“உங்களுக்கு சிரிக்கவெல்லாம் தெரியுதே?…” என்றவள்,
“எனக்கு எதையும் கத்துக்கனும்னு இல்லை…” என்றாள்.
காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷினிக்கும், பரமேஸ்வரனுக்கும் இருவரும் இணக்கமாக பேசிவருவதை போல ஒரு தோற்றம் தெரிய சுபாஷினிக்கு இன்னும் சிரிப்பு பொங்கியது.
பரமேஸ்வரனிடம் முதல் நாள் தங்கை செய்த ஆர்ப்பாட்டங்களை, பேச்சுக்களை சொல்லி புலம்பி இருந்தாளே? இப்போது அவர்கள் இருவருமாய் இவர்களை எண்ணி சிரித்துக்கொண்டனர்.
கோவிலுக்கு சென்று பூஜை முடித்துவிட்டு பிரகாரம் சுற்றும் நேரம் குறிஞ்சி சுபாவின் பின்னால் செல்ல போக அவளின் கையை பிடித்து நிறுத்தியவன்,
“என் கூட வா…” என்று கூடவே அழைத்து சென்றான்.
கோவிலில் இருந்து கிளம்பி வெளியே வந்து நிற்க பரமேஸ்வரன் அவர்களை இருக்கசொல்லிவிட்டு கார் எடுக்க சென்றான். உடன் சுபாவையும் கூட்டிக்கொண்டே.
“காருக்கு சேர்ந்து போனா என்னவாம்? இங்கயும் உங்க கூடவே…” என,
“உனக்கு வேற வழி இல்லை. என்னால வேற எந்த ஹெல்ப்பும் பண்ண முடியாது…” என்றான் அமர்த்தலாக.
“அதான் நீங்க பன்றதெல்லாம் தான் பண்ணீட்டீங்களே?…” என்று பொறும,
“கோவில்ல வச்சு எதை சொல்ற?…” என்றான் கண்கள் மட்டும் சிரிக்க. ஆனால் அவள் அவன் சொல்லியதை கவனியாமல்,
“அதான் இனி லைஃப் லாங் உங்க கூட தான இருக்க போறேன். அதே உம்மணா மூஞ்சி. அதே முறைப்பு. அதே விறைப்பு. ப்ச்…” என சலித்தவள் அவனின் நடை சட்டென நின்றுவிட கோவித்துக்கொண்டானோ என்று திரும்பி பார்த்தாள்.
அமர்நாத் பார்வை எங்கோ தூரத்தில் இருக்க அவளும் அதை தொடர்ந்து பார்க்க அங்கே கேசவனும், அவரின் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களில் இரு இளைஞரும் நின்றுகொண்டு இருந்தனர்.
“இந்தாளை முதல்ல அந்த தெருவை விட்டு துரத்தனும். எவன் காசு குடுத்தாலும் வீட்டை குடுத்துருவான்…” என்றாள் குறிஞ்சி கோபமாய்.
“ஏன்?…” என்று கேட்டுக்கொண்டே கேசவனை தான் பார்த்துக்கொண்டு நின்றான் அமர்.
“என்ன ஏன்? அதான் நீங்க கூட போய் சண்டை போட்டீங்களே? அந்தாள்ட்ட அதுக்கு முன்னவே நான் வீட்டுக்கே போய் சத்தம் போட்டேன்…”
“எதுக்கு?…” என்றான் அவன்.
அதே நேரம் சட்டென கேசவனும் பார்வையை அமர் இருந்த திசைப்பக்கம் திருப்ப பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஒரு ஆட்டோவை பிடித்து ஏறி அமர அவனின் புருவம் சுருங்கியது.
கேசவனுடன் இருந்த அந்த இளைஞர்களும் அமர்நாத்தின் பார்வையை கண்டு அச்சத்துடன் பைக்கை கிளப்பிக்கொண்டு திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே செல்ல,
“அந்த பசங்கல்ல இப்ப பின்னாடி உட்கார்ந்து நம்மளை திரும்பி பார்த்துட்டே போறான்ல. அவன் என்கிட்டே வாலாட்டினான். ரொம்ப அசிங்கமா பேசிட்டான். விட்டேன் ஒரு அறை. அன்னில இருந்து என் பக்கமே திரும்பலையே. ஆனாலும் மனசு ஆறலை. போய் சொல்லி வைக்க சொல்லி இந்தாள்ட்ட சொன்னா…”
“என்ன சொன்னான்?…”
“பசங்கன்னா அப்படித்தான்ம்மா இருப்பாங்க. நீ கண்டுக்காதன்னு எனக்கு சொல்றான். நல்லா நாலு கேள்வி கேட்டுட்டு தான் வந்தேன்…” என்று இன்னும் அந்த கோபத்துடன் சொல்ல,
“அதான் அந்த வேலையை பண்ணிருக்கானுங்க…” என்று சொல்லவுமே குறிஞ்சி நிமிர்ந்து பார்க்க,
“போட்டோஸ், மேரெஜ் டாக்குமென்ட் அனுப்பினது…”
“உங்களுக்கு எப்படி தெரியும்?…” என்றாள் கொதித்து போய்.
“தெரியும். எப்படி பண்ணினாங்கன்னு தான் தெரியலை. எனிவே பார்த்துக்கலாம். நீ வா…”
“என்ன வான்னு சும்மா சொல்றீங்க? உங்களுக்கு கோவம் வரலையா? ஊரெல்லாம் அசிங்கமா பேச வச்சு?…” என்று சத்தமாய் அவள் கத்த,
“குறிஞ்சி…” என இருக்கும் இடம் உணர்ந்து அதட்டினான்.
“வீட்டுக்கு போய் பேசிக்கலாம். இன்னும் எனக்கே முழுசா தெரியலைன்னு சொல்றேன்ல…” என்று சொல்லவும் அவனின் அதட்டலில் திடுக்கிட்டு பார்த்தவளை கண்டு தன் கோபத்தை குறைத்தவன்,
“ப்ச், ஓகே. வா…” என அவளின் தோளில் தட்டி கொடுக்க,
“வா வான்னா? எங்க வர? இன்னும் கார் வரலை…” என்று மூக்கு விடைக்க அவள் சொல்ல,
“ஓகே, ஓகே. சும்மா கார் வர வரை நடப்போம். இப்படிதானே வருவாங்க. பிக்கப் பண்ணிக்கட்டும். சரியா?…” என்று அவளின் முகம் நோக்கி குனிந்து புன்னகையுடன் சொல்ல கசிய இருந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தவள்,
“நீங்க அடிக்கடி சிரிக்கலாம்…” என்றாள் அவனிடம்.
“ஓஹ், வாவ். நான் சிரிச்சா உனக்கு புடிக்குதா?…” என்றான் அதே புன்னகையுடன்.
“நான் ஒன்னும் அப்படி சொல்லலை…” என அவள் மிடுக்காய் மறைத்து சொல்ல,
“ஹ்ம்ம், ஓகே…” என்று தோள் குலுக்கிக்கொண்டவன் அவளின் விரல் பிடித்து மெதுவாய் அங்கிருந்து நடக்க அதற்குள் காருடன் வந்துவிட்டான் பரமேஸ்.
“பார்க்கிங்க்ல ஒரு இஷூ. அதான் லேட்…” என சொல்லிவிட்டு கதவை திறந்துவிட இருவருமாய் ஏறி அமர்ந்தனர்.
குறிஞ்சி ஒன்றும் பேசாமலே வர அவளின் கையை எடுத்து தன் கையினுள் வைத்துகொண்டவன் லேசாய் அதனை வருடியபடி வர,
“இப்படி செஞ்சா நான் தூங்கிருவேன். கையை விடுங்க. அம்மா தூங்கிட்டே வரதை பார்த்தா திட்டுவாங்க…” என கையை உருவிக்கொள்ள,
“ப்ச், எப்ப பார்த்தாலும் விலகிக்கவே பார்ப்பியா? கை என்கிட்டையே இருக்கட்டும்…” என்று சொல்லிவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக்கொள்ள குறிஞ்சியால் அவனை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.
வீட்டிற்கு வந்து காலை உணவு முடிந்து சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்தினர் வந்துவிட மதிய விருந்து ஆரம்பமாக இருந்தது.
வெளியே போடப்பட்டிருந்த பந்தத்தில் ஆண்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அவர்களிடம் இருந்து தள்ளி வந்த அமர்நாத் கடையின் ஊழியர் ரகுவிற்கு அழைத்தான். அவனுடன் அசோக்கும் இருக்க,
“சொல்லுங்க அமர் தம்பி…” என்றவரின் குரல் கேட்டதும்,
“ரகு அண்ணே, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே?…” என்றான் அமர்.
“சொல்லுங்க. செஞ்சிருவோம். உங்களுக்கு இல்லாததா?…”
“நீங்க சொல்லி தான் கேசவன் இங்க இருந்த பசங்களுக்கு வேற வீடு பார்த்து குடுத்தது தெரிஞ்சது. இப்ப கொஞ்சம் நாளா அவரும் இங்க இந்த வீட்டுக்கு வரலை. இன்னைக்கு அந்த பசங்களோட அவரை பார்த்தேன்…” என்றவன் விவரத்தை சொல்லி,
“விஷயம் வெளில கசியாம விசாரிங்க. என் பேரும் வர வேண்டாம்…”
“அவ்வளவு தான? நம்ம பசங்க இருக்கானுங்க. தட்டிடறோம்…” என்று சொல்லி வைத்துவிட,
“உனக்கு தான் அந்தாள் மேல ஏற்கனவே டவுட் இருக்கே? அப்பறம் என்னடா?…” என அசோக் கேட்க,
“போலி டாக்குமென்ட் தயாரிச்சு அதுல குறிஞ்சியையும் ஏன் இழுத்தான்னு இத்தனை நாள் தெரியாம இருந்துச்சு. இப்போ தான் விவரம் சிக்குச்சு. அவக்கிட்ட வாலாட்டி வாங்கி கட்டிருக்கானுங்க. அந்த காண்டு…”
“சரி இப்ப தான் எல்லாம் நல்லவிதமா முடிஞ்சதே? அப்பறமும் எதுக்கு இந்த விசாரணை?…”
“முடிஞ்சது தான். ஆனாலும் போட்டோஸை விடு. அந்த டாக்குமென்ட். அதை சும்மா விடமுடியாது…” என்றவன் பார்வை பந்தலில் அமர்ந்திருந்தவர்களுக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருந்த மனைவியின் மேல் படிந்தது.
மெல்லிய இதழ் சுளிப்புடன் அவளை பார்த்துக்கொண்டு நின்றவன் தன்னிடமும் அவள் கொண்டு வந்து நீட்ட,
“எனக்கு வேண்டாம். இவனுக்கு குடு…” என்றான் அமர்.
“நீங்க எடுத்துக்கோங்க…” என்று அசோக்கிடம் தந்துவிட்டு செல்ல போக,
“தண்ணி கொண்டு வா குறிஞ்சி…” என்றான் அவளிடம்.
“ஹ்ம்ம்…” என தலையாட்டி செல்ல,
“ஏன் ஜூஸ் எடுத்தா என்னடா?…”
“சும்மா தான். உனக்கென்ன இப்போ?…” என்றவன் அவனின் கையில் இருந்த ஜூஸை வாங்கி ஒரே மடக்கில் குடித்துவிட்டு அசோக்கின் கையில் காலி தம்ளரை தந்தவன் பழையபடி பாக்கெட்டில் கையை நுழைத்துக்கொண்டு நின்றுவிட்டான்.
“என்னடா நடந்துச்சு இப்ப?…”
“நீ ஜூஸ் குடிச்ச. அதான் நடந்துச்சு…” என சொல்லியவன் குறிஞ்சி தண்ணீருடன் வரவும்,
“தேங்க்ஸ்…” என சொல்லி வாங்கிக்கொண்டு,
“இதை கொண்டு போய்டு…” என குடித்துவிட்டு தம்ளரை நீட்ட,
“அது யூஸ் அன் த்ரோ தான். நீங்களே தூக்கி போடுங்க…” என்றாள் குறிஞ்சி.
“ஹேய் குறிஞ்சி…” என்று மீண்டும் அழைக்க,
“என்ன வேணும்?…” என்றாள் அவள்.
கோவிலில் இருந்து வந்ததில் இருந்து வீட்டினுள் மாறி மாறி யாராவது ஏதாவது கேட்டுக்கொண்டே இருக்க அத்தனை களைப்பாகி போனது அவளுக்கு. இவனும் படுத்த சூடாகிவிட்டாள்.
“அசோக் இன்னொரு ஜுஸ் வேணும்னு கேட்டான். போய் கொண்டு வா…” என சொல்ல,
“ஹ்ம்ம்ம் சரி…” என செல்ல,
“என்னை ஏன்டா கோர்த்து விடற? நான் எப்ப கேட்டேன்?…”
“நீ குடிக்கலைல அதான் உனக்காக நான் கேட்டேன்…” என்று சொல்ல மீண்டும் வந்தவள் கையில் ஒன்றை மட்டும் கொண்டு வர,
“எனக்கும் சேர்த்து கொண்டுவருவன்னு நினைச்சேன்…” என்றான் அமர்நாத் அமைதியாக.
“நீங்க உங்களுக்கு வேணும்னு கேட்கலையே…” என குறிஞ்சி அசோக்கிற்கு கேட்காமல் மெதுவாய் பேச,
“வெயில் அதிகமா இருக்குது. உனக்கே தோணிருக்கனும் புருஷனுக்கு பச்சை தண்ணியை மட்டும் குடுத்திருக்கோமேன்னு…”
“அது…” என்று அவள் ஆரம்பிக்கும் முன்,
“இங்க தனியா வெயில்ல என்ன பன்றீங்க?…” என வந்தான் பரமேஸ்வரன்.
“ஜூஸ் வேண்டாம்னு சொன்னேன். அதுக்கு குடிக்கனும்னு சொல்லிட்டிருக்கா குறிஞ்சி. சரி கொண்டு வான்னு பேசிட்டு இருந்தேன்…” என சொல்ல,
“அவ்வா என்ன நடிப்பு?…” என கடுப்புடன் குறிஞ்சி வாயசைக்க,
“சரி உன் மாமாவுக்கும் சேர்த்தே கொண்டு வாயேன்…” என சொல்ல அவனை முறைக்க கூட முடியாமல் அவள் உள்ளே செல்ல,
“படுபாவி வச்சு செய்யற நீ? இருக்குது உனக்கு இன்னைக்கு…” என அசோக் சொல்ல அவனை பார்த்து கண்ணடித்தவன்,
“நான் பார்த்துப்பேன்…” என்றான் சிரிப்புடன்.
“ரகசியம் போல?…” என சொல்ல,
“நீங்க வேற ப்ரோ. இவன் சிஸ்டரை வெறுப்பேத்தறான் ப்ரோ…” என அசோக் போட்டுக்கொடுக்க,
“கல்யாணம் ஆனா இதெல்லாம் சகஜம் தான. அதுவும் எங்க குறிஞ்சியை சமாளிக்க தனி திறமை வேணும்…” என பரமேஸ்வரனும் அமரின் தோளில் தட்ட குறிஞ்சி மீண்டும் ஆறு தம்ளர்கள் அடங்கிய ஜூஸ் ட்ரேயுடன் வந்துவிட்டாள்.
அவர்கள் அமர்வதற்கு போட்டிருந்த சேரை இழுத்து அதில் ட்ரேயை வைத்துவிட்டு,
“எவ்வளவு வேணுமோ எடுத்து குடிங்க…” என சொல்ல,
“ஏன் கைல தரமாட்டியா?..” என அமர் வம்படியாக பேசினான்.
“என்னாச்சு உங்களுக்கு?…” என்றவளை,
“குறிஞ்சி…” என்றான் பரமேஸ்வரன்.
“அட போதுமய்யா உங்க விளையாட்டு…” என்ற அசோக்,
“நீ போம்மா, இவங்களை நான் பார்த்துக்கறேன்…” என சொல்ல அமர் இதழ்களுக்குள் அதக்கிய புன்னகையுடன் அவளை பார்த்திருக்க அவனுக்கு ஒரு தம்ளரை எடுத்து தந்தவள்,
“உள்ள வேலை இருக்குது. திரும்ப கூப்பிட்டா அவியை அனுப்பறேன்…” என அழுத்தி சொல்லிவிட்டே செல்ல,
“இது உனக்கு இன்விசிபில் வார்னிங்டா அமரா…” என சிரித்தான் அசோக்.
அதன் பின் மூவரும் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மதிய விருந்தும் தயாராகியது.
முதலில் மாப்பிள்ளை, பெண்ணை அமரவைத்து விருந்தை முடித்தவர்கள் அதன் பின் தொடர்ந்து பந்தியை போட முடிக்கவே இரண்டுமணி நேரம் பிடித்தது.
சாப்பிட்டு முடிந்ததும் ஹாலை சுத்தம் செய்த பின்னர் குறிஞ்சியை தேடி வீட்டினுள் வந்தான் அமர்.
“அவினாஷ், குறிஞ்சி எங்க?…” என கேட்க,
“உட்காருங்க மாமா. அக்கா உள்ள தான் இருக்கா…” என்று சொல்லிவிட்டு கூப்பிட செல்ல அங்கிருந்தவர்கள் அவனை உட்கார சொல்லி வலியுறுத்த வழியின்றி அமர்ந்தான். குறிஞ்சியும் வந்து அவனை பார்க்க,
“பக்கத்துல போய் எதுவும் வேணுமான்னு கேளு. அங்கனையே நிக்கற?…” என வனஜா திட்டினார்.
“ப்ச், என்னம்மா நீங்க?…” என்று சென்றாள்.
“எதுவும் வேணுமா?…” என அவனிடம் கேட்க அவளுடன் எழுந்துகொண்டவன்,
“இல்ல மாடிக்கு போறேன்…”
“ஓகே…” என சொல்ல,
“என்ன ஓகே? நீயும் வா…” என்றான் மெல்லிய குரலில்.
“நானா?…” என அவள் கேட்டுக்கொண்டு நிற்கும் பொழுதே,
“ஆமா, நீ தான். மேல வா. நான் முன்னாடி போறேன்…” என்று சொல்லிவிட்டு செல்ல குறிஞ்சி அவன் மேலே படி ஏறுவதை பார்த்தபடி நிலைப்படியில் நிற்க அப்போதும், வா என்பதை போல தலையசைத்து சென்றான்.
சென்றவன் அரைமணி நேரம் ஆகியும் குறிஞ்சி வராமல் இருக்க சோபாவில் அமர்ந்தவாக்கிலேயே சாப்பிட்டதற்கும் அதற்கும் உறக்கம் பிடிக்க மேலும் அரைமணி நேரம் தூங்கி எழுந்தான்.
கையில் இருந்த வாட்சை பார்த்து வெகு நேரம் ஆகிவிட இன்னும் குறிஞ்சி வராமல் வேறு இருக்க,
“இன்னுமா வரலை?…” என்று முகத்தை கழுவி கீழே இறங்கி செல்ல அங்கே ஆளாளுக்கு ஒருபக்கம் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தார்கள்.
யாரிடம் கேட்பது என தெரியாமல் இவன் வெளியே வண்டிகள் நிறுத்துமிடத்தில் நிற்க சுபா வந்துவிட்டாள்.
மதியம் உறங்கும் பழக்கமில்லாதவள் தாயுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அமர் வெளியே நிற்பதை கண்டுவிட்டு எழுந்து வந்தாள்.
“வாங்க, உள்ள வாங்க…” என அழைக்க,
“இல்லை குறிஞ்சி…” என்று அவன் கேட்டதும்,
“அவ தூங்கிட்டா. நீங்க வாங்க. உள்ள தான் அவ ரூம்ல தூங்கறா…” என சொல்ல அமர்நாத்திற்கு என்னவோ போல் ஆனது.
வர சொல்லியும் வராமல் இருந்தது அவனுக்கு ஏமாற்றம் ஆகிவிட சுபாஷினியின் அழைப்பை மறுத்தவன்,
“கடைக்கு போறேன். முக்கியமான வேலை. சொல்லிருங்க…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் அவன்.
“இன்னைக்கு கடைக்கா?…” என சுபாஷினியும் பார்க்க,
“ஹ்ம்ம், வேலை இருக்குது…” என்று மேலே சென்றவன் சாரதாவிடம் மட்டும் சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு கேக் ஷாப்பிற்கு வந்துவிட்டான்.
வந்தவன் இரவு வரை யாரின் அழைப்பிற்கும் செவி சாய்க்கவில்லை. குறிஞ்சி உட்பட.
“வேலை இருக்குதுன்னு சொல்றேன்ல குறிஞ்சி. வர நேரமாகும். நீ தூங்கு…” என சொல்லி அவள் பேசவே அவன் இடமளிக்காமல் வைத்துவிட குறிஞ்சிக்கு பயம் பிடித்தது.