இன்ஸ்பெக்டர் கேட்ட விசயத்தை சொல்ல தொடங்கிய ஆருத்ரா, அந்த நாளுக்கே சென்று விட்டது போல் இருந்ததில் தன்னுணர்வின்றி பலதையும் வெளியில் சொல்லியிருந்தாள்.. இது நாள் வரை மௌனமாய் இருந்தவள் தன் மௌனம் துறந்ததில் அந்த இடமே மௌனித்திருந்தது..
ஆனால் அதிரன் மனம் மட்டும் உலைகலனாய் கொதித்துக் கொண்டிருந்தது.. பாதி ரௌத்திரத்தில் என்றால் பாதி தன்னவளின் அன்றைய நிராதரவான நிலையை எண்ணி பெருகிய வலியில்..
அவன் மனம் கொண்ட இறுக்கம் அவன் முகத்திலும் தெரிய கைகளை கோர்த்து நெறித்தவன் பார்வை தன் கைகளைத் தாண்டி யாரையும் நோக்கவில்லை.. காரணம் தன் உறவுகளைப் பார்க்க விருப்பம் இல்லை.. ஆருத்ராவைப் பார்க்க தகுதியே இல்லை என நம்பினான்..
மாபெரும் தவறு தன் பக்கம்.. தன் பக்கம் மட்டுமே இருக்க.. ஏன் பாவமென்று கூட சொல்லலாம்.. தவறு சிறிதளவேனும் என் ருத்ரா மேல் இல்லாத போது வயிற்றில் குழந்தை இருக்கும் போது அவளை விட்டுச் சென்ற பாவி நான்.. அதை நினைக்கவே …
புவனேஸ்வரி மகனைத் தான் பெரும் தவிப்பாய் பார்த்திருந்தார்.. இதை என்றும் அதியிடம் சொல்லாதே என்று அதி லண்டன் சென்ற அடுத்த மாதம், தான் ஹாஸ்பிடலில் கால் பரிசோதிக்க சென்ற போது செக்கப்பிற்கு மருத்துவமனை வந்த ஆருத்ராவிடம் சத்தியம் கேட்ட போது தன் முகத்தைக் கூடப் பாராது விலகிச் சென்றது இப்போது இப்படி சொல்லத் தானா? என்று எண்ணிக் குமைந்து போனார்.. இப்போதும் தவறு அவள் மேலும் தான் என்ற தான் எண்ணம் அவருக்கு.. இனி மகன் தன்னைப் பார்க்கும் பார்வை? என்று அதை நினைக்கத் தான் அவனைப் பெற்ற வயிற்றில் அமிலம் சுரந்தது அவருக்கு..
இன்ஸ்பெக்டருக்கு அவள் பேச்சில் இருந்து அவள் மொபைல் அம்பிகாவின் கணவன் கையில் தான் இறுதியாக இருந்தது.. என்பதும் அவன் தான் இதை செய்திருப்பான் என்றும் அவள் கூறுவது புரிய வரவே,
“இப்போ என்ன சொல்றீங்க? இதைப் பண்ணதே அதிரனோட அக்கா ஹஸ்பண்ட் தான்னு சொல்றீங்களா?” என்று அவர் கேட்கவும்..
அவளுக்கு முந்தி அம்பிகா,
“ஐயோ சார்.. இவ பழைய பழி உணர்ச்சில என் புருஷனை மாட்டி விட பார்க்குறா சார்.. ” என்று ஆரம்பிக்க , அவளை நிறுத்தினார் அவர்..
“வாயை கொஞ்சம் மூடுறீங்களா? உங்களை நான் கேள்வி கேட்கும் போது மட்டும் பதில் சொன்னா போதும்.. இப்போ என் கேள்வி அவங்ககிட்ட..” என்று கடுமையாக அவளை எச்சரித்தார்..
“நீங்க சொல்லுங்க ஆருத்ரா..”
தன் புருஷனை நல்ல ஆத்மா என்று சொன்ன அம்பியை அல்பமாய் பார்த்த ஆருத்ரா இன்ஸ்பெக்டரிடம்,
“எனக்கு ஸ்யூரா சொல்ல முடியும் சார்.. லாஸ்டா அவன் கையில தான் என் மொபைல் இருந்துச்சு.. அண்ட் இன்னைக்கு காலைல என்னோட அதே நம்பர்ல இருந்து எங்க ரிலேடிவ் ஒருத்தருக்கு இந்த மாதிரி ஃபேக் கால் வந்திருக்கு.. அவங்ககிட்ட ஆல்ரெடி என்னோட நம்பர் சேவ்ல இருந்தனால ‘இது ஆருத்ரா நம்பர் தான? நீங்க யாரு பேசுறது?’ன்னு கேட்டதும் அந்தப் பக்கம் பேச்சுத் தடுமாறி பயத்துல சேகர்னு.. கூப்ட சத்தத்தோட கால் கட் ஆகியிருக்கு.. அவங்க காலைல இதைப் பத்தி என்கிட்ட கால் பண்ணி சொன்னதும் வர்க் முடிஞ்சு ஈவினிங் போலீஸ் ஸ்டேஷன் வரணும்ன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா அதுக்குள்ள இங்க இவங்களை போலீஸ் விசாரிக்கிறாங்கன்னு மாமா சொல்லவும் இதுக்கா தான் இருக்கும்ன்னு கெஸ் பண்ணதால இங்க வந்துட்டேன்..”
நம்பத் தகுந்த ஆதாரமாக அவள் வாக்கு மூலம் இருக்க கேட்டுக் கொண்டவர், கான்ஸ்டபிளிடம்,
“அவன் டீடெயில்ஸ் எல்லாம் அவன் வைஃப்கிட்ட கேட்டு கலக்ட் பண்ணுங்க..” என்று விட்டு எழுந்தார்..
“சார்.. சேகர்ன்ற பேர்ல எத்தன பேரு இருப்பாங்க? அவரு அப்படி இல்ல சார்.. அவரு ஊதாரியே தவிர இப்பிடி ஏமாத்த எல்லாம் மாட்டாரு.. ரொம்ப நல்லவரு சார்.. இவ தான் எல்லாருகிட்டவும் பணத்தை ஏமாத்தியிருப்பா..” என்று அப்போதும் அடங்காது ஆவேசமாய் கத்தினாள் அம்பி..
“இந்தா சும்மா நிறுத்தும்மா.. முதல்ல உன் புருஷன் டீடைல்ஸ் எல்லாம் குடு.. அப்பறம் நாங்க அந்த நல்லவர விசாரிச்சு அவரு எவ்ளோ நல்லவருன்னு தெரிஞ்சுக்கிறோம்..” என்றவர் கான்ஸ்டபிளை பார்க்க அவரும் அவளிடம் விவரங்களை சேகரித்தார்..
இன்ஸ்பெக்டர் ஆருத்ராவிடம்,
“இந்தக் கேஸ்க்கு தேவை இல்லாதது தான்.. பட் கேட்கணும்ன்னு தோணுது.. ப்ராப்பரா டிவோர்ஸ் கூட தராம உங்களுக்கு ஒரு தகவல் கூட சொல்லாம நாட்டை விட்டே போன இவர் மேல நீங்க நினைச்சா கேஸ் குடுத்துருக்கலாமே? குழந்தைய கொடுத்துட்டு ஏமாத்திட்டு போயிட்டார்ன்னு.. ஏன் நீங்க அதைப் பண்ணல?” இன்ஸ்பெக்டரின் இந்தக் கேள்வியில் அதிரன் தன்னை முச்சந்தியில் நிற்க வைத்து யாரோ முன்பின் தெரியாத ஒருவன் செருப்பால் அடித்தது போல் உணர்ந்தவன் மனதாலும் உடலாலும் கூனிக் குறுகிப் போனான்..
“அப்படி கேஸ் போடற அளவுக்கு அவர் குழந்தையோட பொறுப்பை மொத்தமா தட்டிக் கழிக்கல சார்.. வேணாம்னு விட்டுப் போனாலும் என்னோட பேங்க் அக்கவுண்ட்கு அவர்கிட்ட இருந்து மாசா மாசம் ஒரு அமவுண்ட் கிரெடிட் ஆகிட்டே இருக்கும் சார்.. ஆனா நான் தான் அதை யூஸ் பண்ணிக்க விரும்பாம அதை அப்படியே அவரு தம்பி அக்கவுன்ட்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுவேன்.. ஆறு வருஷமும் இது தவறாம நடந்திருக்கு சார்.. அதனால அவங்க மேல வீணான குற்றச் சாட்டை வைக்க நான் விரும்பல..”
ஹூம்.. குற்றவாளியின் மேல் குற்றம் சுமத்த விரும்பவில்லையாம்..
அநியாயத்திலும் நியாயம் தேடிப் பார்க்கும் அவள் எங்கே? நியாயத்தின் நிழல் கூட அண்டாத நான் எங்கே? என்று அவளையே பார்த்திருந்தான் அதிரன்..
இன்ஸ்பெக்டர் ஜீவாவை சந்தேகமாக பார்த்தார்.. ஒருவேளை முழு பணத்தையும் இவன் தான் ஆட்டையைப் போட்டானோ, இந்த கேசில் கூட ஃபோனை வைத்து பணம் பறிப்பதும் இவன் தானோ என்பது போல் இருந்த அவர் பார்வையில் அரண்டவன்,
“சார் , அண்ணி என் அக்கவுண்டுக்கு போடுற பணத்தை அன்னைக்கே நான் இசை பேர்ல அதான் அண்ணா குழந்தை பேர்ல டெபாசிட் பண்ணிடுவேன்.. அதே நேரம் அண்ணனுக்கு இப்டினாலும் அவங்க தாட் இருக்கணும்னு அவங்க பணம் வேணாம்னு திரும்ப அனுப்புனத நான் இன்னைக்கு வரைக்கும் சொல்லல சார்..” சொன்னவன் தன் மொபைலில் பேங்க் டீடெயில்ஸ் அண்ட் இசையின் பெயரில் மாதாமாதம் போட்டு வரும் சேமிப்பு பற்றிய விவரங்களை காட்ட,
வாங்கிப் பார்த்தவர் அவன் மீது தவறில்லை என்று உணர்ந்து கொண்டார்.
கான்ஸ்டபிள் விவரம் வாங்கியாகிற்று என்றவும் அதிரனிடமும் ஆருத்ராவிடமும் சில பார்மாலிட்டிகளுக்கு சைன் வாங்கிக் கொண்டவர், இருவரையும் வெளியூர் எங்கும் செல்லக் கூடாது என்றும் கூப்பிட்டா ஸ்டேஷன் வந்தே ஆகணும்.. என்ற கட்டளைகளை பிறப்பித்து விட்டு அவர்கள் கிளம்பினர்..
அவர்கள் அகலவே அம்பிகா ஓ.. என்று கதறி அழ ஆரம்பித்தாள்.. அம்மா என்று தாயைக் கட்டிக் கொண்டு தேம்பும் அவளைப் பரிதாபம் பார்க்க புவனேஸ்வரியை அன்றி அங்கே யாரும் இல்லை..
“இனி எப்டிம்மா வெளிய நான் தலை காட்டுவேன்? ஐயோ கவி! நாளைக்கு வெளிய விசயம் கசிஞ்சா அவ எப்டி மா படிக்கப் போவா?” என்று சொல்லி சொல்லி அழ, புவனேஸ்வரியும் கலங்கிப் போனார்..
அவர் அதிரனைப் பார்த்தார்.. அவன் கேட்டறிந்து கொண்ட விடயங்களில் தன்னையே வெறுத்து அமர்ந்திருக்கையில் பின் எங்கிருந்து அம்பிகாவின் பிரச்சனையைத் தீர்க்க?..
அதனால் ஜீவாவிடம்,
“ஜீவா மாப்பிள்ளையை இதுல இருந்து மீட்க ஏதாச்சும் பண்ண முடியுமா? கவி பாவம்பா..” என்று கவியின் பால் அவன் வைத்துள்ள அன்பை உபயோகப் படுத்திக் கொள்ள நினைத்தார் அவர்..
“ஏன்மா கவி பாவம்? அவங்க அப்பா கூட இல்லாம இருப்பான்னா? அப்போ ஏன்மா நீங்க வயித்துக்குள்ள இருந்த இசைக்கு பாவம் பார்க்கல? அவ பிறந்து ஆறு வயசு வர வரைக்கும் கூட அவளைப் பாவம் பார்க்கவே இல்ல?”
அதிரடியாய் அதிரனிடம் இருந்து வந்த கேள்வியில் பதிலின்றித் தடுமாறினார் புவனேஸ்வரி.. அவனையே அவர் பார்த்திருக்க அவரைப் பார்த்திருந்த அவன் கண்களிலோ நம்பிய உறவுகளால் ஏமாற்றப்பட்ட வெறுமை..
அப்போதும் புவனேஸ்வரி தன் மகன் மனதில் கீழிறங்க விரும்பாதவராய், “அன்னைக்கு மாப்பிள்ளை அம்பிகா ஆம்புலன்ஸ் கூப்பிட போன அப்புறம் என்கிட்ட அழுதாருடா.. நான் தான் இதைப் பண்ணதுன்னு தெரிய வந்தா அதி என்னை அடிச்சே கொன்னுடுவான்னு.. அத்தோட என்னோட சேர்த்து அம்பியையும் இந்த வீட்டுக்குள்ள கூட அனுமதிக்க மாட்டான்.. இதே தப்ப பண்ணது அவன் மனைவின்னா கொஞ்ச நாள்ல கோபம் போயிடும்.. இதை அப்படியே விட்டுடுங்க அத்தைன்னு கெஞ்சினார்டா.. நானும் முதல்ல யோசிச்சேன்.. ஆனா ஹாஸ்பிடல நீ ஆருத்ரா மேலயே அவ்ளோ கோபம் காட்டினதப் பார்த்து பயந்துட்டேன்.. இதுல இத மாப்பிள்ளை தான் பண்ணதுன்னு தெரிஞ்சா நிச்சயம் மாப்பிள்ளை சொன்னதை விட பெருசாவே நடக்கும்ன்னு தான் பயத்துல எதும் சொல்லாம விட்டுட்டேன் அதி..
ஆனா குழந்தை பிறக்க முன்னாடியே ஒரு நாள் ஆருத்ராகிட்ட கேட்டேன் அதி.. நீ உண்மைய யார்கிட்டவும் சொல்ல மாட்டேன்னு சொல்லு.. நான் இப்போவே உன்னை அதி கூட சேர்த்து வைக்கிறேன்னு.. ஆனா அவ என்னை மதிக்கக் கூட இல்லை..
அவ மட்டும் நம்ம குடும்பம் தானேன்னு அன்னைக்கு கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருந்தா அன்னைக்கே எந்த சிக்கலும் இல்லாமல் உன் கூட அவ உறவு சுமூகமாகியிருக்கும்.. ஏன் இன்னைக்கு கூட ஃபோன் தொலஞ்சு போச்சுன்னு மட்டும் சொல்லி இருக்கலாமே.. அவர் தான்னு உறுதியா தெரியாமலே வேணும்ன்னே தான மாப்பிள்ளையை மாட்டி விட்டா..” என்று வெறுப்பாய் முடிக்க, அதை விட அதீத வெறுப்பாய் தாயை நோக்கினான் அதிரன்..
“இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க? உங்க மாப்பிள்ளையை காட்டிக் குடுக்காம இருந்தா, அவரு இன்னும் பல பேரோட தற்கொலைக்கு காரணமா இருந்திருப்பாரு.. அண்ணி அந்தப் புண்ணியம் எல்லாம் உங்க பேத்தி கவிக்கு கிடைக்காமல் பண்ணிட்டாங்கன்னு சொல்ல வரீங்களா?” இதைக் கேட்டது ஜீவா..
“ஜீவா!.. நம்ம கவிடா..” என்றவருக்கு குரல் தழுதழுத்தது..
அதற்கு மேலும் அங்கே நின்று அந்த நாடகங்களைப் பார்க்க பிரியப்படாத ஆருத்ரா வந்த வேலை முடிந்ததில்,
“சரி..ஜீவா நான் கிளம்புறேன்..” என ஜீவாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்ப, செல்லும் அவளை வலியுடன் பார்த்து நின்றான் அதிரன்.. ஆனால் தடுக்க வில்லை.. அதற்கு தனக்கு தகுதி இல்லை என்றே நினைத்தான்..
“அதீ.. அம்மா… சொல்றத.. ” என்று புவனேஸ்வரி பேச ஆரம்பிக்க
“ஹ்ம்ம், அம்மா… ” விரக்தியாக சிரித்தான்.. தாய் இல்ல நீங்க பொய்.. எல்லாமே பொய் , நான் நம்பினது பொய்.. நம்புனவங்க பொய்.. இது தெரியாம நான் என் குடும்பத்தை விட்டு வருசக் கணக்குல பிரிஞ்சி இருந்திருக்கேன்.. இப்போது என் குடும்பம் என்ற வரையறையுள் ஆருத்ரா இசை மட்டுமே.. அது புரிந்த ஏனையோருக்கு மனவருத்தம் தான்.. ஆனால் என்ன செய்ய முடியும்?
“ஜீவா அப்போ சின்னபையன்.. அவனே சொன்னான், அண்ணா நான் அங்க இல்லை.. இல்லன்னா நடந்த உண்மைய அப்படியே சொல்லிருப்பேன்.. இப்போவும் உண்மை வேணும்ன்னா அதை அண்ணி ஒருத்தங்ககிட்ட மட்டும் தான் எதிர்பார்க்க முடியும்.. அவங்ககிட்ட கேளுன்னு.. கேட்கலையே நான்.. மத்தவங்களை விடு அம்மா பொய் சொல்லுவாங்களா? அதும் என் வாழ்க்கையிலன்னு கேட்டு வச்சேன்.. ஆனா அதுலாம் பொய்யுடான்னு நெத்திப் பொட்டுல இன்னைக்கு அறைஞ்சு சொல்லிட்டிங்கல்ல?” வலியுடன் அவன் கேட்க புவனேஸ்வரி தவித்துப் போனார்..
“அதீ..”
“அந்த பொறுக்கி , ஊதாரி மாப்பிள்ளை வேணாம்னு பத்தொன்பது வயசுல இவ அவனை விரும்புறேன்னு வந்து நிக்கும் போதே சொன்னேன்.. ஆனா அவனை தான் கட்டிப்பேன்னு கட்டிக்கிட்டா.. கட்டிக்கிட்டு வந்து ஒவ்வொண்ணுக்கும் அம்மா கையை எதிர்பார்த்து நிக்கும் போதும் நர்மதாக்கு அமைஞ்ச வாழ்க்கை பத்தி அம்மாகிட்ட நீ ஆசையா சொல்லும் போதும் ஒரு தம்பியா எவ்ளோ கஷ்டப் பட்டிருக்கேன் தெரியுமா?
நானும் சரி .. ஜீவாவும் சரி.. உனக்கு எவ்ளோ விட்டுக் குடுத்திருக்கோம்? ரெண்டு பேரும் சேர்ந்து கவி எங்க பொறுப்புன்னு தான் முடிவெடுத்திருக்கோம்.. ஆனா என் வாழ்க்கைக்கு நீங்க எல்லாம் சேர்ந்து செஞ்சீங்க பாருங்க.. ப்பா வயிறு குளிர்ந்து போச்சு..”
அதி.. என்ற அம்பிகாவுக்கும் அவன் பேச்சில் வந்த அழுகையை அடக்க முடியவில்லை.. அவள் என்ன செய்வாள்.. தான் வாழ ஒரு ஆதாரம் தேவை என்று எல்லார் அதிரன், ஆருத்ரா இருவர் வாழ்விலும் விளையாடி விட்டாள்.. விதி இப்போது அவள் வாழ்க்கையில் விளையாடிப் பார்க்கிறது..
அதிரன் இப்போது ஜீவாவிடம்,
“ஜீவா கவி வந்தா அவளுக்கு என்ன சொல்லி அவளைத் தேத்தணும்ன்னு உனக்குத் தெரியும்.. அவ கூடவே இரு.. அப்பறம் ரெண்டு மூணு நாள் கழிச்சு அங்க எங்க வீட்டுக்கு அவளை கூட்டி வா.. நானும் அவகிட்ட பேசிக்கிறேன்.. அதை விட்டுட்டு அம்மா கேட்கிறாங்க.. அக்கா கேட்கிறாங்கன்னு அந்தாளை மட்டும் எனக்குத் தெரியாம வெளிய எடுக்க முயற்சி செஞ்சேன்னு வையு.. தொலைஞ்ச..” என்று அவனைப் பத்திரம் காட்டினான்..
“நீயே அந்தாள வெளிய எடுக்கறன்னு சொன்னாக் கூட நான் உன்னை எடுக்க விட மாட்டேன்.. செஞ்ச தப்புக்கு காலம் கடந்து ஜெயில்ல இருந்து தண்டனை அனுபவிக்கட்டும்..” என்று பல்லைக் கடித்தான் ஜீவா..
“அப்டின்னா எனக்கு எந்த ஜெயில்லடா தண்டனை கிடைக்கும்?” என்று உடைந்து கேட்ட அண்ணனை தாங்கியவன்,
“உனக்கு தண்டனை எல்லாம் அண்ணிகிட்ட கேட்டு வாங்கிக்கோ.. கால்ல விழ சொன்னா உனக்காக பாதாளத்துலயே விழுறேன்னு சொல்லி விழுந்துடு..” என்று கேலி பேசி அவனை மாற்ற முயற்சிக்க அவன் முயற்சி புரிந்து விரக்தியாய் சிரித்து வைத்தான்..
“அதுக்கு அவ பேசினாலும் நான் பேசணுமே! அவ மேல தப்புன்னு நினைச்சிட்டு இருக்கும் போதே அவ முன்னாடி சாதாரணமா என்னால பேச முடியாது.. (சரக்கடிச்சா பேச வருமே…) அப்போவே என் தப்பு என்னை உறுத்தியிருக்கு.. ஆனா எனக்கு புரியல.. இப்போ தப்பு மொத்தமும் என் மேலன்னு தெரிஞ்சி போச்சு.. எப்டி என்னால..? ப்ச்.. அவ முன்னாடி மூச்சு விடவே கஷ்டமா இருக்குமேடா..” என்றவன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்..
அவன் கலக்கம் ஜீவாவை வருத்தினாலும் , தந்தை ஸ்தானத்தில் இருந்து இன்று தான் விரும்பிய நிலையில் தன்னை நிற்க செய்த தமையன் மேல் கொண்ட அன்பில் தன் கலக்கத்தை மறைத்து,
உனக்கு திறமை போதாதுன்னு சொல்லு.. கரெக்ஷன் எல்லாம் கரெப்ஷன் இல்லாம பண்றது எப்டின்னு அருள் மாமாகிட்ட கேட்டுக் கத்துக்கோ.. சர்மி அக்காவையே சமாளிச்சு வாழுற மனுஷன் அவரு..” என்றதும் அவன் எண்ணியபடி அதிரனிடம் கீற்றான புன்னகை..
அதை வாஞ்சையோடு பார்த்தவன் , “அவர் கூடலாம் பேசிப் பழகு அண்ணா.. ரொம்பவே நல்ல மனுஷன்.. அப்படியே அண்ணி அம்மா, அப்பா கூடவும் உறவை நல்ல முறையில வளர்த்துக்க.. எப்பவோ நடந்த ஒன்னுக்காக அவங்கள ஒதுக்கி வைக்காத.. அவங்க கூடலாம் ஸ்மூத்தான உறவு இருந்திருந்தா நிச்சயம் இந்த மாதிரி கசப்பானது எதுவும் நடக்காம தவிர்த்திருக்கலாம்ண்ணா..” அது சரி தான் என்று அதிரனுக்குமே தோன்றியது அதனால் அவன் தம்பியை ஆமோதித்தான்..
“அவங்களாம் உன் கட்சின்னா அண்ணிய ஈசியா சமாதானம் பண்ணிடலாம்..” என்று ஐடியா தந்தவனை அது கடினம் என்று தெரிந்தாலும் இப்போது தனக்காய் நிற்கும் ஒரு உறவு என்ற நினைவில் அவனை நன்றியாய் ஒரு பார்வை பார்த்தான்.. இத்தனை பிரச்சனைகள் வந்த பின்னும் தான் இவ்வளவு தெம்பாய் உணர அவன் ஆதரவான பேச்சு தான் முழுக்காரணம் என்று உணர்ந்தான்..
“அம்மா, அப்பா ரெண்டு பேருமே என்கூட இருக்காங்க.. நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்ற வார்த்தைய இசைகிட்ட இருந்து கேட்கிற வரை உன்னோட இந்த தாங்க்ஸ நான் அக்செப்ட் பண்ணிக்க மாட்டேன் ண்ணா..” என்று விளையாட்டாய் என்றாலும் தன் ஆசையை உறுதியாய் கூறியவனிடம் ஆமோதிப்பாய் தலையசைத்து விட்டு தன் அறையில் இருந்த மிச்ச சொச்ச தன் உடமைகளையும் பேக் பண்ணி எடுத்துக் கொண்டு தன்னையே ஏக்கமாய் பார்த்து நின்ற தாயை சட்டையே செய்யாமல் தன் வீட்டுக்கு சென்று விட்டான் அதிரன்..
அவன் செயலே சொன்னது, இனி இந்த வீடு எனக்கு அந்நியம் என்று.. அனைவருக்கும் அது வருத்தத்தை தந்தது என்றாலும் ஜீவா சற்று நிம்மதியாய் உணர்ந்தான்.. அங்கே நின்ற தாய் தமக்கையை சிறிதும் கண்டு கொள்ளாது அவனும் தன்னறைக்குள் சென்று அடைந்தான்..
புவனேஸ்வரி கையில் ஊன்று கோல் இருந்தும் முதல் முறை ஆதரவின்றி நிற்பது போல் உணர்ந்தார்..