பானுமதி, தாமோதரன் (தர்ஷியின் தாய் , தந்தை) இருவரும் மகளின் பிடிவாதம், ஜீவாவின் நற்குணங்களை மனதில் கொண்டு திருமணத்துக்கு சம்மதிக்க அதிரன் தன் கடமையுணர்ந்து தன் வேதனைகளைப் பின் தள்ளி இந்தத் திருமணத்தை தான் பொறுப்பேற்றுக் கொண்டான்..
அதன்படி முதலில் தாய் வீட்டுக்கு சென்றவன் தமக்கை தாய் இருவர் முன்னிலையில் நர்மதாக்கு ஃபோன் செய்து பொதுவாக ஜீவாவுக்கு திருமணத்துக்கு பெண் பார்த்து விட்டேன்.. பெண் இன்னார் என்பதை தெரிவிக்க … புவனேஸ்வரி மகன் குடும்பத்தை விட்டு ஒதுங்காமல் இப்படி எடுத்து செய்கிறானே என்ற திருப்தியில் ஆமோதிப்பாய் தலையசைத்தார் என்றால்.. அம்பிகாக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் தன் சொல் இனி அம்பலம் ஏறாது என்று அமைதி காத்தாள்..
ஆனால் நர்மதா மீண்டும் அந்தக் குடும்பத்தில் இருந்து பெண்ணா என்று துள்ளினாள்..
“இதோ பாரு நர்மதா ஜீவாக்கு பொண்ணைப் புடிச்சிருக்கு.. அதனால நான் இதை ஒரு தகவலா தான் உங்க கிட்ட சொல்றேன்.. சோ உங்க விருப்பம் இதுல முக்கியம் இல்லை.. கல்யாணத்துக்கு நேர்ல வந்து அழைப்பேன் மறக்காம குடும்பத்தோட வந்துடு..” என ஏதோ விருந்தினரை அழைப்பது போல் அவன் அழைக்க..
“என்ன? கல்யாணம்ன்னு தகவல் சொல்றியா? அப்போ அங்க வந்து நாங்க சாப்டு கிளம்பணுமா என்ன? அந்தளவு வக்கத்து என் புருஷன் என்னை வச்சுருக்கல.. முடிவு பண்ண நீயே கல்யாணத்தையும் தனியா நின்னு நடத்திக்கோ..” என்று ஃபோன் வழியேயே எகிறினாள் நர்மதா..
“ஓஹ் அப்டி!… ஏற்கனவே நீங்க பண்ண வேலைக்கு உங்க பொண்ணுங்க விஷேசத்துக்கு நான் தாய் மாமனா நிற்பேனா இல்லையான்னு தெரியல.. அதுனால ஜீவா உங்களுக்கு எவ்ளோ முக்கியம்னு நீங்களே யோசிச்சு முடிவு பண்ணுங்க.. ” அசட்டையாக சொன்னான் அவன்..
அவனின் இந்த வார்த்தைகள் மூன்று பெண்களையும் அசைத்துப் பார்த்தது.. அம்பிகாவும் நர்மதாவும் அதிர்ந்து போய் அவனைப் பார்த்திருக்க, புவனேஸ்வரி கலங்கிய கண்களை மறைத்தவாறு,
“நான் தான அதி தப்பு பண்ணேன்? எதுக்கு உன் அக்கா ரெண்டு பேருக்கும் இந்த தண்டனை?
ஏற்கனவே அம்பிகா வாழ்க்கை நல்லா இல்லை.. இதுல அவன் புருஷனையும் இதுலயும் இழுத்து விட வேணாம்னு தான் பண்ணேன்.. தப்பு தான்.. ஆனா அது முழுக்க முழுக்க நான் பண்ணது… இவங்க ரெண்டு பேருக்கும் தெரியவே தெரியாது.. என்னை வேணா ஒதிக்கிடு.. ஆனா என் பொண்ணுங்களை தள்ளி வச்சிடாதப்பா.. காலத்துக்கும் அவங்களுக்கு உன் தொணை இருக்கணும் அதி..” என்று கை கூப்பி வேண்டிட , அம்பிகாவும் நர்மதாவும் அம்மா என்றனர் பரிதவித்துப் போய்..
ஆனால் அதிரன் பதறாது அவரை சலனமற்ற பார்வை பார்த்து வைத்தான்.. இனி யாருக்கு என்ன தண்டனை கொடுத்தால் தான் என்ன? சென்ற காலம் திரும்பி வருமா? இல்லை கருவிலேயே என் செல்லம்மாவ ஏங்க வைத்த பாவியாகித் தான் நிற்பது இல்லை என்றாகுமா என்ன?
“தண்டனை அது இதுன்னு எல்லாம் பேசாதீங்கமா.. அது கொடுக்கிற அளவுக்கு நான் யோக்கியமானவன் இல்ல… உங்க பேர்ல மட்டும் பழியைப் போட்டுட்டு நான் நல்லவனாக விரும்பல.. அவ பக்கம் என்னன்னு கேட்காம அவளுக்கும் சேர்த்து நான் முடிவெடுத்தேன்.. அவளுக்கு தீரா வலியையும் நான் தான் கொடுத்தேன்.. அதுக்குப் பிராயச்சித்தமா இனி என் சம்பந்தமா எடுக்கிற எந்த முடிவா இருந்தாலும் அது ருத்ரா எடுக்கிறது தான்.. அவ வேணாம்னு சொன்னா, அதை நான் மீறுறதா இல்லை.. புரிஞ்சிக்கோங்க..”
அவன் கொடுத்த நீண்ட விளக்கத்தில் புவனேஸ்வரி புரிந்து கொண்டது என்னவென்றால் இனி தன் மகன் என்று தான் பார்க்கப் போவது ஆருத்ராவின் கணவனையே என்பது தான்.. எந்த ஒரு தாயும் மாமியார் கொடுமையை செய்வதற்கு முக்கிய காரணமே இப்படி ஒரு நாள் வந்து விடக்கூடாது என்பதற்குத் தானே.. ஆனால் புவனேஸ்வரி என்ன முயன்றும் அந்த நிலை வந்து விட்டது.. அதனால் தான் செய்த பாவத்திற்கு உண்டான தண்டனையை வலிக்க வலிக்க ஏற்றுக் கொண்டவர் அதன் பின் ஏதும் பேசவில்லை..
அதிரன் அம்பிகாவிடம் திரும்பியவன்,
“என் வாழ்க்கையில விளையாடுன மாதிரியே ஜீவா வாழ்க்கையையும் கெடுக்கலாம்ன்னு நினைக்காத.. உனக்கே தெரியும், நீ இப்போ இருக்கிற நிலை என்னன்னு.. கவி பாதுகாப்புக்குன்னு வீட்ல ஒரு ஆம்பளை துணை நிச்சயம் வேணும்.. அதுக்காக மட்டும் தான் ஜீவா கல்யாணம் முடிஞ்சாலும் இங்கயே தங்குற முடிவுக்கு ஒகேன்னு விட்டேன்..
ஆனா அதுக்கு பங்கம் வர்ற மாதிரி ஏதும் பண்ண நினைச்ச, நான் ஒன்னும் பண்ண தேவையில்லை.. தர்ஷி ஒன்னும் ஆருத்ரா இல்லை.. புரியும்ன்னு நினைக்கிறேன்..” என்று எச்சரித்தவன் இப்போது நர்மதாவிடம் திரும்பி,
“ஜீவா கல்யாண விஷயம் உனக்கு பிடிக்கலன்னதுக்காக யாரோ போல பொண்ணு வீட்டுக்கு கால் பண்ணி , ‘பையன் அம்மா பேச்சை மீற மாட்டான்.. அவனுக்கு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் குடுக்குறதா இருந்தா உங்க பொண்ணு அவ என்றத அந்த நிமிஷமே மறந்துடுங்க.. இனி அவ அவங்க வீட்டுக்கு தான் முழு நேர வேலைக்காரியா இருக்கணும்.. முக்கியமா பையன் ஜாதகத்துல ரெண்டு பொண்டாட்டி யோகம் இருக்குன்னு பேசிக்கிட்டாங்க.. அதை மறைக்க நம்பிக்கை இல்லன்னு சொல்லி ஜாதகம் பார்க்க வேணாம்னு சொல்லிருப்பாங்களே?..’ இப்பிடிலாம் சொல்லிட்டு அலையாத.. ஏன்னா அவங்க ருத்ரா அப்பா மாதிரி அதை நம்ப மாட்டாங்க.. புரிஞ்சுதா?” என்று அழுத்தமான குரலில் வினவ அவள் அவனைத் திகைத்துப் போய்ப் பார்த்தாள்.. இதை எப்படி அறிந்து கொண்டான் என..
“இது எப்பிடி எனக்குத் தெரியும்னு தான பார்க்குற? உங்க கல்யாணம் பேசின சமயத்துல இப்பிடி ஒரு கால் வந்திச்சு.. அதுல பயந்து தான் அவசர அவசரமா ருத்ராக்கு கல்யாண ஏற்பாடு பண்ணேன்னு மாமா சொன்னப்போ யாரோன்னு தான் நெனச்சேன்.. அப்பறம் அந்த நம்பர் இப்போவும் என்கிட்ட இருக்குன்னு அவர் தந்த நம்பர் வாங்கி யாரோடதுன்னு செக் பண்ணா வசீகரன் என்ற பேர்ல நம்பர் ரிஜிஸ்டர் ஆகிருக்கு..
அப்போ தெரிஞ்சுக்கிட்டேன், ஜீவாவை தவிர என் வீட்ல இருந்த யாரும் எனக்கு நல்லதே நினைக்கலன்னு.. ச்சீ.. எவ்ளோ கீழ் தரமான புத்தி நர்மதா உனக்கு? உன் கூடலாம் பொறந்தேன்னு நினைக்கும் போது அப்படியே புள்ளரிக்குது.. உன்னால.. உன்னால மட்டும் தான்.. நேரம் காலம் சொந்தம் பந்தம்னு எதையும் யோசிக்காம அவசர அவசரமா அவ கழுத்துல தாலி கட்டிக் கூட்டிட்டு வந்தேன்.. இந்த மாதிரி ஒரு விஷயத்தை கேல்விப் பட்ட எந்தப் பொண்ணோட அப்பா அவன் பொண்ணை கல்யாணம் அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிப்பாங்க..? அது தெரியாம நான் அவங்க ஏமாத்திட்டாங்கன்னு அவங்களையே தள்ளி வச்சு… ச்சை.. “
“ஆனா உங்களுக்கு ருத்ரா வீட்டாளுங்க எவ்ளோ மேல் தெரியுமா? எங்களுக்கு தெரியாம தாலிய கட்டி எங்க பொண்ணை ஒரு நாள் கூட எங்க வீட்ல விட முடியாதுன்னு பெருசா பேசிக் கூட்டிப் போனியே, இந்த ஆறு வருஷம் எங்க நாயே போனன்னு என்னைக் கேள்வி கேட்கிறதுக்கான எல்லா சந்தர்ப்பமும் இருந்தும் இன்னைக்கு வரைக்கும் அந்தக் கேள்வி பார்வையால கூட கேட்டதில்லை.. அவங்க மனசுல அந்தக் கேள்வி இல்லாம இல்ல.. இருக்கும்.. இருக்கணும்.. அதை தப்புன்னு நான் சொல்ல மாட்டேன்.. ஆனா என்கிட்ட கேட்காம இருக்காங்கன்னா ஏன் தெரியுமா? எங்க நாம எதையும் கேட்கப் போய் பொண்ணு வாழ்க்கை இப்பிடியே இருந்துடுமோ? அவளும் அவ பொண்ணும் தனியாவே இருந்துடுவாங்களோன்ற பயம்.. அந்தப் பயம் அவங்க ருத்ரா,இசை மேல வச்ச பாசத்தோட வெளிப்பாடு..” என்றவன் பார்வை தாயைச் சுட்டது..
“அப்படிப்பட்டவங்கள தான் உன்னோட செயலால மனம் நோக வச்சிருக்கேன் நான்.. அவங்ககிட்ட இருந்து அவங்க பொண்ணை நான் வெறும் எட்டு மாசம் தான் பிரிச்சு வச்சிருந்தேன்.. ஆனா அவங்க உண்மையான அன்போட வலிமை என்னை என் பொண்ணுகிட்ட இருந்து ஆறு மாசம் தள்ளி இருக்க விட்டுடுச்சு.. நாம வேணாம்னு அழுதாலும் காலம் நமக்கான தண்டனையை தந்தே ஆகும்.. அப்பிடித் தான் இவ வாழ்க்கை இவன் புருஷன் கூட நல்லா இருக்கன்னு நினைச்சு அம்மா எல்லாத்தையும் மறைச்சதால ருத்ரா வாழாம போனா.. ஆனா இப்போ அவ வேணாம்னு சொன்னாலும் அதை வேணாம்னு சொல்லிட்டு அவளை உள்ளங்கைக்குள்ள பொத்தி வச்சுப் பார்த்துக்க அவ புருஷன் நான் இருக்கேன்.. இவ புருஷன்??? மாமாக்கும் அத்தைக்கும் நான் பாவத்தைப் பண்ணேன்னா அதுக்கு ஆதாரமா இருந்தது நீ நர்மதா.. உனக்கான காலம் இன்னும் வரலன்னு நினைக்கிறேன்.. வரக் கூடாதுன்றது தான் என்னோட வேண்டுதலும்..” வெறுப்பை உமிழும் அவன் பேச்சில் நர்மதா அவன் முகம் நோக்கவே திணறிப் போனாள்.. கூடவே மனதில் அச்சம் கவிழ்ந்து கொண்டது..
“அதி..” என்று புவனேஸ்வரி எதுவோ சொல்லப் போக அவரை இடை மறித்தவன்,
“இப்போ என்னம்மா சொல்லப் போறீங்க? தெரியாம பண்ணிட்டா.. மன்னிச்சிடுன்னு.. தானே? மன்னிச்சு இல்ல.. அவங்களையே வேணாம்னு விட்டுட்டேன்.. மொத்தமா உங்க சாவகாசமே வேணாம்னு விட்டுட்டேன்.. ஏன்னா நானும் பொண்ணை தான் பெத்து வச்சிருக்கேன்.. இவ பண்ண விஷயத்தை இவ வீட்ல சொல்லி இவளை அசிங்கப் படித்தின்னு பண்ணப் போய் நாளைக்கு அது என் பொண்ணுக்கு நான் சேர்த்து வைக்கிற பாவமா இருந்திடாது?” என்றவன் கேட்க அதே பெண் பிள்ளைகளை பெற்று வைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்கு வாழ வந்த பெண்ணுக்கு தாங்கள் செய்த பாவம் எல்லாம் எந்தக் கணக்கில் வந்து விடியுமோ? என்று மூன்று பெண்களும் தமக்குள் வேதனையில் உழன்றனர்..
அவர்கள் வருந்த வேண்டும் என்று தான் அதிரன் அதை சொன்னதே.. இனியாவது தங்கள் வாழ்க்கையை மட்டும் பார்த்து திருந்தி வாழட்டும் என்று அவர்கள் வருந்துவது அறிந்தும் ஆறுதலாய் எதுவும் உரைத்தானில்லை.. மேலும் அவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளையே உதிர்த்தான்..
“உங்களுக்கு வந்து பொறந்த யோகத்துக்கும் உங்க கூட பொறந்த யோகத்துக்கும் வேணா நான் உங்களை அப்பப்போ வந்து பார்த்துட்டு போறேன்.. அதும் ருத்ரா அனுமதிச்சா மட்டும் தான்.. அதை தாண்டி என் பொண்டாட்டி புள்ளைக்கிட்ட நீங்க நெருங்கவே கூடாது.. உங்க கூட பிறந்த எனக்கே இவ்வளவும் பண்ண நீங்க உறவுன்னு உங்கள கிட்ட சேர்த்துக்கிட்டா அவங்க ரெண்டு பேரையும் வாழ விட்டுடுவீங்களா என்ன? இதோ இவ ஒன்னைப் பண்ணுவா.. அதை அம்மா மறைப்பாங்க.. அப்பறம் நீ அங்க இருந்துகிட்டே ஃபோன் மூலமா எல்லாத்தையும் சிறப்பா செஞ்சு விட்டுடுவ..” அவனின் தொடர் குத்தும் பேச்சுக்கள் மூவரையும் உயிரோடு குழிக்குள் தள்ளிப் புதைப்பது போல் மூச்சடைக்க வைப்பதாய்..
மூவர் விழிகளிலும் கலக்கமும் அதை வெளிப்படுத்தும் கண்ணீரும் கண்டவன் அதற்கு மேல் அவர்களை வருத்தி தானும் அவர்கள் லெவலுக்கு இறங்க வேண்டாம் என்று நினைத்தவனாக,
முடிந்ததை விட்டு விடுங்கள் இனி நடக்கும் சுப நிகழ்வான ஜீவாவின் திருமணத்தில் முயன்று நல்லெண்ணங்களுடன் செயல் படுங்கள் என்று முடித்துக் கொண்டவன் அதன் பின் அதற்கான வேளைகளில் தன்னை மூழ்கடித்து கொண்டான்.. முதலில் பெண் பார்க்க திருச்சி சென்று எல்லாம் பேசி முடித்து இன்னும் ஆறு மாதங்களில் திருமணம் என்று முடிவானது.. பெண் பார்க்க ஆருத்ரா இசை இருவரும் வந்திருக்கவில்லை.. அதிரனும் இருவரையும் வற்புறுத்தவில்லை ..
நடப்பதெல்லாம் அதன் போக்கில் நடந்து கொண்டிருக்க ஆருத்ரா மட்டும் எதுவுமே சொல்லாது என்ன சொல்வாளோ? ஏது சொல்வாளோ? என்ற தவிப்பிலேயே அதிரனை வைத்திருந்தாள்.. ஆனால் அவள் வழமைக்கு மாறாய் தன் இறுக்கங்கள் தளர்ந்து தெளிவாய் வலம் வர அதுவே போதும் என்ற சிறு நிம்மதி அதிரனுக்குள்..