணு எப்படி இருக்கான்னு தெரியலை? எழுந்து குளிக்க சொல்லனும். காலை சாப்பாடு முடிச்சுட்டு கோவிலுக்கு போகலாம்னு நினைச்சா முதல்ல கோவிலுக்கு போய்ட்டு வந்திருவோம்னு சாரதா சொல்றாங்க….”
“ம்மா அவங்க சொல்ற மாதிரியே செய்வோம். இப்போ என்ன? நீங்க வீட்டுல இருக்கறவங்களை சாப்பிட வைங்க. நாங்க எல்லாரும் போய்ட்டு வரோம்…” என்று சுபாஷினி சொல்லவும்,
“ஹ்ம்ம், ஆனாலும்…”
“என்ன ஆனாலும்? வெளில தான சொல்லிருக்கோம். அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க பார்த்துக்கோங்க. இல்லைன்னா நீங்க கோவிலுக்கு போய்ட்டு வாங்க. நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்ல,
“நேத்து உன் நாத்தனார் என்கிட்டே பேசிட்டு இருந்தாங்க…”
“என்னவாம்?…”
“என்ன என்னவாம்? கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு, இன்னும் குழந்தைக்கு தள்ளி போடறது நல்லாவா இருக்குன்னு சொல்றாங்க…”
“ஓஹ்…” என்றாள் அவள்.
“என்னடா?…” என்ற தாயின் இறைஞ்சுதல் பார்வையில்,
“நாங்க பார்த்துக்கறோம்மா. உங்ககிட்ட திரும்ப பேசினா நான் சொல்லிருக்கேன்னு மட்டும் சொல்லுங்க…”
“எங்களுக்கும் ஆசை இருக்காதாடா? இப்ப பாரு குறிஞ்சிக்கும் கல்யாணம் ஆகிடுச்சு…”
“ஹ்ம்ம், புரியுதும்மா…” என்றவள் பேச்சை முடிப்பதை போல அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
பரமேஸ்வரன் கேட்டுக்கொண்டதன் பெயரில் இரண்டு வருடம் குழந்தையை தள்ளி போட நினைக்க இப்போது எதிர்பார்க்கும் நேரம் தாமதமாகியது.
இதை சொல்லி புரியவைக்க முடியாமல் சுபாஷினி மௌனமாகவே இந்த பேச்சுக்களை கடந்துவிடுவாள்.
“சுபா மணி ஆறாகிடுச்சு. இவ என்ன இன்னும் கீழே வரலை? கேளேன்…” என சொல்ல பரமேஸ்வரனிடம் தான் வந்தாள்.
“குறிஞ்சி போன் கீழே இருக்குது. நீங்க அமருக்கு கால் பண்ணுங்களேன்…” என சொல்ல,
“அமர் காலையில மாடில எக்ஸர்சைஸ் பண்ணிட்டிருந்தார். இப்ப தான் கீழே நானும் அவரும் இறங்கி வந்தோம். குறிஞ்சி எழுந்திருப்பான்னு நினைச்சேனே?…” என அவன் சொல்ல,
“ஹைய்யோ…” என்று தலையை பிடித்தவள்,
“நீங்க கால் பண்ணி குறிஞ்சிட்ட குடுக்க சொல்லுங்க…” என சொல்லவும் பரமேஸ்வரனும் அமருக்கு அழைத்தான்.
“சொல்லுங்க பரமேஸ்…” என்று எடுத்ததும் சொல்ல,
“அமர், சுபா குறிஞ்சிட்ட பேசனும்னு சொன்னா…”
“ஓஹ்…” என்றவன் அங்கே இன்னும் ஆழ்ந்த நித்திரையில் இருந்த குறிஞ்சியின் மீது படிந்தது. இதழ்களில் குறுநகை பிறக்க,
“கொஞ்சம் நேரத்துல நானே குறிஞ்சியை கூப்பிட சொல்றேன்னு சொல்லுங்க. ஓகே…” என்று சொல்லி வைத்துவிட,
“இன்னும் குறிஞ்சி எழுந்துக்கலைன்னு நினைக்கேன். கூப்பிட சொல்றேன்னு சொல்லி வச்சுட்டார்…” என்றவன் பேப்பர் படிக்க அமர்ந்துவிட்டான்.
போனை வைத்துவிட்டு குறிஞ்சியிடம் வந்தவன் அவளை தொட்டு எழுப்ப இந்த பக்கத்தில் இருந்து அந்தபக்கம் புரண்டு படுத்தவள்,
“ப்ளீஸ். தூங்க விடுங்க…” என்ற முணங்கலுடன் சொல்ல,
“எல்லாத்துக்குமே நீ ப்ளீஸ் சொல்லியே சாதிச்சுப்ப போல?…” என்ற அமரின் கணீர் குரலில் கண்ணை திறந்து பார்க்க பார்த்ததுமே அவனை முறைத்துவிட்டு முகம் திருப்பினாள்.
மனதிற்குள் ‘இந்த குரலை எத்தனை தடவை கிண்டல் செய்திருப்போம்’ என நினைக்க நொந்து போனாள்.
எழுந்து அமர்ந்தும் அவள் எதையோ யோசித்துக்கொண்டே அமர்ந்திருப்பதை பார்த்தவன்,
“குறிஞ்சி, எழுந்து குளிச்சுட்டு வா. கீழே கூப்பிடறாங்க உன் சுபாக்கா. நான் குளிச்சாச்சு. நீ தான் குளிக்கனும்…” என சொல்லி தலையை துவட்டியபடி அங்கிருந்த ப்ளேயரில் பாடலை செலெக்ட் செய்துகொண்டு நின்றான்.
‘இவனுக்கு கொஞ்சம் கூட வெக்கமாவே இல்ல. நான் தான் பீல் பன்றேன். இவன் என்ன இப்படி இருக்கான்? இல்லை இப்படித்தான் இருப்பாங்களா?’ என அவனையே பார்த்தபடி இருக்க,
“கோவிலுக்கு போகனும், இல்லைன்னா நானும் உன்னோட இன்னும் கொஞ்சம் நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணுவேன்…” என அவளை திரும்பி பார்த்து சொல்லிவிட்டு வேலையை பார்க்க குறிஞ்சி எழுந்து குடுகுடுவென பாத்ரூமில் நுழைந்துகொண்டாள்.
அவளின் ஓட்டத்தை முன்னால் இருந்து பார்த்தவனுக்கு சிரிப்பு பொங்க பாட்டை போட்டுவிட்டு தனக்கான உடையை எடுத்து அணிந்துகொண்டவன் தயாராகிய பின்பு தான் குறிஞ்சியின் உடை இன்னும் கீழே இருப்பதே ஞாபகம் வந்தது.
அவள் வரும் முன்னர் போய் அந்த பெட்டியை எடுத்து வந்துவிட வேண்டும் என்று கீழே இறங்க இங்கே குளித்துவிட்டு வந்தவளோ உடைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றது ஒரு நிமிடம் தான்.
கப்போர்டை திறந்து அமரின் உடையை எடுத்து அணிந்துகொண்டவள் வெளியேயும் சென்று யாரையும் அழைக்க முடியாமல் அறைக்குள்ளேயே இருந்தாள்.
“சுபாக்கா, ஒரு ட்ரெஸ் கூட எனக்கு எடுத்து வைக்காம என்னை மட்டும் கொண்டுவந்து விட்டுட்டு போய்ட்ட நீ. இரு வந்து வச்சுக்கறேன்…” என அக்காவை போட்டு மனதில் தாளிக்க,
“குறிஞ்சி…” என்று அவளின் பெட்டியோடு வந்தவனோ அவனுடையில் அவளை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான்.
“ட்ரெஸ் இல்லை, அதான் இப்போதைக்கு…” என்றவள் அவனின் கையில் இருந்த பெட்டியை பார்த்துவிட்டு,
“ஹப்பா நீங்களாச்சும் கொண்டு வந்தீங்களே…” என வேகமாய் வந்து அதை வாங்கி கட்டிலில் வைத்து பெட்டியை திறந்தாள்.
இருவருக்கும் முதல் நாள் தான் திருமணம் ஆகியிருக்கிறதென்று சொன்னால் நம்பமாட்டார்கள். அப்படி நடந்துகொண்டாள் குறிஞ்சி. அத்தனை இலகுவாக, வாய் குறையாமல் தெனாவெட்டுடன்.
அமர்நாத் கோவிலுக்கு கிளம்புவதை மறந்து அவளை பின்னால் இருந்து அணைத்துக்கொள்ள,
“எதையுமே சொல்லிட்டு செய்யமாட்டீங்களா ஓனர்?…” என்றாள் முகத்தை திருப்பி அவனை நிமிர்ந்து பார்த்து.
முதல் நாள் இருந்த படபடப்பு, பதட்டம் எதுவும் இன்றி சரளமாக பேச பேச அவனுக்கு அவளை எண்ணி ஆச்சர்யமாகவும் அதே நேரம் ஆசையாகவும் இருந்தது.
“என்ன சொல்லனும்?…” என்றவன் அவளின் நாடி பிடித்து அப்படியே நிறுத்தி நெற்றியில் முத்தமிட்டு இன்னும் இறுக்கமாய் அவன் அணைக்க,
“ட்ரெஸ் பண்ணனும். வெளில இருங்க ப்ளீஸ்…” என்று அவனின் கைகளில் நெளிந்தாள்.
“ப்ளீஸ் பண்ணனும்னு தோணலையே…” என்று அவளின் கழுத்தில் முகம் புதைக்க,
“ஆமா இந்த பெட்கவர் யார் மாத்தினா?…” என்றாள் அவனிடம் இருந்து தப்பிக்க பேச்சை மாற்ற,
“நான் தான். இங்க யாரும் வரமாட்டாங்க. நான் அலோவ் பண்ணினதில்லை…”
“அப்போ கீழே சமைக்க, மத்த வேலைக்கு வரவங்க?…”
“அது அம்மாவுக்கு முடியாது. அதனால எல்லாத்துக்கும் ஆள். ஆனா ஐங்க க்ளீனிங் எல்லாம் இதுவரைக்கும் நான் தான். இங்க எல்லா வேலையும் நாம தான் பண்ணனும்…” என்று விளக்கமாய் சொல்ல,
“நாமதான்னா?…” என்று கண்ணை விரித்து வாயை பிளந்தவளை பார்த்து,
“நாம தான்னா இதுவரை நானும், இனி நீயும் நானும்…” என்று சொல்லியவன்,
“தலையை காய வை. கோவிலுக்கு போய்ட்டு வந்து தான் சாப்பிடனும்னு அம்மா சொன்னாங்க…” என்று அவளை விட்டு விலகி அவளின் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்த பின்பு அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அவனின் அருகாமை ஏதோ ஒருவகையில் மனதிற்கு ஒகே என்றானது. ஆனால் அவனிடம் அதையும் தாண்டி நிறைய எதிர்பார்த்தாள்.
‘ரொம்ப ரிசர்வ் டைப்ன்னு இப்படி எல்லா பீலிங்கையும் உள்ளுக்குள்ளயே ரிசர்வ் பண்ணி வச்சிருக்கறவங்களை தான் சொல்லுவாங்களோ?’ என நினைத்தாள்.
குறிஞ்சிக்கு ஆயாசமாக இருந்தது. திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை என்றால் என்னென்னவோ கற்பனையுடன் இருக்க, இங்கே நடந்துகொண்டிருப்பதில் வெகுவாய் குழம்பினாள்.
மனது இப்படித்தான் இருக்குமோ என்ற யோசனைக்கு செல்ல அதனோடே புடவையை கட்டி முடித்து வெளியே வந்தவள் பால்கனிக்கு செல்ல மீண்டும் அமர்நாத் வந்துவிட்டான்.
“அம்மா பூ குடுத்தாங்க. டேபிள்ள வச்சிருக்கேன். எடுத்து வச்சுக்கோ…” என அவளிடம் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட சுபாஷினி வந்தாள் தங்கையை தேடி.
“இன்னுமா ரெடி ஆகற குறிஞ்சி?…” என்று வந்தவள் தங்கையை ஆராய்ச்சியாய் பார்க்க,
“சுபாக்கா ஒரு ட்ரெஸ் எடுத்து வைக்கமாட்டியா நீ? என்கிட்டே சொல்லிருந்தா நானே எடுத்துட்டு வந்திருப்பேன்ல. பப்பிஷேமா போச்சு….” என்று வந்ததும் முதலில் அதை கேட்க,
“பப்பி ஷேமா?…” என சிரித்தாள் சுபாஷினி.
“சரி, அமர் எப்படி பேசினார்? உன்கிட்ட நல்லபடியா நடந்துக்கிட்டாரா?…” என கேட்டு,
“நீ ஒழுங்கா பேசினியா?…” என்றாள்.
“போ சுபாக்கா, ஹஸ்பண்ட் கேட்டகிரி ரெண்டு. எக்ஸ்பட்டேஷன் என்னவோ காதலின் தீபம் ஒன்று, ஏற்றினாளே என் நெஞ்சில். இதுக்கு வாய்ப்பில்லை ராஜான்னு எனக்கே தெரியும்….”
“ஆனா நடந்திருக்கவேண்டிய ரியாலிட்டி வாடி பொட்ட புள்ள வெளியே, வாலிபத்த நோகடிச்ச கிளியே. ஆனா இதுக்கும் வாய்ப்பில்லை ராஜா தான். இந்த ரெண்டு கேட்டகிரிலையும் ஓனரை சேர்க்க முடியலை. நான் நினைச்சதும் நடக்கலை…” என அவளாய் புலம்ப,
“என்னடி சொல்ற?…” என குழம்பி,
“எல்லாம் ஓகே தானே குறிஞ்சி? ஒன்னும் பிரச்சனை இல்லையே?…” என,
“என்ன ஓகே, பேசலாம்ன்னு இருந்தேன். அந்த ஓனர் என்னை பேசவே விடலை தெரியுமா? அவர் பாட்டுக்கு வந்து, வந்ததும்…” என படபடவென்று சொல்லி நிறுத்தியவள்,
“சுபாக்கா இதெல்லாம் நீ கேட்காத. நான் சொல்லமாட்டேன். சீக்ரெட்…” என்று சொல்ல சுபாஷினியின் சிரிப்பில்,
“அச்சோ, போ சுபாக்கா, நீ சரியில்லை…” என திரும்பி நின்றாள் அக்காவிற்கு முகம் காட்டாமல்.
“ஹேய் குறிஞ்சி குட்டிக்கு வெட்கம் வருதுடா…” என்று தங்கையை ஓட்டினாள் சுபா.
“சுபாக்கா…” என சிணுங்க,
“நேத்து என்னமோ சொன்ன? வெட்கம் கூட வரலைன்னு? இப்போ என்னவாம்? இரேன், இதை அப்படியே ஒரு போட்டோ உன் மொபைல்ல…” என்று தான் கொண்டுவந்த குறிஞ்சியின் மொபைலில் அதை போட்டோ எடுக்க முயல,
“சுபாக்கா வேணாம். போ போ…” என்றவள் அங்கிருந்து வீட்டிற்குள் ஓடி வந்து எதிரே வந்த அமர்நாத்தை இடித்து அவனின் முதுகின் பின்னால் சென்று நின்றுவிட்டாள்.
“எங்க இப்ப எடு பார்ப்போம்…” என்று அவனின் பின்னால் இருந்து எட்டி பார்க்க,
“குறிஞ்சி என்ன பன்ற?…” என்றவனுக்கு சுபாவின் முன்னால் சங்கடமாகிவிட,
“என்னை கலாய்க்கிறா சுபாக்கா. அதான்…” என அவனை பார்த்து குறிஞ்சி சொல்ல, அதை அப்படியே மொபைலில் படம் பிடித்தாள் சுபாஷினி.
“இப்போ இது இன்னும் நல்லா இருக்கே…” என சிரிப்போடு சொல்லிக்கொண்டு அவள் கீழே சென்றுவிட தன் பின்னால் இருந்தவளை இழுத்து முன்னே நிறுத்தினான்.
“இந்நேரம் என்ன விளையாட்டு? கிளம்புன்னு சொன்னேன்ல?…” என கேட்க,
“சும்மா தான். ஒண்ணுமில்லை…” என்று அவனிடம் இருந்து நழுவினாள். அவளின் பின்னே வந்தவன்,
“சீக்கிரம் கிளம்பு. நேரமாச்சு…” என சொல்லிவிட்டு அங்கே கட்டிலில் அவளை பார்த்தபடி அமர்ந்து கொள்ள குறிஞ்சி தலை வாரி தயாராகும் வரை அவள் செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தான்.
‘நீயெல்லாம் என்ன மேக் டா?’ என்று கத்த வேண்டும் போல இருந்தது குறிஞ்சிக்கு. ஆனாலும் அடக்கியபடி,
“இங்கேயே ஏன் இருக்கீங்க? கீழே போக வேண்டியது தானே?…” என்றாள் அவனின் பார்வையை உணர்ந்து.
“ஹ்ம்ம், போகலாம். ஆனா எல்லாரும் உன்னை கேட்கறாங்க. அதான் திரும்ப மேல வந்துட்டேன்…”
“ப்ச்…” என்றாள் சலிப்பாக.
தான் பார்த்த, படித்த கதைகள் எல்லாம் கண்முன் தோன்ற எந்த திருமண காலையும் இப்படி இருந்திருக்கிறதா என யோசனையுடன் தயாரானாள். அவனை வருகிறாயா என்றும் கேட்காமல் வேண்டுமென்றே தானே முன்னே செல்ல,
“உன்னை தேடி தான வந்தேன்? விட்டுட்டு போற?…” என்றவனிடம்,
“என்னை விட்டுட்டு நீங்களும் தான் கீழே போனீங்க. அப்போ எல்லாரும் என்னை கேட்டாங்கல்ல. இப்ப நான் போறேன். உங்களையும் எங்கன்னு கேட்கட்டும்…” என்று பேசினாள் இறங்கிக்கொண்டே.
“மொக்கை…” என்றான் அவளிடம் நேரடியாக.
“அப்படித்தான் பேச வரும். தெரியாமலா கல்யாணம் செஞ்சீங்க?…” என்றாள் பட்டென்று.
“பதிலுக்கு எப்பவும் இதையே தான் சொல்லுவியா? புதுசா யோசி….” என்றவன் அவளை விட்டு முன்னே கீழே இறங்கினான்.
“நில்லுங்க. அதான் நான் தான முதல்ல கீழே வந்தேன். நில்லுங்கன்றேன்ல…” என அவனை முந்திக்கொண்டு இறங்க நினைக்க,
“எல்லாரும் பார்க்க போறாங்க…” என்றவனின் பேச்சை காதில் வாங்காமல் அவனை இடித்துக்கொண்டு தான் இறங்க பார்த்தாள்.
“சொன்னா கேட்கமாட்டியா நீ? கோவிலுக்கு போறோமேன்னு தள்ளி இருந்தா ரொம்ப பேசற நீ…” என்றவன் மாடிப்படியின் வளைவின் மறைவில் அவளை இழுத்து அணைத்து பிடிக்க,
“இப்ப மட்டும் யாரும் பார்க்கமாட்டாங்களா? யாராச்சும் தேடி மாடிக்கு போனா?…” என்றவளின் பேச்சை நிறுத்தியவன் அவளை விட்டு விலகி குறிஞ்சியின் கன்னம் தட்டி,
“கொஞ்சம் நேரம் இப்படியே இரு. இல்ல திரும்பவும் கிஸ் பண்ணுவேன். யாரும் பார்க்கறாங்கன்னு நினைக்கமாட்டேன்…” என்று சொல்லி அவளின் கையை பிடித்து நடக்க,
“ஒன்னும் வேணாம்…” என கையை உருவ முயன்றாள்.
“சேர்ந்து போவோம். அதென்ன எனக்கு முன்னால நீ, உனக்கு முன்னால நான்? இதென்ன போட்டியா?…” என பேசி தன் வீட்டின் வாசலுக்கு வர அங்கிருந்தவர்களை பார்த்து பதில் சொல்ல நினைத்தவள் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.
பின் அனைவரும் கோவிலுக்கு கிளம்ப முதல் நாளை போலவே அன்றும் பின் சீட்டில் குறிஞ்சி ஏறிக்கொள்ள அவளுடன் அமர்நாத்தும் சேர்ந்துகொண்டான்.
“நீங்க கார் ஓட்டலை?…” என அவனிடம் கேட்க,
“உன் மாமா தான் அவர் ட்ரைவ் பன்றேன்னு சொன்னார். உனக்கென்ன அதுல கஷ்டம்?…” என்றான்.
அவன் அவளை சீண்டுகிறான் என்று தெளிவாய் தெரிந்தது குறிஞ்சிக்கு. ஆனாலும் மற்றவர்களுக்கு புரியாதே?
வெறுமனே பதில் சொல்வதை போலவே சாதாரணமாக இருக்க அவனின் கண்களில் பொங்கிய விஷமத்தை கண்டுகொண்டவள்,
“மூஞ்சி மாறாம எப்படி பேசறீங்க?…” என அவனிடம் கேட்க,
“கோவிலுக்கு போய்ட்டு நம்ம வீட்டுக்கு போகவும் எப்படின்னு சொல்றேன்…” என்றான் அவள் புறம் தலைசாய்த்து அவனும் கிசுகிசுப்பாய்.
“ஒன்னும் தேவை இல்லை…” என அவள் முகம் திரும்பிக்கொள்ள,
“நீ வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்ல சொல்ல தான் எதாச்சும் உனக்கு சொல்லிக்குடுக்கனும்னு தோணுது. என்ன பண்ண?…” என்று அவன் சிரிக்க,