தனசேகரை பண மோசடி வழக்கில் கைது செய்து அந்த நம்பரை வைத்திருந்தது அவன் தான் என்றும் அவனும் இன்னும் இருவர் அவனுடன் இணைந்து தான் இந்த மோசடியை செய்தது என்றும் உறுதிப் படுத்தப்பட்டது..
விரைவாக செயல்பட்டதனால் பணத்தின் பெரும்பகுதியையும் கைப்பற்றி பாதிக்கப்பட்டோருக்கு பகிர்ந்து கொடுத்தனர் காவல் துறையினர்.. மேலும் மூவருக்கும் நீதி மன்றத்தில் ஏழு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது..
யாரேனும் முயற்சி செய்திருந்தால் ஏதாவது முறையில் முயற்சி செய்து தனசேகரின் தண்டனைக் காலத்தை மூன்றாண்டுகளாக குறைத்திருக்கலாம்.. ஆனால் முயற்சிக்க ஒருவரும் முன் வராத நிலையில் தன் ஏழு வருடங்களை சிறையில் சிறப்பாக கழிக்க சென்றார் தனசேகர்..
தனசேகர் பக்கம் உறவென்று அவன் தாயும் அவன் தம்பியும் இருந்தனர் என்றாலும் இவனின் ஊதாரி தனத்தில் வெறுப்புற்று இவனைத் தள்ளியே வைத்திருந்தனர்.. அவன் கைதானதும் அம்பிகா அவர்களிடம் எடுத்து விசயம் சொன்ன போதும் அவனின் தம்பி ,
“எனக்கு என் குடும்பத்தையே பார்க்க மூச்சு முட்டுது.. இதுல இதலாம் என்னால சுமக்க முடியாது அண்ணி.. இப்படி சொல்றதுக்கு மன்னிச்சிடுங்க.. எனக்கு வேற வழி இல்ல..” என்று சொல்லி வைத்து விட்டான்..
இதனால் அதிகம் பாதிக்கப் பட்டது கவி தான்.. அதிரன் சொன்ன படி ஜீவா அவளுக்கு நல்லுரை கூறி அவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டான்.. மேலும் அதியும் அவளை வீட்டிற்கு அழைத்து படிப்பின் அவசியத்தை உணர்த்தி எதை நினைத்தும் கவலை கொள்ளாது வரவிருக்கும் பப்ளிக் எக்ஸாமில் கவனம் வைத்து நல்ல பெறுபேறு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினான்..
ஜீவாவிடமும் தமக்கைக்கு சீதனமாக கொடுத்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு தாயுடனே அவளை இருக்குமாறு செய்ய சொன்னான்.. எல்லாம் கவி என்ற சிறு பெண்ணுக்காக மட்டும் தான்.. அதை விட அக்கா, அம்மா என்று அவர்கள் மேல் கரிசனம் கொண்டு எல்லாம் எதுவும் செய்யவில்லை அவன்.. ஏற்கனவே அம்பிகாக்கு என்ற பெயருக்கு தான் அந்த வீடு இருந்தது.. மற்றைய படி அம்பிகாவின் நாளின் முக்கால் பொழுதுகள் தாய் வீட்டில் தான்..
எல்லாம் செட் செய்தவன் இனியாவது தன் வாழ்க்கையைப் பார்ப்போம் என்று இந்த ஒரு மாத காலமாக ஆருத்ராவை ஒருதலைக் காதலன் போல் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான்.. ஆனால் பேச முயற்சி செய்வதில்லை.. அவளின் மௌனத்தை இவன் தத்தெடுத்துக் கொண்டான்..
அவளும் அவனை தினமும் காணுவாள் தான்.. ஆருத்ரா என்றேனும் மன்னித்து இல்லையென்றாலும் இப்படி அலைகிறானே என்று மதித்துப் பேசவாவது அவனை அனுமதிப்பாள் என்று பார்த்தால், எங்கே?
ம்ஹும் … எத்தனையோ பேர் அவள் பயணிக்கும் நேரம் ரோடில் செல்கிறார்கள்.. அது போல் தான் நீயும் என்பது போல் அவனை இலகுவாக கடந்து சென்று விடுவாள்..
அந்த நேரங்களில் எல்லாம் அவள் மேல் கோபம் வருவதில்லை.. தன்மேல் தான் கோபம் வரும்.. ஜீவா மூலம் நிகழ்ந்தது எல்லாம் அறிந்து சர்மி அவனை நேரில் சந்தித்து காய்ச்சி விட்டாள்..
அதிரன் எதுவும் குறுக்கிடாது அவள் திட்டுக்கள் முழுவதையும் ஏற்றுக் கொண்டான்.. மனைவி தான் தான் செய்த பாவத்துக்கு பார்வையில் கூட கண்டனம் காட்டாது ஒதுக்கி வைக்கிறாள்.. அட்லீஸ்ட் தோழியாவது உரிமையோடு திட்டுகிறாளே என்று ஆறுதல் பட்டுக் கொண்டான்..
சர்மி திட்டும் போது அவனை மட்டும் அல்ல, ஆருத்ராவையும் சேர்த்து தான் திட்டினாள்..
“இத்தனை நாள் எத்தனை டிசைன்ல அவளை , ‘என்னாச்சு? உன் மாமியாரோட இந்த நிலைமைக்கு காரணம் யாருன்னு கேட்டிருப்பேன்?’ வாயத் தொறந்தாளா? ஊமைக் கோட்டான்.. ‘முடிஞ்சு போனத விடு.. விடு’ன்னு சொல்லியே எதையும் சொல்லாம விட்டுட்டா..” என்று சொல்லி திட்டிக் கொண்டிருக்க அதிரன் அவளை இடை மறித்து,
“கேட்டிருக்க வேண்டிய நானே கேட்கலை.. அதான் அவ மத்த யாருக்கு சொல்லி என்ன வந்துச்சுன்னு சொல்லாம விட்டிருப்பா.. அவளை திட்டாத என்னை மட்டும் திட்டு..” என்று கேட்டு அதற்கும் வாங்கிக் கட்டிக் கொண்டான்..
திட்டி முடித்தவளிடமே உன் தங்கச்சியை எப்படி கரெக்ட் பண்றதுன்னு சொல்லேன் என்று கேட்டு வைத்தவனை கொலை வெறியோடு பார்த்து அவள் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் சத்தியமானவை..
“ஆருத்ரா மனசுல என்ன இருக்குன்னு அக்யூரேட்டா சொல்ல முடியலனாலும் அவ இடத்தில நான் இருந்தா என்னோட மைண்ட் செட் என்னனு சொல்றேன் கேட்டுக்கோ..
ஒரு பிரச்சனை, அது எதுவா வேணா இருக்கட்டும்.. அதுல அவ பங்கு என்னன்னு அவளைக் கேட்காம, அதுல சம்பந்தப்பட்ட மத்தவங்க சொன்னதை மட்டும் நம்பி நீ அவளை விட்டுப் போயிருக்கன்னா, அவ மேல உள்ள உன் நம்பிக்கை பத்தி, ஏன் அது உனக்கு அவ மேல இருக்கான்னு கூட அவளுக்கு சந்தேகம் வந்திருக்காதா என்ன?
சரி.. சந்தேகப்பட்டு போனியே ஒரு மூணு மாசம்.. இல்ல ஆறு மாசம்.. வேணாம் கடைசி ஒரு வருஷம்..
ஒரு வருஷம் கழிச்சு வந்து அவ முன்னால நின்னிருந்தேன்னா, அவ இல்லாம உன்னால இருக்க முடியலன்னு நீயா சொல்லலன்னா கூட, அதை அவ புரிஞ்சிகிட்டு உன்ன ஈசியா மன்னிச்சிருப்பா.. ஆனா நீ சாவகாசமாக ஆறு வருஷம் கழிச்சு வந்து என்னை ஏத்துக்கோன்னா, எப்பிடி ஏத்துக்குவா?..
அவ நீ வர மாட்டேன்னு தெரிஞ்சு.. மீறி வந்தாலும் அது தனக்காக இல்லை, இசைக்காக மட்டும் தான்னு தெரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி அவ வாழப் பழகிக்கிட்டா.. ஐ மீன் அவளுக்கு இனி நீ தேவை இல்ல..” என்றவள் முடிக்க, அதிரன் கலங்கிய முகத்துடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்..
அது அவளுக்கு வருத்தம் தந்தாலும் உனக்கு வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டு மேற்கொண்டு தொடர்ந்தாள்..
“நீயே யோசிச்சுப் பாரு அதி , இசை எப்டி உன்னை பார்த்த முதல் நாளே உன்கிட்ட ஒட்டிக்கிட்டான்னு?” என்ற அதிரனுக்கும் அதே எண்ணம் தான்.. இசைக்கு ஜீவாவால் தன்னைப் பரிச்சயம் என்றே எண்ணியிருக்க, சர்மி சொல்வதை வைத்துப் பார்த்தால்?
“நீ யோசிக்கிறது கரெக்ட் அதி.. அவ இசைகிட்ட உன்னைப் பத்தி கெட்ட விதமா எதுவும் சொல்லல.. நீ வெளிநாட்டுல இருக்க.. ஃபோன் பேசக் கூட முடியாத டைட் செடுல் உனக்கு.. அப்டி இப்டின்னு தான் கதை கட்டி விட்டிருக்கா.. ஏன்னா நீ என்னைக்கா இருந்தாலும் இசைக்காக வருவன்னு அவளுக்கு தெரியும்.. அப்போ இசை மனசுல உன்னைப் பத்தின தப்பான அபிப்பிராயம் இருந்தா, அவ உன்னை ஏத்துக்கவே மாட்டா.. அதனால அவளுக்கு கிடைக்க இருக்கிற உன்னோட பாசம் கிடைக்காமலே போயிடும்னு தான் உன்னைப் பத்தி அவகிட்ட உயர்வா சொல்லிருக்கா.. எங்க அப்பாகிட்ட கூட இசை இருக்கும் போது இசையோட அப்பா பத்தி யாரும் தப்பா பேச வேணாம்னு சொல்லி இருக்கா..” என்று அவள் சொல்ல சொல்ல அதிக்கு தன் ருத்ராவை தன் கைக்குள் வைத்து ஆயிரம் முத்தங்களில் நன்றியையும் மன்னிப்பையும் யாசிக்கும் வெறி வந்தது.. (க்கும்..)
“இவ்ளோவும் யோசிச்சவ தான் தனக்கு கடைசி வரை தனிமைதான்னும் முடிவெடுத்து அதுக்குப் பழகிட்டா.. அவளை சரி பண்ணி…. கஷ்டம் அதி.. அவளை விட்டுட்டு வேற வேலை இருந்தா போய் பாரு. “
சர்மி பேசுவது எல்லாம் அவன் செவி வழி சென்று மூளையை அடைந்து தலை வேதனை தாளாது கையால் தலையை தாங்கி அமர்ந்து இருந்தவன், சர்மியின் கடைசி வார்த்தையில் விலுக்கென நிமிர்ந்து அவளை முறைத்தாள்..
“விட்டுட்டு வேற என்ன வேலைய பார்க்க சொல்றே? நீ வேணாம் போய் வேற வேலையை பாரு… தப்ப முழுக்க நான் தான பண்ணேன்.. அப்போ நானே என் பொண்டாட்டிய சமாதானம் பண்ணிக்கிறேன்.. ஒரு வேளை அன்னைக்கு சொன்னியே இனி என் தங்கச்சி வாழ்க்கை எப்டி யார் கூடன்னு முடிவு பண்ணிட்டேன்னு.. அப்டி எதும் பிளான் இருந்தா அதைப் பெட்ரோல் ஊத்திக் கொளுத்திடு. இல்ல தாறுமாறா யோசிக்கிற உன் மூளையை நான் கொளுத்திடுவேன்..” என்று பொங்கினான்..
அவன் பேச்சில் அவளுக்கும் மகிழ்ச்சியே.. அதனால்,
“எங்க சரி விட்டுடுறேன்னு சொல்லுவ, அநியாயமா ஒரு கொலை பண்ணனுமேன்னு நினைச்சேன்.. பரவால்ல.. தப்பிச்சிட்ட.. எனிவே ஆல் த வெரி பெஸ்ட்.. ” என்று வாழ்த்தி சென்றாள் மனம் நிறைந்த மகிழ்வோடு..
அவள் சொன்னபடி தான் ஆருத்ரா தன்னை மாற்றிக் கொள்ளவே போவதில்லை என்பது போல் இருக்க இவன் தான் தினம் தினம் பயந்து பயந்து செத்தான்.. முன்னர் இசையை தன்னோடே வைத்துப் பழக்கிக் கொள்ள நினைத்தவன் இப்போது எங்கே இசை தன்னோடே இருக்கப் பழகிக் கொண்டால் ஆருத்ரா தங்கள் இருவரையும் நீங்கி தனியாளாய் வாழப் பழகிப் போவாளோ? என்று பயந்து மீண்டும் முத்தரசன் வீட்டிலேயே அவளை தங்க வைத்து விட்டு இவன் சென்று சென்று பார்த்து வருவான்..
முன்னெல்லாம் இசையை கூட்டு செல்ல, கொண்டு வந்து விட என சொற்ப நிமிடங்களே அங்கே இருப்பவன் ஜீவாவின் அறிவுரையில் இப்போதெல்லாம் அங்கேயே மகளுடன் சிறிது நேரம் இருந்து பேசி செல்வான்.. அதுவும் ஆருத்ரா வரும் நேரம் அங்கே வந்தான் என்றால் அங்கிருந்து நகரவே மாட்டான்.. அந்த நேரம் முத்தரசன் மீனாட்சியிடம் அத்தை, மாமா என்று ஓரிரு வார்த்தைகள் பேசவும் செய்வான்.. அதிரன் அதிசயங்கள் பல நிகழ்த்திக் கொண்டிருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்..
முதலில் அவர்களுடன் பேச பழக என்று தயக்கமாய் தான் இருந்தது.. பின்னே குழந்தைக்கே ஆறு வயது ஆகிவிட்ட பின் முதல் முறை அத்தை , மாமா என்று புது மாப்பிள்ளை போல் அழைக்க பழகினால் கூச்சம் வரத் தானே செய்யும்.. ஆனால் அவர்கள் அவனை சங்கடம் கொள்ள வைக்காது இயல்பாய் பேச அவனும் இயல்பாய் இருந்தான்.. அதிரனிடம் அந்த இயல்பெல்லாம் ஆருத்ரா வீட்டின் உள்ளே நுழையும் வரை தான்.. அவள் முகம் கண்ட மாத்திரம் அன்று ஏர்போர்ட்டில் அவள் முகம் கூட காணாது போன நினைவு வந்து விடும்.. கூடவே அன்று அவள் கலங்கி அழைத்த ‘அதிரன்..’ என்ற அழைப்பு வேறு காதில் அறைந்து அப்போது அவள் முகம் எப்படிக் கலங்கி இருந்திருக்கும் என கற்பனையை தோற்றுவிக்க, அது தரும் வலி தாளாது தோற்று ஓடி விடுவான் அங்கிருந்து..
இதோ இப்போதும் அவள் ஆபீஸ் விட்டு வெளியே வரும் நேரம் அறிந்து அங்கே காத்திருக்கிறான்.. இப்படியெல்லாம் நின்று இனி உன் நிழலாய் இருப்பேன் விட்டுச் செல்ல மாட்டேன் என்று உணர்த்த நினைக்கிறானோ? என்னவோ? அவனுக்கே வெளிச்சம்..
அவன் காரின் கண்ணாடியை யாரோ தட்ட தன் நினைவுகளில் இருந்து நீங்கி கண்ணாடியை கீழிறக்கினால் அங்கே அருள் நின்று கொண்டிருந்தான்.. அவனைப் பார்த்து விழியுயர்த்தியவன் சிறிதாய் புன்னகைத்து “ஹலோ சார்… ” என்றான்..
“சரி அருள்..” என்று உடனே மாற்றிக் கொண்டவன், “நீங்க இங்க….?”
“ஆரு ஸ்கூட்டி யாரோ கொலீக் கிட்ட ஹெல்பா குடுத்திட்டாளாம்.. சோ பிக்கப் பண்ணிக் கூட்டி வர சொல்லி என் வீட்டம்மா ஆர்டர்.. அதை தட்டிக் கழிச்சிட்டு உசுரோட உலாவ முடியுமா? அதான் வந்துட்டேன்..” என்று பாவத்துடன் கூற,
“வாய்ப்பில்லை தான்..” என்று சிரித்தான் அதிரன்..
“அப்படியே அவ ப்ரெண்டு ஒருத்தரும் இங்கன தான் சுத்திட்டு இருப்பாரு .. அவரையும் கார்ல அள்ளிப் போட்டு வர சொன்னா.. கூடக் கொஞ்சம் வந்தீங்கனா என் உயிரைக் காப்பாத்திக்க எனக்கு வசதியா இருக்கும்.. ” என்று இழுக்க அதிரனுக்கு தன்னையும் அழைத்துள்ளாளா? ஏன் என்ற சந்தேகம் வந்த போதும் அருள் சொன்ன பாவனையில்
சரி என்று புன்னகையுடன் தலையாட்டியவன் , காரை அருகில் பார்க் பண்ணி விட்டு வந்து அருள் காரில் டிரைவிங் சீட் அருகே அமர்ந்து கொண்டான்..
ஆருத்ரா நேரே அருள் காரருகே வந்தவள், பக்கத்து சீட்டில் அமர்ந்து இருந்த அதிரனைக் காணாது, அருளிடம் குனிந்து
” மாமா இன்னொரு பொண்ணும் கூட வரா? போற வழி தான் இறக்கி விட்டுடலாமா?”
“அதுக்கு என்னமா கூட்டிட்டு வா.. அந்தப் பொண்ணுக்கு என்ன தனியாவா பெட்ரோல் எடுத்துக்கப் போகுது?”
“இல்ல , அவ ஹேர் பின்னோ , கர்ச்சீப்போ கார்ல மிஸ் ஆச்சுன்னா நாளைக்கு அக்கா யாரோடதுன்னு கேட்டு.. ” என்று அப்பாவியாய் இழுத்து விழிக்க வைக்க அருள் அவளை முறைத்தான்..
“விட்டா நீ வேணும்னே அவளை மிஸ் பண்ண சொல்லிட்டு உங்க அக்காகிட்டயும் போட்டு குடுப்ப போல.. சரியான சூனியகார குடும்பத்துகிட்ட மாட்டிக்கிட்டோம் பாஸ்..” என்று அருகில் திரும்பி சொல்லவே, யார் என்று விழி நகரத்தில் பார்த்தவள் அதிரனைக் கண்டு ஒரு நொடி புருவம் சுருக்கியவள் பின் இயல்பாய் தன்னைக் காட்டிக் கொண்டாள்..
அவள் பேச்சுக்களை பாவனைகளை ரசித்திருந்த அதிரனுக்கு அவள் நொடி நேர குழப்பமும் கண்ணில் படாது இல்லை.. தான் வருவதில் அவளுக்கு உடன்பாடு இல்லையோ, தான் தன் காரிலே வந்திருக்க வேண்டுமோ? என்று எண்ணினாலும் இனி இறங்கி அருளுக்கு சங்கடம் தர விரும்பவில்லை..
ஆருத்ராவோ தன்னுடன் வேலை செய்யும் லொட லொட பார்ட்டி சாய்ராவை தான் உடன் அழைத்து செல்ல அருளிடம் கேட்டாள்.. அதிரன் உடன் இருப்பான் என்று தெரிந்திருந்தால் அவளை எப்படியாவது கழட்டி விட்டிருப்பாள்.. இதோ அவளும் வந்து விட்டாளே என்று யோசித்த வண்ணமே அவளுக்கு கார் டோரை திறந்து விட்டு மறுபுறம் அவள் அமர்ந்து கொள்ள கார் கிளம்பியது..
காரில் இரு ஆடவர்கள் அமர்ந்து இருப்பதை பார்த்த சாய்ரா ,
“என்ன ஆரு உங்க மாமா வரார்னு சொன்ன கூடவே இன்னொரு ஹாண்ட்சமும் இருக்காங்க ? உங்க மாமா ஃப்ரெண்டா? நம்பர் கிடைக்குமாகேட்டது?” என்று தன் வெண்கலக் குரலில் ரகசியம் போல அவள் கேட்டது காரைக் கடந்து நூறு மீட்டர் சென்ற வாகனத்தில் இருந்தவருக்குக் கூடக் கேட்டிருக்கும்..
ஆருத்ரா அவள் அலப்பறையில் நொந்து , ” பேசாம வா சாய்ரா..” என்று அடிக்குரலில் உறும அவள் கேட்டால் தானே..
“ஹேய் சும்மா சொல்லு யாருடி அது? ஆளு பார்க்க அம்சமா இருக்காப்ல?”
இரு ஆடவருக்கும் அவள் பேச்சு கேட்டிருந்தாலும் தாங்கள் இடை புகவில்லை.. ஆருத்ரா என்ன சொல்வாள் எனக் கேட்க காதைத் தீட்டிக் காத்திருந்தனர்..
சாய்ரா, ” சொல்லு ஆரு, சொல்லு..” என்று நச்சரிக்க ஆரம்பிக்க, ஆருத்ராவோ இவளைக் கேப் வரும் வரை காய விடாது, கூடவே அழைத்து வந்தது மாபெரும் தவறு என்று தன்னையே திட்டிக் கொண்டவள் , அவள் நச்சு தாங்காமல் “இசையோட அப்பா..” என்றிருந்தாள்..
அவள் பதிலில் கண்களை மூடித் திறந்த அதிரன், தன் வேதனையை மறைக்க அந்தப்புறம் பார்வையைத் திருப்பிக் கொண்டு சாலையை வெறித்தான்.. வெறும் இசையோட அப்பா மட்டும் தானா நான்? என்று அவன் மனம் அவளிடம் மருகியது.. அவன் நிலை புரிந்த அருளும் அவனை ஏதும் கேட்காது அமைதியாகி போனான்..
ஆருத்ரா பதிலில் விடாது பேசும் சாய்ராவே அடுத்து வாய் பேச முடியாது திருதிருத்தாள்.. அவள் யாரோ அருளின் நண்பன் என்ற வகையில் தான் சும்மா கிண்டல் செய்ய ஆரம்பித்தது.. ஆனால் அது ஆருத்ராவின் கணவன் ஆக இருக்கும் என அவள் என்ன கனவா கண்டாள்?
“ஹே சாரி ஆரு.. நீ உன் பர்சனல் எதும் ஷேர் பண்றது இல்லயா? அதான் நான், நீ சிங்கிள் மதர்ன்னு தான் நினைச்சேன்.. ஏன் ஆபீஸ்ல கூட அப்டித் தான் பேச்சு.. அதான் இவரு உன் ஹஸ்பண்டன்னு ஒரு சதவீதம் கூட யோசுக்கல.. சாரி பா ” என்ற,
அருள், “க்கும்… நீ இப்போ மன்னிப்புக் கேட்கலன்னு யார் அழுதா? இப்டி ஒரு மன்னிப்பை கேட்டதுக்கு நீ வாய தொறக்காமலே வந்திருக்கலாம்..” என மனதில் அவளைக் கருவிக் கொண்டான்..
அருள் கருவிக் கொண்டது சரியே என்பது போல் அவளின் “சிங்கிள் மதர்..” என்ற சொல் குறி தவறாது சென்று அதிரனின் மனதைக் குத்திக் கிழித்தது..
ஆருத்ரா அவள் மன்னிப்பைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாது அலுவலக பேச்சுக்களை ஆரம்பித்து வைக்க அதன்
பின் அவளும் வாய் விடாது அதைப் பற்றியே பேசிக் கொண்டு வர சூழ்நிலை ஒரளவு சுமூகமாக ஆனது..