யாரடி நீ எங்கிருந்து
வந்தாய்… ஏதேதோ பேசினாய்
என் இரவுகளை திருடிக்கொண்டாய்…
கனவுகளை ஆக்கிரமித்தாய்..
நேரங்களை உன் பிம்பமாக்கினாய்…
எண்ணங்களில் கலந்துரையாடினாய்…
கல்லாய் இருந்த என்னை
காதல் ரசம் பருக வைத்து
காதல் பித்தம் தெளியுமுன்னே
கானல் நீராய் பறந்து சென்றாய்…
இறுதியில் என்னையும் காதல் வரிகளை
கிறுக்க வைத்து காதலாய் வந்து
கவிதையாய் மறைந்து விட்டாயே…!
——————————————————————————————————————————————–
“மச்சான் யார் கால் பண்ணா… நீ இவ்ளோ மூடவுட்டு” – தீபக்
“ஹ்ம்ப்ச்…. வீட்ல இருந்துதான்…..” – ஆகாஷ்
“ஹ்ம்ம் இதுக்கு ஏண்டா இவ்ளோ சலிப்பு…. என்ன மேட்டர்னு சொல்லு…” – சிபி
“ஹ்ம்ம் ஒண்ணுமில்ல.. சும்மாதான்….” – ஆகாஷ்
“நீ ஒண்ணுமில்லன்னு சொன்னா அங்க ஆயிரம் இருக்குனு எங்களுக்குத் தெரியும்… இப்போ எதுக்கு நீ இவ்ளோ பீலிங்கா பிடில் வாசிக்கிறன்னு சொல்லு…” – தீபக்
“மச்சி அவனைப் பத்திதான் தெரியுமில்ல, அதோட அவன் கேட்டதுலயும் என்ன தப்பு, சரி விடு இப்போ சொல்லு என்ன பிராப்ளம்…” – சிபி
“ஹ்ம்ப்ச் என்ன மச்சான் அதான் ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டேனே, மறுபடியும் என்ன…? எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும் ப்ளீஸ்டா..” – ஆகாஷ்.
“ஓகே…. நீ ரூம்க்கு போ… கொஞ்சம் ரெஸ்ட் எடு… எதையும் அவசரமா முடிவு பண்ணாத, நிதானமா யோசிச்சு செய்… உனக்கு எப்போ தோணுதோ அப்போ சொல்லு… உனக்கு எப்பவும் நாங்க இருக்கோம். இப்போ நாங்க ஹாஸ்பிடல் கிளம்புறோம்.” என நண்பனின் தோளில் தட்டி சிபி கிளம்ப யத்தனிக்க, அவன் கையைப் பற்றிய ஆகாஷின் முகம் சொல்லமுடியாத வேதனையில் கசங்கியது.
இதுநாள் வரை ஆகாஷை இப்படி பார்த்திராத நண்பர்கள் இருவரும் பரிதவித்து போய், என்னவென்று கேட்க, அவனோ ஒற்றை வார்த்தையில் “மான்யா” என்றுக் கூறிவிட்டு தலையைக்குனிந்து கொண்டான்.
நண்பர்கள் இருவருக்கும் விசயம் புரிந்து விட, என்ன சொல்வதென்று தெரியாமல், அவன் தோளில் மென்மையாகத் தட்டிக் கொடுத்தனர். தீபக் தான் ஆரம்பித்தான்.
“ஏன் மச்சி, அதுதான் அந்த சிஷ்டருக்கு மேரேஜ் ஆகி, ஒரு குழந்தையும் இருக்குனு சொன்னியே, இப்போ என்னடா புதுசா இப்படி சொல்ற, கல்யாணம் ஆனப் பொண்ணைப் பத்தி பேசுறதே தப்பு… நீ என்னடா ன்னா…..? ஹ்ம்ப்ச் இன்னுமா நீ அவங்களை நினைச்சிட்டு இருக்க..”
“இது தப்புடா… இதெல்லாம் உனக்கு நான் சொல்லனுமா…? கொஞ்சம் யோசிச்சுப்பாரு..” என்று கூறியவன் நண்பனின் முகத்தில் தெரிந்த பிடிவாதத்தில் எரிச்சலாகி “ஹே ஸ்டுபிட்.. அறிவிருக்கா உனக்கு… நீ இப்படி யோசிக்கிறதே தப்பு…. இது உங்க வீட்டுக்குத் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க.. இல்ல அந்தப்பொண்ணோட ஹஸ்பண்டுக்குத் தெரிஞ்சா என்னாகும்…” என்று கத்த….
நீ என்ன சொன்னாலும் எனக்கு ஒன்றுமில்லை என்ற பார்வையில் ஆகாஷ் அமைதியாக இருக்க, சிபிக்கு நண்பனின் இந்த செயல் வித்தியாசமாக இருந்தது. தீபக்கை சமாதானப்படுத்தி விட்டு, ஆகாஷிடம் என்ன வென்று பொறுமையாக கேட்க ஆரம்பித்தான்.
அவனுமே தன் மனதில் அறித்ததை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்ற எண்ணமோ என்னவோ…. இதுவரை தன்னுள் ஊசியாக குத்தி, வேதனைப்படுத்திய செய்தியை நண்பர்களிடமும் தெரிவித்தான்.
மான்யா….
“மாயா விடுடீ…. விடுன்னு சொல்றேன் இல்ல…. எல்லாரும் பார்க்குராங்காடி….” என தோழியைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள் காவேரி.
“எல்லாரும் பார்ப்பாங்க, பார்க்க மட்டும் தான் செய்வாங்க… யாரும் தட்டிக் கேட்க மாட்டங்க…. நீ கையை விடு, இவனையெல்லாம் கொல்லாம விடக்கூடாது….. தெருப்பொறுக்கி…” என தன் தோழியின் பிடியில் இருந்து திமிரிக் கொண்டிருந்தாள் மான்யா…
“ஹ்ம்ப்ச் மாயூ, சொன்னா கேட்கணும், அவனுக்கு அடி ரொம்ப ஆயிடுச்சு… போலிஸ் கேஸ் ஆகிடும்…. பேசாம இரு….” – காவேரி
“என்னடி… போலிஸ்…. வரட்டும்…. வந்து கேட்கட்டும்…. நானே கம்ப்ளைன்ட் பண்ணுவேன்…. இந்த நாயெல்லாம் ரோட்டுல சுத்துறதுனால தான வயசு வித்தியாசம் பார்க்காம, பச்ச மண்ணுன்னு கூட யோசிக்காம… ச்சே… என்ன ஜென்மமோ….” என்று மீண்டும் அவனிடம் சென்று, அவனைத் தரதர வென்று இழுத்து வந்தாள், தோழியின் பேச்சையும் மீறி…..
இழுத்து வந்தவள் அங்கு அரண்டு போய் பயத்தில் முகம் வெளுத்து, பார்க்கவே பாவமாய் நின்றிருந்த அந்த குட்டிப்பொண்ணை பார்த்ததும், மட்டுப்பட்ட கோபம் மீண்டும் தலைக்கேறியது..
அவன் முடியை கொத்தாகப் பற்றியவள் “அங்கப் பாருடா…. அது முகத்தைப் பார்த்தும் கூட உனக்கெல்லாம் அப்படி செய்ய எப்படி டா மனசு வந்தது…. உன் கூடப் பொறந்த தங்கச்சியா இருந்தா இப்படித்தான் செய்வியா…. சொல்லுடா….”
“உன் அக்கா தங்கச்சிக்கு இருக்குறதுதானே எல்லா பொண்ணுக்களுக்கும் இருக்கு…. தொடனும்னா, அவங்களைப் போய் தொட்டு பாருடா பொறுக்கி…. என்ன செய்யணும், எப்படி ரியாக்ட் பண்ணனும்னு கூட தெரியாத அந்தக் குழந்தைக்கிட்ட போய், உன் பொம்பளப் பொறுக்கித் தனத்தைக் காட்டிருக்க…. உன்னையெல்லாம் துணியே இல்லாம ரோட்டுல ஓட விட்டு கல்லால அடிச்சு கொல்லனும் டா….” என்று ஆவேசமாக அவனைப் போட்டு அடி பின்னி எடுத்தாள்.
இத்தனைக்கும் அவளை யாருமே வந்து தடுக்கவே இல்லை, அந்த பேருந்தில்…. பேருந்து ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.. நடத்துனரும், ஓட்டுனரும் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்தனர். பேருந்தில் இருந்த மற்றவர்களும் கூட அமைதியாகத் தான் இருந்தனர். இது எப்போதும் நடப்பது தான் என்பது போல் இருந்தனர் வேடிக்கைப் பார்த்தபடி.
“மாயு…. போதும் விடு… இனி அவன் இந்தப் பக்கமே வரமாட்டான்… யாருக்கிட்டயும் இனி வாலாட்டவும் மாட்டான்… அந்த துணிச்சல் வராது…. இப்போ அந்த பாப்பாவை பாரு, அவ ரொம்ப பயந்து போயிருக்கா…. வா அவளை சமாதானப் படுத்துவோம்…” என்ற தோழியின் பேச்சில் திரும்பி அந்த குட்டிபொண்ணை பார்த்தவள், அதுவரை இருந்த ஆவேசமான கோப முகத்தை, சட்டென்று அமைதியாக்கி ஒரு சிரிப்பையும் படரவிட்டு அந்தக் குட்டிபெண்ணிடம் வந்தாள் மான்யா….
“ஹாய் பேபி…. ஏன் இப்படி ஷாக்காகிட்டீங்க…. என்னைப்பார்த்து பயந்துட்டீங்களா….? என்னைப் பார்க்க பயமாவா இருக்கு… யு நோ பேபி, இந்தக் காவி என்ன அழகா இருக்கன்னு தான் எப்பவும் சொல்லுவா…. நீ இப்ப இருக்குறதைப் பார்த்தா நான் படு பயங்கரமா இருக்கேன் போலயே..! ஹ்ம்ம்” என்று புருவத்தை உயர்த்திக் கேட்க….
அதுவரை அதிர்ச்சியில் இருந்த அந்த குட்டிப்பெண் மான்யாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு ‘ஓ’வென்று அழ, அவளுக்கும் கண்ணில் நீர் துளித்தது… அதைப்பார்த்த மற்றவருக்குமே அதே நிலைதான்…
குழந்தையின் அழுகையில் மீண்டும் முகம் கோபத்தைப் பூச, தோழியின் கை அழுத்தம், அவளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, “ஹ்ம்ப்ச் பேபிமா…. டோன்ட் க்ரை…. இப்போ இங்க ஒண்ணுமே நடக்கல சரியா… பொண்ணுங்க அழுதா எனக்குப் பிடிக்கவே பிடிக்காது…”
“பொண்ணுங்கன்னா எப்பவும் தைரியமா, துணிச்சலா இருக்கணும்… யார் தப்பு செய்தாலும் தயங்காம தட்டிக் கேட்கணும்…. அப்போதான் இந்த மாதிரி நாய்ங்க எல்லாம் திரும்பி கூட பார்க்க மாட்டங்க சரியா…” எனவும் அந்த பெண்ணும் மண்டையை மண்டையை ஆட்டியது.
அவளது மண்டை ஆட்டலில் லேசாக சிரித்தவள் “பேபி என்ன கிளாஸ் படிக்கிறீங்க… உங்க பேர் என்ன சொல்லுங்க..” என்றாள் மான்யா..
“ஹ்ம்ம் ஸ்வேதா என் பேர்… சிக்ஸ்த் ஸ்டேண்டர்ட் XxXXX ஸ்கூல்ல படிக்கிறேன்….”
“ஓ” என்றவளின் பார்வை ஒரு நொடி சுருங்கி, அவள் அடித்தவனிடம் புலியின் சீற்றத்துடன் பாய்ந்து மீண்டது. பிறகு “ஸ்வேதாக்குட்டி பாக்ஸ்ல பென்சில், பேனா, காம்பஸ் இதெல்லாம் இருக்கா….”
“ஓ வச்சிருக்கேனே…. வேணுமா உங்களுக்கு…..”
“இல்ல எனக்கு வேண்டாம்…. ஆனா அதை வச்சுக்கூட நீ சண்ட போடலாம்… இந்த பொறுக்கி மாதிரி நாய்ங்க உன்னை தொல்லை பண்ணா, அதை வச்சு ஒரே குத்து, அப்புறம் உன்னைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டாங்க… வெளியவும் சொல்ல மாட்டங்க… உனக்கும் பிரச்சினை இருக்காது…. தைரியமா பஸ்ல போயிட்டு வரலாம்… எப்படி இருக்கு என்னோட ஐடியா…”
“ஆமா அக்கா…. சரியா சொன்னீங்க… இனி நீங்க சொன்ன மாதிரியே நானும் செய்றேன்… என் பிரண்டஷ்க்கும் இதேயே சொல்லிக் கொடுக்குறேன்… அப்புறம் நான் தைரியமா இருப்பேன், அழ மாட்டேன்…. அழுதா உங்களுக்குப் பிடிக்காது தானே…. சோ இனி ஸ்வேதாக்குட்டி அழவே மாட்டா… ப்ராமிஸ்…”
“சூப்பர் டா ஸ்வேத்…. இப்படித்தான் இருக்கணும்… அப்புறம் இப்போ நடந்ததை நீ மறந்துடணும், யாருக்கிட்டயும் சொல்லாதே… உன் அம்மா போன் நம்பர் கொடு நான் பேசுறேன்…. உங்க ஸ்கூல்ல கராத்தே கிளாஸ் இருந்தா உடனே ஜாயின் பன்னிரு சரியா… படிக்கிறதை விட அதுதான் உன் லைப்க்கு ரொம்ப முக்கியம்.. ஓகே வா…” என்று அந்தக் குழந்தையின் மனதை திசைத் திருப்பியவள், தோழியைப் பார்க்க,
“நீ படிக்கலைன்னா, அதையே அவளுக்கும் சொல்லிக் கொடுக்காட்டி என்ன..” என தோழியை வாரினாலும், ஒரு புன்னகையில் தன் பாராட்டைத் தெரிவித்தாள் காவேரி.
அதுவரை வேடிக்கைப் பார்த்த நடத்துனர் “எல்லாம் முடிஞ்சதா மாயா…. இவனை என்ன செய்ய…. போலிஸ் ஸ்டேசன் போய்டுவோமா… எல்லாருக்கும் டைம் ஆகுது பாரு…” எனவும்….
“போலிஸ் ஸ்டேசன்னா..? என்று அலறியவள், “ஏண்ணே உங்களுக்கு இந்தக் கொலைவெறி…. நேத்துதான் வீட்ல செமத்தியா வாங்கிட்டு, இனி தப்பித்தவறிக் கூட எந்தப் பிரச்சினையும் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு வந்துருக்கேன்..”
“மறுபடியும் இன்னைக்கே போனா… என்னை அவங்களே தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருவாங்க…. கொஞ்ச நாளைக்காச்சும் அந்த போலிஸ் ஸ்டேசன் பக்கம் போககூடதுண்ணே…”
“அங்க இருக்குற எஸ்.ஐ எனக்கு அண்ணன் முறையாகுது…. அந்த ஏரியாப்பக்கம் பார்த்தாலே எங்கப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிடுறான் அந்த பாசமலர்….”
“எனக்கு இப்போ கட்டம் சரியில்லண்ணே…. நீங்க விசிலடிங்க… போற வழியில இதைத் தூக்கி தூரப்போட்டுட்டு போவோம்..” என பயத்தில் ஆரமபித்து கிண்டலில் முடித்தாள்.
மான்யாவின் பேச்சைக்கேட்டு எல்லோரும் சிரிக்க…. “புரட்சிப்பெண் மாயாவுக்கு வந்த சோதனையா இது….? என்று ஓட்டுனரும் அவர் பங்குக்கு அவளைக் கிண்டல் செய்ய…
“அண்ணே இப்படியே இவளை உசுப்பேத்தி உசுப்பேத்தி தான், கொஞ்சம் கூட பயமே இல்லாம இருக்கா தெரியுமா..? நேத்து மாப்ள வீட்ல இருந்து வர்றாங்கனு சொன்னதும் பேயாட்டம் ஆடித் தீர்த்துட்டா… மாப்ள மிலிடரி மேன், அவருக்கு பிடிச்சிருக்கு, இந்தம்மாவுக்கு தான் பிடிக்கல….” என்று உதடு சுளித்து தன் பங்குக்கு காவேரியும் கிண்டலில் குதிக்க….
“மச்சி இது சரியில்ல… நான் எங்க வேண்டாம்னு சொன்னேன்… அதுவா நடக்குது…. அதோட இந்த தொல்லைங்களை எல்லாம் பார்க்காம ஜாலியா நார்த் சைட் போய் செட்டில் ஆகுறது எவ்ளோ பெஸ்ட் தெரியுமா….? ஆனா அந்த மாப்ளஜி என்னைக் கூட்டிட்டு போக மாட்டாராம்…. இங்கயே விட்டுட்டு யேர்லி ஒன்ஸ் விசிட் பண்ணுவாராம்….”
“அதான் எங்கம்மா வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க… ஹீஹீ மச்சி என் தொல்லையைத் தாங்காம தான் வீட்ல இருக்குறவங்க அவ்ளோ தூரம் பேக் பண்ணனும்னு நினைக்கிறாங்க… இந்த மாப்ளஜி இப்படி சொல்லவும்… ஹாஹா அம்மா முகத்தைப் பார்க்கணுமே….” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க மற்றவர்களும் உடன் சிரிக்க ஆரம்பித்தனர்.
அந்த பேருந்தில் இருந்த ஒரு பெண்மணி “அப்போ மாயாவுக்கு மிலிட்ரியப் பிடிச்சிருக்குன்னு சொல்லு… எப்படி இருப்பார் மாப்ளஜி” எனவும்
“ஹாஹா க்கா… யாருக்குத் தெரியும்…? எங்க பாசமலரோட ப்ரண்டாம் இந்த மிலிடரி…. என்னைப்பத்தி காதுல ரத்தம் வர்ற அளவுக்கு, இந்த பாசமலர் புகழ்ந்து தள்ளிருக்கு… ஆனா பாருங்க மாப்ளஜிக்கு காதுல ரத்தம் வராம, காதல் வந்துருச்சு….” என்று நிறுத்த…..
பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் கோரஸாக “ ஓகோ..” என்றவர்கள் “அப்புறம்..” என….
அவர்களைப் பார்த்து சிரித்தவள் “அப்புறம் என்ன பாசமலரோட ரெகமண்டேஷனோட பொண்ணு கேட்டு வந்தாச்சு மிலிட்ரி…. வீட்ல எல்லாருக்கும் ஓகே… என்கிட்ட கேட்டாங்க… எனக்கு நோ பிராப்ளம் சொல்லிட்டேன்…”
“என்னது உனக்கு நோ பிராப்ளமா….” என மீண்டும் ஒரு கோரஸ் வந்து விழ
“ம்ம்ம்… ம்ம்ம்… ஆமாம் எனக்கு நோ பிராப்ளம் தான்…” என கண்களில் குறும்பைத் தேக்கி அப்பாவியாய் விழி விரித்தவளை, பக்கத்தில் இருந்த காவேரி முதுகில் ஒன்று போட்டு “ஒழுங்க சொல்லு..” என மிரட்ட…
“ஹாஹா.. வலிக்குதுடி எரும….” என்றவள் “பின்ன… எத்தனை நாளைக்குத்தான் லோக்கல் போலிஸ் ஸ்டேஷனே பார்க்குறது…. கொஞ்சம் அடுத்த ஸ்டேட்லயும் நம்ம புகழைப் பரப்பி விடுவோமேனு நல்ல எண்ணம் தான்….”
“அடிப்பாவி..” என்று அவள் தோளில் தட்டிய காவேரி சுவாரஸ்யமாக, “நெக்ஸ்ட்” என்க
“ஹாஹா… ஆனா நான் நோ ப்ராபளம் சொன்னது தான் வீட்ல ப்ராப்ளமே… மாப்பிள்ள போட்டோ கூட பார்க்காம எப்படி ஓகே சொன்னான்னு எல்லாரும் மண்டையை பிச்சிக்கிட்டு இருக்காங்க…. நான் நைசா எஸ்ஸாகிட்டேன்….”
“இனி கொஞ்ச நாளைக்கு பிரச்சினையில்லை, எப்படி…. நம்மளை எல்லாம் லாக் பண்ண நினைச்சா முடியுமா…? என்னண்ணே…? என்று நடத்துனரைப் பார்த்துக் கேட்டவள், தன் குர்தியில் இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாள். அவரும் சிரித்துக் கொண்டே மண்டையை ஆட்டினார்.
அவளது ஒவ்வொரு செயலையும் முதலில் கோபமாகவும், அந்தப்பெண்ணின் நிலையில் அவளை சமாதானப் படுத்தும்போது பிரமிப்பாகவும், அவள் கொடுத்த ஐடியாவில் மெச்சுதலாகவும், அவளின் பேச்சில் ஆர்வமாகவும், திருமணப்பேச்சை எடுத்ததும் எரிச்சலாகவும், அவளை மற்றவர்கள் கிண்டல் செய்யும் போது அவர்களையே அவள் கலாய்க்கும்போது சிரிப்பாகவும், இரு கண்கள் அவளையேத் தொடர்வதை மான்யா அறியவில்லை.
அதன் பிறகு பல கிண்டல் கேலிகளுடன் பேச்சுக்கள் சுவாரஷ்யமாக தொடர, பேருந்து தன் பயண நேரத்தை முடித்து, அவர்களுக்கான இடத்தில் நின்று தன் கடமையை முடித்துக் கொண்டது.